Friday, October 06, 2017

சீமான் - இனவெறிக்கே உண்டான சித்தாந்தங்கள்

நாம் தமிழர் தம்பிகள் அவ்வப்போது அவர்களை விமர்சிக்கும் போது "எங்களை நீங்க புறக்கணிக்கவே முடியாதபடி விமர்சனம் பண்ணுறது தாண்டா எங்க அண்ணன் கெத்து" ரேஞ்சிக்கு பில்ட் அப் கொடுப்பதும், நாம் தமிழர்களை பார்த்தால் கதறுறாங்க என்று அவர்களுக்கு அவர்களே ஹார்டின் விட்டு கொள்வதும் அங்கங்கே நடக்கிறது.
சீமானுக்கு தேர்தல் அரசியலில் வெல்லும் சூட்சமும் தெரிந்தால், அதற்கு நாம எந்த வகையிலும் தடையாக இருக்க முடியாது என்கிற யதார்த்த அரசியல் பேசுற ஆள் தான் நான். யார் வர வேண்டும் யார் வர கூடாது என்பதை தனிநபர் முடிவு செய்ய முடியாது, ஆனா கொள்கை, அபிப்பிராயம், விமர்சனம் எல்லாம் தனிநபர் உரிமைகள்.
சீமான் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்காமல், உள்ளே நுழையும் போதே ஏன் விமர்சனம் என்கிற கேள்வியும் politically immature தனமான கேள்விகள் தான். ஒருவரை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்ய அவர் நீண்ட கால ஆட்சியில் இருந்திருக்க வேண்டியதில்லை, கொள்கைகளே போதுமானது, அவர் பேசுகிற விவகாரங்கள் போதுமானது. இதில் சீமான் பேசுவது அடிப்படைவாத கருத்தியலுக்கு ஒற்று போவதால் மட்டுமே சீமானை விட்டு வெளியேறிய நிறைய முற்போக்கு தோழர்கள் இருக்கிறார்கள், ஆரம்பத்தில் இவர்களும் சீமான் பேச்சை கேட்டு சிலிர்த்து சில்லறைகளை விட்டெறிந்தவர்கள் தான்.
சீமான் பெரியாரை ஏற்று ஹிந்து மதத்தை வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்த காலத்தில் கூட சீமானை என்னால் ரசிக்க முடியவில்லை, ஏனினில் நீங்கள் ஒரு மதத்தை, சித்தாந்தத்தை எதிர்த்து வாதம் வைக்க வேண்டுமானால், அதில் ஆக்கபூர்வமான தரவுகள், சிந்தனைகள் இருக்க வேண்டும். கடவுளர்களை கண்டபடி வசைபாடுவதால் மட்டுமே ஒருவன் பகுத்தறிவாளன் ஆகிவிட முடியாது, அப்படி data இருந்தால் தான் இந்த சமூகத்தில் ஆக்கபூர்வமாக ஒரு கருத்தை முன்னெடுத்து செல்ல முடியும், இல்லையெனில் அது ஒரு வெறுப்புவாதமாக தான் பார்க்கப்படும்.
இப்படி வெற்றி பெற்றவர்கள் ஏராளம், தற்காலத்தில் சொல்ல வேண்டுமானால் டாக்கின்ஸ், ஸ்டீவன் ஹாக்கிங், இந்தியாவில் அம்பேத்கர் பெரியார் போல. பிரபல மனவர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். இவர்கள் வரலாற்றை படித்தவர்கள், அதை பொறுத்து சித்தாந்தங்களை நிறுவியவர்கள், அம்பேத்கர் ஆய்வு செய்து இருக்கிறார், அதை ஆதாரமாக வைத்து தான் கட்டுரை எழுதினார்.
இதையெல்லாம் மறுக்க முடியாத காரணத்தினால் தான் அவர் வரலாற்றில் இந்திய சீர்திருத்தங்களுக்கு உழைத்தவர் என்பதை தாண்டி, அறிவுஜீவிகள் புறக்கணிக்க முடியாத இடத்தில் நிலைத்து இருக்கிறார்கள்.
ஆனால் சீமான், கண்ணதாசன் பேசிய நாத்திக கருத்துக்கள் அரைவேக்காட்டு தனமான கருத்துக்கள். அதில் வெறுப்பு மட்டுமே எஞ்சியது, எந்த ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான விவகாரங்களையும் பேசியதில்லை. அநேகமாக கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்தவர்கள், கண்ணதாசன் நாத்திகனாக இருந்த போது உதிர்த்த முத்துக்களை கேட்டிருக்க மாட்டீர்கள். நாத்திகம் ஏற்ற போதும் சரி, ஆத்திகத்தை ஏற்ற போதும் சரி, கண்ணதாசனிடம் எந்த ஆக்கபூர்வ கருத்தியல்களும் இல்லை.
அண்ணன் சீமான் அப்படியானவர் தான், கிருஷ்ணனையும், மஹா பாரத்தையும் கிழித்து தொங்க விட்டவர், ஆனால் அது வெறும் உணர்ச்சி பிழம்புகள். ஆகையால் சீமான் போன்றவர்கள் பெரியாரியத்தை ஏற்று பேசினாலும் அதில் எனக்கு சிலாகிக்க எதுவுமில்லை. பார்ப்பன ஆதிக்க சக்திகளுக்கு counter கொடுக்கத்தான் பெரியார் கடவுளர்களை திட்டினாரே தவிர, அதை தாண்டி அவர் எழுதிய சமூக நுண் அரசியல்கள் ஏராளம்.
அண்ணனுக்கு வருவோம், அண்ணன் எந்த ஆர்வத்தில் ஆரம்பத்தில் பேசினாரா, இப்போ அதற்கு எதிர்மறையான அதே ஆர்வத்துல பேசுறார் அவ்ளோ தான். எல்லா நேரமும் சமூகத்தை உணர்வு அடிப்படையில் கட்டமைக்க முடியாது. ஒரு விபத்து நடந்து இழப்புகள் நடந்தால் அங்கே உணர்வுகள் தலைதூக்கும், அந்த விபத்தை நடக்க விடாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் போது அறிவு தலைதூக்கும்.
இதான் சமூக கட்டமைப்புக்கு அடிப்படை ஆதாரம், எல்லா நேரமும் ஒருத்தன் உணர்ச்சி பொங்கி கத்திட்டு இருந்தா அவர் புரட்சியாளன் ஆகிட முடியாது. சீமானிடம் இருப்பது வெறும் இந்த உணர்ச்சியை முதலீடு செய்து, வயசு வேகத்தில் இருக்கும் விடலை பசங்களை அறுவடை செய்ததே.
அம்பேத்கர் ஆலய நுழைவு போராட்டம் பண்ணிட்டு இருக்கார், சாதி ஹிந்துக்கள் தலித்துகள் கோவிலுக்குள் பிரவேசிக்க கூடாது என்று தலித்துகளை அடிக்க ஆரம்பிக்கிறார்கள். அந்த இடத்தில் அம்பேத்கர் எத்தனை நிதானம் காத்திருந்தால், அவர் பதிலுக்கு வன்முறை கூடாது என்று கேட்டு கொள்கிறார். காரணம் அவரின் சமூக செயல்திட்டம் காலம் தாண்டியது, சாதி ஹிந்துக்களுக்கு வன்முறை புதிதல்ல, ஆனால் தலித்துகள் திருப்பி அடித்து விட்டால் அதை இந்த பொது சமூகம் எப்படி திரித்து விடும் என்பதில் கவனமாக இருந்தார், இரண்டாயிரமாண்டு வன்முறை ஒரே பதில் தாக்குதல் மூலம் "தலித்துகளும் தான் வன்முறை பன்றாங்க" என்று விடுதலை நோக்கத்தை சிதைத்து விடும் என்பது அவருக்கு தெரியும்.
சம்மந்தமில்லமால் இந்த உதாரணத்தை சொல்வதற்கு காரணம், அங்கே அடிபடும் போது சுயமரியாதையும், உணர்வுகளும் அம்பேத்கருக்கு இல்லாமலில்லை, ஆனால் அதை தாண்டி ஒரு நிதானம் வேண்டும், அப்படி நிதானத்தோடு சொல்லப்படுகிற விவகாரங்கள் தான் வரலாற்றில் இடம் பிடிக்கும். சர்வ வல்லமை படைத்த நாஜி இன வெறியனான ஹிட்லரை இந்த சமூகம் தூக்கி குப்பையில் போடவில்லையா? இன்னும் ஐநூறு ஆண்டுகள் ஆனாலும் ஹிட்லர் ஒரு அறமற்ற பொறுக்கி தான் என்று வரலாறு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கும். இன பாசம் வெறியானது, அந்த வெறியே லச்சக்கணக்கில் கொல்ல செய்தது, ஹிட்லர் கையில் எடுத்ததும் உணர்வுகள் தான், அறிவு இல்லை.
இப்படியாக இனப்பாசத்தை உணர்ச்சி பொங்க பேசி பேசி, தமிழ் சாதிய அடையாளத்தோடு "நாங்களே ஆள்வோம்" என்று சொல்லும் போதே அது அடிப்படை வாதத்திற்குள் வந்து விட்டது. மராத்தி இன வெறியர்களான சிவ சேனா எப்படி இந்துத்துவததோடு connect ஆகிறதோ, சீமானும் அப்படி தான் சாதி ஹிந்துத்துவத்தோடு connect ஆகி விட்டார், நான் விமர்சிப்பதற்கு அதுதான் ஆதார காரணம், அவர் பேசுற சித்தாந்த கோட்பாடுகளோடு இந்த similarity பாருங்களேன்,
1. இந்தியா ஹிந்துக்களுக்கே
தமிழ் நாடு தமிழருக்கே
2. ஹிந்து மதத்தின் அடையாளம் ஹிந்து சாதிகள்
தமிழ் சமூகத்தின் அடையாளம் தமிழ் சாதிகள்
3. இஸ்லாமியர்கள் பத்தோடு பதினொன்றாக இருக்கலாம், ஆனால் ஹிந்து தேசத்தை ஹிந்து தான் ஆள வேண்டும்
மற்ற மொழிக்காரர்கள் இருக்கலாம், ஆனால் தமிழ் தேசத்தை தமிழன் தான் ஆள வேண்டும்
4. ஹிந்துக்களாக ஒன்றிணையுங்கள்
தமிழர்களாக ஒன்றிணையுங்கள்
(அடிப்படையில் இப்படி ஒன்றிணைவதில் இருக்கும் சிக்கலாக இருக்கும் சாதி முரண்பாடுகள் கண்டுக்காம, தீர்க்காம ஒன்றிணையணுமாம்)
5. மஹாபாரத போர் வரலாற்று நிகழ்வு,
பாரத போருக்கு சோறு கொடுத்தான் தமிழன்
6. கிருஷ்ணர், ராமர் இந்தியாவின் பண்பாட்டு அடையாளம்
முருகன் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்
7. வெள்ளைக்காரன் ஹிந்துத்துவத்தை ஏற்றால் கடல் தாண்டும் இந்து பெருமை, நம்மூர்காரன் வெள்ளைக்காரன் மதத்தை ஏற்றால் அவமானம்
தமிழன் தமிழகம் தாண்டி போர் புரிந்தது பெருமை, அந்நியன் தமிழகத்தில் நுழைந்து ஏற்படுத்திய அடையாளங்கள் சிறுமை
8. தாஜ்மஹால் வந்தேறி அடையாளம், புறக்கணி
திருமலை நாயாக்கர் மஹால் வந்தேறி அடையாளம், புறக்கணி
9. இந்துத்துவத்தை இஸ்லாமியன், கிருஸ்துவன் விமர்சனம் செய்தால் கோபம், கைக்கூலிகள்
தமிழ் சமூகத்தை, தெலுங்கன், கன்னடன் விமர்சனம் செய்தால் கோபம், கைக்கூலிகள்
10. சாவர்க்கருக்கும் மாலை, காந்திக்கும் மாலை, அம்பேத்கருக்கும் மாலை, நாங்கள் எல்லோருக்குமானவர்
பசும்பொன் முத்துராமலிங்கத்துக்கும் மாலை, ரெட்டமலை ஸ்ரீனிவாசனுக்கும் மாலை, இமானுவேல் சேகரனுக்கும் மாலை, நாங்கள் எல்லோருக்குமானவர்,
11. சாதிபேதமற்று நாம் இந்துக்களாக தான் இருந்தோம், நம்மை பிரிட்டிஷ் என்கிற அந்நியர்கள் தான் பிரித்து விட்டார்கள்,
சாதிபேதமற்று நாம் தமிழர்களாக தான் இருந்தோம், வந்தேறிகள் தான் சாதி பிரிவினை செய்தார்கள்
இப்படியாக நீங்கள் அடுக்கி கொண்டே போகலாம், இந்த ஒற்றுமை திட்டமிட்டு ஒட்டப்பட்டது அல்ல. இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இயல்பிலேயே இருக்கும் ஒற்றுமைகள், இதை நீங்கள் உலகின் எந்த "வாதத்தோடும்" ஒப்பிட்டு கொள்ளலாம், அது இனவெறிக்கே உண்டான சித்தாந்தங்கள். நாஜிக்களின் சித்தாந்தத்திற்கும், பார்பனீயத்துக்கும் இருக்கும் ஒற்றுமைகளை கூட இப்படி நம்மால் எழுத முடியும். இனவெறி என்கிற தன்மையின் மூலக்கூறு வேறு ஒன்றாக இருந்தாலும், "சர்வாதிகாரம் உங்கள் கைக்கு கிடைத்து விட்டது / சர்வாதிகாரம் உங்கள் கைகளில் இல்லை" என்கிற இந்த இரண்டே வேறுபாட்டை வைத்து தான், உங்களிடம் இருப்பது இனவெறியா, இனபாசமா என்பதை வரையறுக்க முடியும், மற்றபடி இந்த எந்த சித்தாந்தமுமே மானுட சமூகத்துக்கு எதிரானது.
இந்த அடிப்படைவாத மூலக்கூறுகளை யார் உலகத்தில் பேசினாலும், அதை விமர்சனம் செய்வதற்கு ஆட்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். ஹிட்லர் என்கிற கொடுங்கோலன் சர்வாதிகாரத்தின் நாற்காலியில் இருந்த போதே பகடி செய்து காமெடியாக விமர்சித்த உலகமிது, சீமான் எம்மாத்திரம்?
இனபாசத்துக்கும், இனவெறிக்கும் இருக்கும் வேற்றுமை "வாய்ப்பு" மட்டுமே.

