Thursday, July 01, 2021

மின்வெட்டு புகார்

 

மறதி ஒரு தேசிய வியாதி. தமிழ் நாட்டல் 10 வருடமா மின் தடை இல்லங்கர மாதிரியான புருடா முட்டு ரொம்ப ஓவர். 10 வருடமா ஐரோப்ப நாடுகள் மாதிரியா தமிழ் நாடு இருந்தது?

JJ வந்தப்புறம் 4-5 மணி நேரம் இருந்த மின் தடை 12-16 மணி நேரம் ஆனது, மறந்துட்டுதா எல்லாருக்கும்!

https://www.ndtv.com/south/power-less-in-tamil-nadu-no-electricity-for-16-hours-in-many-parts-502427

https://www.ndtv.com/india-news/days-after-jayalalithaas-no-power-cut-deadline-tamil-nadu-still-in-the-dark-576791

https://www.livechennai.com/detailnews.asp?newsid=9060

2006-2011 திமுக ஆட்சிக்கு முன் இருந்த ஜெ அரசு வளர்ந்து வரும் மின்சார தேவைக்கேர்ப்ப புதுசாக எந்த மின் உற்பத்தி நிலையங்கலும் அமைக்கவில்லை. பின்னர் வந்த திமுக அரசின் போது தான் அதான் விளைவு தெரிந்தது. 2,3,4 மணி நேர மின்சாரம் தடை வந்தது. அதனால் திமுக மிக மும்முறமாக புது மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்க தொடங்கியது. அவை அனைத்தும் உற்பத்தி தொடங்கிய வருடங்கள் 2012, 2013 போல். அதனால் தான் ஜெ ஆட்சிக்கு வந்து முதல் 3-4 நான்கு வருடங்களுக்கு மின் தடை மிக மோசமாகி 16 மணி நேரம் வரை அதிகம் ஆகியது. அந்த வருடங்களில் வந்த பத்திரிக்கையை படியுங்கள் உண்மை புரியும்.

திமுக 2006-2001இல் அமைத்த மின் உற்பத்தி நிலையங்கள் பற்றிய தரவுகள்: 1.2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தொடங்கப்பட்ட எண்ணூர் அனல் மின்நிலைய இணைப்பு திட்ட (600 மெ.வா.) 2013 ஆகஸ்டு மாதம் உற்பத்தியை மாதம் தொடங்கியது. 2.மேட்டூர் அனல் மின்நிலையம் (600 மெ.வா.) 2011 ஜுலை மாதம் உற்பத்தியை தொடங்கியது. 3.வடசென்னை அனல் மின்நிலையம் (600 மெ.வா.) 2011 செப்டம்பர் மாதம் உற்பத்தியை தொடங்கியது. 4.உடன்குடியில் பி.எச்.ஈ.எல். மற்றும் தமிழ்நாடு மின்வாரியம் இணைந்து தலா 800 மெ.வா. உற்பத்தி செய்யக்கூடிய 2 திட்டங்கள் 2013 மார்ச் மாதம் உற்பத்தியை தொடங்கியது. 5.வடசென்னை அனல் மின்நிலையத்திலேயே மேலும் 600 மெ.வா. தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2011 ஆகஸ்டிலும் உற்பத்தியை தொடங்கியது. 6.ரூ.1,126 கோடியில் தொடங்கப்பட்ட கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து, 183 மெ.வா. இணை மின்சாரம் தயாரிக்கக்கூடிய திட்டம் 2011 ஜுலையில் தொடங்கும். மொத்தம் 4183 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டன. 2010-2011ல் 1400 மெ.வா. மின்சாரமும், 2011-2012ல் 3316 மெ.வா. மின்சாரமும், 2012-2013ல் 1222 மெ.வா. மின்சாரமும், 2012-2013ல் 1222 மெ.வா. மின்சாரமும், 2013-2014ல் 1860 மெ.வா. மின்சாரமும் ஆக மொத்தம் 7798 மெகவாட் மின்சாரமும் பல்வேறு மின் திட்டங்களின் முலமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

கலைஞர் கருணாநிதி சட்ட மன்றதில் மின்வெட்டு புகார்க்கு ஜெ.க்கு பதில் அளித்தது:

“தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதிக தொழிற்சாலைகளை தொடங்காமல் இருந்திருந்தால் மின்வெட்டு வந்திருக்காதுதான். அதற்காக தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காமல் ஓர் அரசு இருக்க முடியுமா? அ.தி.மு.க. ஆட்சியிலே மின் உற்பத்தி திட்டங்களை அதிகமாகத் தொடங்காத காரணத்தால் தி.மு.க. ஆட்சியிலே மின் பற்றாக்குறை ஏற்பட்டது. திமுகவிற்க்கு இது பாதகமாக அமையும் என்று தெரிந்தும் பின்னர் தான் மக்களுக்காக இந்த மின்சார திட்டத்தை கொண்டு வந்தேன்.அ.தி.மு.க. ஆட்சியினர் தங்கள் திறமையால்தான் தமிழகத்திலே மின் பற்றாக்குறை இல்லாத நிலையை ஏற்படுத்தியதாக தற்பெருமை கொள்ளலாம். எப்படியோ; மக்களுக்கு மின்சாரம் கிடைத்தால் போதும்! வாழ்க தமிழும் தமிழ் மக்களும்”

– கலைஞர் கருணாநிதி.

மறக்காம கல்யானத்துக்கு வந்திடுங்கோ

 பெண் வயது 18 -  

என் பொண்ணு ப்யூர் வெஜிடேரியன். வெங்காயம் கூட எங்காத்துல இல்ல. பி.இ. முடிச்சிட்டு அப்ராட் போனாள்னா என்ன பண்ண போறாளோ தெரியலை!

பெண் வயது 21 -  

பொண்னு பிரமாதமா பாடுவா. எட்டு வருஷம் சாங்கித்யம். பரத நாட்டியம் அரங்கேற்றத்துக்கே மூணு லட்சம் ஆச்சு. அவ்ளோ பிரமாதமா ஆடுவா. எங்கப்பா வேத வித்து. ரிக் வேத ஞானி. தாத்தா நித்ய அக்கினிஹோத்ரி. ஜாதகமா குவியறது. இப்ப ஒன்னும் அவ்ளோ அவசரம் இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிண்டு இருக்கேன்.

பெண் வயது 23 -

தென்கலை வரன்லாம் கூட  நெறைய வற்றது. நாங்க தான் வேண்டாம்னுட்டோம். வடகலைதான் வேணும்ங்கறார் என் ஆத்துக்காரர்.

பெண் வயது 25 -  

ஜாதகமா கொட்றது...நான் நீன்னு ஒரே போட்டா போட்டி. முந்தாநேத்து வந்த வரன் கூட  நல்லா படிச்சிருக்கான். ஆனா ஒரு ஸ்மார்ட்னெஸ் இல்ல, மத்து மாதிரி இருக்கான்.  
ஸ்மார்த்தாவாம். நமக்கு சரிப்பட்டு வராதுனு சொல்லிட்டோம். நல்ல ஐயாங்கார் வரனா பாருங்கோனுட்டோம். எங்க பொண்ணு பி.இ. பையன் வெறும் எம்.எஸ்.ஸி தான். அது ஒத்து வராது.

பெண் வயது - 28

இத பாருங்கோ, பையன் நல்லா சம்பாதிக்கரான், ஓகே. ஆனா மாமனார் மாமியார் கூட இருக்கப்படாது. என்ன பன்றது, அவள இண்டிப்பெண்டெண்டா வளர்ந்துட்டோம். இன்னைக்கு ஐ.டி. இண்டஸ்ட்ரில யார் பொட்டு வெச்சுக்கரா மாமி ?  பையனுக்கு கூடப் பிறந்தவ ஆத்துக்காரர் வைதீகம் பன்றாராம். அந்த சம்பந்தம் வேணாம். பையன் இப்பதான் அறுபதாயிரம் வாங்கரானாம். சொத்துனு மடிப்பாக்கம் தாண்டி ஒரே ஒரு அபார்ட்மென்ட் தான் வெச்சிருக்கா. நமக்கு சரிப்பட்டு வராது.

பெண் வயது 31 -

பையனுக்கு 34 ஆச்சாம்.
3 வயசு வித்யாசம். வேண்டாம்னுட்டோம். மேக்ஸ்மிமம் 33 இருந்தா ஓகே. யு.எஸ் ஜாதகமா இருந்தா க்ரீன் கார்ட் இருக்கணும், ஏற்கனவே அமெரிக்க காரன் துரத்திண்டிருக்கான். வயசாறதுன்னு கண்டவனோட அனுப்பிட முடியுமா ?

பெண் வயது 34 -  

பையன் பேரு மைக்கேலாம். நல்ல டாலா ஹேண்ட்ஸம்மா இருக்கான். ஆன் சைட் பிராஜெக்ட் போயிருந்த போது இவளுக்கு  பழக்கமாம். என்ன பண்றது மாமி? அவ விருப்பம் முக்கியமோல்லியோ? உலகம் இன்னிக்கு மாறிண்டே இருக்கே? நாமதான் நெக்ஸ்ட் ஜெனரேஷனுக்கு ஏத்தா மாதிரி அட்ஜெஸ்ட் பண்ணிக்கணும். அவா வழக்கப்படி Churchலதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னுட்டா.
சரி விட்டுப் புடிப்போம். கொழந்தைக்கு என்ன தெரியும்?  மறக்காம கல்யானத்துக்கு வந்திடுங்கோ

Tuesday, June 29, 2021

 "ஜெய் ஹிந்து’ம் செண்பகராமனும் : உண்மை வரலாறு என்ன?" - தோழர் விடுதலை இராசேந்திரன்.



