Wednesday, April 19, 2017

கார்ப்பரேட் சதி எனும் மாயை.

சமகால தமிழ்ச் சூழலில் கார்ப்பரேட் சதி என்ற பதம் கீழ்க்கண்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
அ) தனக்கு புரியவில்லையென்றால்,
ஆ) தனக்கு கிடைக்காது என்ற பொறாமையால்,
இ) சிலர் சொன்னால் அது சரியாக இருக்கும் என்ற அடிமை சிந்தனையால்,
ஈ) தனக்கிருக்கும் குற்றவுணர்ச்சியை மறைத்துக்கொண்டு சமூக அக்கறையாளனாக காட்டிக்கொள்ள,
உ) மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆயாசத்தினால்,
ஊ) நிதர்சனத்தை சந்திக்கும்போது ஏற்படும் வேதனையினால்
எ) அரிதாக நிகழும் உண்மையான சதித் திட்ட காரணங்களால்...
இவற்றைத்தவிர ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும்.
சாதாரணமாக நடைபெறும் வர்த்தகம் எப்படி நடைபெறுகிறது, அதற்கு சட்டபூர்வமாக என்னென்ன தேவை, அதன் நல்லது கெட்டது என்னென்ன என்பது குறித்த எந்த அறிவும் கிடைக்கப்பெறாத ஏட்டுக்கல்வியின் வெளிப்பாடுதான் பெரும்பாலும் கார்ப்பரேட் சதி என்ற பதத்தை பயன்படுத்தக் காரணமாக அமைகிறது.
முதலில் ஒரு வணிகத்தில் ஈடுபடுவதற்கு - எந்த தொழிலாக இருந்ததாலும் - சட்டபூர்வமாக எந்த மாதிரியான அமைப்பு தேவைப்படுகிறது என்று பார்ப்போம்.
1) Sole proprietor firm தனி உரிமையாளர் அமைப்பு
2) Partnership firm கூட்டாளிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்பு
3) Private Limited Company வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்.
இவற்றைத்தவிர டிரஸ்ட்டு, ஒருநபர் கம்பெனி போன்றவற்றை இப்போது தவிர்த்துவிடலாம்.
ஒரு TIN எண் வணிகவரித்துறையில் வாங்கும்போதே Proprietor firm பதிவாகி விடுகிறது. பார்ட்னர்ஷிப் என்றால் ஒரு deed எழுதி பதிவுசெய்யவேண்டி வரும். Pvt Ltd Company என்றால் இயக்குனர்கள் இணைந்து Articles of Association, Memorandum of Association போன்றவற்றை தயார்செய்து, மேலும் பல ஆவணங்களுடன் கம்பெனி பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டு Incorporate செய்யப்படுகிறது. உரிமையாளர் அல்லது நிறுவனம் ஈடுபடும் தொழில் சார்ந்த உரிமங்கள் வாங்கவேண்டிய கடமைகள் தனி.
இதில் உரிமையாளர், பார்ட்னர் வகை தொழில்களில் நிறுவன அமைப்புக்கென்று தனி உரிமை கிடையாது. அதனால் உரிமையாளர் அல்லது கூட்டாளிகளின் பான் எண் நேரடியாக பயன்படுத்தப்படுவதோடு, வாங்கப்படும் உடைமைகள், சொத்துக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் நேரடி உரிமையாளராகிறார். உரிமையாளர் இறந்தால் அந்த அமைப்பு முடிவுக்கு வந்துவிடுவதோடு, சொத்துக்கள்/உடைமைகள் அவரது வாரிசுகளிடம் சென்றுவிடும்.
பங்குகளால் வரையறுக்கப்பட்ட கம்பெனி என்பது சட்டத்தால் ஆரம்பிக்கப்பட்ட, உயிரில்லாத ஆனால் ஒரு குடிமகனுக்குரிய அத்தனை உரிமைகளையும் உடைய அமைப்பு. கம்பெனி தனக்கென்று சொத்துக்களை வாங்க விற்க முடியும், ஒரு குடிமகனுக்கு சட்டத்துக்கு முன்னால் என்னென்ன உரிமைகள் உண்டோ, அத்தனையும் கம்பெனிக்கும் உண்டு.