Monday, October 02, 2017

‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!
காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது என்பது மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது
தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், “கலப்பு’த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, “காந்தி சாதி’ என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய சாதியை உருவாக்க தமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி, நீதிபதிகள் அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
நாமகரணங்கள் நமக்கு புதியனவல்ல. ஹரியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்டினார் காந்தி. காந்தியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்ட வேண்டுமென ஆதங்கப்படுகிறார் காந்தியின் சீடர். பெயர் சூட்டுவதிருக்கட்டும். “பீ’யள்ளப் போவது யார் என்பதல்லவா கேள்வி. அன்றே காந்தியின் சாதி ஒழிப்பு சண்ட பிரசண்டங்களுக்கும், அவரது நடைமுறைக்குமான முரண்பாட்டை அம்பேத்கர் திரை கிழித்திருக்கிறார். ஆனால், காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
குறைந்தபட்சம் காங்கிரசில் உறுப்பினராக சேர தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என ஒரு விதியைக் கொண்டு வருவதற்குக் கூட காந்தி தயாராக இருந்ததில்லை. காந்தியால் சோசலிசத்திற்கு மாற்றாக வைக்கப்பட்ட தருமகர்த்தா முறையை நடைமுறைப்படுத்தக் கிளம்பிய வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் தோல்வி காந்தியத்தின் தோல்வியல்ல என்பது போல மூடி மறைக்கப்பட்டு விட்டது. எனினும் காந்தி மீண்டும் மீண்டும் மக்கள் அரங்கில் முன்நிறுத்தப்படுவது மட்டும் இன்றளவும் நின்றபாடில்லை.
ஆனால், காந்தி சொன்ன கிராமப் பொருளாதார முறையை 1947லேயே காங்கிரசு கைக்கொள்ளவில்லை. காங்கிரசைக் கலைக்கச் சொன்ன காந்தியின் யோசனையை ஒரு பொருட்டாகக் கூட எவரும் கருதவில்லை. குடும்பக் கட்டுப்பாடு கூடாது, ஆலைத் தொழில்கள் கூடாது போன்ற “அற்புதமான’ கருத்துக்களை மட்டுமல்ல; ஜனாதிபதி மாளிகையை இலவச மருத்துவமனையாக்க வேண்டுமென்ற தேசப்பிதாவின் “சின்ன சின்ன ஆசைகளை’க் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.
எனினும், ஐநூறு ரூபாய் நோட்டிலும், காந்தி ஆசிரமங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள சிலைகளிலும், அரசாங்க உரைகளிலும் காந்தி ஒரு மந்திரம் போல தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறார். காந்தி பிறந்த குஜராத்தில் திரையிட மறுக்கப்பட்ட “பர்சானியா’ திரைப்படம், குஜராத் முசுலீம் இனப்படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தது. சோனியா காந்தியோ சத்தியாக்கிரகத்தின் “மகிமையை’, “உலகப் பொருளாதார மன்ற’த்தில் வியந்தோதுகிறார்.
காந்தியால் மீண்டும் மீண்டும் குழப்பப்பட்ட சத்தியாக்கிரகம், இன்றும் கூட மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதில், வன்முறை குறித்த நியாயத்திற்கு அப்பாற்பட்ட தார்மீக அச்சத்தை உருவாக்குவதில் முன் நிற்கிறது. மணிப்பூரில், இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, இந்திய அரசின் கொடூரச் சட்டமான “ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை’ திரும்பப்பெறக் கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வரும் ஐரோம் சர்மிளா இதற்கு ஒரு உதாரணம். சர்மிளா செத்துப் பிணமானால் கூட இந்திய அரசு அச்சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை.
காந்தியின் தெளிவற்ற, மூடு மந்திரமான மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது. ஆனால், இன்னமும் மதச்சார்பின்மைக்கு போலித்தனமான நடுநிலைமையே விளக்கமாக அளிக்கப்படுகிறது.
உண்மையில், காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது. ஆனால் அந்த உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது. அப்படித்தான் நாம் காந்தியை ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறோம். அவ்வாறு மூடி மறைக்கப்பட்ட சில வரலாற்று உண்மைகளின் ஒளியில், இப்பொய்களை அடையாளம் காண்போம்.
****
காந்தி அவரது காலத்திலேயே தமது முரண்பாடுகளுக்காக மிகப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒரு விவாதத்தில்,
“”எனது முரண்பட்ட நிலைகளைக் குறித்த நிறைய குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றிற்கு நான் பதில் கூறுவதில்லை. ஏனெனில், அவை வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிக்கின்றன”
என காந்தி எழுதினார். ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தரும் “பொறுப்பை’ ஏற்றிருந்த காந்தியின் முரண்பட்ட நிலைகள் எவ்வாறு இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பாதித்தது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது.
அகிம்சைதான் காந்தியத்தின் அடிப்படைக் கொள்கையாகச் சொல்லப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக காந்தி கண்ட அறவழிப் போராட்ட முறையாக சத்தியாக்கிரகம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், உலக வரலாற்றில், நியாயமான கோரிக்கைகளுக்காக, எதிர்த்துத் தாக்காமல், துன்பங்களை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் சாத்வீகப் போராட்ட முறை இயேசு, துவக் கால கிறிஸ்தவர்களிலிருந்து ரசியாவின் டியூகோபார்கள் எனப்படும் பிரிவினர் வரை பலரால் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், காந்தி தனது சத்தியாக்கிரக முறை சாத்வீக போராட்ட முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென விடாப்பிடியாக சாதித்தார்.
“காந்தியும் அவரது காலங்களும்’ என்ற நூலில் காந்தியம் எனும் கருத்தாக்கம் உருவான முறையை சாரமாக எழுத்தாளர் மன்மத்நாத் குப்தா இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“”புத்திசாலித்தனமாக கணக்கற்ற தார்மீக, தத்துவார்த்த, ஆன்மீகச் சரடுகளை சுற்றிக் காட்டியதன் மூலம், முந்தைய சாத்வீக இயக்கங்களிலிருந்து சத்தியாக்கிரகம் மாறுபட்டதென காட்ட முயன்றார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்துக் கலாச்சாரத்தின் மீதேறி சுலபமாகப் பயணிக்க முயன்றார். அவரே ஒத்துக் கொண்டதைப் போல, இதற்கு தேவையான தயாரிப்புகள் இல்லாத போதும், வறட்டுப் பிடிவாதத்தின் மூலமாக மட்டுமே அவரால் தனக்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முடிந்தது.”
தமது ஆன்மீகச் சொல்லாடல்களின் மூலம் எக்கருத்தையும் தனக்கேற்ற முறையில் காந்தியால் வளைக்க முடிந்தது. சிறையிலிருக்கும் புரட்சியாளனின் உண்ணாவிரதத்தைக் கூட காந்தி “வன்முறை’ என்றார். ஏனெனில் அவனது உள்ளத்தில் வன்முறை இருக்கிறதாம். நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் வரி கொடுக்க மறுத்து, சாத்வீக முறையிலேயே போராடிய போதும் கூட, அது வன்முறை என்றார்.
இவ்வாறு வன்முறைக்கும், அகிம்சைக்கும் கணக்கற்ற விளக்கங்கள் அளித்த காந்திதான், தென்னாப்பிரிக்காவில், முற்றிலும் அநீதியான வகையில் ஜூலூ கலகப் போரிலும், போயர் யுத்தத்திலும், முதல் உலகப் போரிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்தார். இதனைக் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம்,
“”இதன் மூலம் பிரிட்டிஷ் பிரஜை என்ற முறையில் தமது கடமையை ஆற்றினால்தான், உரிமைகளைப் பெற முடியும்”
என விளக்கமளித்தார்.
முதல் உலகப் போரில் ஆங்கிலப் படைகளுக்கு சேவை செய்த பொழுது, அவரது நெருங்கிய நண்பர்களே அவரை விமர்சித்ததற்கு,
“”போரில் பங்கேற்பது என்பது அகிம்சையோடு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நானறிவேன். ஆனால் ஒருவருக்கு அவரது கடமைகள் குறித்து, எல்லாச் சமயங்களிலும் தெளிவான பார்வை பெற வாய்ப்புகள் இருப்பதில்லை. சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது”
என நியாயம் கற்பித்தார்.
பின்னர், 1921இல் தமது கண்கள் திறந்து விட்டதாகவும், அவ்வாறு கருதியது தவறு என்றும், பிரிட்டிஷ் அரசு தம்மை பிரஜையாகவே கருதவில்லையென்றும், எந்த உரிமைகளும் அற்ற ஒரு தாழ்த்தப்பட்ட பராரியாகவே இந்த அரசின்கீழ் தான் உணர்வதாகவும் “யங் இந்தியா’வில் குறிப்பிட்டார். ஆனால், அக்கண்கள் நீண்டநாள் திறந்திருக்கவில்லை. மீண்டும் 1928இல் முதல் உலகப் போரின் பங்கேற்பு குறித்த நிருபர்களின் கேள்விக்கு,
““போருக்கு எதிராக என்னுள் இப்பொழுது இருக்கும் அதே அளவிலான எதிர்ப்புணர்வு அப்பொழுதும் இருந்தது. ஆனால், இந்த உலகத்தில் நாம் விரும்பாத பல விசயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”
பச்சை அயோக்கியத்தனத்தை இயலாமையாகக் காட்டித் தப்பிக்க முயலும், அறிவு நாணயமற்ற மனிதனால் மட்டுமே இவ்வாறு விளக்கம் அளிக்க முடியும்.
“”சுதந்திரம் என ஒன்று வருமானால், அது மாபெரும் பிரிட்டிஷ் அரசுடன் ஒரு கண்ணியமான ஒப்பந்தத்தின் மூலமே வரவேண்டும்”
என 1929இல் காந்தி எழுதினார். காந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை, அதன் திசைவழியை, இந்த ஒற்றை வரியை விட வேறெதுவும் விளக்கிவிட முடியாது. காந்தி முரண்பாடற்று, கடைபிடித்த ஒரே கொள்கை இதுதான். ஏனெனில், சுதந்திரம் மக்களால் சமரசமற்று வென்றெடுக்கப்படுமாயின், அது பிரிட்டிஷ் ஆட்சியை மட்டுமல்ல, முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் மட்டுமல்ல, தன்னையும் சேர்த்தே தூக்கி எறிந்து விடும் என்பதை காந்தி தெளிவாக அறிந்திருந்தார். அதனால்தான், நடைமுறையில் மக்கள் சக்தியின் இயல்பான கோபாவேசத்தின் சிறுபொறி எழும்பினால் கூட, உடனடியாக அப்போராட்டத்தையே கைவிட்டு மக்களை திகைத்துப் பின்வாங்கச் செய்தார்.
இதனை 1921 ஒத்துழையாமை இயக்கம் முதல் 1942 தனிநபர் சத்தியாக்கிரகம் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை, நாம் காண முடிகிறது. காந்தி நடத்திய மூன்று இயக்கங்களிலும், போராட்டத்தின் போக்கில் மக்கள் போலீசு மீது எதிர்த்தாக்குதல் தொடுப்பதும், அவர்களைச் சிறை பிடிப்பதும், அரசுச் சொத்துக்களை நாசப்படுத்துவதும் தன்னியல்பாக நிகழ்ந்தது.
1921இல் சௌரி சௌரான் விவசாயிகள் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததையொட்டி, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதாக இருக்கட்டும்; 1930இல் மக்களின் போராட்டத் தீ பற்றி எரிந்த வேளையில் வைஸ்ராய் இர்வினோடு ஒருதலைப்பட்சமான ஒப்பந்தத்திற்கு முன்வந்து, போராட்டத்தை கைவிட்டதாக இருக்கட்டும்; 1942இல் “தான் எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களது வன்முறைக்கு தாம் பொறுப்பல்ல’ என ஆகஸ்டு போராட்டத்தை கைகழுவியதாக இருக்கட்டும், காந்தியின் வன்முறைக்கெதிரான பரிசுத்த வேடத்திற்குள், போராட்டம் தனது கைகளிலிருந்து நழுவ விடக்கூடாதென்ற இடையறாத அச்சம் ஒளித்து கொண்டிருந்தது.
காந்தியப் போராட்டத்தினுடைய வர்க்கச் சார்பு முதலாளிகளையும், வணிகர்களையும் சார்ந்திருந்தது தற்செயலானதல்ல. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் அனுபவத்திலிருந்தும், பர்தோலி விவசாயிகளின் வரிகொடா இயக்க போராட்டத்திலிருந்தும், தொழிலாளர், விவசாயிகளின் வர்க்க கோரிக்கைகளுக்காக போராடுவதும், அவர்களை விடுதலைப் போராட்டத்தில் களமிறங்கச் செய்வதும் அபாயகரமானது எனத் தான் உணர்வதாக காந்தி வெளியிட்ட அறிக்கைகளை, அன்றே தமது “இளம் அரசியல் தொண்டர்களுக்கு‘ எனும் கட்டுரையில் மாபெரும் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சுட்டிக் காட்டினார். சுருக்கமாகச் சொன்னால், காந்தியப் போராட்டத்தின் வர்க்க உள்ளடக்கம்தான் அப்போராட்டத்தின் வடிவத்தையும் வரம்புகளையும் தீர்மானித்தது. அகிம்சை, சத்தியாக்கிரகம் என்பதெல்லாம் வெறுமனே வார்த்தைப் பூச்சுக்கள் மட்டுமே.
1929இல் சுதந்திரம் கிடைக்காமலேயே சுதந்திரக் கொடியேற்றும் கோமாளித்தனத்தை அரங்கேற்றினார், காந்தி. வீரதீரமாக “முழுச் சுதந்திரமே இலட்சியம்’ என்று அறிவித்த கையோடு வைஸ்ராய்க்கு எழுதிய நீண்ட கடிதத்தில்,
“”என்னால் இயன்ற வரை, தங்களுக்கு எத்தகைய அனாவசியமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் எனக்கில்லை” எனக் குழைந்தார். வைஸ்ராய், ஒரு அலட்சியமான பதிலை வீசியெறிந்தார். “”நான் மண்டியிட்டு உணவு கேட்டேன். ஆனால், எனக்கு கல்தான் கிடைத்திருக்கிறது”
எனப் புலம்பினார் காந்தி. வைஸ்ராய்க்கு “தர்மசங்கடத்தை’ ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை காந்திக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த தர்மசங்கடத்திற்கு பெயர்தான் “தண்டி யாத்திரை’.
ஆனால், ஆங்கில அரசு குயுக்தியாக காந்தியின் சகாக்களை கைது செய்தது; காந்தியை மட்டும் கைது செய்யாமல் விட்டு, அவரைச் சிறுமைப்படுத்தியது. உடனே அகிம்சாமூர்த்தி ஒரு அழகான தந்திரம் செய்தார். உப்புக் கிடங்குகளைச் சோதனையிட்டு, உப்பைப் பறிமுதல் செய்ய முடிவு செய்தார். வேறு வழியின்றி, அவரை அரசு கைது செய்ய நேர்ந்தது. பறிமுதல் செய்வது சத்தியாக்கிரகம் என்றால், வங்கியை கொள்ளையடிப்பது கூட சத்தியாக்கிரகம் தானே? “தனது தலைமையை காப்பாற்றிக் கொள்வது’ என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான், சத்தியாக்கிரக வடிவத்தைக் கைவிட்டு, “பறிமுதல்’ என்ற போராட்ட வடிவத்துக்கு மாறினார் காந்தி. அதே நேரத்தில், “”உப்பை மட்டுமல்ல, மொத்த சுதந்திரத்தையுமே பறித்தெடுக்க வேண்டும்” என்று கூறிய பகத்சிங் முதலான புரட்சியாளர்களை, “தீவிரவாதிகள், வன்முறையாளர்கள்’ என்றார் காந்தி.
சட்ட மறுப்பு இயக்கத்தை “இரகசியம்’ சூழ்ந்து விட்டதாகக் கூறி, காந்தி அதனைக் கைவிட்டு, இர்வினிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சரணாகதி அடைந்த பொழுது,
“”ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டதாக நாங்கள் ஐயமின்றிக் கருதுகிறோம். தனது வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி மேலும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது”
என சுபாஷ் சந்திர போஸும், வித்தல்பாய் படேலும் வியன்னாவிலிருந்து பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர். இருப்பினும் பார்ப்பனபனியாக் கட்சியான காங்கிரசுக்கு, மக்களை ஏய்க்க காந்தியின் “முகமூடி’ தேவைப்பட்டது. ஆங்கில அரசுக்கோ, இத்தகைய விசுவாசமான “எதிரி’ கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?
இவ்வாறு முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஆளும் வர்க்கத்தின் மனம் நோகாமல், காந்தி நடத்திய “அரசியல் பரிசோதனை’களுக்கு “சோதனைப் பிராணி’களாக இந்திய மக்கள் அடிபட்டார்கள். உதைபட்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். சொத்துக்களை இழந்தார்கள். சிறையில் வாடினார்கள். ஒவ்வொரு போராட்டத்தின் கழுத்தறுப்பிற்கு பிறகும் விரக்திக்கும், வேதனைக்கும் தள்ளப்பட்டார்கள். இதைவிடக் கொடூரம்,
“”போராட்டத்தின் தோல்விக்கான காரணம், மக்களின் ஆத்ம சுத்தி போதவில்லை”
என காந்தி சொன்ன குற்றச்சாட்டையும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள்.
1942இல் யுத்தத்தில் ஜெர்மனி-ஜப்பான் முகாம் வெற்றி பெறலாம் என்ற கணிப்பில், அரை மனதோடு, காந்தி “வெள்ளையனே வெளியேறு‘ முழக்கத்தை முன்வைத்த மறுகணமே, காங்கிரசின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இம்முறை மக்களின் போர்க்குணம் முழுமையாக வெளிப்பட்டது. தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. போலீசும், இராணுவமும் தாக்கப்பட்டனர். ஷோலாப்பூர் போன்ற பல இடங்களில் இராணுவமோ, போலீசோ பல நாள்களாக உள்ளே நுழையக் கூட முடியவில்லை. கொடூர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
“காங்கிரசு சோசலிஸ்டுகள்’தான் வன்முறைக்கு காரணமென்று, காங்கிரசுத் தலைவர்கள் ஆள்காட்டி வேலையில் ஈடுபட்டார்கள். எதற்கும் உதவாத அகிம்சையை, மக்கள் நடைமுறையில் வீசியெறிந்தனர். சிறையிலிருந்து விடுதலையான காந்தி, போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். 1921இல் ஒத்துழையாமை இயக்கத்தின் பொழுது, சாதி, மத வேறுபாடுகளற்று நாடே கிளர்ந்தெழுந்த பொழுது, சுதந்திரம் வாயிற்படி வரை வந்ததென்றால், 1942இல் சுதந்திரம் வீட்டிற்குள்ளேயே கால் வைத்தது. ஆனால் இந்த முறையும் காந்தி அதன் காலை வாரிவிட்டார்.
தலைமையை விஞ்சி எழும்பும் மக்களின் போர்க்குணத்தை அதன் திரண்ட வடிவத்தில் 1942இல் காந்தி கண்டார். அதனால்தான் பின்னர் பிரிவினைக் கோரிக்கை எழுந்த பொழுது, பிரிவினைக் கோரிக்கையை ஆதரிப்பதைத் தவிர காந்திக்கு வேறு வழி இருக்கவில்லை. ஏனெனில் இன்னொரு “மக்கள்திரள் அரசியல் போராட்டம்’ என்பது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் பெயர்த்தெடுக்காமல் அடங்காது என்பதைக் காந்தி புரிந்து கொண்டார். பிரிவினைக் கோரிக்கையை ஏற்பதற்கான காங்கிரசுத் தீர்மானத்தின் முன்மொழிவில், இதனைக் குறிப்பிடவும் செய்தார்.
பிரிவினைக் காலத்தில், கலவரம் நடந்த ஒவ்வொரு இடத்திற்கும் காந்தி சென்றார். ஆனால், அவரது சமரச முயற்சிகளும், போதனைகளும் இந்துமகா சபா வெறியர்களிடமும், முசுலீம் லீக் வெறியர்களிடமும் எடுபடவில்லை. காந்தியின் ஆத்மார்த்த சீடர் ஆச்சார்ய கிருபாளனியே, காந்தியினுடைய முயற்சிகளின் பலனைக் கீழ்க்காணும் முறையில் விவரிக்கிறார்.
“”அவர் நவகாளிக்கு சென்றார். அவரது முயற்சிகளால் நிலைமை சற்றே முன்னேறியது. இப்பொழுது பீகாரில் இருக்கிறார். நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாபில் கொழுந்து விட்டெரியும் வன்முறையில் எந்த மாற்றமும் இல்லை. மொத்த இந்தியாவிற்கான இந்துமுசுலீம் ஒற்றுமைப் பிரச்சினையை பீகாரில் தீர்க்கப் போவதாகக் கூறுகிறார். ஒருவேளை அவ்வாறு நடக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் என்பது சிக்கலாகவே தோன்றுகிறது. சாத்வீகமாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தைப் போல, இலக்கை அடைவதற்கான எத்தகைய தீர்க்கமான வழிமுறைகளும் இதில் இல்லை.” பின்னர், “”பீகாரில் தங்களது அகிம்சை எவ்வாறு வேலை செய்தது?” எனக் கேட்டபொழுது “”அது வேலையே செய்யவில்லை. மோசமாகத் தோல்வியடைந்தது”
என்றார் காந்தி.
காந்தியின் ஆசிரமம் தாக்கப்பட்டது. தில்லியில் நடத்திய கடைசி உண்ணாவிரதத்தின் இறுதியில் காந்தி
““நான் எனது ஓட்டாண்டித்தனத்தை ஒத்துக் கொள்கிறேன்”
என தனது இயலாமையை வெளியிட்டார். அகிம்சையின் தந்தை காஷ்மீருக்கு படைகள் அனுப்ப ஆதரவளித்தார். தான் சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசியலையும் பிரிப்பேன் என்றார். அடுத்த கணமே,
“”மதம்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். வார இறுதி விசயமாக அல்லாமல், ஒவ்வொரு நொடியும் மதத்திற்காகச் செலவிடப்பட வேண்டும்” என்றார். காந்தியால் தனது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட நேரு, “காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள் காலங்கடந்தவை’ என அவருக்கே கடிதம் எழுதினார். “”காந்தி தனது இறுதி நாள்களில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்தார்”
எனத் தெரிவிக்கிறார் கிருபாளனி.
இதே காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவம் தொடுத்த தாக்குதல்களும், 1945 கப்பற்படை எழுச்சியும், தொழிலாளர் போராட்டங்களும் காந்தியின் அரசியல் முடிவை முன்னறிவித்தன. இரண்டாம் உலகப் போரில் பலவீனமடைந்த ஆங்கில அரசு, நேரடியாகத் தனது காலனிகளை இனிமேலும் அடக்கியாள முடியாது என்ற நிலையில், இந்தியா, இலங்கை மற்றும் பிற காலனிகளின் தரகு முதலாளிகளுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கைமாற்றிக் கொடுக்க முன்வந்தது.
அரசியல் அரங்கத்தால் புறந்தள்ளப்பட்ட காந்தியின் பிம்பம், இன்றளவும் பாதுகாக்கப்படுகிறதென்றால், அதற்கு கோட்சேயின் நடவடிக்கைதான் உதவி செய்தது என்று சொல்ல வேண்டும். காந்தியம் வெளுத்து, அதன் பூச்சுக்கள் உதிர்ந்த நிலையில், காந்தி ஒருவேளை தொடர்ந்து வாழ்ந்திருப்பாரேயானால், காந்தியம் தவிர்க்கவியலாமல் செத்துப் போயிருக்கும். கத்தியின்றி, இரத்தமின்றி, சுதந்திரத்தின் கழுத்தறத்ததுதான், “காந்தி’ எனும் ஊதிப் பெருக்கப்படும் “சோளக்காட்டுப் பொம்மை’யின் சுருக்கமான அரசியல் வரலாறு.
“”என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லையா?” என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், “வாடிக்கையாளரே நமது எசமானர்’ என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத்தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மைதான்.
நன்றி- வினவு.