ஆளுநர் உரையை முடிக்கும்போது ‘ஜெய் ஹிந்த்’ என்று இருந்த சொல் நீக்கப்பட்டு விட்டதாம். பா.ஜ.க.வும் மனுவாதிகளும் துள்ளிக் குதிக்கிறார்கள். ‘ஜெய் ஹிந்த்’ என்ற இந்தி சொல்லுக்கு ஆளுநர் ஆங்கில உரையிலோ அல்லது தமிழ் மொழி பெயர்ப்பிலோ எதற்கு இடம் பெற வேண்டும்? அப்படி ஒரு சொல் அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறதா? அதுவும் இல்லை. ‘ஜெய் ஹிந்த்’ என்றால் ‘இந்தியா வாழ்க’ என்று அர்த்தமாம்; மனுவாதிகள் கூறுகிறார்கள். ‘இந்துக்கள்’ வாழ்க; இந்துஸ்தானி வாழ்க என்பதே அதன் உண்மையான அர்த்தம் என்பதை அந்த சொல்லைக் காதால் கேட்கும் சக்தி உள்ள அனைவருக்குமே தெரியும். திருவனந்தபுரத்தில் தமிழ் வேளாளர் குடும்பத்தில் பிறந்த செண்பகராமன், பள்ளிப் படிப்பின்போது இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்று அரசியலுக்கு வந்த, பாலகங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு, பாரத மாதா வாலிபர் சங்கத்தைத் தோற்றுவித்தவர். அப்போது ஜெர்மன் உளவாளியாக சென்னை மாகாணத்தில் செயல்பட்டு வந்த வால்டர் வில்லியம் ஸ்டிரிக்லாந்து என்பவருடன் தொடர்பை உருவாக்கிக் கொண்டு, ஜெர்மனிக்குப் போனார். இத்தாலி, ஜெர்மனி நாடுகளுக்குப் போய் பொறியியல் கல்வி பயின்றார். பிறகு ஜெர்மன் நாட்டு கப்பல் படையில் சேர்ந்தார். ஜெர்மனி நாட்டுக்காக முதல் உலகப் போரின்போது சென்னை கடற்கரைக்கு வந்த ஜெர்மன் போர்க் கப்பலில் வந்து, சென்னை உயர்நீதி மன்றம் அருகே கடற்கரையில் ‘எம்டன்’ குண்டுகளை வீசியவர் இந்த செண்பகராமன் (௧௯௧௪, செப்.௨௨). தென்னிந்திய கடற்கரைப் பற்றிய விவரங்களை ஜெர்மனிய படைகளுக்கு தந்ததே செண்பகராமன் தான். ‘பர்மா ஷெல்’ எண்ணெய் டாங்குகள் மீது குண்டு வீசியதால் தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தாக்குதலில் ௩ பேர் உயிரிழந்ததாகவும் ௧௩ பேர் காயமடைந்ததாகவும் சென்னையிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக உயிருக்கு பயந்து நகரைக் காலி செய்து விட்டு வெளியேறியதாகவும் ‘இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த குண்டுவீச்சுகளை நடத்தி விட்டு ஜெர்மனிக்கு திரும்பிய செண்பகராமனுக்கு ஜெர்மன் இராணுவ உயர் அதிகாரிகள் இராணுவ மரியாதையுடன் வரவேற்றனர். ஜெர்மனியுடன் இணைந்து போர் நடத்தி இந்தியாவை பிரிட்டிஷாரிட மிருந்து மீட்டு ‘இந்துஸ்தானை’ உருவாக்க வேண்டும் என்பதே செண்பகராமன் இலட்சியம். கொலை சதி வழக்கில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். முன்னோடி சாவர்க்கரை சிறையிலிருந்து மீட்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். அந்த செண்பகராமன் தான் ‘ஜெய் ஹிந்த்’ என்று முதன்முதலாக முழங்கினார்; அது தேசபக்தி முழக்கம் என்று எழுதுகிறது ‘மனுவாதி’க் கூட்டம். காந்தியார் பேசிய ‘இந்திய விடுதலைக்கு’ நேர் முரணானது. செண்பகராமன் பேசிய ‘இந்து இராஷ்டிரம்’ பார்ப்பன மனுவாதிகள் ஹிட்லரின் ஜெர்மனியர் களுடன் உறவு கொண்டாடிய வரை தேச பக்தராக்கி அவர் முழங்கிய ‘ஜெய் ஹிந்தை’ ‘தேச பக்தி’ முழக்கமாக தூக்கிப் பிடிக்கிறார்கள். ஹிட்லரின் வாரிசுகள் தேச பக்திக்கு பாடம் எடுக்கின்றனர்! - விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். 29.06.2021

இந்தியர் என்ற இனம் வரலாற்றில் இதுவரை இருந்ததுமில்லை...

இந்தியர் என்ற இனம் வரலாற்றில் இதுவரை இருந்ததுமில்லை; இப்போதும் இல்லை; எதிர்காலத்தில் அப்படி ஓர் இனம் உருவாக வாய்ப்பும் இல்லை! இந்தியா என்ற இந்த பரந்து விரிந்த துணைக்கண்டத்தில் வாழும் மக்களை, பொதுவாக, இந்தியர் என்று உலகில் அடையாளப்படுத்துகிறார்கள். இந்தியா என்ற நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள் இந்தியர்கள். அது ஒரு சட்டபூர்வ தகுதிநிலை. இந்தியர் என்று ஒரு தேசியஇனமும் இல்லை. பார்ப்பனீயத்தில் தோய்ந்த ஆசிரியர்கள் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும்போது "நேஷனாலிடி" என்ற இடத்தில் இந்தியன் என்று குறித்து, ஒரு உளவியல் உருவாக்கத்தை கடந்த 75 ஆண்டுகளாகச் செய்தார்கள். அவர்களிடம் பயின்ற, அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மற்றவர்களும் அதையே செய்தார்கள். இப்படித்தான் விண்ணப்பங்களில் நேஷனலிடி என்ற இடத்தில் இந்தியர் என்று அனைவருமே குறிப்பிட்டு வருகிறார்கள். அப்படி குறிப்பிடாவிட்டால் அந்த இடத்தில் வேறு என்ன போடுவது என்பது எவருக்கும் புரியாத ஒன்று. முழுமையடையாத விண்ணப்பத்தை அலுவலகங்கள் பெற்று பெற்றுக் கொள்வதும் இல்லை. அப்படி இந்தியர் என்று குறிப்பிடாவிட்டால், அது தேசதுரோகமாகவும் கருதப்படுகிறது. ஆகவே பிரச்சனை இல்லாமல் "இந்தியர்" என்று அனைவரும் போட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி இந்தியர் என்று ஓர் இனம் இல்லை. இந்தியர் என்பது குடியுரிமை (citizenship) தான்; இனம் (nationality) இல்லை. 1947 வரை இந்தியராக இருந்தவர்கள், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு திடீரென்று பாகிஸ்தானியர் ஆனார்கள். இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருந்த இந்தியாவினுடைய வடமேற்கு பகுதியும், கிழக்குப் பகுதியில் வங்கத்தின் ஒரு பாதியும், பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானிய பகுதியிலிருந்து இந்தியப் பகுதிக்கு இந்துக்கள் இடம்பெயர்ந்தார்கள். இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமியர்கள் கலவரச் சூழலுக்கு அஞ்சி பாகிஸ்தானியப் பகுதிக்கும் கிழக்கு வங்காளப் பகுதிக்கும் இடம்பெயர்ந்தார்கள். அப்படி இடம்பெயர்ந்தவர்கள் ஒரே நாளில் பாகிஸ்தானியர் ஆகிவிட்டார்கள். கிழக்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து இன்றைய மேற்குவங்கம் நோக்கி வந்தவர்கள் இந்தியர் ஆகிவிட்டார்கள். மேற்கு வங்கப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி சென்ற இஸ்லாமியர்கள் கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தானியர் ஆளானார்கள். அதன்பிறகு 24 ஆண்டுகள் கழித்து, 1971-இல் திடீரென்று வங்காளதேசிகள் ஆகிவிட்டார்கள். ஒரு மக்களின் இனம் ஒரே நாளில் இப்படி மாறுமா? மேற்கு வங்கத்தில் இருந்தாலும், கிழக்கு வங்காளத்தில் (வங்கதேசம்) இருந்தாலும் அவர்கள் வங்காளிகளே. அதுதான் அவர்களுடைய இனம். இந்தியா- பாகிஸ்தான் என்று பஞ்சாப் பிளக்கப்பட்டபோது, பஞ்சாபில் பாதி பாகிஸ்தானிலும், மறு பாதி இந்தியாவிலும் சேர்க்கப்பட்டது. இந்தியாவில் இருக்கும் பஞ்சாபியர்கள் இந்தியர்கள்! பாகிஸ்தானியப் பகுதியில் இருக்கக்கூடிய பஞ்சாபியர்கள் பாகிஸ்தானியர்கள்! இருவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்; பங்காளிகள். ஆனால், இங்குள்ளவர்கள் இந்தியர்களாம்! அங்குள்ளவர்கள் பாகிஸ்தானியர்களாம்! இனம் வெவ்வேறாக ஆகிவிட்டதாம்! 1947இல் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்ட நிலையில், பாகிஸ்தானியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்களில் ஒருவர் பா.ஜ.க மூத்தத் தலைவராகிய எல்.கே. அத்வானி. இன்று அவர் இந்தியர்! இங்கே வந்ததால் அவர் இந்தியர்! அவ்வாறின்றி, பாகிஸ்தானியப் பகுதியிலேயே அவர் தொடர்ந்து தங்கி இருந்திருந்தால், அவர் ஒரு பாகிஸ்தானியர். 1947 ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி, இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டை வரைந்த ஆங்கிலேய அதிகாரி ராட்கிளிஃப். அவர் வரைந்த ஒரு பென்சில் கோடு இந்த மக்களின் இனத்தை நிர்ணயிக்கிறது. வியப்பாக இல்லையா? அப்படி நிலப்பரப்பை பிரிக்கும் ஒரு கோடு மக்களின் இனத்தை நிர்ணயிக்க முடியுமா? இனம் என்பது நம் விருப்பப்படி மாற்றிக் கொள்ளக் கூடியதா? இந்தியராக 1947 வரை இருந்தவர்கள் திடீரென்று நள்ளிரவில் பாகிஸ்தானியராகவும், பிற இனத்தவராகவும் மாற இயலும் என்றால், ஓரினம் நினைத்த மாத்திரத்தில் மாற்றப்படக் கூடியதா? நினைத்த மாத்திரத்தில் இனம் அப்படி மாறுமா? 17 ஆகஸ்ட் 1947 - அன்று வரையப்பட்ட ராட்கிளிப் கோடு என்ன மந்திரக் கோடா? சிக்கிம் என்று ஒரு மாநிலம் இந்தியாவில் இருக்கிறது. இமயமலைத் தொடரில் உள்ள இந்திய மாநிலம் அது. 1975 இல் ஒரே நாள் இரவில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1975மே 16-க்கு முதல்நாள்வரை அது ஒரு தனி நாடாக விளங்கியது. அதுவரை அவர்கள் இந்தியர்கள் இல்லை. நேபாள மொழிதான் சிக்கிம் என்ற நாட்டிற்கான அதிகாரபூர்வ மொழி. சிக்கிம்காரர்களாக இருந்தவர்கள், 16 மே 1975 இரவுக்குள் திடீரென்று இந்தியர்கள் ஆனார்கள். மொழி யடிப்படையில் அவர்கள் நேப்பாளிகள். சிக்கிமுக்கு அருகாமையில் வடக்கே சீனாவும், கிழக்கே பூட்டனும் இருக்கின்றன. சீனா அதைக் கைப்பற்றி இருந்தால், இன்றைய சிக்கிம் இந்தியர்கள் சீனர்களாக இருந்திருப்பார்கள். பூட்டான் கைப்பற்றி இருந்தால் பூட்டானியராகி இருந்திருப்பார்கள். சிக்கிமைப் பொறுத்தவரை, துப்பாக்கியின் வலிமைதான் ஒரு மக்களினுடைய இனத்தையே நிர்ணயித்திருக்க்கிறது. 1947 இந்திய விடுதலைப் போரின்போது சிக்கிம் தனியரசு; அதுவும் விடுதலை அடைந்தது. அப்போதும்கூட சிக்கிம் மக்கள் இந்தியர்கள் இல்லை. அங்கே முடியாட்சி நிலவியது. இந்திரா காந்தியின் அதிரடி நடவடிக்கையால் ஒட்டுமொத்த சிக்கிம் மக்களுக்கும் இந்தியர் என்று பச்சை குத்தப்பட்டு விட்டது. இந்தியா என்பது இன்று இருக்கிறது. இந்தியா என்ற பெயரில் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழும் இருந்தது. ஒரு பெரிய நிலப்பரப்பாக இதற்கு முன்பும் பலர் ஆட்சியில் இது இருந்து வந்திருக்கிறது. 17ஆம் நூற்றாண்டில், முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் ஆட்சி ஆப்கானிஸ்தான்வரை பரவியிருந்தது. அதையும் இந்தியா என்றுதான் இப்போது வரலாற்று எடுகளில் குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியத் துணைக்கண்டப் பகுதியை ஆங்கிலேயர்தான் இந்தியா என்று ஒருங்கிணைத்து அதிகாரபூர்வமாகப் பெயரும் குறிப்பிட்டார்கள். அதனால், இங்கு இருந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள். 1937 - இல் இப்பகுதியிலிருந்து பர்மா (இன்று மியான்மர்) பிரிக்கப்பட்டது. 1937 முதல் 1948 வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பர்மா இருந்தது. அதன்பிறகு விடுதலை பெற்றது. 1937-இல் இந்தியாவிலிருந்து பிரியும்வரை பர்மா மக்களும் இந்தியர். இப்போது அவர்கள் பர்மியர். அங்கே இந்தியர் எனப்படுவோர் 2% மட்டுமே. ஆகவே, இந்தியர் என்பது இனப் பெயர் இல்லை என்பதும், அது சட்டபூர்வக் குடியுரிமைத் தகுதியைக் குறிக்கும் சொல்தான் என்பதும், அரசியல் களத்திற்கு வருவோர் அறிந்து கொள்ள வேண்டிய அரிச்சுவடி ஆகும். அவ்வாறெனில், இனம் என்பது எது? இன்றைய நிலையில், மரபினங்களைத் தனித்து அறியமுடியாது. வரலாற்றுப் போக்கில் தேசியஇனங்களாகவே மாந்த இனம் இருக்கிறது. ஒவ்வொரு தேசிய இனத்தையும் அதன் மொழிதான் அடையாளப்படுத்துகிறது. ஆங்கிலேயர், ஜெர்மானியர், ஜப்பானியர்,தமிழர், மராட்டியர், வங்காளியர்-என்று அனைத்து தேசிய இனங்களும் மொழியால் அறியப்படுகின்றன. அது தான் இனம். ஒரு நாட்டின் குடியுரிமையைப் பல வழிகளில் பெற முடிகிறது. இன அடையாளத்தை அப்படிப் பெற முடியாது. 1955 -இந்தியக் குடியுரிமைச் சட்டப்படி இந்தியாவில் 12 ஆண்டுகள் ஒருவர் வாழ்ந்திருந்தால் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம். இந்தியாவில் குடியிருக்கும் ஒருவர் இந்தியர் ஒருவரை மணம் செய்துகொண்டு, இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் அவர் இந்தியக் குடியுரிமை பெறலாம். சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் 2020 ஜனவரி 10 அன்று நடைமுறைக்கு வந்தது (விதிமுறைகள் இன்னமும் வகுக்கப்படவில்லை). அதன்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குக் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், ஆறு ஆண்டுகள் இங்கே வாழ்ந்திருந்தால், அதாவது 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவிற்குள் குடியேறி இருந்தால், அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக இருந்தாலும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆகவே, 2014 டிசம்பர் 31-க்கு முன்பு அவர்கள் ஆப்கானியர்கள், பாகிஸ்தானியர்கள், வங்காளிகள். இந்த சட்டத் திருத்தத்தின் படி " இந்தியர்கள். இங்கே மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆகவே இந்தியர் என்பது இனம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமய சார்பற்றுப் பேசக்கூடியவர்கள் தங்களை இந்தியர் என்று அடையாளப்படுத்தும் அதே நேரம், இந்துத்துவ வெறியர்கள் தங்களை பாரதீயர்கள் என்று அறிவித்துக் கொள்கிறார்கள். பார்ப்பனர்கள் மட்டுமின்றி, பிற சாதியினரும் பாரதீயர்களாக தங்களைக் கூறிக்கொள்கிறார்கள். நன்கு ஆய்வு செய்து பார்த்தால், இந்தியா முழுவதும் உள்ளவர்களில் "பூணூல் பெருமை"யை ஏற்பவர்கள் பாரதீயர்கள் என்ற பெயரை ஏற்கிறார்கள். அதை ஏற்காதவர்கள் இந்தியர்கள். ஓர் இனத்தைப் பூணூல் பெருமை நிர்ணயிக்குமா? ஆகவே இந்தியர் என்றோ பாரதீயர் என்றோ ஓர் இனம் இருக்க முடியாது. பாகிஸ்தானிய இஸ்லாமியத் தலைவர்களுள் ஒருவரான அப்துல் வாலி கான் 1986இல் மதசார்பற்ற இடதுசாரி பஷ்தூன் தேசியவாதக் கட்சியை நிறுவியவர். பட்டாணிய இனத்தை சேர்ந்த முக்கிய தலைவரான கான் அப்துல் கபார் கான்- இன் மகன். அவர் தன் இன அடையாளத்தை இவ்வாறு குறிப்பிட்டார்: " நான் கடந்த 50 வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன். 500 ஆண்டுகளாக முஸ்லிமாக இருக்கிறேன். ஆனால் 5000 ஆண்டுகளாக பட்டானாக இருக்கிறேன்." அதுதான் உண்மை. இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் பலரும் 73 ஆண்டுகளாகத்தான் இந்தியர்களாக இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்துக்களாகவும் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு மொழியினத்தவராக இருக்கிறார்கள். தமிழை அடையாளமாகக் கொண்ட மக்கள் தமிழராக இருக்கிறார்கள். இந்தியா என்பது இன்று இருக்கும். நாளை பல நாடுகளாகப் பிரியலாம். ஆகவே, இந்தியர் என்ற பெயர் இனத்தைக் குறிக்கவில்லை. அக் சொல் ஒரு சட்டபூர்வ தகுதியை மற்றும் குடியுரிமையைக் குறிக்கிறது. தமிழர்கள் என்பதே இனத்தின் பெயர். தமிழர்கள் எங்கு சென்று குடியேறினாலும் அந்த நாட்டின் குடியுரிமையை அவர்கள் பெறுவார்கள். ஆனால், இனம் என்பது தமிழர்தான். தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழர்களாகவே அடையாளப்படுத்தப்படுவார்கள். அது தான் இனம். அதுவே நிலையானது. -பேராசிரியர் த.செயராமன், நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம். 27.06.2021.