இயக்குனர்கள் கம்பெனியை நடத்துவதற்காக ஓர் ஊதியத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள் அல்லது கம்பெனி கொடுக்கிறது என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இயக்குனர் ஒருவர் அல்லது அனைவரும் இறந்தாலும் கம்பெனி இறக்காது. அதனால் கம்பெனி தன்னுடைய பணத்தைக் காரணமில்லாமல் யாருக்கும் கொடுக்காது. அப்படி கொடுத்தால் அதற்கு முறையான ஆவணங்கள் தேவை. இயக்குனராக இருந்து கம்பெனிக்கு கடன் கொடுத்தால் அதை கம்பெனி திரும்பத் தரும்; ஆனால் கம்பெனி பணத்தை இயக்குனரே தேவையில்லாமல் எடுத்தால் சட்டைக்காலரைப் பிடித்து திரும்ப வாங்கிக்கொள்ளும். ஆனால் உரிமையாளர் அமைப்பில் பணத்தை போடலாம் எடுக்கலாம், இரத்த சொந்தங்களுள் அடிக்கடி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
உரிமையாளர் கடன் வாங்கி கட்டவில்லையென்றால் அவரது ஏனைய சொத்துக்களை இணைத்து கடனை வசூலிக்க வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் கம்பெனிக்கு கடன் கொடுத்தால் கம்பெனியின் சொத்துக்களைத் தாண்டி இயக்குனர்களது தனிப்பட்ட சொத்துக்களை வங்கிகளால் எடுக்க இயலாது (பித்தலாட்டம் ஏதும் இல்லாமல் உண்மையாகவே தொழில் நொடித்திருந்தால்).
எந்த மாதிரியான வர்த்தக அமைப்பாக பதிவு செய்யப்பட்டாலும் அதன் பின்னால் இருக்கும் உழைப்பு ஒன்றுதான். உரிமையாளர் என்றால் கடும் உழைப்பாளி என்றோ பிரேவேட் லிமிடெட் இயக்குனர் என்றால் ஏமாற்றுப்பேர்வழி என்றோ எதுவும் இல்லவே இல்லை.
மக்கள் தங்களது தேவைக்குத்தான் பொருட்களை வாங்குகிறார்கள், நிறுவனம் வளர்வதற்காக அல்ல. அதற்கேற்ற பொருள் தயாரிக்காத நிறுவனம் காணாமல் போகும் என்பதற்கு நோக்கியா அண்மைக்கால உதாரணம்.
இதில் கார்ப்பரேட் சதி என்றெல்லாம் எதுவுமில்லை. தனிநபர் உரிமையாளர் செய்வதை கம்பெனிகளும் செய்தால்தானே வியாபாரத்தில் தாக்குப்பிடிக்க முடியும்? நம் வீட்டுக்கு அருகிலுள்ள பலசரக்கு கடைகளில் பார்த்திருக்கக் கூடும். ஐந்தாறு வாடிக்கையாளர் இருந்தால் ஒவ்வொருவராக விற்பனையை முடித்து அனுப்பாமல், என்ன வேண்டும் என்று கேட்டு அனைவருக்கும் ஒவ்வொரு பொருளை எடுத்துவந்து முன்னால் வைத்துவிட்டு, பின்னர் ஒவ்வொருவராக கவனிப்பார்கள். வாடிக்கையாளர்கள் தனக்குரிய importance அந்த இடத்தில் கிடைத்துவிட்டதாக உணர்ந்து, சிறிதுநேரம் காத்திருப்பதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
அந்தநேரத்தில் கடையிலுள்ள சரக்குகளை நோட்டம் விட்டு தனது லிஸ்ட்டில் இல்லாத ஒன்றிரண்டு பொருட்களை வாங்குவதுண்டு. இது ஒரு சாதாரண வியாபார சூட்சுமம். ஒவ்வொரு தொழிலிலும் அதற்கேற்ப உண்டு. இதே வேலையை ரிலையன்ஸ் போன்ற சூப்பர்மார்க்கெட்கள் செய்தால், பில் போடுமிடத்தில் சில பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தால் அது கார்ப்பரேட் சதி! என்று சமூக ஊடகங்களில் உளறி வைக்கப்படுகிறது.