ரத்னபுரி இளவரசி ரைப்படத்தில் எம்.ஆர்.ராதா

ரத்னபுரி இளவரசி என்கிற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். 1960-ல் வெளியானது.
எம்.ஆர்.ராதா வழக்கம் போல் ஓர் எதிர்மறை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடவுள் மறுப்பு கொள்கை சார்ந்த நகைச்சுவையை இத்திரைப்படத்திலும் அட்டகாசமாக இறைத்திருக்கிறார். இது வழக்கமானதுதான். ஆனால் ஓரிடத்தில் அவர் செய்த குறும்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அதற்காகவே இந்தப் பதிவு.
பின்னணி விவரங்களை அதிகம் நீட்டாமல் சுருக்கமாகச் சொல்கிறேன். அந்தச் சூழலை புரிந்து கொள்வதற்காக மட்டும்.
அரசனுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டு விடுவார் ராதா. காவலாளி ஒரு ராமபக்தன் என்பதை அறிந்து கொள்ளும் ராதா, அங்கிருந்து தப்பிப்பதற்காக தன் கூட்டாளியுடன் ஓர் உபாயம் செய்வார். தான் ஒரு தீவிரமான ராம பக்தன் என்பதை நிறுவும் வகையில் பக்திப்பாடல்களை பாடுவார். இதன் மூலம் காவலாளியின் கவனத்தைக் கவர்ந்து அவனிடமுள்ள சாவியை களவாடுவது என்பது நோக்கம்.
அவர் பாடல்களைப் பாட காவலாளியும் தன்னிலை மறந்து அவருடன் இணைந்து கொள்வான். பக்தியுணர்வில் திளைப்பது போல் நடிக்கும் ராதா, ஒரு கட்டத்தில் . “ ராமசாமி…… உன்னைப் பார்த்துட்டேன்…. என் பாக்கியம்…’ என்பது போல கத்தி உச்சநிலை கொள்வார்.
ராதாவின் குறும்பு புரிகிறதா… 
**
இன்னொரு காட்சியில் வானத்தில் வால்நட்சத்திரம் தோன்றும் என்கிற செயற்கையான நிலையை ஏற்படுத்தி அரசனை ஏமாற்றுவார். ‘எப்படி இந்த யோசனை உங்களுக்கு வந்தது?” என்று கூட்டாளி கேட்பான். :”நம்ம பயலுகதான் வானத்தில எது போனாலும் விழுந்து கும்பிடுவாங்களே” என்று நையாண்டி செய்வார்.
ராதாவின் நகைச்சுவை வெளிப்பட்டு எத்தனையோ வருடங்கள் கழிந்தும் இன்னமும் செல்லுபடியாகிக் கொண்டிருக்கிறது. வானத்தில் ஹெலிகாப்டர் சென்றாலும் விழுந்து கும்பிடும் ஆசாமிகளை நாம் பார்த்தோம்தானே?
காட்சிகளின் பின்னணிகளுக்கும் சூழலுக்கும் பொருத்தமில்லாமல் அதிலிருந்து விலகி, தன் கொள்கைகளை திணித்த பாணிதான் ராதாவின் நகைச்சுவை என்றாலும், மூடநம்பிக்கைகள் மேலும் மலிந்திருந்த அந்தக் காலத்தில் தான் தோன்றிய ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய பிரத்யேக நையாண்டியின் மூலம் அதற்கு எதிரான பரப்புரையை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருந்த ராதாவின் பிடிவாதத்தையும் திறமையையும் வியக்கிறேன்.

அரேஞ்சுடு மேரேஜுக்கான அடிப்படைக்காரணம்

சரியான ஆளுமையுடன் பிள்ளை வளர்க்கத் தவறுவதே அரேஞ்சுடு மேரேஜுக்கான அடிப்படைக்காரணம்.
குழந்தைக்கு பல் முளைக்கும் போது, நடக்கத் தொடங்கும்போது, மழலையாய் பேசத் தொடங்கும் போது மகிழ்வடையும் பெற்றோர், ஹார்மோன் முகிழ்த்து காதலிக்கத்தொடங்கும் போது கதறுகிறார்கள் என்றால்.... தவறு பிள்ளை மீது அல்ல. பெற்றோர் மீதே.
பிள்ளை வளர்ப்பு என்பதையே, இவர்கள் லாபம் ஈட்டும் தொழில் ஒன்றுக்கான முதலீடாகவே நினைக்கிறார்கள்.
கடைசிக்காலத்தில் என்னைக் காப்பாற்றுவானா?- என்ற ஒற்றை கேள்வி தரும் அச்சுறுத்தலின் அடிப்படையில் தான் இவர்களின் மொத்த பிள்ளை வளர்ப்பின் லட்சணமும் அமைந்திருக்கிறது.
குழந்தைகளை தன் காலில் நிற்க விடாமல் மனரீதியா - உடல் ரீதியான சவலைகளை உருவாக்கும் நம் நாட்டு பிள்ளை வளர்ப்பு, பெற்றோர்களின் வக்கிர எண்ணங்களின் வடிகாலாய் அமைந்திருக்கிறது. இதனை ப்ளாக் மெயிலின் ஒரு வகையாகவே கணக்கில் கொள்ள முடியும்.

"இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருவதில்லை" - நுண்ணரசியல்

இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருவதில்லை, விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாக்கப்பட்டு வருகின்றன என்ற இரண்டு பொத்தாம்பொதுவான வாதங்கள் அனைத்து உரையாடல்களிலும், கட்டுரைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இவ்விரண்டு கூற்றுகளுமே சமகாலத்தின் மிகப்பெரிய பொய் என்பதையும் அதிலிருக்கும் நுண்ணரசியலையும் கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
தமிழக சூழலில் மாவட்ட வாரியாக 90% விவசாய நிலங்களை வைத்திருப்பது அந்தந்த பகுதிகளின் ஆதிக்க சாதியினர் மட்டுமே. இன்று வீட்டுக்கு ஒரு கணினி நிபுணரை தமிழகம் உருவாக்கி சென்னை, ஐதராபாத், பெங்களூரு மட்டுமல்லாது அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. வேலையே கிடைக்கவில்லை என்றாலும் மூன்று நான்கு ஆண்டுகள் சென்னை, கோவை போன்ற நகரங்களில் அறை எடுத்து வேலை தேடும் கணிசமான இளைஞர்கள் உண்டு. விவசாய நிலங்களும் பெரும்பாலும் இவர்களது பெற்றோர்களிடம்தான் இருக்கிறது.
ஆண்ட பரம்பரையினர் தங்களது வாரிசுகள் விவசாயம் செய்வதை விரும்புவதில்லை. தப்பித்தவறி ஊருக்குள் விவசாயம் செய்யும் இளைஞர்கள், 35 வயதானாலும் திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை என்று உட்கார்ந்திருப்பதே சாட்சி. சரி, அப்ப என்னதான் பிரச்சினை ஏன் இந்தக்கால இளைஞர்கள் வேளாண் தொழிலில் ஈடுபட முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருகிறது?
காலங்காலமாக நிலவுடைமைச் சாதிகளுக்கு பண்ணை வேலைகள் செய்துவந்த தலித் மக்கள் விவசாயக் கூலி வேலைகளை விட்டு வேறு தொழிலுக்கு சென்றதுதான் பிரச்சினை. நேரடியாகச் சொல்லாமல் சுற்றிவளைத்து நாடு எதிர்நோக்கும் மாபெரும் அச்சுறுத்தல் என்று பில்டப் கொடுக்கப்பட்டு வருவது இதைத்தான். உழவு செய்ய, A2 பால் தரும் மாடுகளைப் பராமரிக்க, விதைக்க, அறுக்க, கதிரடிக்க, மரமேற, வண்டிமாடு ஓட்ட மலிவான கூலிக்கு வந்தவர்கள் இப்போது வருவதில்லை என்பதுதான் இன்றைய இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவதில்லை என்று பாலிஷான மொழிநடையில் சொல்லப்படுகிறது.
கல்வி வாய்ப்புகள், அரசாங்க நலத்திட்டங்கள், இட ஒதுக்கீடுகள் தமிழகம் போன்ற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டாலும் வட மாநிலங்களிலும் சேர்த்து கிடைத்த ஒரு வாய்ப்பு Mobilityயால் கிடைக்கப்பெற்றதே. பஜாஜ், ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்கு இதில் அளப்பறியது. 400 ரூபாய்க்கு விவசாய கூலி வேலை செய்வதைவிட 30 கிலோமீட்டர் சென்று 700 ரூபாய்க்கு கொத்தனார் வேலை செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது இந்த வாகனங்கள்தான்.
அபார்ட்மென்ட்டுகளில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் ஸ்கூட்டி, சூப்பர் எக்செல்களில் வருவதுதான் அங்குள்ள உயர் நடுத்தர வருவாய் பிரிவு இல்லத்தரசிகளின் கவலையாக இருக்கிறது. வேலைக்காரப் பெண்கள் ஸ்கூட்டி வைத்திருப்பதாலேயே வெஸ்பா வாங்கிய வீடுகள் பல உண்டு (பயாஜியோ கம்பெனிக்கே இப்படி ஒரு மார்க்கெட் செக்மெண்ட்டேஷன் இருப்பது வண்டி அறிமுகப்படுத்தும்வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை). சைக்கிளில் மட்டுமே - அதுவும் பண்ணையார் எதிரில் வரும்போது இறங்கி நின்று - செல்ல விதிக்கப்பட்ட தலித் மக்கள் பைக்குகளில் ஓவர்டேக் செய்து செல்கையில் 'நேத்து நம்மளகண்டு வேட்டிய இறக்குனதெல்லாம் இன்னிக்கு பைக்ல ஹார்ன் அடிச்சிக்கிட்டு போவுது' என்பதன் நவநாகரீக வடிவம்தான் 'இந்தக்கால இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவதில்லை' என்பதாகும்.
நிலம் வைத்திருக்கும் சாதியினரே அந்தந்த பிராந்திய விளைபொருட்களின் புரோக்கர், கமிசன் மண்டி, பார்வர்டிங் ஏஜென்ட், உரக்கடை, டிராக்டர் வாடகைக்கு விடுதல்வரை செய்கின்றனர். இவர்களது வாரிசுகளை ஐடி, அயல்நாட்டு, அரசாங்க வேலைகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு மிச்சமிருக்கும் ஓரிரண்டு இளசுகளை பைனான்ஸ் செய்ய அனுப்பிவிட்டு, அதற்கும் தேறாத கேஸ்கள் ஊருக்குள் ஆண்ட பரம்பரை அரசியல் கட்சிகளை வளர்க்கையில் இவர்களது தோட்டத்துக்கு தலித் மக்கள் வேலைக்கு வரவில்லை என்பதே இளைஞர்கள் விவசாயம் செய்யத் தயாராக இல்லை என்பதாகும்.
தொழிற்புரட்சியால் ஏற்படப்போகும் இந்த சமூகவியல் நகர்வுகளைக் கணித்து அரசு திட்டங்களை வகுக்காமல் போனது சமூகப் புரிதல் இல்லாத, தொலைநோக்குப் பார்வை இல்லாத அதிகாரிகளால் ஏற்பட்டதேயாகும். மானியங்களாலும், கடன் தள்ளுபடிகளாலும், குறைந்த பட்ச ஆதார விலைகளாலும் விவசாயத்தை மீட்டெடுக்க முடியும் என்பது நாளேடுகளில் நடுப்பக்கக் கட்டுரைக்கு மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். இந்திய விவசாயமும், கிராமங்களும் சாதியும் பிரிக்கவே முடியாதது. இதைக் கவனிக்காமல் நதிநீர் இணைப்பு, இயற்கை விவசாயம் என்பதெல்லாம் கட்டுரைகளோடு முடிந்துவிடும்.
தீவிர இயற்கை விவசாய ஆர்வலர்கள் அப்பட்டமான சாதி வெறியர்கள் என்று சொன்னால் சிலருக்கு தர்ம சங்கடமாக இருக்கலாம். ஆனால் இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது. அவர்களைப் பொறுத்தமட்டில் அந்தக்கால கிராமியச் சூழலில் விவசாயம் நடக்கவேண்டும். அந்த கிராமியச் சூழலில் சாதி இல்லாமல் ஆர்கானிக் இடுபொருட்களை கம்பெனி மூலம் வினியோகித்தால் அய்யகோ விவசாயிகளின் தற்சார்பு எங்கே, கார்ப்பரேட் ஆதிக்கம் வருகிறதே என பாட ஆரம்பிப்பார்கள். ஆர்கேனிக் (கொஞ்சம் ஸ்டைலாக ஆர்கானிக் என்பதை ஆர்கேனிக் என்று சொல்வதே சமகால மேல்தட்டு ஃபேஷன் ஆகும்) உணவு என்பதே நான் உன்னைவிட உயர்வானவன், எனது உணவு நீங்கள் உண்ணும் உணவைவிட உயர்வானது என்பதை நிறுவுவதற்கே இன்று பயன்படுகிறது. வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றும் கொடுமையைவிட கிலோவுக்கு 50 ppm அளவில் பூச்சிக்கொல்லி இருப்பதாகக் கண்டறியப்படுவதே பெருவாரியானோருக்குக் கவலைகொள்ளத்தக்க விசயமாகத் தெரிகிறது.
விளைநிலங்கள் வீட்டு மனைகளாக்கப்பட்டு வருகின்றன என்ற கூற்றை அலசினால் அதுவும் ஒரு மாய பிம்பம் என்பது புலப்படும். சினிமாவில் வருவதுபோல யாரும் குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி கையெழுத்து வாங்குவதில்லை. நிலம் இருப்பவர்கள் தாமாக முன்வந்து விற்கிறார்கள். இதில் விற்பனை செய்பவர்கள் வாங்குபவர் என்ன சாதி என்று தெரியாமல் விற்பதில்லை. ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக பல சாதியினரும் இருப்பது, கமிசனைப் பிரித்துக்கொள்வது அந்தத் துறைக்குள் இருக்கும் ஒரு மிகப்பெரிய நுண்ணரசியலில் ஒன்றாகும்.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் உங்கள் ஊர்ப்பக்கம் புதிதாக முளைத்த பெட்ரோல் பங்குகள் எத்தனை, அவை விளைநிலங்களின் மீது அமைக்கப்பட்டனவா இல்லையா என்பதை சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஒரு பெட்ரோல் பங்குக்கு அரை ஏக்கர் என்று வைத்துக்கொண்டால் தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை இந்து பங்க்குகள் விழுங்கியது என கணக்கிட்டால் புரியும். பெட்ரோல் பங்க் அமைப்பது அந்தந்தப் பகுதி ஆதிக்க சாதியினரால் மட்டுமே முடியும். தலித் கோட்டா என்றாலும் மேனேஜ்மெண்ட் கண்ட்ராக்ட் யாரிடம் இருக்க முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
விவசாயக் கூலி அல்லாத வேளைகளில் கிடைக்கும் அதிக ஊதியமும், பணிசார்ந்த பலன்களும் மிக முக்கியமான ஒன்று. ஒரு ஷாப்பிங் மால், பெரிய அலுவலகக் கட்டிடங்களில் பராமரிப்பு ஊழியர்களுக்கான பார்க்கிங்கில் எத்தனை சைக்கிள்கள், டிவிஎஸ் 50கள் நிற்கின்றன என்று கவனித்தால் போதுமானது. தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் அடித்தட்டுப் பெண்களுக்கு எவ்வளவு பெரிய mobilityயைக் கொடுத்திருக்கின்றன என்பதற்கு பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஊரகப்பகுதிகளில் பயணித்தறிய வேண்டும்.
பி. எஃப், இஎஸ்ஐ போன்ற பலன்கள் மால்கள், பெரிய அலுவலகங்களில் மாதம் எட்டாயிரம் சம்பளம் வாங்கும் ஹவுஸ்கீப்பிங் பெண்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது. பெங்களூருவில் ஜவுளி நிறுவன ஊழியர்கள் பி. எஃப் பிரச்சினையின்போது பேருந்து எரிப்பு அளவுக்குச் சென்றதை நினைவுகூர்க. ஊர்க்கட்டுப்பாட்டை மீறியதாக ஒதுக்கி வைக்கப்படும் அவலங்கள் இதில் ஏதும் இல்லை.
நபார்டு வங்கியால் ஊக்குவிக்கப்படும் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது சாதிவலைக்குள் எப்படி சிக்கி நசுங்குகிறது என்பதையும் அஃது ஏன் தோல்வியைத் தழுவுகிறது என்பதையும் தனியாக பி.எச்.டி-யே செய்யலாம்.
தமிழகத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு VAT exemption இருந்தது. இப்போது மித்ரோன் மோடி பராக்கிரமத்தால் உரத்துக்கு 5%, பூச்சிக்கொல்லிகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. பூஜ்யத்திலிருந்து நேரடியாக 18% வரி விதிக்கப்பட்டதற்கு வேறு துறைகளாக இருந்தால் கடும் எதிர்ப்பைக் காட்டியிருப்பார்கள். ஆனால் தமிழக விவசாயிகள் சங்கங்களின் எந்த பிரிவும் பெயரளவுக்குக்கூட கண்டனம் தெரிவித்ததாகக் காணோம். டெல்லிக்குச் சென்று கடனைத் தள்ளுபடி செய்யவும், நதிநீர் இணைக்கவும் மண்சோறு சாப்பிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. பூச்சிக்கொல்லிகளுக்கு 18% வரி என்பது விவசாயத்தின் மீதான நேரடியான தாக்குதல் என்பது ஆர்கேனிக் விவசாயக் கனவு கோஷ்டிகளுக்குப் புரியப்போவதில்லை என்பதைவிட விவசாய சங்கங்களுக்கே புரியவில்லை என்பதுதான் அபாயகரமானது.
வர்ணாசிரம முறைகளைத் தாங்கிப்பிடிக்கும் கிராமப்புற வாழ்வியல் முறைகளிலிருந்து வெளிவரும் அடித்தட்டு மக்களுக்கு வாய்ப்பளிப்பது MSME நிறுவனங்களே. இவற்றில் பெருவாரியான மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக, தினக்கூலிகளாக, சில நேரங்களில் கொத்தடிமைகளாக பணிபுரிவதைத் தடுப்பதிலும், அவர்களை முறையான பதிவுசெய்த தொழிலாளலர்களாக ஆக்குவதிலும் உள்ள நடைமுறை சிக்கல்களை அறிந்தே மனிதவள ஆற்றல்சார் நிறுவனங்கள் தோன்றின. டீம்லீஸ், அடிக்கோ என பல நிறுவனங்களை உதாரணமாகக் காட்டலாம். பிரபல அரசியல்வாதி ஒரிவரின் நிறுவனம் குறித்து சொல்லத் தேவையில்லை. Vendor employee, contractor employee, third party employee என பலதரப்பட்ட பெயர்களில் பணிபுரியும் நிறுவனத்தின் நேரடி payroll-இல் இல்லாமல் வேறு நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தாலும் PF, ESI, காப்பீட்டு பலன்கள் நேரடியாக கிடைத்துவிடும்.
ஒப்பந்த பணியாளர்களின் payroll வைத்திருக்கும் நிறுவனங்களை ஒருசாரார் தரகுமுதலாளிகள், கார்ப்பரேட் கால்நக்கிகள் என பலவாறாக விளிக்கிறார்கள். தற்போது மித்ரோன் மோடி அரசு minimum wages act மூலமாக மாதத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 18000 ரூபாய் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்து நகர்த்தி வருகிறது. ஓர் ஊழியருக்கு எடுத்த எடுப்பிலேயே மாதம் 18000 என்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். ஐம்பது பேருக்கும் குறைவான ஊழியர்களை வைத்து நடத்தப்பட்டு வரும் சின்னச்சின்ன ஆலைகள் 18000 சம்பளம் வழங்கினால் ஆறுமாதம்கூட தாக்குப்பிடிக்க முடியாது. இந்த சட்டத்தை மதிக்காத சிறு நிறுவனங்கள் PF, ESI, காப்பீடு இல்லாமல் கூலி வழங்குவது என்பது கிராமிய விவசாய சூழலில் பண்ணையாரிடம் கூலி வாங்குவதற்கு ஒப்பான சூழலை உண்டாக்கும். இதன்மூலம் சட்டத்தை மதித்து நடந்து கம்பெனியை திவாலாக்கிக் கொள்ளலாம்; தொழிலாளர்களின் payroll-இல் இல்லாமல் கம்பெனி நடத்துவதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு எந்தவித பலன்களும் சென்றடையாமல் பார்த்துக்கொள்ளலாம். பிரச்சினைகள், நிச்சயமற்ற சூழல், பாதுகாப்பின்மை, எதிர்காலம் குறித்த அச்சம், குழப்பங்கள் இருக்கும் இடங்களில்தான் சாதிகளும், மதங்களும், பக்தியும் வேர்விட்டு வளரமுடியும்.
நோட்டை செல்லாக்காசாக்கி கருப்புப் பணத்தை ஒழித்ததுமாதிரி, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 18% வரி விதித்து ஆர்கேனிக் விவசாயத்தை ஊக்குவிப்பது மாதிரி, ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 18000 சம்பளம் வழங்க சட்டமியற்றி தொழிலாளர்களையும், MSMEகளையும் nake in india செய்து 2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கி, கணிசமான இளைஞர்களை விவசாயத்துக்குத் திருப்பும் ARYA (Attracting and Retaining Youth in Agriculture) திட்டங்களை புரிந்துகொள்ள மண் கீ பாத் கேட்க வேண்டும்.