ஒரு க‌லாச்சார‌த்தின் முத‌ல் கூறே மொழிதான். ஒரு மொழியை அழித்தால், அந்த‌ க‌லாச்சார‌மே அழிந்துவிடும்

 (வட இந்தியர் யாரிட‌மாவ‌து கேட்டுப்பாருங்க‌ள், இப்ப‌டித்தான் ப‌தில் வ‌ரும்... ) கேள்வி: வீர மங்கை வேலு நாச்சியார் தெரியுமா...? பதில்: நோ கே: திருவள்ளுவரை தெரியுமா..? பதில் : நகி கே: சரி மருது பாண்டியர்களை தெரியுமா..? பதில் : நோ ப்ரோ கே: இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனை தெரியுமா..? பதில் : நஹி பைய்யா கே: இந்தியாவிற்காக கப்பல் கட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் ஆவது ..? பதில் : நோ ஜி. கே: சிவ பெருமான் மகன் முருகனையாவது தெரியுமா...? பதில்: சிவ பெருமானுக்கு விநாயகர் மட்டும்தானே பிள்ளை..? முருகன் யாரு? கேள்விப்பட்ட‌தே இல்லையே...! (இப்போது ஒரு தமிழ் நண்பரிடம் இப்ப‌டி கேட்டுப்பாருங்க‌ள்...) கேள்வி: ஜான்சி ராணி தெரியுமா..? பதில் : தெரியுமே கே: மராட்டிய சிவாஜி தெரியுமா..? பதில்: ஏன் தெரியாது மாபெரும் வீரர் கே: சர்தார் வல்லபாய் படேல் தெரியுமா..? பதில் : நல்லாவே தெரியும், டெஸ்ட் பண்றீங்களா... ஆக‌, உன்னையும் உன் முன்னோரையும் பற்றி வடநாட்டானுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவர்களை பற்றி நீ கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உனக்கு அவ்வாறு தான் போதிக்கப்பட்டுள்ளது, க‌ற்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. மொழியும் அப்படித்தான்..! உன் வரலாறு அவனுக்கு தெரியாது ஆனால் அவன் வரலாறை நீ கற்க வேண்டும்....அதேமாதிரி தான் உன் மொழி அவனுக்கு தெரியாது, ஆனால் அவன் மொழி நீ கற்க வேண்டும். எந்த‌ மொழியும் தேவையென்றாலும் விருப்ப‌மென்றாலும் தேடிக்க‌ற்ப‌து வேறு. அதையே அர‌சாணை மூல‌ம் திணிப்ப‌தென்ப‌து வேறு. ஒரு க‌லாச்சார‌த்தின் முத‌ல் கூறே மொழிதான். ஒரு மொழியை அழித்தால், அந்த‌ க‌லாச்சார‌மே அழிந்துவிடும் ( எப்படியென்றால் மஹாராஷ்டிராவில் மராட்டியம் மறக்கடிக்கப்பட்டு இந்தி மேலோங்கியது போல்) சிந்தியுங்கள்...

நீட் தேர்வு விசயத்தில் தி.மு.க ஏன் தொடர்ந்து அரசியல் செய்கிறது? 

