Friday, August 04, 2017

கொங்கு வேளாளர் மேட்ரிமோனி டாட் காம்

கொங்கு வேளாளர் மேட்ரிமோனி டாட் காம்ல தான் நான் ரம்யாவ பார்த்தேன்"னு வீட்டுலயே தக்காளி செடி வளர்த்திட்டு இருக்கப் பொண்ணு ஒன்னக் காட்டுறாங்க. நீங்க இந்தக் கம்யூனிட்டி மேட்ரிமோனி விளம்பரங்கள உத்து கவனிச்சாவே அதுல இருக்க வித்தியாசங்கள சீக்கிரம் புரிஞ்சுக்கலாம். ஒவ்வொரு சாதிக்கும் மதத்திற்கும் உரிய குணங்களைத் தான் பொண்ணு மாப்பிள்ளையோட குணங்களா சித்தரிச்சிருப்பாங்க. ஆன்சைட் போற பிராமின் பொண்ணு, பெரிய பதவில இருக்க நாடார் பொண்ணு, அடக்க ஒடுக்கமான முஸ்லீம் பொண்ணுனு காட்டிட்டு கொங்கு வேளாளர் பொண்ணுங்க தக்காளி வளர்க்குதாம். என்னடா சாதி பெயரால பொண்ணுங்களுக்கு வக்காலத்து வாங்குறாளேனு நினைக்க வேண்டாம். கொங்கு வேளாளர்னு இல்ல,கொங்கு மண்டலத்துப் பெண்களுக்கே இதே நிலைமைதான்.
"பொம்பளைங்கன்னா அடக்கமா புருஷனுக்குப் புடிச்ச மாதிரி இருக்கோணும்டீ"னு அன்னைக்குக் குஷ்பு அக்கா மீனாவைப் பார்த்து சொல்லுமே. இன்னைக்கும் அதே மீனா நிலைமை தான் இந்த மண்டலத்துப் பெண்களுக்கும். அந்த விளம்பரத்தில் எல்லாம் எந்தத் தப்பும் இல்லீங்க. இங்க இருக்கப் பெண்களில் குறைஞ்சது அறுபது சதவீதம் பெண்கள் அப்படித் தான் இருக்காங்க.கல்யாணப் பத்திரிகையில போட்டுக்க ஒரு டிகிரி, அதையும் மீறி ஜாதகம் சொல்லுச்சுனா இன்னொரு டிகிரி(அதிலும் ஆர்ட்ஸ் மட்டுமே). படிக்கறப்பவே மாப்பிள்ளை தேடி, பரீட்சை முடியுற அடுத்த வாரமே ஊரே பேசுற மாதிரி ஆடம்பரமா கல்யாணம். இல்லனா பேருக்கு ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ வேலை (இதெல்லாம் எஃசப்ஷனல்).
படிக்கும் போது கஷ்டமா இருந்தாவே பேசாம கல்யாணம் பண்ணிட்டு போய்டலாமானு பேச ஆரம்பிச்சுடுவோம். நடுவுல கடலூர் காரி வந்து 'அடிப்பாவிகளா நான்லாம் வேலைக்குப் போனா தான்டி கல்யாண பேச்சே எங்க வீட்டுல எடுப்பாங்கனு' எங்கள விசித்திரமா பாப்பா.
வேலைக்குப் போகனும்,சொந்தமா சம்பாதிக்கணும்கிற எண்ணத்தை எங்க ஜீன்லயே யாரோ மியூடேட் பண்ணிட்டாங்க போல. அப்படியே வேலைக்குப் போனாலும் திருமணத்துக்கு அப்புறம் குழந்தை குடும்பம்னு ஒதுங்கிடணும்.பொருளாதார ரீதியிலும் நாங்க தேவைப்படாததால வேலைக்குப் போகணும் சாதிக்கணும்கிற உணர்வு வரதேயில்லை. (அடுத்த வருஷம் நானே got engaged னு ஸ்டேடஸ் போட்டா யாரும் பதட்ட பட வேண்டாம்)
'எந்தக் காலத்துலமா இருக்க நீ. இன்னைக்கு எத்தன பெண்கள் எத்தன பண்றாங்க தெரியுமா'னு எல்லாம் சொல்லிடாதீங்க.கொஞ்சம் அப்படியே திருப்பூர்,ஈரோடு,கோவை,நாமக்கல் னு ஒரு வலம் வந்தா தெரியும் எத்தன சாதனையாளர்களும் திறமைசாலிகளும் பாத்திரமும் பால் டப்பாவுமா இருக்காங்கன்னு.மிஞ்சி மிஞ்சி போனா நூத்துல நாலு பேர் தனியா மேல வந்துட்டு இருக்காங்க.மத்தவங்க எல்லோரும் daddy's little princess இல் இருந்து king's beauty queen ப்ரோமோஷன்லயே தன்னிறைவடைஞ்சறாங்க.
வேலைக்குப் போறதும் தனக்குன்னு ஏதாவது செஞ்சிக்குறதும் பெண்களோட தனியான விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தே தான் இருக்கு. ஆனா அந்த விருப்பங்களைப் பிரித்துப் பார்க்குறதுக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் இன்றளவும் கிடைக்கற மாதிரித் தெரியலை. தனக்கு எது வேணும, வேண்டாம்னு யோசிக்க வேண்டிய தேவையே இங்க உருவாகுற மாதிரி தெரியல.
பெண்களுக்கு அது வேணும் இது வேணும்,அவ்வளவு சாதிச்சுட்டாங்க அடுத்ததா இதை நோக்கி தான் அவுங்க போகனும்னு எவ்வளவோ விஷயங்கள் இருக்க, காலைல இட்லிக்குத் தக்காளி சட்னியா தேங்காய் சட்னியானு தீர்மானிக்குறதுலயே இன்னும் கொங்கு மண்டல பெண்கள் இருக்காங்கனு ஒரு விளம்பரதாரர் கூடக் கணிக்கிற அளவுக்கு மோசமா இருக்காங்கன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு.

No comments: