Thursday, August 09, 2018

ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
தமிழீழத்தின் தலைநகராக புலிகளால் சித்தரிக்கப்பட்ட கிளிநொச்சி, சிங்கள இராணுவத்தால் கடந்த ஜனவரியில் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் பின்வாங்கி முல்லைத் தீவுக்கு நகர்ந்தார்கள். சிங்கள இராணுவத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் புலிகளோடு முல்லைத் தீவு நோக்கி நெடும்பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இம்மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தால் சிங்கள இராணுவம் தங்கள் மீது பாரிய தாக்குதல் தொடுக்காது என்றும், அதையும் மீறி தாக்குதல் தொடுத்தால், மக்கள் கொல்லப்படுவதன் விளைவாக மேலைநாடுகள் தலையிட்டுப் போரை நிறுத்துமாறு சிங்கள அரசை நிர்பந்திக்கும் என்றும் புலிகள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சிங்கள இராணுவமோ, கனரக ஆயுதங்களைக் கொண்டும் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியும் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றொழித்தது. வாயளவில் கண்டனம் தெரிவித்தற்கு மேல் எந்தவொரு மேலை நாடும் சிங்கள அரசை நிர்பந்திக்கவோ, தலையீடு செய்யவோ முன்வரவுமில்லை.
எந்த மக்களைப் பாதுகாப்புக் கேடயமாக புலிகள் கருதினார்களோ, அந்த மக்கள் சிங்கள இராணுவத்தின் கொடிய போர்த் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க, புலிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தக் கையறு நிலையில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற ஆரம்பித்தார்கள். புலிகளால் இதனைத் தடுக்கவும் இயலவில்லை. பின்வாங்கும் பயணம் நீண்டு போகப் போக, புலிகள் தமது ஆயுதக் கிடங்குகளையும் பாதுகாப்பு அரண்களையும் கைவிட்டு செல்ல வேண்டியதாயிற்று. எந்த ஆயுதங்களைத் தமது விடுதலைக்கான அச்சாணியாக புலிகள் கருதினார்களோ, அவையெல்லாம் பெருஞ்சுமையாக மாறிப்போயின. சிங்கள இராணுவமோ, நவீன ஆயுதங்களைக் கொண்டு கொடூரத் தாக்குதலை வகைதொகையில்லாமல் கூட்டிக் கொண்டே போனது.
கொரில்லாப் போர் முறையிலிருந்து முன்னேறி, கிரமமான இராணுவத்தையும் வான்படையையும் கட்டியமைத்து வலுவடைந்த புலிகள், பிந்தைய அசாதாரண நிலையை கவனத்தில் கொண்டு, தமது நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், இலட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்கவும் இராணுவ ரீதியில் தமது செயல்தந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்த போதிலும் அதனை உதாசீனப்படுத்தினார்கள். கிரமமான படைகளைக் கலைத்துவிட்டு, மீண்டும் தற்காப்பு கொரில்லா போர்முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு புறநிலைமைகள் நிர்பந்தித்த போதிலும், அதை ஏற்க மறுத்தார்கள். மேலைநாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும், இந்தியத் தேர்தல் முடிவுகள் போர்நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்று குருட்டுத்தனமாக நம்பிப் பேரழிவையும் பின்னடைவையும் சந்தித்துள்ளார்கள்.
புலிகள் மட்டுமே தமிழீழத்தின் ஏகபோக பிரதிநிதிகளாகச் சித்தரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், புலிகள் இயக்கத் தலைவர்களும் தளபதிகளும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பெருந்தோல்வியால், இன்று ஈழ விடுதலைப் போராட்டம் தலைமை ஏதுமின்றித் தத்தளிக்கிறது. புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான பத்மநாபன், தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களால் ‘துரோகி’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இயக்கத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல எவருமே இல்லாத அவலம் நீடிக்கிறது. ஈழத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வந்த இதர குழுக்களும் தனிநபர்களும் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு புலிகளால் ஒடுக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல தலைமை ஏதுமின்றி, ஒரு பாரிய வெற்றிடம் நிலவுகிறது.
இது கசப்பான உண்மை என்ற போதிலும், இத்தகைய பின்னடைவுக்கும் பேரழிவுக்கும் காரணம் என்ன? சீனாவும் பாகிஸ்தானும் சிங்கள பாசிச அரசுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி ஆதரவாக நின்றதும், இந்தியா இந்த இனப்படுகொலைப் போருக்கு இறுதிவரை துணை நின்று வழிநடத்தியதும் தான் காரணமா? அல்லது ஐ.நா. மன்றமும் மேலை நாடுகளும் பாராமுகமாக இருந்ததுதான் காரணமா?
இவையெல்லாம் புறக்காரணிகள்தாம். இத்தகைய நிலைமைகளை எதிர்கொண்டு இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் ஆற்றல்மிக்கதாகச் சித்தரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் மூடத்தனமும் இராணுவ சாகசவாதமும்தான் இப்பேரழிவுக்கும் மீளமுடியாத பின்னடைவுக்கும் பெருந்தோல்விக்கும் முதன்மையான காரணங்கள். புலிகளிடம் சரியான அரசியல் தலைமை இல்லாமை, சரியான இராணுவ உத்திகள் இல்லாமை, யாரையும் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிப்பது என்கிற சந்தர்ப்பவாதம்; அரசியல் நேர்மையற்ற அணுகுமுறை, புலிகள் இயக்கத்துக்குள்ளும் ஜனநாயகமற்ற பாசிச சர்வாதிகாரம் முதலான ஈழ விடுதலைக்கே எதிரான போக்குகளே இப்பேரழிவையும் மீண்டெழ முடியாத தோல்வியையும் தோற்றுவித்துள்ளன.
எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் இலட்சியத்தையும் கடமைகளையும் வகுத்துக் கொண்டு, அந்த இலட்சியத்தை அடைவதற்குத் தடையாக நிற்கும் எதிரிகள் யார், நண்பர்கள் யார், ஊசலாட்டம் கொண்ட சமரச சக்திகள் யார், எந்தச் சக்திகளுடன் ஐக்கியப்பட வேண்டும், எந்த சக்திகளை வென்றெடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக வகுத்துக் கொண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளோ தொடக்கம் முதலே இந்த அடிப்படையான பிரச்சினையில் தெரிந்தே தவறிழைத்தார்கள்.
ஈழ விடுதலைக்குத் தொடக்கம் முதலே எதிரியாக இருந்து சீர்குலைத்த இந்திய அரசுடன் பகைத்துக் கொள்ளாமல், “தாஜா” செய்ததோடு, இந்திய உளவுப் படையான “ரா” (RAW)விடம் ஆயுதங்களும் பயிற்சியும் நிதியும் பெற்று, அதன் வழிகாட்டுதலின்படி அப்பாவி சிங்கள குடிமக்களைக் கொன்றும், ஈழத்திலிருந்து இசுலாமியர்களைக் கெடு வைத்து விரட்டியும், இதர போராளிக் குழுக்களை அழித்தொழித்தும், தமது ஏகபோக சர்வாதிகாரத்தை நிறுவிக் கொண்டனர்.
எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் எந்தளவுக்கு ஜனநாயகம் பேணப்படுகிறது என்பது, இனவிடுதலையின் மீது கொண்டுள்ள உறுதிக்கு ஒரு அளவுகோல். ஆனால் சிங்கள இனவெறியை எதிர்த்தும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் நின்று, புலிகளின் மனித உரிமை மீறல்களையும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் விமர்சித்த குற்றத்திற்காக ராஜினி திரணகம, வசந்தன் முதலாலோனார் உள்ளிட்டு ஏராளமானோர் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டார்கள்; அல்லது அவர்கள் காணாமல் போனார்கள். புலிகள் இயக்கத்துக்குள்ளேயே பல முன்னணித் தலைவர்களும் தளபதிகளும் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். பிரபாகரனும் அவரது வட்டாரத்தைச் சேர்ந்த விசுவாசிகளும் கொண்ட சிறுகும்பலாக இயக்கத் தலைமை மாறிப் போனது.
தேசிய இன விடுதலை என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டதாகவும் சுயசார்பானதாகவும் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு தேச விடுதலை இயக்கம் ஊன்றி நிற்கிறது என்பதுதான் அதன் புரட்சிகர தன்மைக்கான அளவுகோல். இன்றைய சூழலில், ஏகாதிபத்திய உலகமயமாக்கலை எதிர்க்காமல், எந்தவொரு தேசிய இனமும் விடுதலையைச் சாதிக்கவும் முடியாது.
ஆனால் புலிகளோ, எந்த ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து எந்தப் போராட்டத்தையும் நடத்தியதேயில்லை. தமது தலைமையிலான தமிழீழம் இந்தியாவுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கீழ் படிந்தே இருக்கும் என்று புலிகள் வாக்குறுதி அளித்து, அந்நாடுகளைத் “தாஜா” செய்தார்கள். கிழக்கு திமோர், கொசாவோ பாணியில் மேலைநாடுகள் தலையிட்டு தமக்கென தனி ஈழத்தை அமைத்துத் தரும் என்று நம்பினார்கள். அந்த அளவுக்குத்தான் அவர்களது உலக அரசியல் கண்ணோட்டம் இருந்தது. ஏகாதிபத்திய உலகக் கட்டமைவில் தேசிய இன விடுதலை என்பது எவ்வளவு சிக்கலானது, உலக நாடுகளின் மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவாக பொதுக்கருத்தையும் பொது நிர்பந்தத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பன போன்ற விரிந்த அரசியல் பார்வை புலிகளிடமோ, அவர்களின் ஊதுகுழலாகச் செயல்பட்ட தமிழக பிழைப்புவாத அரசியல்வாதிகளிடமோ இருந்ததில்லை. மேலை நாடுகள் தங்களைப் பயங்கரவாதிகள் எனத் தடை செய்திருப்பதற்கான உலக அரசியல் சூழல் மற்றும் பிற காரணிகளைப் புலிகள் புரிந்து கொள்ளவுமில்லை.
ஒருபுறம் அமெரிக்க உலக மேல்நிலை வல்லரசு; அதன் தெற்காசிய விசுவாச அடியாளாக இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசு. மறுபுறம், உலகமயமாக்கலைச் சாதகமாக்கிக் கொண்டு புதிய சந்தைக்காகவும் ஆதிக்கத்துக்காகவும் விரிவடைந்து வரும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் போட்டா போட்டி. இந்துமாக் கடலில் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, இன்று இந்த ஆதிக்க சக்திகளின் பகடைக் காயாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியையும் கூட்டையும் பயன்படுத்திக் கொண்டு, ஈழ விடுதலைப் போரை அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் ராஜபக்சே அரசு எவ்வித எதிர்ப்புமின்றி நசுக்கும் சூழலைப் பற்றி புலிகள் பாரதூரமாக உணரவில்லை. அதற்கேற்ப தமது அரசியல் இராணுவ செயலுத்திகளை வகுத்துக் கொள்ளவுமில்லை.
இன்னும் சொல்லப்போனால், மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் புலிகள் நடத்தியதேயில்லை. கடந்த பத்தாண்டுகளில் போர் நிறுத்தத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அணிதிரட்டலையும் அரசியல் போராட்டங்களையும் நடத்த புலிகள் முயற்சிக்கவேயில்லை. அரசியல் பிரிவு என்றழைக்கப்பட்ட ஒரு குழுவை புலிகள் உருவாக்கியிருந்த போதிலும், அது மக்களிடம் அரசியல் பிரச்சாரம் எதையும் செய்ததுமில்லை. மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளைத் தோற்றுவித்து எதிரியை மண்டியிடச் செய்ய முடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவுமில்லை.
அவர்களது கவனமெல்லாம் நவீன ஆயுதங்களின் இருப்பை அதிகரிப்பதிலும் சாகசவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும்தான் இருந்தது. சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக இராணுவ ரீதியில் மேலாண்மை பெற்றுவிட்டாலே, ஏகாதிபத்திய நாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து தனி ஈழத்தை உருவாக்கித் தரும் என்று கணக்கு போட்டு, ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவைப் பெறுவதுதான் அவர்களது ‘அரசியல்’ வேலையாக இருந்தது.
சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சே கும்பலின் இனவெறி பாசிச சர்வாதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் சக்திகளுடன் இணைந்து, பொது எதிரிக்கு எதிராக பரந்த ஐக்கிய முன்னணி கட்டியமைத்துப் போராட சாத்தியப்பாடுகள் இருந்தபோதிலும், அரசியல் மூடத்தனத்தால் அவற்றை புலிகள் அறிந்தே புறக்கணித்தார்கள். இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றதற்கும், ராஜபக்சே கும்பல் ஆட்சிக்கு வந்ததற்கும் மிக முக்கிய காரணமே புலிகளின் சந்தர்ப்பவாத அரசியல்தான்.
இந்த சந்தர்ப்பவாதம் 2002இல் தாய்லாந்து நாட்டில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது அப்பட்டமாக வெளிப்பட்டது. தேசிய சுயநிர்ணய உரிமைக்கு சந்தர்ப்பவாதமாகவும் துரோகத்தனமாகவும் “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார், புலிகளின் அரசியல் தலைமை குருநாதர் ஆண்டன் பாலசிங்கம். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டு தமது ஏகபோக ஆட்சி அமைவதையே “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார். அதேசமயம், தனிஈழம் கோரிக்கையை இன்னமும் கைவிட்டுவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக இது “இடைக்காலத் தீர்வு” என்று பூசி மெழுகினார்.
இப்படி சந்தர்ப்பவாதமும் சாகச வழிபாடும் தனிநபர் துதியும் கொண்ட புலிகள், முப்பதாண்டு காலமாக பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்ட ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்து படிப்பினைகளைப் பெற முன்வராமல், தொடர்ந்து பிரமைகளில் மூழ்கிப் போயினர். மறுபுறம், ஏகாதிபத்தியங்களின் ஆசியோடும், சிங்கள இனவெறி சக்திகளின் ஆதரவோடும், நவீன ஆயுதங்களின் வலிமையோடும் மிகக் கொடிய போரை ராஜபக்சே கும்பல் ஈழ மக்கள் மீது ஏவியது. உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனவெறிப் படுகொலைகளில் ஒன்றாக அமைந்த இப்போரில், பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களோடு, புலிகளின் தலைமையும் கொன்றொழிக்கப்பட்டு, ஈழ விடுதலைப் போராட்டம் பேரழிவையும், பின்னடைவையும் சந்தித்து கையறு நிலையில் தத்தளிக்கிறது. ஈழத் தமிழினத்தையே தோற்கடித்து விட்ட வெற்றிக் களிப்பில் கூத்தாடுகிறது, சிங்கள இனவெறி.
புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், ஈழத் தமிழ் மக்கள் தமது நியாயமான விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமை; நம் கடமை.