அப்புறம், விவசாயத்துக்கு துளியும் தொடர்பில்லாத தொழில்களில் இருப்போரும் தங்களது சமூக அக்கறையைக் காட்டிக்கொள்ள அடிக்கடி இழுக்கும் ஒன்று மான்சாண்டோ கம்பெனியின் சதி.
விவசாயிகள் பேஸ்புக்கில் சொல்லப்படுவது மாதிரி அப்பாவி பழம் அல்லர். தங்களுக்கு என்ன தேவை என்பதை நன்றாகவே அறிவார்கள். எப்போது அப்பிராணி வேஷம் போடவேண்டும் என்பதையும் நன்கு அறிவார்கள். கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்ட வாய்களில் ஏதாவது ஒன்று, அவர்களை நம்பி ஆண்டு முழுவதும் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கு ஏதாவது அரசாங்கம் செய்யவேண்டும் என்று சொல்லி கேட்டதுண்டா?
விவசாயிகளிடம் வெற்றிகரமாக விற்க இரண்டு விசயங்கள் தேவை. ஒன்று செலவையும், உடலுழைப்பையும் தாறுமாறாக குறைக்கும் மேஜிக் மாதிரியான தொழில்நுட்பம். இரண்டு, ஆட்களின் தேவையை கணிசமாக குறைக்கும்படியான தொழில்நுட்பம். இதில் மான்சான்டோ Bt பருத்தியை சந்தைப்படுத்தி பல இலட்சம் டன் பூச்சிக்கொல்லிகள் மண்ணில் கொட்டப்படுவதைத் தடுத்ததோடு விவசாயிகளின் செலவை பலமடங்கு குறைத்தது. இரண்டாவது, ரவுண்டப் (கிளைஃபோசேட்) களைக்கொல்லி; கூலி ஆட்களின் தேவையைத் தாறுமாறாக குறைத்ததோடு கோரை, அருகம்புல் போன்ற தொல்லை தரும் களைகளுக்கு தீர்வு தந்தது. அறுவடை இயந்திரங்களும் இதே வகைதான்.
இதனால் சில சமூக பிரச்சினைகளும் ஏற்பட்டன. காலங்காலமாக பண்ணையார்களிடம் கூலி வேலை செய்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வேலையிழந்து நகரங்களுக்கு வேறு தொழில் நோக்கி சென்றனர். அங்கு கட்டட வேலை போன்றவற்றில் அதிக வருமானம் கண்டு, உபரி பணம் மூலமாக வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி பிள்ளைகளைப் படிக்கவைக்கவும் ஆரம்பித்தனர். இவ்வாறாக கொஞ்சம் கொஞ்சமாக விவசாயக் கூலிவேலைகள் கடைநிலைச் சாதியினரால் புறக்கணி்க்கப்படன.
பண்ணையார்கள் ஆட்களை வைத்து வேலை செய்வதைவிட இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மூலம் அதிக இலாபமீட்ட முடியும் என்றதும் அதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டனர். மற்றபடி விவசாயிகளை மூளைச்சலவை செய்து கம்பெனிகள் இடுபொருட்களை அவர்களது தலையில் கட்டிவிட்டனர் என்பது ஒரு வகையான மேட்டிமைத்தன விஷம பிரச்சாரம்.
ஒருகட்டத்தில் ஊர், உலகம் மாறுகிறது என்பதை உணர்ந்தவர்கள் அமைதியாக தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றதை ஒதுக்கிவிட்டனர். ஆனால் அந்த பழைய ஜாதி மேட்டிமைத்தனத்தை விட இயலாதவர்கள், அன்று கூப்பிட்டதும் ஓடோடி வந்து காடு கழனியில் வேலை செய்துவிட்டு கொடுத்ததை வாங்கிக்கொண்டு இருந்தவர்கள் இன்று மதிப்பதில்லை என்ற அங்கலாய்ப்பில் அதற்கான காரணத்தைத் தேடி அதை பழையபடி நிறுவ முயல்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதற்குமாக மான்சான்டோவில் ஒரு பதினைந்து பேர் மாதம் 30000 - 90000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்வார்கள். இவர்களும் பிள்ளைகுட்டிகளைப் பார்த்தநேரம் போக, வாட்சப், பேஸ்புக் பார்த்தது போக எவ்வளவு பெரிய சதியை செய்துவிடமுடியும்?! இவர்களைத் தாண்டி அமெரிக்க அலுவலகத்தில் உட்கார்ந்து ஒரு பட்டனைத் தட்டி தமிழக விவசாயிகளை அடிமைப்படுத்துவது எல்லாம் பேரரசு படத்தில் மட்டுமே சாத்தியம். ஆனானப்பட்ட அமெரிக்க அரசாங்கம் ஒரு ஐபோனை உடைத்து தகவல்களை எடுக்க முடியாமல் ஆப்பிளிடம் கெஞ்சியது. இந்த இலட்சணத்தில் எல்லாவற்றிலும் CIA சதி என்றால் எப்படி நம்புவது!
மற்றபடி கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என்றால் முகத்தில் கறுப்புத்துணி கட்டி, கோட் சூட் போட்டு, தொப்பியணிந்து இரவுநேரத்தில் மட்டுமே நடமாடி சதிகளை செயல்படுத்துவார்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. ஜான் பெர்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட மாதிரி, No Escape படத்தில் வருவது மாதிரி கார்ப்பரேட் சதிகாரர்கள் சாதாரண உடையில் வந்து நமக்கு பக்கத்தில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டே நம் ஒவ்வொரு அசைவுகளையும் நோட்டம் விட்டு பின்னர் திட்டமிடுவார்கள் என்பதெல்லாம் ஒருவகையான மனப்பிறழ்வின் அறிகுறி மட்டுமே.
எல்லா கார்ப்பரேட் கம்பெனிகளும் பலரது கடும் உழைப்பில்தான் இயங்குகிறது. ஏதாவது ஓரிரண்டு நிறுவனங்கள் கள்ளத்தனமாக பயனடைந்தன என்பதற்காக மொத்தமாக சேற்றை வாரி இறைப்பது, சேர் கண்டுபிடித்தது தமிழனை அடிமைப்படுத்தவே, வெஸ்டர்ன் டாய்லட் கண்டுபிடித்தது தமிழனை நோயாளியாக்கவே, ஜட்டி கண்டுபிடித்தது ஆண்மைக்குறைவை உண்டாக்கி மருந்து விற்கவே என்றெல்லாம் பேசுபவர்கள் மனநல மருத்துவரைப் பார்ப்பதே நல்லது. அவர்கள் தேவையில்லாத மருந்துகளை விற்க முயல்வார்கள் என்றால் வேப்பிலை அடித்து அரைஞாண்கயிற்றில் தாயத்து கட்டிக்கொள்வது நன்மை பயக்கும்.

Monday, April 17, 2017

ஒரு பஞ்சாயத்து ஓடிகொண்டிருக்கின்றது, அதாவது காமராஜருக்கு பின் அணைகளை கட்டியது யார்?