Monday, September 04, 2017

அவுங்கதான் நமக்கு கல்வி கொடுப்பாங்க

உன்னோட பிளஸ் டூ கட் ஆஃப் என்ன”
”278”
”எந்த காலேஜ்ல படிச்ச”
“ஆர்.ஈ.சி திருச்சில”
“278 க்கு எப்படி ஆர்.ஈ.சி திருச்சி கிடைச்சது”
“எனக்கு பிசி கோட்டா உண்டு அதுல கிடைச்சது”
“சூப்பர். பிசி கோட்டான்னா என்ன அது ஏன் வந்துச்சுன்னு தெரியுமா?”
“தெரியாது”
“அந்த வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு பின்னாடி அம்பேத்கர் மாதிரி ஆட்களோட உழைப்பும் தியாகமும் இருக்கு தெரியுமா”
“யாரு அம்பேத்கர்?”
”அம்பேத்கர் தெரியாதா உனக்கு”
“தெரியாது. நான் படிச்சேன். நான் ஆர்.ஈ.சி போனேன். நா நல்லா சம்பாதிக்கிறேன். இதுல ஏன் அம்பேத்கர் பத்தி தெரிஞ்சிக்கனும் சொல்லு. எதுன்னாலும் சட்டுன்னு சொல்லு. நாளைக்கு சரஸ்வதி பூஜை. நான் பூஜைக்கு சாமான் செட்டு வாங்கிட்டு வீட்டுக்கு போகனும்”
“சரஸ்வதி பூஜை எதுக்கு கொண்டாடுற?”
“என்ன நீ.. அம்பேத்கர் அது இதுன்னுட்டு தேவையில்லாத எல்லாம் பேசுற. ஆனா சரஸ்வதின்னா யாருன்னு தெரியாதுங்கற. சரஸ்வதிதான் நம்ம கல்விக்கு கடவுள். அவுங்கதான் நமக்கு கல்வி கொடுப்பாங்க”
“இப்பதான் நீ படிச்சே நீ அர்.ஈ.சி போனேன்னு சொன்ன”
“அது நான் படிச்சாலும் சரஸ்வதி கடாட்சம் இல்லாம ஆர்.ஈ.சிக்குள்ள போயிருக்க முடியுமா”
“ஸோ நீ ஆர்.ஈ.சிக்குள்ள போனதுக்கு காரணம், அம்பேத்கர் இல்ல சரஸ்வதின்னு முழுமையா நம்புற”
“ஆமா சரஸ்வதி தேவிதான் கல்விக்கு அதிபதி”
“அப்ப அந்த சரஸ்வதி தேவி ஏன் உன் தாத்தாவுக்கு கல்வி கொடுக்கல, பத்மநாபன், பார்த்தசாரதி தாத்தாவுக்கு மட்டும் கல்வி கொடுத்தாங்க. அப்படி நினைச்சிப் பாத்தியா. அப்ப எப்பத்துல இருந்து உனக்கு கல்வி கிடைக்க ஆரம்பிச்சது, அதுக்கான வாய்ப்ப யாரெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தா யோசிச்சியா”
“இதப்பாரு எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் சரஸ்வதி பூஜைக்கு சாமான் வாங்கனும். போய் புத்தகங்களுக்கெல்லாம் மஞ்சள் கரைச்சி பிள்ளையார் சுழி போடனும். நிறைய வேலை இருக்கு. நா போறேன்”
“சரி போடா இந்திய குடிமகனே போ. ’கலைவாணி நின்கருணை தேன்மழையே பாடிகிட்டே போ’” நல்லா இரு...சமூக அறிவு உனக்கு நிறைய இருக்கு... நீ கலக்கு..

Friday, September 01, 2017

மெண்டல்கள் பலவிதம்

இன்றைக்கு OMR வழியாக வருகிற போது "SAVE RIVER" ன்னு ஒரு கும்பல் கொட்டுகிற மழையில் பதாகைகளை பிடித்துக் கொண்டு நின்றது.
நான் அருகில் போய் BROTHER , இந்த BLUE WHALE விளையாட்டென்று பயமுறுத்திக் கொண்டிருக்காங்களே அது மாதிரியானதா இப்ப நீங்க பதாகை பிடித் து நிற்பது என்று நான் கேட்க, அவரு கொஞ்சம் குழம்பி பின்பு சுதாரித்து கொண்டவராக, BROTHER கிண்டலடிக்க வேண்டாம். நாங்க நநதியை காப்பற்றுவதற்காக மழையில் நிற்கிறோம் என்றார். நான் அவரிடம் நானும் அதைத் தான் சொல்கிறேன் . நதியை காப்பாற்றனும் என்றால் வெயில் காலத்தில் மக்களிடம் போய் எடுத்துச் சொல்லலாமே. நதிகளில் தண்ணீர் கரை புரண்டோடுகிற மழைக்காலத்தில் நனைந்து கொண்டே சொன்னால் எப்படி brother என்றேன். அப்படியே "கோவையில் காட்டை அழித்து ஆசிரமம் அமைத்திருக்கிற சக்கி வாசுதேவின் செயலை பற்றி என்ன நினைக்கிறீங்க" என்று கேட்டவுடன், Brother உங்களது ஆதரவை கொடுக்க முடித்தால் கொடுங்க விதண்டாவாதம் பண்ணாதீங்க என்றார். நான் அவரிடம் Brother காடுகளிலிருந்து தானே ஆறுகள் பிறக்கிறது நீங்கள் காட்டை அழித்து ஆசிரமங்கள் அமைப்பவர்களை பற்றி பேசாமல் விட்டு விட்டு ஆறுகளை காப்பற்றப் போகிறோம் என்பது எப்படி சரியாகும் என்றதும் அமைதியாகி விட்டார்.
நானும் இந்த மெண்டல்களோடு சேர்ந்து நாமும் ஏன் மழையில் நனையனும் என்றெண்ணி நகர்ந்து வந்து விட்டேன் .

 இதை சொன்னா நம்மை பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள்

சென்னை ஆக்கிரமிப்பு செய்திருப்பது இப்பொழுது கோவை - திருப்பூர் - ஈரோடு மற்றும் மதுரை - திருநெல்வேலி - தூத்துக்குடி பகுதி சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு ஒரே ஒற்றுமை ஜாதி, மதம், முதலாளித்துவ வெறியர்கள்

இது பாஜகவின் பிராக்சிகள் அதாவது நவீன பெயரில் சுற்றுச்சூழல் ஆா்வலா் என்ற பெயரில்லிருப்பவா்கள் ஆனால் இவா்களுக்கும் இயற்கைக்கும் எந்தச்சம்பந்தமமுமில்லை

Thursday, August 24, 2017

சமூத்ரகனியிசம்

ஒரு விஷயத்தை
”மேலோட்டமான உணர்ச்சிவசப்படலால் கொண்டாடுவது” என்பதற்கு
”சமுத்ரகனியிசம்” என்று பெயர் வைக்கலாம் என்றிருக்கிறேன்.
சமுத்ரகனியிசத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி இருப்பார்கள்
- தடுப்பூசி போடாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி உடல்நலத்துக்கு கேடு.. தடுப்பூசியே மருந்து கம்பெனிகளின் சதி என்று நினைப்பது.
- பசுமாட்டில் இருந்து கறந்து அந்தவிநாடியே குடிக்கும் பால் மட்டுமே சத்துள்ளது என்று நம்புவது.
-400 சுகர் இருக்கும் போது அலோபதி மாத்திரைகள் இல்லாமல் ”பித்தாவில்” லேகியம் வாங்கி உண்டு சரிசெய்யலாம் என்று நம்புவது.
-மெட்டி போடுவது, தாலி போடுவது, உடன்கட்டை ஏறுவதில் எல்லாம் அறிவியலை தேடி தேடி கண்டுபிடிப்பது மாதிரி காட்டி அதை நிருபிப்பது.
- மிக்சியில் சட்னி அரைத்தால் சுவையிருக்காது. அம்மாவோ அத்தையோ பாட்டியோ நெஞ்சுவலிக்க வலிக்க அம்மியில் அரைத்த சட்னிதான் சுவை என்று நினைப்பது.
- நேச்சுரோபதி, அக்குபஞ்சர் போன்றவற்றைப் புகழ்ந்து, அங்கப் போங்க எல்லாம் சரியாகும் என்று சொல்வது.
- நாட்டுக்கத்திரிக்காய், நாட்டுக்கோழி, நாட்டு நாட்டு என்று தொடங்கும் எதுவும்தான் உடலுக்கு நல்லது, மீதம் அனைத்தும் விஷம் விஷம் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்வது.
- டூமச்சாக பிளாஸ்டிக் பொருட்களை திட்டிக்கொண்டே இருப்பார்கள். அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் எவ்வளவு உபயோகமாக இருக்கிறது என்பது பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டார்கள்.
- ஜாதிப் பிரச்சனை பற்றி, அடக்கப்பட்டோர் நிலை பற்றி சமுத்தரகனிசம் எப்போதும் பேசாது. அது மரம் நடுவது, பிறந்தநாளுக்கு ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கு சென்று சர்க்கரைப் பொங்கல் கொடுப்பது, எங்கோ ஒரு பாட்டி பட்டாணி விற்று குடும்பத்தைக் காப்பாற்றுவதை சிலிர்ப்பது இப்படியாக சமூகத்தைப் பார்க்கும்.

Monday, August 07, 2017

வெறும் எல்லைக்கருப்பன் இன்று ஸ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகிவிட்டார்

பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வேண்டுதலுக்காக வேலின் மீது சேவலைக் குத்திவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்தபோது, எதிரிகளின் அக்கிரமங்களை பேப்பரில் எழுதி, சுருட்டிக் கட்டி வேலில் தொங்கவிட்டு வந்தபோது வெறும் எல்லைக்கருப்பன் என்றே அழைக்கப்பட்டது.

இன்று வாரிசுகள் ஐ.டி. வேலைக்கும், அயல்நாடுகளுக்கும், அரசு உத்தியோகத்திற்கும் சென்றபின் வருமானம் அதிகமாகிவிட்டதால் ஸ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகிவிட்டார். இன்னும் சில வருடங்களில் ஸ்ரீ எல்லைக்கருப்பணாரீஸ்வரன் என்றோ அல்லது ஸ்ரீ எல்லைக்கருப்பணார்பதி என்றோ உருமாற்றம் அடைந்து சமஸ்கிருத மந்திர உச்சாடனத்தில் ஜொலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




எங்க குலதெய்வங்களுக்கெல்லாம் தமிழ் தெரியாமற்போய் வெகுநாட்களாகிவிட்டன. இப்பொழுதெல்லாம் சம்ஸ்கிருதத்தில் சொன்னால்தான் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.. கருப்பராயன் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி யாகி, அண்ணமார் அண்ணன்மார் சுவாமி நாமதேஸ்யங்களாகி , ஆயுர் ஆரோக்ய குலசம்பத்தானாம் என்றுதான் எங்கள் கோரிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன.

என் குலதெய்வக் கோயிலில் மல்லாந்து படுத்து தூங்க முடியும். நாளையே ஆகம விதிப்படி நீங்கள் அங்கே படுக்கக் கூடாது என்றால் எனக்கு நிச்சயமாக கோபம் வரும். கிடா வெட்டுவது என்பது அசைவ உணவு சாப்பிடவதற்காக அல்ல. அது ஒரு கொண்டாட்டம்.

நான் -வெஜ். நம்ம கிராமத்து கோயில் திருவிழாவில் நல்லா கறி சோறு தின்னுட்டு தெம்பா சாமி கும்பிடுவோம். இப்போ சாமியையும் சைவமாக்கிடுவாங்க போல. செவ்வாய், சனி, கிருத்திகை கவுச்சி கலக்க கூடாதுன்னு சொல்றாங்க. அந்த நாள் ல சாப்பிடுறது தப்புன்னா மற்ற நாள்ல பரவாயில்லையா?

Friday, August 04, 2017

நல்லூர் முருகன் சக்தி

நல்லூர் முருகன் உண்மையில் சக்தி உள்ள கடவுள்தான் போலத்தான் கிடக்கு!

தனக்கு மேலே குண்டு போட்ட கோத்தபாயாவைக்கூட கெலிகொப்டரில் தனக்கு பூ தூவ வைத்தவர்

எங்கோ பிறந்த வெள்ளைக்காரியைக்கூட  தனக்கு காவடி தூக்க வைத்திருக்கிறார்.

ஆனால் ஏனோ தன்னை நம்பிய மக்களை  முள்ளிவாய்க்காலில் காப்பாற்ற தவறிவிட்டார்!

புத்தருக்கு எதிரான போராட்டத்தில் அவர் வேலாயுதம் வெற்றி பெற முடியவில்லையே?

கொங்கு வேளாளர் மேட்ரிமோனி டாட் காம்

கொங்கு வேளாளர் மேட்ரிமோனி டாட் காம்ல தான் நான் ரம்யாவ பார்த்தேன்"னு வீட்டுலயே தக்காளி செடி வளர்த்திட்டு இருக்கப் பொண்ணு ஒன்னக் காட்டுறாங்க. நீங்க இந்தக் கம்யூனிட்டி மேட்ரிமோனி விளம்பரங்கள உத்து கவனிச்சாவே அதுல இருக்க வித்தியாசங்கள சீக்கிரம் புரிஞ்சுக்கலாம். ஒவ்வொரு சாதிக்கும் மதத்திற்கும் உரிய குணங்களைத் தான் பொண்ணு மாப்பிள்ளையோட குணங்களா சித்தரிச்சிருப்பாங்க. ஆன்சைட் போற பிராமின் பொண்ணு, பெரிய பதவில இருக்க நாடார் பொண்ணு, அடக்க ஒடுக்கமான முஸ்லீம் பொண்ணுனு காட்டிட்டு கொங்கு வேளாளர் பொண்ணுங்க தக்காளி வளர்க்குதாம். என்னடா சாதி பெயரால பொண்ணுங்களுக்கு வக்காலத்து வாங்குறாளேனு நினைக்க வேண்டாம். கொங்கு வேளாளர்னு இல்ல,கொங்கு மண்டலத்துப் பெண்களுக்கே இதே நிலைமைதான்.
"பொம்பளைங்கன்னா அடக்கமா புருஷனுக்குப் புடிச்ச மாதிரி இருக்கோணும்டீ"னு அன்னைக்குக் குஷ்பு அக்கா மீனாவைப் பார்த்து சொல்லுமே. இன்னைக்கும் அதே மீனா நிலைமை தான் இந்த மண்டலத்துப் பெண்களுக்கும். அந்த விளம்பரத்தில் எல்லாம் எந்தத் தப்பும் இல்லீங்க. இங்க இருக்கப் பெண்களில் குறைஞ்சது அறுபது சதவீதம் பெண்கள் அப்படித் தான் இருக்காங்க.கல்யாணப் பத்திரிகையில போட்டுக்க ஒரு டிகிரி, அதையும் மீறி ஜாதகம் சொல்லுச்சுனா இன்னொரு டிகிரி(அதிலும் ஆர்ட்ஸ் மட்டுமே). படிக்கறப்பவே மாப்பிள்ளை தேடி, பரீட்சை முடியுற அடுத்த வாரமே ஊரே பேசுற மாதிரி ஆடம்பரமா கல்யாணம். இல்லனா பேருக்கு ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ வேலை (இதெல்லாம் எஃசப்ஷனல்).
படிக்கும் போது கஷ்டமா இருந்தாவே பேசாம கல்யாணம் பண்ணிட்டு போய்டலாமானு பேச ஆரம்பிச்சுடுவோம். நடுவுல கடலூர் காரி வந்து 'அடிப்பாவிகளா நான்லாம் வேலைக்குப் போனா தான்டி கல்யாண பேச்சே எங்க வீட்டுல எடுப்பாங்கனு' எங்கள விசித்திரமா பாப்பா.
வேலைக்குப் போகனும்,சொந்தமா சம்பாதிக்கணும்கிற எண்ணத்தை எங்க ஜீன்லயே யாரோ மியூடேட் பண்ணிட்டாங்க போல. அப்படியே வேலைக்குப் போனாலும் திருமணத்துக்கு அப்புறம் குழந்தை குடும்பம்னு ஒதுங்கிடணும்.பொருளாதார ரீதியிலும் நாங்க தேவைப்படாததால வேலைக்குப் போகணும் சாதிக்கணும்கிற உணர்வு வரதேயில்லை. (அடுத்த வருஷம் நானே got engaged னு ஸ்டேடஸ் போட்டா யாரும் பதட்ட பட வேண்டாம்)
'எந்தக் காலத்துலமா இருக்க நீ. இன்னைக்கு எத்தன பெண்கள் எத்தன பண்றாங்க தெரியுமா'னு எல்லாம் சொல்லிடாதீங்க.கொஞ்சம் அப்படியே திருப்பூர்,ஈரோடு,கோவை,நாமக்கல் னு ஒரு வலம் வந்தா தெரியும் எத்தன சாதனையாளர்களும் திறமைசாலிகளும் பாத்திரமும் பால் டப்பாவுமா இருக்காங்கன்னு.மிஞ்சி மிஞ்சி போனா நூத்துல நாலு பேர் தனியா மேல வந்துட்டு இருக்காங்க.மத்தவங்க எல்லோரும் daddy's little princess இல் இருந்து king's beauty queen ப்ரோமோஷன்லயே தன்னிறைவடைஞ்சறாங்க.
வேலைக்குப் போறதும் தனக்குன்னு ஏதாவது செஞ்சிக்குறதும் பெண்களோட தனியான விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தே தான் இருக்கு. ஆனா அந்த விருப்பங்களைப் பிரித்துப் பார்க்குறதுக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் இன்றளவும் கிடைக்கற மாதிரித் தெரியலை. தனக்கு எது வேணும, வேண்டாம்னு யோசிக்க வேண்டிய தேவையே இங்க உருவாகுற மாதிரி தெரியல.
பெண்களுக்கு அது வேணும் இது வேணும்,அவ்வளவு சாதிச்சுட்டாங்க அடுத்ததா இதை நோக்கி தான் அவுங்க போகனும்னு எவ்வளவோ விஷயங்கள் இருக்க, காலைல இட்லிக்குத் தக்காளி சட்னியா தேங்காய் சட்னியானு தீர்மானிக்குறதுலயே இன்னும் கொங்கு மண்டல பெண்கள் இருக்காங்கனு ஒரு விளம்பரதாரர் கூடக் கணிக்கிற அளவுக்கு மோசமா இருக்காங்கன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு.

பண மதிப்பு இழப்பு விவகாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு வழங்கியுள்ள அறிக்கையில்..