புலத்து வியாபாரிகளை நிராகரித்திடுவோம்!!

“எமது தாயகம் தமிழீழம், எமது குறிக்கோள் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்” என்று 2009ம் ஆண்டு புலம் பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று மக்களை கூக்குரல் போடவைத்த புலம்பெயர் வியாபாரிகள், இன்று தமக்குள் புலிகளின் பெயரால் மக்களை ஏமாற்றி பெற்ற சொத்துகளுக்காக வெட்டுக் குத்துப்படுகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை தின்று ஏப்பம்விட்ட இந்த பிரகிருதிகள்,  மீண்டும் புலிகள் இயக்கம், பிரபாகரனின் பெயர் மற்றும் உயிர் நீர்த்த மாவீரர்களை பாவித்து வியாபாரம் செய்து மீளவும் மக்கள் பணத்தில் உல்லாசமாக வாழ முற்படுகின்றனர்.

 கடந்த காலத்தில் இவர்களில் பலர் விடுதலைப் போராட்டத்திற்கு மானசீகமாக உழைத்தவர்கள் அல்ல. மக்களை வற்புறுத்தி அச்சுறுத்தி பணம் சேர்த்த இவர்கள், தாம் சேர்த்த பணத்தில் 20% த்தினை கமிசனாக பெற்றுவந்துள்ளனர். அதாவது புலிகளிற்கு சம்பளத்திற்கு வேலை செய்தவர்கள் தான் இவர்கள். மேலும் சிலர் புலிகளின் முதலீடுகளிற்கு பினாமிகளாக இருந்து, தமது பெயர்களில் வியாபார நிறுவனங்களை நடத்தினார்கள். புலிகளின் அழிவின் பின்னால் அவற்றினை தமது உடமையாக்கியுள்ளனர். இவர்கள் விடுதலைப் போராட்டத்திற்க்காக ஒரு மயிரைத்தானும் தங்களிடமிருந்து இழந்தவர்கள் அல்லர். மாறாக மக்கள் இரவு பகலாக கஸ்டப்பட்டு உழைத்த பணத்தினையும், விடுதலை ஆர்வத்தினால் மக்கள் வங்கிகளில் கடனாகப் பெற்றுக் கொடுத்த பணத்தினையும், வர்த்தக நிறுவனம் (சிறு கடைகள்) நாடாத்துவோரிடம் மிரட்டி பறித்த பணத்தினையும் விடுதலையின் பேரில் தமதாக்கி சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழ்பவர்களே.

புலிகளால் புலம் பெயர்ந்த நாடுகளில் நினைவு கூறப்பட்டு வந்த மாவீரர் நிகழ்வு என்பது மக்களை அரசியல் மயப்படுத்தும் அல்லது மக்களின் அபிலாசைகளை வெளிக்கொண்டு வருவதற்கான நிகழ்வாகவோ அல்லது உயிர் துறந்த வீரர்களின் இலட்சியங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான ஒரு நிகழ்வாகவோ கொண்டாடப்படுவதில்லை. மாறாக மாவீரர் நிகழ்வை வைத்து பணம் சம்பாதித்தலே நடைபெற்றது. அன்று அவ்வாறு சேர்த்த பணத்தில் பெரும் பகுதி ஆயுதம் வாங்க பயன்படுத்தப்பட்டது. இன்று நிலைமை வேறு. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கும் எஞ்சியுள்ள புலிகளிற்கும் மறுவாழ்வுக்கான உதவிகள் நிரம்பவே தேவைப்படுகின்றன. இவற்றினைப் பற்றி இவர்கள் கதைப்பது அரிது. சிலர் தம்மிடமுள்ள புலிகளின் பினாமி சொத்துக்களை காப்பாற்ற; தாம் இன்னமும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விடுதலையாகியும் கைதாகியும் உள்ள புலிகளின் மீது அக்கறை கொண்டவர்களாக நாடகமாடி வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் புலம்பெயர் மக்களிடம் தமக்கு ஊடாக உதவும்படி கோரிக்கையினை வைத்து மீண்டும் “வசூல் ராஜாக்களாக” வலம்வருகின்றனர்.

அன்று தாம் புலி அமைப்பினைச்  சேர்ந்தவர்கள் என்று தம்மை தாமே தம்பட்டம் அடித்துக் கொண்ட பலர், இன்று புலிகள் அமைப்பை பற்றி எதுவும் கதைப்பது கிடையாது. அரசு பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுகின்றது என மகிந்தா மாமா பற்றி புகழ்பாடுகின்றனர்.

ஆக மொத்தத்தில் இந்த புலம்பெயர்ந்த வியாபாரிகளின் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த எதுவித பிரஞ்சைகளும் அற்று பினாமி சொத்துக்களுக்கான நாய்ச் சண்டையிலும் மக்களை ஏய்த்து விடுதலையின் பேரால் இன்னும் ஏதாவது சுரட்டக் கூடிய வழிவகைகளை கண்டறிவதிலுமே தமது நேரத்தினை செலவிடுகின்றனர்.

இவ்வாறு மக்களை ஏமாற்றி கடந்த காலங்களில் வயிறு வளர்த்த கூட்டம் இன்றும் அதனை தொடர முயற்ச்சிப்பதனை மக்கள் தடுத்தாக வேண்டும்.

மாவீரர்களின் கனவுகள் நினைவாக்கப்பட வேண்டும் என்று கூறும் இவர்கள் முதலில் யார் என்பதை மக்கள் உணர வேண்டும். உண்மையாக மக்களை நேசிப்பவர்கள் யார் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாவீரர்கள் எனக் கூறுபவர்களின் கனவினை உண்மையான மக்கள் நலன் கொண்டவர்கள் மூலம் நிறைவேற்ற பாடுபட வேண்டும்.

இதை விடுத்து 27ம் திகதி மாவீரர் நாள், அதை கொண்டாடும் இடத்திற்கு சென்று பற்றுச்சீட்டு வாங்கி அந்த நிகழ்வுகளை பார்த்துவிட்டு, வெளியில் விற்கும் கொத்துரொட்டியையும் சாப்பிட்டுவிட்டு, வீடு திரும்பும் போது அந்த நிகழ்வு நன்றாக இருந்தது, இந்த நிகழ்வில் அவரின் நடனம் சரி இல்லை எனக் விமர்சனம் செய்தபடி வீடு வந்து குளிருக்கு நன்றாக போத்தி படுத்துவிட்டு, மறுநாள் காலை வழமைபோல தமது வேலைகளுக்கு செல்வதுடன் ஒவ்வோருவரின் கடமையும் முடிந்துவிடவில்லை.