காமராஜர் அடித்து விளையாடிவர், டெல்லிவரை அவருக்கு செல்வாக்கு இருந்தது, அவர் கேட்டால் நேரு முதல் சாஸ்திரி வரை மறுபேச்சின்றி கொடுத்தார்கள், இதனால் காமராஜர் பல திட்டங்களை கொண்டுவர முடிந்தது
இந்நிலையில்தான் அண்ணாவின் ஆட்சி தொடங்கிற்று, மறைக்க ஒன்றுமில்லை, டெல்லியினை எதிர்த்து ஆட்சி செய்வது ஒரு கலை, அரசியல் அப்படித்தான். பல பிரச்சினைகளை சமாளித்து ஆள வேண்டும், மாநில அரசியலின் நிலை அது.
மத்திய அரசோடு மல்லுகட்ட வேண்டும், அதனுடன் வாதிட வேண்டும் , நிலமை முற்றினால் பிரிவினை வாதம் பேசிவிடவும் கூடாது, ஒரு மாதிரியாக கையாள வேண்டிய சிக்கல் நிறைந்தது மாநில கட்சிகளின் மாநில ஆட்சி
அண்ணா அதில் சமார்த்தியமாக தேர் நகர்த்தினார், மக்களிடம் தன் பெயர் கெடாமல் அதே நேரம் டெல்லியினை பகைக்காமல் ஆண்டார், தமிழகத்திற்கு செய்யவேண்டியதை செய்தார், தமிழ்நாடு பெயர் உட்பட‌
பின் கலைஞர் வந்தார், சும்மா சொல்ல கூடாது மதுகடைகள் திறந்ததை தவிர வேறு ஒரு குறையும் சொல்லிவிட முடியாது, கள்ளசாராய சாவுகளும் இன்னும் பல சிக்கல்களும் அவரை அதற்கு தூண்டின, மக்களின் எதிர்ப்பால் அதனை மூடும் மனநிலையில்தான் அவரும் இருந்தார்
அணை கட்டுவதில் திமுக அரசு நன்றாகத்தான் செயல்பட்டது, அணை கட்டுவது ஜெயா சமாதி போன்ற எளிதான பணி அல்ல, அதற்கு பல இயற்கை அமைப்புகள் பொருந்திவரவேண்டும்
அப்படி இல்லாவிட்டால் சிறு அணைகள்தான் கட்டமுடியும், கலைஞர் காலத்தில் அந்த அரசால் முடிந்த அளவு சிறு, பெரும் அணைகள் கட்டத்தான் பட்டன‌
கலைஞர் நிம்மதியாக ஆண்டது வெறும் 3 ஆண்டுகளே, அதன் பின் அவருக்கு நெருக்கடி பல வகையில் தொடங்கியது, இந்திரா ஒரு பக்கம் , ராமசந்திரன் ஒரு பக்கம் என கிளம்பினார்கள்
மிசா எல்லாம் அசைக்கமுடியாத கலைஞரை ராமசந்திரன் அசைத்தார், 1977ல் ஆட்சிக்கு வந்தார்
ராமசந்திரன் டெல்லி கைப்பாவை, அவர் நினைத்திருந்தால் பல நல்ல திட்டங்களை கொண்டுவந்திருக்கலாம், ஆனால் சறுக்கினார்
எந்த பெரும் தொலைநோக்கு திட்டமும் அவரிடம் இல்லை, சத்துணவு போட்டார், ஆனால் அரிசி வரும் வழி அறியவில்லை, மதுகடைகளை மறுபடி திறந்தார்,
அவர் கவனமெல்லாம் ஆட்சி, மேக் அப், தாய்குலங்களை கவர சரோஜா தேவி, லதா, ஜெயலலிதா என்றே இருந்தது
முல்லை பெரியாறு அணை மட்டத்தினை குறைத்து கொண்டது , ராஜிவ் அமைதிபடையினை அனுப்பும்பொழுது மவுனம் காத்தது, ராஜிவ் எங்களை ஏமாற்றினார் என்ற பிரபாகரனின் குரலை கண்டுகொள்ளமால் இருந்தது என ஏக சர்ச்சைகளுக்கு சொந்தக்காரன் அந்த ராமசந்திரன்
10 ஆண்டுகள் ஆண்டுவிட்டு அடுத்து ஜெயாவிற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு மெரீனா சென்றார் நடிகர் ராமசந்திரன், அவர் மறையும்பொழுது விவசாயத்திற்கு ஒன்றும் செய்திருக்கவில்லை, விவசாயி படம் மட்டும் நடித்திருந்தார்
ஜெயா இன்னும் அகம்பாவி, சசிகலா குடும்பத்திற்கு நன்றிகடன் காட்டினார், சொத்துக்களை குவிப்பதில் அவருக்கு கவனம் இருந்தது, கூடவே 30 வயது குழந்தையினை தத்தெடுத்து அதற்கு திருமணமும் செய்துவைத்து தன்னை தானே தெரசா என சொல்லிகொண்டார்
அணை கட்டும் திட்டமோ, தொலைநோக்கோ அவரிடம் இல்லை,
ஒரு மாதிரியான அடக்குமுறை அவரிடம் இருந்தது, அதுவும் ஆட்சிபற்றி சொல்ல்விட்டால் அவதூறு என வழக்கு தொடரும் அளவிற்கு வன்மம் அவரிடம் இருந்தது, ஒரு ராணியின் மனநிலை அது..
2001ல் ஆட்சிக்கு வந்தாலும் ஜெயா திருந்தியதாக இல்லை, மன்னார்குடி குடும்பத்தில் அவர் எடுத்தமுடிவெல்லாம் வெறும் 1 மாதம் கூட தாண்டவில்லை,
பதவியில் இருந்தபொழுதே சிறைசென்ற முதல்வர் எனும் பெரும் சாதனையினை தவிர எதுவும் ஜெயா செய்ததில்லை, அதனையும் மீறி அவர் வென்றதெல்லாம் தமிழக சாபக்கேடு அல்லது ஜெயாவின் பூர்வ ஜென்ம புண்ணியம்..
1996ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் நல்ல விஷயங்களை செய்தார், பல அணைகள் தமிழகத்தில் கட்டபட்டன‌
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மட்டும் 8 அணைகள் கட்டபட்டன, அளவுகளில் வேறுபாடு உண்டு. காரணம் கைபற்ற வேண்டிய நிலங்களை தமிழக அரசால் எடுக்க முடியவில்லை, தொழிலதிபர்கள் பலம் அப்படி, மத்திய அரசின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு
இன்னும் தமிழகத்தில் பெரும் அணைகள் உருவாகாமல் இருக்க தொழிலதிபர்கள் வளைத்து வைத்திருக்கும் மலைகளும் காரணம், கேட்டால் நீதிமன்ற கதவுகளை தட்டுவார்கள்,அவர்களில் பலர் ராமசந்திரன் கட்சி என்பது குறிப்பிடதக்கது
இப்படியாக கலைஞர் டெல்லி, அதிமுக இன்னபிற அட்டகாசங்களை சமாளித்துதான் ஆட்சி நடத்தினார்
2006ல் அவர் மறுபடியும் ஆட்சிக்கு வரும்பொழுது, கலைஞருக்கு சில சோதனைகள் உள்ளும் புறமும் வந்தன, இன்னும் ஆதாரம் சமர்பிக்க முடியாத ஸ்பெக்ட்ரம் வழக்கு விஸ்வரூபமெடுத்தது, ஒரு பக்கம் மெஜாரிட்டி இல்லாமல் தடுமாறினார்
அப்பொழுதும் புதிய சட்டமன்றம், அண்ணா நூலகம், திருவள்ளுவர் சிலை என அவர் செய்ய தவறவில்லை
ஆக சுருக்கமாக இப்படி பார்க்கலாம்
கிடைத்த காலமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் தன் முத்திரையினை தமிழகத்தில் பதித்தது திமுக‌
தமிழ்நாடு பெயர்மாற்றம், சீர்திருத்த திருமண சட்டம், வள்ளுவர் கோட்டம், பூம்புகார், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, எட்டயபுரம் பாரதி நினைவகம் , இன்னும் பல வரலாற்று அடையாளம் எல்லாம் அவர்கள் கொடுத்தார்கள்
அம்பேத்கர் சட்ட கல்லூரி , இட ஒதுக்கீடு, எல்லாம் அவர்கள் கொடுத்தார்கள்
சென்னை கடற்கரையில் தமிழ் அறிஞர் சிலை எல்லாம் அவர்களால் நிறுவபட்டது
சென்னை போக்குவரத்து போல எல்லா மாநகராட்சிகளும் அவர்களால் சீர்பட்டது, வள்ளுவர் சிலை வரை கலைஞர் நன்றாகத்தான் செய்தார்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வரை அவர்கள் திட்டத்தில் குறை இல்லை..
இப்படி ஒப்பிட்டு பார்த்தால் ராமசந்திரன் ஜெயா சாதனை என்ன?
ஒரு புல்லும் புடுங்காமலே இறந்தார் ராமசந்திரன், ஒரு திட்டமும் அறிவும் அவரிடம் இல்லை, தொப்பியும் கண்ணாடியும் சிரிப்புமாகவே செத்தார், அதுதான் ஆட்சி
ஜெயா போயஸ், சிறுதாவூர், கொடநாடு என பங்களாக்களாக கட்டினார், மன்னார்குடி குடும்பம் எல்லாம் மன்னர்கள் ஆனது
கலைஞர் வள்ளுவர் கோட்டம், முதல் புதிய சட்டமன்ற கட்டடம் வரை கட்டிவைத்துவிட்டுத்தான் ஓய்ந்தார்
ஜெயா செய்ததெல்லாம் தனக்காக, கலைஞர் செய்ததெல்லாம் மாநிலத்திற்காக, உள்ளங்கை நெல்லிகனியான உண்மை இது
ராமசந்திரன், ஜெயா போல பெரும்பான்மையும், டெல்லி ஆதரவும் இன்ன பிற வசதிகளும், ஆளும் வர்க்க ஆதரவும் கிடைத்திருந்தால் கலைஞர் இன்னும் தூள்பறத்தியிருப்பார்
நல்ல பேட்டை வைத்து கொண்டு, குஜராத் ஐபில் பவுலர்கள் போல சொத்த பேட்டை வைத்துகொண்டு சிக்சர் அடிப்பதில் பெருமை இல்லை
ஓட்டை பேட்டினை வைத்து கொண்டு, அதன் உடைந்த கைப்பிடியினை பிடித்துகொண்டு நல்ல பவுலர் பந்தில் சிக்சர் அடிப்பதுதான் சாமார்த்தியம்
கலைஞர் இரண்டாம் வகை, அவருக்கு இருந்த அல்லது உருவாக்கபட்ட எல்லா சிக்கல்களையும் தாண்டி இவ்வளவு செய்திருப்பது பெரும் விஷயம்..
தமிழகத்திற்கோ, தமிழனுக்கோ ஒரு நல்ல காரியமும் செய்யாதவர்கள்தான் ராமசந்திரனும், ஜெயலலிதாவும், இன்று இல்லையென்றாலும் ஒரு நாள் புரியும், வரலாறு அப்படித்தான் பதிவு செய்திருக்கின்றது
ஒரு காலமும் அதிமுக அரசின் சாதனையுடன் கலைஞர் அரசினை ஒப்பிட முடியாது, ஏணி வைத்தாலும் எட்டாது
ஏன் ஏணியே வைக்கமுடியாது, அவ்வளவு பெரும் இடைவெளி அது

Stanley Rajan

source: https://www.facebook.com/rajarajan.rajamahendiran/posts/10207827885049676