பண மதிப்பு இழப்பு விவகாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு வழங்கியுள்ள அறிக்கையில்..
∆ பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ஒரு பெரும்பிழை.. அதன் குறி இலக்கு ஏதும் எட்டப்படவில்லை..
∆ பெருமதிப்பிலான கறுப்புப் பணம் ஏதும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.. 4172 கோடி மட்டுமே சந்தேகத்திற்கிடமான பணமாக உள்ளது.
∆ ரொக்கமில்லா அல்லது குறை ரொக்க பொருளாதாரம் சாத்தியமாகவில்லை..
∆ பயங்கரவாத நிதியளிப்பு வலைப்பின்னலில் எந்த தாக்கத்தையும் இந்நடவடிக்கை ஏற்படுத்தவில்லை..
∆ பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களையும் அமைப்புசாரா தொழிலையும் பெருமளவு நலிவடைய செய்தது. 3 லட்சம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, 4 கோடி பேர் வேலையிழந்ததாக பாரதிய மஜ்தூர் சங்கம் தெரிவிக்கிறது..
∆ திட்டத்தின் அனைத்து முடிவுகளும் எவ்வித முன் யோசனையும் இன்றி எடுக்கப்பட் டுள்ளது. இன்றுவரை கிராமப் பகுதிகளில் ATM கள் வேலை செய்யவில்லை
∆ பண மதிப்பிழப்புத் திட்டத்தின் தோல்வி சுகாதாரம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளின் செலவீனங்களில் கைவைக்க வழி வகுத்துள்ளது..
∆ வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.. முதலீட்டிற் கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது..
∆ இந்த அமைப்பு ரீதியான குளறுபடிகளுக்கு யார் பொறுப்பேற்பது.. இத்திட்டத்தால் ஏற்பட்ட ₹30000 கோடி செலவுக்கு யார் பதில் அளிக்கச் சொல்வது? 180க்கும் மேற்பட்ட சாவுக்கு யாரை குற்றஞ்சாட்டுவது?
சரியாகத்தான் சொன்னார் உங்களின் மௌன் மோகன் சிங் /அமைப்புசார் கொள்ளை/ என்று.. வாய் கிழிய பேசுபவர்கள் தான் இப்ப பொத்திக்கிட்டு இருக்காய்ங்க..
இப்பவும் அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம்.. ஓட்டை பத்திக் கவலைப்படாமல் இது மாதிரி ஓட்டை நடவடிக்கையை எடுக்க 56" மார்தான் வேண்டும்.. அதை கண்டு உங்களுக்கு ஏன் காண்டாவுது.. நாடு வல்லரசாக வேண்டாமா?
/எத்தனை பேரு வரி கட்டாத ஏமாத்துறாய்ங்க.. அடிச்சாரு பாரு ரிவீட்டு?/
/என்னால நம்பவே முடியல.. இப்டி ஒரு அதிரடியா?/
/தீவிரவாத கும்பல் எல்லாம் நாசமாப் போச்சி.. சிங்கிள் டீக்கு வழியில்ல/
/புதிய இந்தியா பொறந்த வுடனே டாக்டராயிடிச்சி/
/இனி ஒருபய அரசாங்கத்த ஏமாத்த முடியாது/
என்றெல்லாம் தாண்டிக் குதித்தவர்கள், அந்தரத்தில் பல்டியடித்தவர்கள், இதென்ன பித்துக்குளித்தனம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை மடையர்களாக/ நாட்டு நலனில் அக்கறையற்றவர்களாக சித்தரித்து படங்காட்டியவர்கள் அனைவரும் -
அவுரு மூஞ்சி தொடைச்சிட்டிருந்த கொடியை வாங்கி தலையில முக்காடு போட்டுக்கிட்டு கெளம்புங்க.. கெளம்புங்க..

Thursday, July 27, 2017

மூடநம்பிக்கைகள் அண்ட விடாமல் நிம்மதியாக வாழ்வதற்கு சில வழிகள்...

1.வீட்டுக்குள் வந்து, இந்த கோவிலுக்கு இது செய்தா நல்லது, அந்த கோவிலுக்கு அப்படி நேர்ந்துகிட்டா நல்லது என்று சொல்லும் உறவினர்களை உடனே எதையாவது பேசி “எனக்கு இதில் நம்பிக்கையில்லை” என்று நிறுத்திவிடுங்கள்.
2. உங்கள் முகத்தைப் பார்த்து குறிசொல்லும் ஒரு மொக்கை ஆசாமி ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். அவரையெல்லாம் பக்கத்திலேயே அண்ட விடாதீர்கள்.
3.உங்கள் மகனுக்கோ மகளுக்கோ ஜாதகம் எழுதாதீர்கள். உங்கள் அம்மா அப்பா ஜாதகம் எழுதியிருந்தால் வாங்கி வந்துவிடுங்கள். ஒருவேளை அவர்களிடம் இருந்தாலும் உங்கள் அனுமதியின்றி அதை எந்த ஜோசியரிடமும் காட்டக்கூடாது என்று சொல்லிவிடுங்கள்.
4.அந்தரங்கமான மூடநம்பிக்கைகள் உங்களுக்குள் இருக்கும். அதை உங்களுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள். வெளியே குடும்பத்தில் சொல்லாதீர்கள். சொல்லும் போது அது பயத்தைக் கொடுத்து குடும்ப மூட நம்பிக்கையாக ஆகிவிடும்.
5.நல்ல நாள், கெட்ட நாள் என்ற பகுதியையே மறந்துவிடுங்கள். முடிந்தால் அவைகள் இல்லாத கேலண்டராக வாங்கி வையுங்கள். எக்காரணம் கொண்டும் இன்று நல்ல நேரம் எப்போது என்று பார்க்காதீர்கள். குடும்பத்திலும் அதை அறிவுறுத்துங்கள்.
6. எப்படி ஒரு அல்லேலூயா பிரச்சாரக் கூட்டத்தை காமெடியாக பார்ப்பீர்கள். அதே காமெடி உணர்வு உங்களுக்கு கணபதி ஹோமம் பார்க்கும் போதும் வரவேண்டும். அவன் இயேசுவை கும்பிட்டால் நீங்கள் சொர்க்கம் போகலாம் என்று அவனை முன்னிறுத்துகிறான். இவன் கணபதி ஹோமம் செய்யமல் போனால் உன் வீடு அவ்ளோதான் என்று பயமுறுத்துகிறான். வாய்விட்டு சொல்லி சொல்லி திணித்தால்தான் அது திணிப்பு அல்ல. இது மாதிரியான ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
7. ’பணக்காரன் - புரோகிதன்’ உறவு பற்றி கொஞ்சம் அக்கம் பக்கம் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். எல்லாப் பணக்காரனுக்கும் ஒரு புரோகித ஆலோசகர் இருப்பார். அந்த புரோகித ஆலோசகர் எப்படி தந்திரமாக பணக்காரனை சுரண்டுகிறார் என்பதை கவனியுங்கள். இதை தெரிந்து கொள்வது எளிது. இந்த Concept ஐ வைத்துக் கொண்டு நீங்க தேட ஆரம்பித்தாலே நாலைந்து சம்பவங்கள் நிச்சயம் கிடைக்கும்.
8. ஆப்ரகாம் கோவூர் மாதிரி பகுத்தறிவாளர்களை கொஞ்சமாவது படியுங்கள். பகுத்தறிவு என்பதை ஒவ்வாத சொல்லாக நினைக்காதீர்கள். காய்ச்சலின் வெளித்தோற்றம்தான் உடல் சூடு. அந்த உடல் சூட்டை மட்டும் தணித்துக் கொண்டிருக்காமல், மருந்து கொடுத்து முக்கிய காரணியை அகற்றுவதுதான் பகுத்தறிவு. இந்த கோணத்தில் பகுத்தறிவைப் பாருங்கள். வாழ்க்கையில் இரண்டு நாளுக்கு ஒருமுறையாவது ஏதாவது ஒரு பகுத்தறிவு Text ஐ படியுங்கள்.
9. பிராமணர்களின் பக்தியை பார்த்து நீங்கள் காப்பி அடிக்காதீர்கள். அவர்கள் திருப்பதி வேங்டரை கும்பிடுவதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. திருப்பதி வேங்கடரும் இந்து மதமும் பிராமணர்களுக்கு மாபெரும் அதிகாரத்தைக் கொடுக்கும் விஷயங்களாகும்.. மற்றவர்களை விட நீ உயர்ந்தவன் என்ற கருத்தை அம்மதமும் மதத்து எழுத்துக்களும் அவர்களுக்கு கொடுத்திருப்பதால் அவர்கள் பக்தியாய் இருக்கிறார்கள். அந்த பக்தியைப் பார்த்து நீங்களும் காப்பி அடித்து இருக்கும் போது ஆம் நான் அடிமை என்று ஒத்துக் கொள்வது போன்றதாகும். இது பற்றி யோசியுங்கள்.
10. பிராமணர்களின் பிள்ளைகள் மத்தியில் எப்படி அவர்கள் System ஏன் எதற்கு என்று கேட்க முடியாதபடி ”பெருமாள் பற்றை” புகுத்துகிறது என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிராமண நண்பரிடம் இது பற்றி சாதரணமாக பேசினால் அவரே சொல்வார். இப்படி புகுத்தப்படும் ”பெருமாள்பற்று” அவர்கள் எவ்வளவுதான் முற்போக்காக ஆனாலும் அது எங்காவது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். கமல் போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணம். இந்த "புகுத்துதல்” Concept பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
11. ஒரு பிற்படுத்தப்பட்ட பணக்காரர் எப்படி பிராமணராக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார் என்பதை கவனியுங்கள். சரவணபவன் முதலாளி போன்றவர்களை கொஞ்சம் ஆராயுங்கள்.
12.இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பல்வேறு மதரீதியான மூடநம்பிக்கைகளின் Flow இப்படித்தான் இருக்கிறது.
இந்து மதத்தில் ஒரு பகுதியான பார்ப்பனியம் - அதிலிருந்து பிராமணர்கள் - அதிலிருந்து பணக்கார பிற்படுத்தப்பட்டோர் - அவர்களைப் பார்த்து மற்றவர்கள். இப்படித்தான் பல மூடநம்பிக்கைகள் பரவுகிறது.
13. இந்த மூடநம்பிக்கைகளை பரப்பும் ஆளுமைகளை இனம் கண்டுகொள்ளுங்கள். இவர்கள் இப்படி சொல்வார்கள் “இந்த ஜோசியரிடம் போ இவர் உன் நலன் பார்த்துக் கொள்வார் “ என்ற ரீதியில் சொல்வார்கள்.
14. சக்தி விகடன் போன்ற சமூக விரோத கருத்துக்களை மூடநம்பிக்கைகளை பரப்பும் இதழ்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். குடும்பத்தில் யாராவது சக்தி விகடன் படித்தால் அதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்யுங்கள்.
15. வாஸ்து சாஸ்திரம் போன்ற பேச்சுக்கள் வீட்டுக்குள் யாரும் பேச முடியாதபடி முதலிலேயே எதிர்ப்பு பேசி முடித்து விடுங்கள்.
16. உங்கள் கணவரோ மனைவியோ மூடநம்பிக்கை வைத்திருந்தால் அதை பேசி பேசி சரிசெய்யுங்கள். முதலில் இதைச் செய்ய வேண்டும். பகுத்தறிவை பரப்புவது எளிது. ஏனென்றால் அதுதான் உண்மை.
17. மாமனார் வீட்டின் வழியே பல மூடநம்பிக்கைகள் வரும். அதை முதலிலேயே எதிர்த்துவிடுங்கள். திருத்தணிக்கு கிருத்திகை என்று தெரியாமல் உங்கள் மாமனார் உங்களை கூட்டத்தில் கூட்டிச் சென்றால். போய் திரும்பும் வரை காரில் மூடநம்பிக்கைகளை மெலிதாக திட்டிக் கொண்டும், அங்கே இருக்கும் சுகாதாரமற்ற சூழலை விமர்சனம் செய்து கொண்டே வாருங்கள். கல்யாணமாகி ஒருவருடத்தில் இவன் அல்லது இவள் பக்திக்கு, மூட சம்பிரதாயங்களுக்கு சரிபட்டு வரமாட்டார் என்பதை எப்படியாவது துணை வீட்டுக்கு புரிய வைத்துவிடுங்கள்.
18. மொத்ததில் “இவரா இவரிடம் இந்த டாப்பிக்கை எடுக்கவே முடியாதே... இந்த குடும்பமா இந்த குடும்பத்துகிட்ட இந்த மூடசம்பிரதாயத்தப் பத்தி பேசவே முடியாதே” என்ற சூழலை உருவாக்குங்கள்.
19. ஒரு வாளியில் ஒட்டை போட்டுக் கொண்டு நீரை நிரப்ப முடியாது போலத்தான் ஒரு குடும்பத்தில் மூடநம்பிக்கைகளை வைத்துக் கொண்டு அறிவியல் மீது Passion வளர்க்க முடியாது என்பதும். மூட சம்பிரதாயங்களை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியாது என்பதும்.
20. இதை ஏதோ சாதரணமான விஷயமாக நினைத்து அலெட்சியமாக இருக்காதீர்கள். வாஸ்து, ஜோசியம், நாடி ஜோதிடம் இது போன்று பல மூடநம்பிக்கைகளால் அப்படியே அழிந்து போன குடும்பங்கள், மனங்கள் ஏராளம். எனக்குத் தெரிந்து ஒரு பெண் தன் கணவரோடு சேர்த்து கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டினார். வீடு கட்டி நான்கு வருடங்கள் கழித்து அவர் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போயிற்று. சொந்த பந்தங்கள் சும்மானாலும் “வீடு ராசியில்லையோ” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள். உடனே அப்பெண் வீடு சரியில்லை, வீடு சரியில்லை என்று தீவிரமாக புலம்ப ஆரம்பித்துவிட்டார். தானும் கணவரும் ஒவ்வொரு காசாக உழைத்து உழைத்து கட்டிய வீட்டை சிறு மூடநம்பிக்கை காரணமாக விற்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். நல்லவேளையாக குழந்தைக்கு உடல்நிலை சரியாக எப்படியோ பலரும் சமாதானப்படுத்திவிட்டார்கள். அந்த பெண் மூடநம்பிக்கைக்கு எதிராக அவர் மனதை வைக்காத காரணத்தினாலேயே இவ்வளவு துன்பம்.
21. நீங்கள் உங்கள் மனதை, உங்கள் குடும்பத்தை மூடநம்பிக்கைகளுக்கு ( ஜோசியம், வாஸ்து, சடங்குகள்) போன்றவற்றுக்கு எதிராக தயாராக வைத்திருக்கிறீர்களா ? இல்லையா ? அதை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இல்லையெனில் தயாராக இருங்கள். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் உங்கள் மனதோடு விளையாட வரலாம்.
22.விழித்திருங்கள். அந்த விழிப்பை தர்க்கப் பூர்வமாக யோசித்து, சமூகத்தை உற்று கவனித்து, தனி மனிதர்களை வெறுக்காமல் அடைந்துவிடுங்கள்.

அப்துல் கலாம் ஐயாவின் பிள்ளைகள்

மாதம் முப்பது நாற்பதினாயிரம் பொருளீட்டும் சக்தி படைத்த ஒரு இடைநிலை பொருளாதார வர்க்கம் இருக்கிறதே, அவர்களின் பிரத்யேக சமூகப் பார்வை, பொருளாதார நோக்கங்கள் உண்டு. அந்த சிந்தனா வினோதத்தின் மொத்த உருவம் அப்துல் கலாம்.
மூன்று பக்க மொக்கை வாட்சப் பகிர்வின் முடிவில் ஒரு பன்ச் லைன் வருமே "எம் தேசத்தை அழிப்பது இலவசங்களும் மானியங்களும்" என்று, அதன் தோற்றுவாய் கலாம்.
அறிவியலும் தொழில்நுட்பமும் மட்டுமே முன்னேற்றம், வளர்ச்சி என்ற அபத்தத்தின் அடித்தளம் அப்துல் கலாம்.
"எல்லாரும் செல் போன் வச்சிருக்கானுங்க சார், பசி பட்டினி இந்தியாவுலன்னு புளுகிறானுங்க" என்று அக்கவுன்ட் வைத்து டீ குடித்துக் கொண்டே பேசுபவர் கலாமின் அசிஸ்ட்டென்ட் தான்.
இடஒதுக்கீட்டில் படித்து பயன் பெற்று, அதிக பொருளீட்டும் வாய்ப்பு கிடைத்ததும், "மொதல்ல இந்த ரிசர்வேசன ஒழிக்கணும் சார்" என்ற டயலாக்கில் கலாம் ஒளிந்திருந்து சிரிப்பார்.
நாட்டில் எந்த மூலையில் பழங்குடியினரின், மீனவர்களின், சிறு விவசாயிகளின் இன்ன பிற எளியோரின் வாழ்வாதார அடிப்படை பறிப் போகிறது என்று போராட்டங்கள் நடந்தாலும், "இவனுங்களுக்கு இதே வேலைங்க, நாடு உருப்படாம போறதுக்கு காரணமே இவனுங்க தான், வளர்ச்சிய கெடுக்கிறாங்க.. பூரா வெளிநாட்டு பணம்.. நிக்க வச்சி சுட்டா தான் சரி வரும்" என்று ஆயுத ஏந்த சொல்பவர் அகிம்சாவாத கலாம் ஐயாவின் வன்மையான மாற்று வடிவமே.
"டேய், அதின்னா புஸ்தகம், தூக்கிப் போட்டுட்டு பாடத்த படி" என்று அப்பா அதட்டுவதில் அப்துல் கலாம் காணச் சொல்லிக் கொடுத்த சாதனைக் கனவுகள் தெறிக்கும்.
நான் சாதியே பார்ப்பதில்லை, அதனால் உலகத்தில் சாதிப் பிரச்சினைகளே இல்லை, இந்த போலி முற்போக்குவாதிகளின் தொல்லை தாங்க முடிவதில்லை என்ற திருட்டுத்தனமான சலிப்பிலும், என் பிள்ளைக்கு நான் சாதி சான்றிதழே வாங்கப் போவதில்லை என்ற கௌரவ அறியாமையிலும் கலாம் புகுந்திருக்கிறார்.
ஊழல் ஒன்று மட்டும் தான் இந்த தேசத்தின் பிரச்சினை என்கிற ரீதியில் இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போதிக்கிறார்களே, டைரக்டர்கள் சினிமா எடுக்கிறார்களே, நாடாளத் துடிக்கும் நடிக சாம்ராட்டுகள் சீறுகிறார்களே, அனைவரும் கலாம் ஐயாவின் வழித்தோன்றல்களே.
தேசத்துரோகி என பாஜவும், பயங்கரவாத நக்சல்கள் என அதிமுகவும் போராடுபவர்கள் மேல் குதிக்கிறார்களே, கலாம் சாருக்கு பிடித்த விசயங்கள் தாம் அவை.
பணம் பார்த்ததும், கிராம தலித் காலனியில் இருந்தோ நகர குடிசைப்பகுதியில் இருந்தோ வெளியேறி, நகர எல்லையில் ஒரு வீடு வாங்கி குடியேறி, வெள்ளைத் தோலுடையவர் ஒருவரைத் தேடி மணம் புரிந்து, அதே நிறத்தில் பிள்ளை பெற்று, அண்டை வீட்டானிடம் சாதியை மறைத்து, அமாவாசை கிருத்திகை கும்பிட்டு, "இவனுங்கள்லாம் திருந்த மாட்டானுங்கபா, அவன் சாதி புத்தி அப்டி.. கேவலமானவனுங்க" என்று அயலான் இவன் சாதியை குறித்து பேசும் போது, இளித்துக் கொண்டே ஆமாஞ்சாமி போடுவது கலாம் ஐயாவின் தற்கால வார்ப்புகளே.
"இப்பல்லாம் யாரு சார் ஜாதி/மதம் பார்க்கிறா" என்று ஒலிக்கும் குரல்கள் அனைத்து கலாமின் டப் செய்யப்பட்ட குரல்களே.
மாடும் பன்றியும் தின்று உடல் வளர்த்துவிட்டு, நகர பன்மாடி சமூக குடியிருப்பு ஒன்றில் குடியேறியதும், சைவ உணவின் சிறப்பையும், ஜீவகாருண்யத்தையும் வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் ஃபார்வர்ட் செய்வது சாக்ஷாத் கலாம் சாஸ்திரிகள் ஐயாவே.
தேசம் என்பது மக்கள் அல்ல, நிலமும் எல்லைக் கோடுகளும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் கலாமின் வாரிசுகள் தான். தேச வளர்ச்சி என்பது இயற்கையை அழிப்பதும், எளியவரின் வாழ்வாதாரங்களை கபளீகரம் செய்வதும் தான் என்ற நவீன சித்தாந்தத்தை கடைப்பிடிக்கும் நாம் அனைவரும் ஐயாவின் பிள்ளைகள் தாம்.
தேசபக்தி, எல்லை, ராணுவம் என்பவற்றை வைத்து எதையும் மூடி மறைக்கலாம் என்பதன் அடையாள சின்னம் அப்துல் கலாம்.
கடைசியாக, "யோகி ஆதித்யனாத் ஒரு முறை கக்கூஸ் இருக்க செல்லும் போது" என்று காவி கொலைகார கும்பலின் தியாக வரலாற்றை எழுத வைப்பது கலாம் ஐயா சிலாகித்த நம் தேசபக்தி தான்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நமது அரசியல்/சமூக அறியாமைகள் மற்றும் கயமைகள், அதனை பயன்படுத்தி அரசியல் செய்வோரின் கேப்மாறித்தனத்துடன் கைக்குலுக்கும் இடம் தான் அப்துல் கலாம்.
தனது சொந்தத் துறையில் அவர் பல அறிவியல் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் அவரது அரசியல் சமூக சித்தாந்தங்கள் மூடத் தனமானவை அல்லது கயமைத்தனமானவை

Friday, July 14, 2017

*கதர் சட்டைக்குள் கருப்புச் சட்டை * #காமராசர்....

நீங்க *பல தெய்வ* வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன்
அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச *சித்திரங்கள்*. அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?
அரேபியாவிலே இருக்கிறவன் *அல்லா* ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கினான்,.
*ஜெருசலத்தல* இருக்கிறவன் *கர்த்தர்* ன்னான், அதிலேயும் சிலபேரு *மேரியக்* கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு *உட்பிரிவுகளை* உண்டாக்கிட்டான்.
*மத்திய ஆசியா*விலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு *நூறு சாமியச்* சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான *திராவிடர்கள்* காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான்.
எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?. அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான்.
ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். சுருக்கமாக சொல்லனும்னா *காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் – தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.*
யார் யாருக்கு எதிலே *லாபமிருக்கோ* அதுல சேந்துக்குறான்.
மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?,
அவன் கஷ்டங்களப் போக்குமா?.
இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு?
உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா – நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!!
இப்படியெல்லாம *அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?*
தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.
*நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?* என்று வினாத் தொடுத்தேன்.
தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். *டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?*
ராமன், கிருஷ்ணன்கிறது *கற்பனைக் கதாபாத்திரம்னேன்*. அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்!!!. இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் *கட்அவுட்* வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் *புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும், ஆசாமிய விட்டுபுடணும்*. காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி *கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி.* அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க.
புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.
நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல. பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். *நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்* என்று விளக்கினார்.
*மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே?* என்று ஒரு கேள்வியைப் போட்டேன் .
தலைவர், நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? *ஏழை* வீட்டுப் பெண்ணுக்கு ஒரு *தோடு , மூக்குத்திக்குக்* கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில *வைர* ஒட்டியாணம் செஞ்சி *காளியாத்தா* இடுப்புக்குக் கட்டி விடறான். *கறுப்புப் பணம்* வச்சிருக்கிறவன் *திருப்பதி* உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் *காசில ரோடு* போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு *பள்ளிக்கூடம்* கட்டிக் கொடுக்கலாமில்லையா?, அதையெல்லாம் செய்யமாட்டான்., *சாமிக்குத்தம்* வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். *மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா?* படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன் என்றார்.
*கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா?* இதிலேருந்து எப்போ விலகுனீங்க?” என்று கேட்டேன்.*
சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே *பத்ரகாளியம்மன்* கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே *சஞ்சீவரெட்டியோட திருப்பதி* மலைக்குப் போனேன். அவர் *மொட்டை* போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. *போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு?* எல்லாம் முடி வெட்டுரவன் (Barber Shop ) தொழில் யுக்தின்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா , சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். *தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பானுங்க ஆனா ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?* என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
*அப்படியானா, மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?* என்று கேட்டேன்.
*அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை,* இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்!!!
காமராசர் என்கிற அந்த *மனிதாபிமானி* என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்துகிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து *ஏன் பள்ளிக்கூடம் போகலியா?* என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்து விடுகிறது.
இப்படி உண்மையை உடைத்து பேசியவரை காவி பாஜகவின் தாய் வீடான ஆர்எஸ்எஸ் டெல்லியில் வைத்து அவரை தீ வைத்து கொளுத்தி சாகடிக்க பார்த்தானுங்க.

Wednesday, June 14, 2017

நம்மாழ்வார் பேத்தல்கள்

நம்மாழ்வார் பற்றி உங்களது நிலைப்பாடு என்ன என்று ஒருத்தர் கேட்கிறார். எனக்கு அவரது இயற்கை விவசாய முறைகளைப்பற்றி எந்த விமர்சனமும் கிடையாது. ஏனென்றால் அதுகுறித்து எந்த அறிவும் எனக்குக் கிடையாது.
விவசாயம் தவிர்த்து அவருடைய பேச்சுகள் பல சுத்த பேத்தல்களே. மாட்டு மூத்திரத்தை குடிச்சா கண்ணாடி போட வேண்டாம், கேன்சர் உள்ளிட்ட எல்லா நோயும் குணமாகிவிடும் என்கிறார். நான் மருத்துவ அறிவியல் மாணவன் . என்னால் இதுபோன்ற முட்டாள்தன கருத்துகளை எப்படி ஏற்றுக்கொள்ளவியலும்?
ஹீலர் பாஸ்ரகர் னு யாரோ ஒரு ஆளாம். அவர் சொல்றாராம் : நாற்காலியில கால நீட்டி உட்காருவதால் உடலின் சக்தி கால் வழியாக தரையில் வீணாக போய்விடுகிறதாம். அதனால் சப்பணமிட்டு உட்காரவேண்டுமாம். நான் அதனால் தான் அப்படி உட்காருகிறேன் என்று கூறுகிறார் நம்மாழ்வார். கொஞ்சமாவது பகுத்தறியும் திறனும் புத்தியும் உள்ள ஒருவன் இதைக்கண்டு நகைக்கமாட்டானா?
சில மாதங்கள் முன்பு வாட்சப் வதந்தி பற்றி ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். அதில் ஐஐடி பத்தமடையில் கண்டுபிடித்ததாக சொல்லி ஒரு பெண்மணி மாட்டு மூத்திரத்தின் பெருமைகளையும் அதன் சர்வரோக நிவாரணத்தன்மை பற்றியும் அளந்து விட்டார். அந்த லேடி பேசியதைக்கண்டு கோபிநாத் உள்பட அனைவரும் சிரித்தனர். நம்மாழ்வார் பேசாததை எதுவும் அந்த லேடி பேசிவிடவில்லை..!