எமது போராட்டம் எந்தவகையில் நியாயமானது? அதில் புலிகளின் அரசியலற்ற இராணுவாதப் போக்கு எந்தளவு தவறனது? என்பதை ஒவ்வோரும் விமர்சன ரீதியில் ஆராய முற்பட வேண்டும். அவ்வாறு ஆராய முற்படும் போது போலிப் பிழைப்புவாதிகள் முதலில் இனம் காணப்படுவார்கள். அவர்களை இனங்கண்டு தூக்கி எறிவதன் மூலம் தான் அடுத்த கட்ட அரசியலை நோக்கி நகர முடியும் .

புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாது பார்வையாளர்களாகவே வைத்திருந்தனர். இன்று புலிகளின் முன்னாள் போராளிகளை வடகிழக்கு மக்கள் வேண்டாத விருந்தாளிகளாக நடத்துவதில் இருந்து நாம் மக்கள் எந்த அளவிற்கு கடந்த காலத்தில் அரசியல உணர்வுடன் பங்களிப்பு செய்திருந்தனர் என்பதனை கண்டுகொள்ளலாம்.

ஒரு போராட்டம் ஒரு இனத்தின் விடுதலைக்காக நடத்தப்பட்டதாயின் அந்த போராட்டம் தோற்கடிக்கப்படின்; போராட்டத்தினை மீண்டும் முன்னெடுப்பதற்கும், போராளிகளுக்கும் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும். ஆனால் வடகிழக்கில் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளுக்கோ அல்லது புலிப்போராளிகளுக்கோ மக்கள் ஆதரவு இன்று இல்லை. இது ஏன் என்ற கேள்வியினை எழுப்பி சிந்தியுங்கள்.

புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாததால், போராட்டத்துக்கு மக்கள் தாமாக முன்வந்து எந்த செயற்பாடையும் செய்யாததால் மக்களை வலுக்கட்டாயமாக தமது போராட்டத்தில் இணைத்தனர்.  இதனால் மக்கள் புலிகள் மீது ஒரு பயத்திலான ஆதரவு நிலையினையே எடுத்திருந்தனர். இவற்றை எல்லாம் விட இறுதி கட்ட யுத்தத்தின் போது மக்களை இலங்கை அரசு கொன்று குவித்தது போதாதென்று புலிகளும் தம்மை காப்பாற்றுவதற்காக, தம்முடன் நிற்க மறுத்த மக்களை கொன்றனர். புலிகளின் உண்மை முகத்தினை வன்னியில் நின்ற மக்கள் கண்டு கொண்டனர். புலிகள் தம்மை பாதுகாக்க, எந்த மக்களின் விடுதலைக்கு போராடுவதாக கூறினரோ அந்த மக்களை கொலை செய்ததனை நேரில் மக்கள் கண்டு கொண்டனர். மக்கள் விரோதிகளாகவே மக்கள் புலிகளை அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்த உண்மைகளை புரிய இயலாதவாறு புலி வெறி ஊட்டப்பட்ட ஒருபகுதி புலம்பெயர் சமூகத்திடம், இந்த அரசியல் வியாபாரிகளின் பிழைப்பு இன்னமும் எடுபடுவது வேதனை அளிக்கும் அதேவேளை, ஏனைய புலம்பெயர் மக்களிடம் இவர்களின் முகச்சாயம் வெளிறத் தொடங்கி விட்டதனை காணவும் முடிகின்றது.

இந்த வியாபாரிகள் முள்ளிவாய்க்காலின் பின்னர் தமக்குள்  பல பிரிவுகளாக பிளவுண்டுகிடக்கின்றனர். ஒரு பகுதி ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளாக தோற்றம் பெற்றுள்ளனர். சொந்த மக்களின் அரசியலுக்கான செயற்பாடுகளை கைவிட்டு விட்டு வல்லரசுகளின் பிராந்திய நலனுக்கான அரசியல் காய்நகர்த்தல்களிற்கு பயன்படுபவர்களாக மாறி, தமிழ் மக்களின் விடுதலையின் பேரால் விபச்சாராம் செய்கின்றனர். ஏனையோர் தமக்குள் குத்து வெட்டுக்களுடன் மகிந்த அரசுடன் மறைமுகமான  தொடர்வுகளை கொண்டவர்களாக மாறிவிட்டனர்.

இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்ற புலம்பெயர் வியாபாரிகளுக்கிடையேயான சண்டைகள் ஒரு திட்டவட்டமான ஒரு செய்தியினை வெளிக்காட்டியுள்ளது. அது இவர்களின் தலைவன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்து படுகொலை செய்யப்பட்டு விட்டான். புலிகள் இயக்கம் பிரபாகரனை, தமது தலைவர் என்பதனை பிரதானமான தாரகமந்திரமாக வைத்து கட்டப்பட்டது. இந்த மந்திரத்திற்கு கடந்த காலத்தில் புலிகளை விடுதலை அமைப்பு என நம்பிய அனைவரும் கட்டுப்பட்டிருந்தனர். புலிகளின் அரசியலுக்காக அல்ல. தனிமனிதனை சுற்றி சுற்றி கட்டப்பட்ட அமைப்பு அந்த மனிதன் உயிருடன் இல்லை என்று தெரிந்ததும் சின்னா பின்னமாவது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விடயமே அல்ல.

இந்த வியாயாரிகள் உண்மையிலேயே மாவீரர்களை மதிப்பவர்களாயின் கிழே உள்ளவற்றினை செய்ய தயாராக இருக்க வேண்டும். செய்வார்களா?

1.    புலம்பெயர் தேசமெங்கும் பினாமி சொத்துக்களாக குவிந்துகிடக்கின்ற புலம்பெயர் தமிழர்களின் பணத்தினை பொதுநிதியமாக்கி போரினால் பாதிப்புக்குள்ளாகிய வன்னி மக்கள் மற்றும் போராளிகளின் வாழ்க்கையினை மேம்படுத்த வழி செய்ய வேண்டும்.

2.  புலிகளின் தோல்விக்கு பிரதான காரணமான மக்கள் விரோத அரசியலை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்.

3. புலிகளின் (இவர்களின்) தலைவன் பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் இறந்து விட்டதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

புலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் ?

புலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் ?
இரண்டு வருடங்களுக்கு முன் தமது வலுவை இழந்து தமிழ் மக்களை அடிமைகளாக்கி விட்டு யுத்தத்தில் அழிந்து போய்விட்ட புலிகள் பற்றிய விமர்சனங்கள் வரும் போது, புலிகளை விமர்சிப்பது தற்காலத்தில் அவசியம் அற்றது என்னும் போக்கு, தங்களை கடந்த காலங்களில் ஜனநாயகவாதிகளாக இனம் காட்டி புலியின் பக்கமோ அன்றி அரசின் பக்கமோ வெளிப்படையாக சாராதிருந்த பலரிடம் இன்று காணப்படுகின்றது. இதற்கு இவர்கள் கூறும் காரணங்கள் பல:
1.புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்துள்ளனர். இந்த நேரத்தில் தமது இயக்க வரலாற்றில் என்றுமே தோல்வியினை காணாத அவர்களை விமர்சிப்பது தடக்கி விழுந்தவன் மேல் மாடேறி மிதிப்பது போன்றுள்ளது.
2.புலிகள் இயக்கத்தில் பலர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர் இவ்வாறிருக்கையில் எப்படி புலிகளை விமர்சிக்க முடியும்.
3.புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களையும் புலிகளை நேசித்தவர்களையும் வெல்ல வேண்டும். ஆகவே புலிகளின் தவறுகளை விமர்சிப்பது கைவிடப்படல் வேண்டும்.
4.சரி பிழைகளிற்கு அப்பால் புலிகள் விடுதலைக்காக செய்த உயிர்த் தியாகங்கள் அளப்பெரியவை. அவர்களினுடைய வேதனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
5.புலிகள் இறுதிவரை அரசுக்கு எதிராக யுத்தம் நடத்தியவர்கள், அவ்வாறிருக்க எப்படி நீங்கள் விமர்சிகக் முடியும்.
6.புலிகள் யுத்தம் செய்யும் போது நாட்டைவிட்டு ஓடிவிட்டு, அவர்கள் அழிந்த பின்னர் அவர்களை விமர்சிக்கின்றீர்கள் இதற்கு உங்களிற்கு என்ன தகுதியுண்டு?
7.புலிகள் தமிழ் மக்களின் அடிப்படை அரசியலில் (கூட்டணியின் அரசியலுக்கு ஆயுத வடிவம் கொடுத்தனர்) இருந்து தான் தமது அனைத்து செயற்பாடுகளையும் செய்தனர். அதனால் நாம் ஒட்டு மொத்த தவறுகளையும் அவர்களின் தலையில் போட்டுவிட முடியாது.
இவ்வாறு பல கோணங்களிலும் பலவடிவங்களிலும் புலிகளை விமர்சிப்பதை தவிர்ப்பது பற்றி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணி தான் என்ன? தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருந்த புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் அதன் தோல்விக்கான காரணங்களை குறித்து மௌனம் சாதியுங்கள். புலிகளின் மக்கள் விரோத ஜனநாயக விரோத அரசியலை விமர்சனத்திற்கு உள்ளாக்காதீர்கள். மக்களிற்கு அரசியல் அறிவு ஊட்டாதீர்கள் என்பதுடன் புலிகளின் அரசியலின் தொடர்ச்சியாகவே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதுவும் தான்.
புலிகளில் இருந்தோ அல்லது புலிகள் கொண்ட அரசியலில் இருந்தோ அடுத்த கட்ட நகர்வு என்பது மீண்டும் இன்னுமொரு முள்ளிவாய்காலையோ அல்லது களனி கங்கையையோ உருவாக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.
புலிகள் கொண்டிருந்த அரசியல் மக்கள் நலனற்றது. சொந்த மக்களை ஆயுதங்கொண்டு அச்சுறுத்தி வைத்திருந்தது. அந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கியது. மக்களை நேசித்த தேசபக்தர்களை கொன்று போட்டது. இலங்கை அரசினால் ஒடுக்குமுறைகளிற்கு உள்ளான முஸ்லீம், சிங்கள மக்களை வென்றெடுப்பதற்குப் பதிலாக அவர்கள் மீது வன்முறையினை ஏவி போராட்டத்தின் நேச சக்திகளை அந்நியப்படுத்தியது. ஆனால் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிரிகளான வல்லரசுகளை நம்பி அவர்களுடன் கூட்டு வைத்திருந்தது. மக்கள் சக்தியினை விட மேற்குலகின அதிநவீன ஆயுதங்களை நம்பி செயற்பட்டது. இவர்களின் அமைப்பின் வடிவம் இவர்களிற்குள்ளேயே மேற்குலகம், சிறீலங்கா, இந்தியா தமது கையாட்களை இலகுவாக உருவாக்க வழிகோலியது. இப்படி பல பல. இவைகள் தான் புலிகளின் முள்ளிவாய்க்கால் முடிவுக்கு காரணமாயின.
மாற்றுக் கருத்து அல்லது தமது இயக்கம் மீது விமர்சனம் செய்பவர்களை ஒரே வார்த்தையில் துரோகி என்று அழித்தொழித்தவர்கள் தான் புலிகள். சிறைப் பிடித்து வைத்திருந்த மாற்று இயக்கப் போராளிகளையும், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பல உன்னதமான மனிதர்களையும் மனிதநேயமற்ற முறைகளில் சித்திரவதைகள் செய்து கொன்று புதைத்தனர். புலிகளின் முகாம்களிற்கு முன்னால் எமது தாய்மாரும், தந்தைமாரும், சகோதரிகளும் தமது தந்தையை, கணவனை, மகனை, மகளை விடுதலை செய்ய வேண்டி அழுது அலைந்த அவலங்களையும்; புலிகள் அவர்களை மனித நேயமற்ற முறையில் தகாத வார்த்தைகளை கூறி எட்டி உதைத்து அடக்குமுறையாளர்களை விடவும் மிகவும் கேவலமான முறையில் நடந்தனர். காலங்காலமாக யாழ் மண்ணிலே வாழ்ந்து வந்த முஸ்லீம் சகோதரர்களை 72 மணி நேரத்தில் உடமைகள் அனைத்தினையும் பறித்தெடுத்து துரத்தி அடித்தனர். இது கிட்லர் யூத இன மக்களிற்கு செய்த கொடுமைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. இதனால் தான் புலிகளை பாசிச சக்தி என்று விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர். புலிகள் பாசிச சக்தி இல்லை என்றால் ஏன் மற்றுக்கருத்தாளர்களை சித்திவைதைகள் செய்து கொன்று குவித்தனர்? புலிகளின் பாசிச நடவடிக்கைளினால் துன்புற்ற பல ஆயிரக்கணக்கான எம்மக்களின் வேதனைகள் துன்பங்கள் உங்களிற்கு ஒரு பொருட்டே கிடையாதா? இவைகள் பற்றி என்றுமே வாய்திறக்காது இருந்துவிட்டு இன்று வந்து விட்டீர்கள், புலிகளின் தோல்விக்கு பின்னான வேதனைகளிற்கு மருந்து போட்டு அவர்களை மீண்டும் சிம்மாசனத்தில் ஏற்றி உங்கள் இருப்புக்களை பாதுகாத்துக் கொள்வதற்கு.
புலிகளின் இந்த பாசிசக் கூறு என்பது புலிகளின் அரசியலையே காட்டி நிற்கின்ற அதேவேளை, புலிகளின் தலைமையைத் தான் அது கூறியும் நிற்கின்றது. தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்பணித்த வீரர்களிற்து பாசிசப் புலிகள் என்னும் பதம் பொருந்தாது. இவர்கள் தமிழ் மக்களின் விடுதலை புலிகளினால் வெற்றி கொள்ளப்படும் என திடமாக நம்பி, தமது விலைமதிப்பற்ற உயிரினை தியாகம் புரிந்த வள்ளல்கள். மாறாக மீண்டும் புலிகளைப் போன்று பாசிசக் கூற்றுடன் ஒரு அமைப்புத் தோன்றி மீண்டும் பல லட்சம் பேரையும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளையும் கொன்று குவிக்கும் அரசியலை உருவாகவிடாது தடுப்பதே அவசியமாகும்.
புலிகள் யுத்தத்தில் தோல்வியுற்ற நிலையில் அவர்களை விமர்சிப்பது விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போன்றது என்பது குறித்து:
புலிகள் உலக வல்லரசுகளால் நயவஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டிருந்தால் இந்த கூற்றை ஆதரிக்க முடியும். மாறாக புலிகள் மேற்கத்தேய நாடுகளை நம்பி தமிழ் மக்களை வைத்து பேரங்கள் நடத்தியதன் மூலமுமே தோற்கடிக்கப்பட்டார்கள்.
புலிகள் அமைப்பு ஏன் யுத்தத்தில் தோற்றது? புலிகள் மக்களுக்கான ஒரு அமைப்பாகவா இருந்து? இவர்கள் தமது தோல்விக்கான உள்நிலை கூறுகளை உருவாக்கியதால் தான் தோற்றனர். மக்களை நம்பாது அவர்களை வைத்து பேரம் பேசிய புலிகளின் தோல்வியை, தோல்வியாக ஏற்கமுடியாது. மாறாக இது அவர்களின் அழிவு நிலையாகவே காணப்பட வேண்டும். இந்த அழிவு நிலை ஏன் உருவான என்பதை விமர்சிக்காது அதனை பாதுகாத்தால், மீளவும் இதே அனுபவத்தை தான் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள நேரும்.
புலிகள் இயக்கதில் இருந்தவர்களையும், புலிகளை நேசித்தவர்களையும் விட்டு விட்டு புதிய போராட்டம் சாத்தியமற்றது. எனவே புலிகளின் கடந்த காலத்தினை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது போராட கூடிய சக்திகளை அந்நியப்பட்டு போகச் செய்கின்ற செயற்பாடுதான் இது. புலிகளின் மக்கள் விரோத அரசியலின் கடந்த கால செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உள்ளாக்குவதனை கைவிடுங்கள் என கோரிக்கை வைக்கின்றனர் தம்மை முற்போக்கு சக்திகள் எனக் கூறுபவர்கள். இது தவறான பார்வையும் அதேவேளை மாற்றுக்கருத்தாடல்களுக்கான முரணான செயற்பாடும் சந்தர்ப்பவாதப் போக்குமாகும்.
புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் அல்லது புலி சார்பானவர்கள் மீளவும் போராட வேண்டுமானால் முதலில் அவர்கள் ஏன் புலி தோற்றது? என்ற கேள்விக்கான பதிலை தேட முற்படவேண்டும். அப்போது தான் அவர்களிடம் மக்கள் விடுதலைப் போராட்டம் பற்றிய பார்வை ஏற்படும். மேலும் புலிகளின் குணாம்சங்களில் ஒன்றான மற்றுக் கருத்தை எம்போதும் அரசின் கருத்தாக கொள்ளும் பார்வை அற்றுப் போகும் போதே இவர்கள் மீளவும் மக்களுக்கான உண்மையான விடுதலைக்கு போராட முற்படுவார்கள். இந்த மாற்றம் நிகழாதவிடத்து மீண்டும் புலிப்பாணியிலான போராட்டமே முன்தள்ளப்படும்.
ஒருசில முன்னாள் புலி உறுப்பினர்கள் கூறும் கூற்று தமது கண்முன்னே தனது சக போராளி இறந்தான், ஆனால் இவர்கள் சும்மா இருந்து கொண்டு விமர்சிக்கிறார்கள் என்பது முற்றிலும் அரசியல் புரிதலற்ற கூற்று.சரியான விடுதலைப் போராட்டத்தை நடத்தாத புலிகளில் அனாவசியமாக கொடுக்கப்பட்ட உயிர்களில் அக்கறை கொண்டவர்களே புலிகளை விமர்சித்தனர். மாற்று கருத்துக்களை செவிசாய்க்க மறுத்ததும் ,ஆயத்தம் மட்டும் இருந்தால் போராட்டம் வெற்றி பெறும் என்ற மூட நம்பிக்கையை புலி துறக்காததால் தான் இன்று அழிந்துள்ளது.
தமிழ் மக்களின் அபிலாசைகளை மையமாக வைத்துத்தான் புலிகள் தமது செயற்பாடுகளை செய்யபுறப்பட்டனர். அதில் ஒரு இயக்கம் தான் போராட வேண்டும், மற்றைய இயக்கங்கள் அழிக்கப்பட வேண்டும், பாராளுமன்றவாதிகள் கொல்லப்பட வேண்டும். ……. இவ்வாறு பல. இது முற்றிலும் தவறான கருத்தும் புரிதலுமே. அதாவது மக்களிடம் இருந்து ஒன்றையும் புலிகள் பெற்றிருக்கவில்லை மாறாக புலிகளிடம் உள்ள கூற்றை மக்களிடம் ஆயதத்தின் மூலம் திணித்தனர். அது பின்னர் ஒரு கூற்றாக மாறியது.
புலி என்றும் மக்களின் கருத்தை கேட்டதோ இன்றி புலி உறுப்பினர்களுடைய கருத்துக்களையோ கேட்டதோ கிடையாது. தலைமை எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றும் கூலிப்படையாகத் தான் சாதாரண புலி உறுப்பினர்கள் வைக்கப்பட்டிருந்தனர். ஜனநாயகத்தையும் புலிகளின் மக்கள் விரோதப் போக்கினையும் கேள்வி கேட்ட பல புலி உறுப்பினர்கள் போராட்ட களங்களில் பின்னால் இருந்து தலைமையின் உத்தரவுகளுக்கமைய சக பேராளிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் புலிகளிடமிருந்து தப்பி ஓடினர்.
நாம் போராடி தமிழீழம் பெற்றுத் தருவோம் நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் போதும். அதுவும் வாய் திறக்காமல் இருந்தால் போதும் என்று கூறி செயற்பட்டவர்கள் தான் புலிகளின் தலைமை. இது தான் புலிகள் அழியும் வரை நடந்தது. ஏன் புலிகளில் இறந்தவர்களை நினைவு கூறும் “மாவீரர் தின” நிகழ்வுகள் உண்மையில் உணர்வு பூர்வமாகவா நடைபெறுகின்றது? இல்லை மாறாக ஆடம்பரமாகவும் ஒரு கொண்டாட்டமாகவுமே நடைபெறுகின்றது. இதை வைத்து பணத்தையும் சாம்பதிக்கின்றனர். இவ்வாறு தான் மக்களை பார்வையாளர்களாகவும் தம்மை கதாநாயகர்களாகவும் வெளிப்படுத்தியே வந்துள்ளனர்.
மக்களை நேசிப்பவர்களும் மக்களுக்காக போராடுபவர்களும் உண்மையை கூறுபவர்களும் எப்போதும் ஒரே நோர்கோட்டில் பயணிப்பர். மற்வர்கள் எல்லாம் தமது நலனுக்கு எற்ப தம்மை மாற்றிக் கொள்வார்கள் இது தான் உண்மை.
உண்மையான விடுதலைக்காய் போரட வேண்டின், விமர்சனங்கள் அற்ற போராட்டம் சாத்தியமற்றதே.

Wednesday, August 08, 2018

#திராவிடம்அறிவோம் (34)

#திராவிடம்அறிவோம் (34)

1942 – க்கு முன்னர் “ம – ள – ள – ஸ்ரீ” (இதனை மகாராஜ ராஜஸ்ரீ என்று படிக்க வேண்டும்) என்றே அரசு அலுவலகக் கடிதங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் சுருக்கமாக “ஸ்ரீ” என்று பயன்படுத்தினால் போதும் என்று 1942- ஆம் ஆண்டு சென்னை பொதுப்பணித்துறை ஆணை பிறப்பித்தது. மேலும், மூன்று வாரத்திற்குள் இது குறித்த கருத்தினை எழுதி அனுப்புமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ”திரு” என்பதே சரியான வழக்கு என்று நாவலர் ந. மு. வேங்கடசாமியார், பண்டிதமணி கதிரேசனார், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் கட்டுரை எழுதினர். “திரு” வைப் பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை நீதிக்கட்சியும் வலியுறுத்தியது.

இவ்வளவுக்குப் பின்னரும், “திரு” / “திருமதி” போன்ற சொற்களை அரசு பயன்படுத்தும் வண்ணம் ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை. தி. மு. க. தலைமையில் அரசு அமைந்த பின்னரே, ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, “திரு” / “திருமதி” பயன்படுத்தப்பட்டது. “ஸ்ரீ”  / “ஸ்ரீமதி” நீக்கப்பட்டது.

#திராவிடம் வளர்த்த தமிழ்

#திராவிடம்அறிவோம் (33)

#திராவிடம்அறிவோம் (33)

சமூக நீதி பெற உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.

தி.மு.கழகம் பங்கேற்ற திரு.வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசால்தான் மாநில அளவில் இருந்த இட ஒதுக்கீடு, மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது இந்திய வரலாற்றில் மகத்தான நிகழ்ச்சியாகும்.

ஆனால் இது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஐம்பது சதவிகிதம் தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டுமென்பதும், பின் தங்கியோரில் கிரீமிலேயர் எனும் வசதி பெற்றோர் என்று சொல்லப்படுபவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாதென்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல. அவை சமூக நீதிக்குப் புறம்பானவை. எனவே எத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

- திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் அறிக்கை (1996)

#திராவிடம்அறிவோம் (32)

#திராவிடம்அறிவோம் (32)

1969 ஆம் ஆண்டு கலைஞர்  முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், திரு.ஏ.என்.சட்டநாதன் அவர்கள் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த பரிந்துரையினை ஏற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதுவரை 16 சதவிகிதம் என்றிருந்த இடஒதுக்கீட்டு அளவை 18 சதவிகிதம் என்று உயர்த்தி 7-6-1971 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

 அதே ஆணையில்தான் அதுவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவிகிதம் என்றிருந்த இடஒதுக்கீடு 31 சதவிகிதமாக  உயர்த்தப்பட்டது

#திராவிடம்அறிவோம் (31)

#திராவிடம்அறிவோம் (31)

"தாய்மொழியில் பாடல்கள் இருந்தால் தான் பொருள் விளங்கி ரசிக்க முடியும்" என்பதால் தமிழர்களுக்குத் தமிழிசையின்பால் நாட்டம் வளர்ந்தது. இதனை அறிந்த பாடகர் சிலர் சிற்சில தமிழ்ப் பாடல்களைப் பாடினர். அந்தக் குற்றத்திற்காக அவர்களைத் தொடர்ந்து பாடுவதற்குப் பார்ப்பனர்கள் மறுத்து விட்டனர்.

சங்கீத சபாக்களின் கடிவாளம் அவர்களின் கைகளில்தான் இருந்தது. இசைத்துறையிலும் பார்ப்பனர் ஆதிக்கம்தான்.

எல்லாத் துறைகளிலும் தமிழர்களைச் சிறந்து விளங்கச் செய்யும் வாய்ப்புகளை உருவாக்கிட உழைத்த தந்தை பெரியார் தம் கவனத்தை இசைத்துறையின் பக்கம் திருப்பினார். 1930 இல் ஈரோட்டில் நடத்திய சுயமரியாதை இயக்க இரண்டாம் மாநில மாநாட்டில் ஓர் அங்கமாக தமிழிசை மாநாடு நடத்தினார். பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு இசைக்கல்வியும் பயிற்சியும் தரப்படவும், பார்ப்பனரல்லாத இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கவும் தமிழ் மக்களைக் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்.

#திராவிடம்அறிவோம் (30)

#திராவிடம்அறிவோம் (30)

1909 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகப் பேரவையின் சிறப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. அக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான பி.ஆர். சுந்தரம் அய்யர், ஒரு தீர்மானத்தை முன்மொழிகின்றார். கல்லூரி இடைநிலை வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக இருக்க வேண்டியதில்லை என்பதும், அதற்காக ஒரு தேர்வை நடத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதும் தான் அத்தீர்மானம். மாறாக சமற்கிருதத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதும் அத்தீர்மானத்தின் பிற்பகுதி.

தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்படுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்ததால், சுந்தரம் அய்யர் முன்மொழிந்த தமிழுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது.

நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், 1926ல், இடை நிலை வகுப்பிற்கு மீண்டும் தமிழ் ஒரு பாடமாக கொண்டு வரப்படுகின்றது.

திராவிடம் தமிழுக்கு எதிரானது என்பது எவ்வளவு பொய்யான செய்தி ....!

#திராவிடம்அறிவோம் (29)

#திராவிடம்அறிவோம் (29)

திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் கி.வீரமணி அவர்களின் மாமனார் - மாமியாரின் சுயமரியாதைத் திருமணத்தை 1934 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்தி வைத்தார்.

1953 இல் திருமணம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரான பின்னர், சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்கத் தக்க சட்டத்தைக் கொண்டு வந்தார். 20-1-1968 முதல் நடைமுறைக்கு வந்தது அச்சட்டம்.

மதம் சார்ந்த சடங்குகள் அற்ற சமூகத் திருமணங்கள் இங்கிலாந்து நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் நடைபெற்று வருகின்றன. தந்தை பெரியார் தொடங்கிய 80 ஆண்டுகளுக்குப் பின்னரே இங்கிலாந்தில்!

#திராவிடம்அறிவோம் (28)

#திராவிடம்அறிவோம் (28)

தலித்துகளுக்கு இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத  பல முன்னோடியான திட்டங்களை நடைமுறைப்படுத்தியது திமுக அரசு.

சான்றாக ஒரு நிகழ்வு.

2006 - ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாரால் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சரான மு.க. ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

"2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், தலித் மக்களுக்கான தனித்தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும்" என்பதே அது.

முதல்வர் கலைஞரால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அந்தத் தேர்தலில் 1,300 உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடங்கள் தலித்துகளுக்குக் கூடுதலாகக் கிடைத்தன.

#திராவிடம்அறிவோம் (27)

#திராவிடம்அறிவோம் (27)

பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனைகள் இன்று நேற்று எழுந்ததல்ல. 1893 லேயே வெளியான இரு நூல்கள் பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனைகள் குறித்துப் பேசின.

1. The Non-Brahmin Races and Indian Public Service. (பார்ப்பனர் அல்லாதார் இனங்களும் இந்திய அரசுப் பணியும்)

2. The Ways and Means for the amelioration of Non-Brahmin races. (பார்ப்பனர் அல்லாதார் இனங்கள் தெளிவு பெறுவதற்கான வழிவகைகள்)

என்னும் இரு ஆங்கில நூல்களே அவை.

நூற்றைம்பது ஆண்டுகளாகப் பெயருக்குத்தான் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்கிறார்கள். உண்மையில் இங்கே பார்ப்பனர்களின் ஆட்சி தான் நடந்து வருகிறது. இந்திய அரசுப் பணிகள்   அனைத்தும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்ற நிலைதான் இன்னமும் நீடித்து வருகிறது. இவைதான் முதல் புத்தகத்தின் சாரம்.

 அனைத்து அரசுப் பணிகளுமே பார்ப்பனர்களுக்கு என்ற நிலையை மாற்ற வேண்டும் என்றால் வேலைவாய்ப்பு என்பதை மட்டுமே மையமாகக் கொண்டு புதிய இயக்கம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது இரண்டாவது  புத்தகத்தின் சாரம்.

#திராவிடம்அறிவோம் (26)

அரசு அலுவலர் குடும்பப் பாதுகாப்பு நிதி - 1972

1972 தந்தை பெரியாருடன் பங்கேற்ற அரசு அலுவலர் மாநாடு. இதில்தான் பனிக்காலத்தில் அரசு அலுவலர் இறக்க நேரிட்டால் ரூபாய் பத்தாயிரம் அவர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். அத்தொகை இப்போது ரூபாய் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.

#திராவிடம்அறிவோம் (25)

#திராவிடம்அறிவோம் (25)

1934-ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி மாபெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஏ.பி. பாத்ரோ இத்தோல்வியைப் பற்றிக் குறிப்பிடும் போது,  "இது காலத்தே விடுக்கப்பட்ட எச்சரிக்கை. கட்சியைக் கட்டாயமாக நேர்த்தியாகவும் தூய்மையாகவும் செய்வதன் மூலம் சாகசங்களை நிகழ்த்த முடியும்" என்றார்.
நீதிக்கட்சி தனது தோல்வியைத் தாங்கிக் கொண்டதுடன், அதை ஒரு அறைகூவலாகக் கட்சியின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். முதலமைச்சரும் கட்சியினுடைய தலைவருமான பொப்பிலி அரசருடைய வீட்டில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் கட்சியைப் பலப்படுத்துவது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. தந்தை பெரியார் இக்கூட்டத்தில் தமது 14 அம்ச திட்டத்தைக் கோடிட்டுக் காட்டினார்.

அதாவது, முக்கியமாக உள்ள பொது நிறுவனங்களையும், ஆயுள் காப்பீட்டுக் கழகங்களையும் தேசிய மயமாக்குவது, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது, கட்டாய ஆரம்பக் கல்வி, தீண்டாமை ஒழிப்பு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பொருளாதார நிர்வாகம், கூட்டுறவு கடன் வங்கிகள் மூலம் ஏழை விவசாயிகளுக்கு நிவாரணம் போன்ற திட்டங்களைக் கூட்டத்தில் வற்புறுத்தினார்.

1935 - ஆம் ஆண்டு நவம்பரில் கூடிய நீதிக் கட்சியின் செயற்குழு தந்தை பெரியாரின் திட்டத்தை ஏற்றுக் கொண்டது.

#திராவிடம்அறிவோம் (24)

#திராவிடம்அறிவோம் (24)

26.01.1965. - டி.எம். சிவலிங்கம்.

27.01.1965. - கீழப்பழுவூர் சின்னச்சாமி.

28.01.1965. - விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யன்பாளையம் வீரப்பன், ரங்கசமுத்திரம் முத்து, விராலிமலை சண்முகம், கோவை தண்டபாணி, கீரனூர் முத்து

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள். திராவிட இயக்கம் தியாகத்தால் வளர்ந்தது.

ராஜாஜி பரம்பரை எதிரி ராமசாமி

ஒரு முறை ராஜாஜி திருச்சியில் பேசும் போது:

எனக்கு பரம்பரை எதிரி ராமசாமி நாயக்கர் தான் - எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்த தந்தை பெரியார்:

இதை அவர் முட்டாள்த்தனமாகச் சொல்லவில்லை. அவருடைய தாய் தகப்பனை எனது தாய், தகப்பனுக்கு தெரியாது, எனது தாய் தகப்பனை அவருடைய தாய் தகப்பனுக்கு தெரியாது.

பிறகு எப்படி பரம்பரை எதிரி என சொன்னார் என்றால், என்னை ராவணன், சூரபத்மன், இரணியன் ஆகியோர்களின் சந்ததியாகவும், தன்னை ராமன், கிருஷ்ணன் ஆகியோர்களின் சந்ததியாகவும் கருதி தான் சொன்னார்.

சூரபத்மன் பார்ப்பானை மீன் பிடிக்க சொன்னான், ஏற்றம் இறைக்கச் சொன்னான், விறகு உடைக்கச் சொன்னான்.

ராவணனும் பார்ப்பானை அடிமைப்படுத்திய வைத்திருந்தான்.

இரணியன் பார்ப்பன சேரிக்கு நெருப்பு வைக்க சொன்னான். ஆபாச கடவுளையும், புராண புரட்டுக்களையும் ஒழிக்கச் சொன்னான்.

இதை தான் நானும் சொல்கிறேன். இதனால் ஆத்திரமடைந்த ராஜாஜி இவ்வாறு கூறுகிறார்

அதேபோல கலைஞருக்கும், பார்ப்பான் குருமூர்த்திக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. பிறகு ஏன் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என அடிமை எடப்பாடியை வைத்து காய் நகர்த்துகிறான்?

கலைஞர் பெரியார் வழி வந்த ராவணன் வம்சம்.

குருமூர்த்தியும் கலைஞரை எதிர்க்கும் ஏனைய பார்ப்பனர்களும் ராஜாஜி வழிவந்த ராமன் வம்சம்.

ஆக இந்த ஆரிய திராவிட போர் தான்  இரண்டாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் நடக்கும் அரசியல். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நடக்கப் போகும் அரசியல்!

ஆக இந்த போரில் இருந்த ஒரு முக்கிய தளபதி வீழ்ந்துள்ள நிலையில் இன்னும் பலமான போர் தந்திரத்தோடும், படை பலத்தோடும், மதி நுட்பத்தோடும் போரை எதிர்கொள்ள தயாராவோம்.