நீட் தேர்வு விசயத்தில் தி.மு.க ஏன் தொடர்ந்து அரசியல் செய்கிறது? இப்போது மட்டுமா அரசியல் செய்கிறது? இவர்கள் மூதாதையர்கள் ஜஸ்டிஸ் பார்ட்டி என்ற நீதிக் கட்சியே, விடுதலைக்கு முன்பு மருத்துவப் படிப்புப் படிக்க, "சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்" என்ற "அந்தக் கால நீட்"டை எதிர்த்து, அரசியல் செய்து, பெண்களும், மற்ற சாதியாரும் மருத்துவம் படிக்க வழி செய்தனர். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, வெளிநாடு சென்று, சமஸ்கிருதம் பயின்று மட்டுமே மருத்துவம் படிக்க முடிந்தது. அதை உடைத்தது ஜஸ்டிஸ் பார்ட்டி. இந்தக் கால நீட் சட்டப்படி, நீட் தேர்வு தரவரிசைப்படி, admission நடப்பது, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும்தான். அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு admission வாங்கிய கடைசி மாணவன் நீட் நுழைவுத் தேர்வில் 700க்கு 512 வாங்கியிருக்கிறார் என்றால், 700க்கு 511 வாங்கிய மாணவன் மருத்துவம் admission கிடைக்காமல் வெளியே நிற்பான். 100க்கு 35 மார்க் வாங்கினால்தான் பாஸ் என்ற நடைமுறை கூட, நீட் பின்பற்றுவது இல்லை. அதாவது, நீட் நுழைவுத் தேர்வுக்கு 700க்கு 245 மார்க் வாங்கினால்தான் பாஸ் என்ற அளவுகோல் கிடையாது. வாங்கிய மார்க்கை அப்படியே கொடுப்பார்கள். அவ்வளவுதான். ஒரு கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளை 20% மார்க்தான் எடுத்தான் என்றால், அதாவது, 700க்கு 140 மார்க் மட்டுமே எடுத்தான் என்றால், அவனுக்கு ஃபெயில் என்று நீட் சொல்லாமல் விட்டுவிடும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு தரவரிசைப்படி, admission நடப்பது இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் Fees ஆண்டுக்கு 60 இலட்சம் கட்டும் வசதி படைத்தவன் மட்டுமே admission பெறமுடியும். அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத, 700க்கு 511 வாங்கிய மாணவனும், 700க்கு 140 மார்க் மட்டுமே எடுத்த மாணவனும் தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக் கழக கல்லூரிக்கு விண்ணப்பம் செய்தால், ஆண்டுக்கு 60 இலட்சம் ஃபீஸ் கட்டமுடியாமல், 700க்கு 511 வாங்கிய மாணவனுக்கு இடம் கிடைக்காது. ஆனால் 20% கூட இல்லாத ஃபெயில் ஆன, 700க்கு 140 மார்க் மட்டுமே எடுத்த கோடீஸ்வர மாணவன், ஆண்டு ஃபீஸ் 60 இலட்சம் கட்ட, பணம் இருப்பதால், மருத்துவம் படிக்க admission பெற்று விடுவான். இப்போது சொல்லுங்கள், நீட் என்பது QUALITYயா அல்லது கொள்ளையா? நீட் நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு 3 இலட்சம் செலவு செய்தும், 20% கூட வாங்க முடியாமல் ஃபெயில் ஆன, 700க்கு 140 மார்க் மட்டுமே எடுத்த கோடீஸ்வர மாணவனுக்கு, medical admission போட்டு, தனியார் கார்ப்பொரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்கவே, நீட் என்ற நுழைவுத் தேர்வு நடக்கிறது. இந்தியாவில் 50% மருத்துவக் கல்லூரிகள் தனியார் கார்ப்பொரெட் முதலைகளிடம் உள்ளன. இவர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில், நீட் தேர்வில் 35 விழுக்காட்டுக்கும் குறைவாக மதிப்பெண் பெற்று, ஃபெயில் ஆனவர்களே மருத்துவம் படித்து, டாக்டர்கள் ஆகிறார்கள். இதுவா QUALITY? மேலும், நீட் பயிற்சி வழஙகும் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளை ஆண்டுதோறும் கொள்ளை கொள்ளையாய் சம்பாதிக்கவும் நீட் வழி செய்கிறது. காசு, பணம் கொண்டவன் மட்டுமே மருத்துவம் படிக்கும் புதிய திட்டம் நீட் என்பதால், திமுக நீட் தேர்வு முறையை அடிப்படையில் முழு மூச்சுடன் எதிர்க்கிறது. இது மக்களுக்கான அரசியல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு திமுக அரசு. மக்களுக்கான அரசியலை அது கட்டாயம் செய்யும். ஜல்லிக் கட்டு வெற்றி போல், வெற்றியடையும்.

கலைஞர் ஒரு சகாப்தம்...

கலைஞர் ஒரு சகாப்தம்...

கலைஞர் பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது...

ஏனென்றால், முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, முதன்முறையாகப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப்பேரவைத் *தலைவர் யு.கிருஷ்ணாராவ்.
எழுதி அனுப்பிய நாள் 4.5.1957. நாள் ஆக ஆகத்தான் உலோகம், வைரம் ஆகிறது.

முதல் நாள்!

முதல்நாளான அன்று எப்படி இருந்தது கோபாலபுரம்?
17 இலைகள் போடப்பட்டு இருந்தன. அண்ணா,கலைஞர், அன்பழகன், ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, ப.உ. சண்முகம், விருத்தாசலம் செல்வராஜ், எம்.பி. சுப்பிரமணியம், ம.பா.சாரதி, களம்பூர் அண்ணாமலை,ஆனந்தன், இசப்பன், பி.எஸ்.சந்தானம், சி. நடராஜன்... ஆகிய 15 எம்.எல்.ஏ-க்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வென்ற 15 பேருக்குமான விருந்து அது. எம்.எல்.ஏ-க்கள் கூட்டமே அங்குதான் நடந்தது. இவர்களுடன் இருந்தார்கள் நெடுஞ்செழியனும் மதியழகனும். காலை உணவை முடித்துவிட்டு நேராகச் சட்டமன்றத்துக்கு இவர்கள் செல்ல வேண்டும். அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார்.
என்ன கலைஞரே! இன்று என்ன பேசப்போகிறீர்கள்?”என்று கேட்கிறார் நெடுஞ்செழியன்.நங்கவரம் விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசப் போகிறேன். ‘நாடு பாதி; நங்கவரம் பாதி" என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார். உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. இதை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப் போகிறேன்” என்றார் கலைஞர். கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் சொன்னார்.
சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் அண்ணா சொன்னார் ‘`நாவலருக்குக் கருணாநிதி விளக்கம் அளித்தான் என்றா நினைக்கிறாய். கருணாநிதி இன்று சட்டசபையில் பேசப் போகிறான். அதற்காக ஒத்திகை பார்க்கிறான்” என்றார். மொத்தப் பேரும் சிரித்துவிட்டார்கள். இல்லைண்ணா என்று நெளிந்தார் கலைஞர். வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி, ‘`சட்டசபையில் பேச இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்து பேசும் பேச்சே தரமான பேச்சாக இருக்க முடியும்” என்றார் அண்ணா. புறப்பட்டார் கலைஞர்.
கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்னைக்கு வந்து... தனது பேச்சை முடித்தார். முடித்ததும் தான் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் அந்தத் துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். "நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்" என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார். முதன்முறை பேசும் போது எப்படி ஒத்திகை பார்த்துப் போனாரோ, அப்படித்தான் ஒவ்வொரு நாளும் போனார்.
சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும்* *ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கலைஞர். அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக. கலைஞர் ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.
மணிக்கணக்கில் பொதுக்கூட்ட மேடையில் பேசலாம். ஆனால், சட்டசபையில் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அது வேறு களம். இரண்டிலும் வென்றவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் கலைஞர். கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கலைஞர் பாணி.
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், எங்களைப் பார்த்து ‘சிறப்பான ஆளுங்கட்சி" என்று பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்துக் கேவலமாக நினைக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னதுமே, "இவ்வளவு கேவலமானவர்களை வென்றது உங்களுக்குப் பெருமையா?” என்று திருப்பி அடித்தார் கலைஞர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கலைஞரை பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்று துடுப்பைப் போட்டார் கலைஞர்.

அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கலைஞர் பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”

அன்றைய தினம் வெளியான இதழ் ஒன்றில் கலைஞரை கிண்டல் செய்து கவிதை ஒன்று வெளியானது.
தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில்
இருந்தும் என்ன பயன்?
நீங்கள்தான் ஏற்கெனவே
தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” - இந்தக் கவிதையை தமிழகச் சட்டமன்றத்தில் கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கலைஞர், "தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்று ஐஸ் வைத்தார். பீட்டருக்கு நாக்கு எழுமா அதன் பிறகு? கேள்விக்கு உள்ளே இருந்தே பதிலைச் சொல்வதும், பதிலுக்குள் இருந்து அடுத்த கேள்வியைத் தோண்டுவதும் கலைஞருக்கு கைவந்த கலை.
அவர் என்ன சொல்ல போகிறார் என்பதை எழுத்துக்கு எழுத்து கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் அது. பக்தவத்சலம் முதலமைச்சர். இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நிலைமை. கலைஞர் பேசும்போது, ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனை சந்தித்தால் அவனைப் பார்த்து, ‘முதலமைச்சரை போன்று சுறுசுறுப்பைக் கொடு’ என்றுதான் வரம் கேட்பேன். அவர் முதலமைச்சராக இருந்து ஓர் ஆளுங்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு இதுவரை கற்றுக்கொடுத்தார்” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைந்தார்கள். கலைஞர் அவர்கள் ரிவர்ஸ் கியர் போட்டார். “அதுபோல் அடுத்த தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்” என்றார். தி.மு.க-வினர் *மகிழ்ச்சியில் குதித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே கதை- வசனகர்த்தாவாக இருந்ததால்,கலைஞருக்கு வாதம் - எதிர்வாதம் இரண்டும் கைவந்த கலையானது.
சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடப் புத்தகமாக, 1997-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அவர் அளித்த பதிலுரை இருந்தது. தனக்கு முன்னால் பேசிய 40 பேருக்கும் பதில் சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர் அளித்த பதில் தான், சட்டமன்ற விவாதத்தை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது.அதேபோல், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது கலைஞர் பேசிய பேச்சு உணர்த்தும். பூம்புகார் நிறுவனத்துக்காக பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதில் என்னென்ன விதி மீறல் என்பதை 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் ஒவ்வொன்றாக அடுக்குவார் கலைஞர். இந்தப் பேச்சுக்கு பிறகுதான் கப்பல் வாங்குவதை நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.
1996-2001 அவரது முதலமைச்சர் காலமும், 1980-84 அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலமும் தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வமுள்ள* அனைவருக்குமான சட்டசபைப் பாடம். நேர்மறை, எதிர்மறை என எல்லா பாடங்களையும் நடத்திவிட்டு சென்றுள்ளார் கலைஞர்.

தி.மு.க. உறுப்பினர்கள் படித்துவிட்டுப் பேச வேண்டும்” என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம். “இது குடித்துவிட்டுச் சொல்வதுபோல இருக்கிறது” என்று கார்ட்டூன் போட்டுவிட்டது ‘முரசொலி’. கலைஞர் வெளியூரில் இருந்தார். பார்த்துவிட்டு பதறிப் போனார். உதவி ஆசிரியர்மீது நடவடிக்கை எடுத்தார். மாதா கவுடர் என்ற உறுப்பினர் உரிமை பிரச்னை கொண்டு வந்தார். "இது எனக்குத் தெரியாமல்* *நடந்துவிட்டது. வருத்தம் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறேன்” என்றார் கலைஞர்". "தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று உறுப்பினரே சொல்லிவிட்டபிறகு உரிமைப் பிரச்னை தேவையில்லை” என்று முதலமைச்சர் சொன்ன காட்சியைப் பார்த்த சபை இது. யாரோ செய்த தவற்றுக்கு கலைஞர் மன்னிப்பு கேட்க, மன்னிப்பை ஏற்று, பிரச்னையை மறந்த பக்தவத்சலங்கள் வாழ்ந்த காலம் எங்கே...?

கலைஞர் நிரந்தரம். இத்தனை வட்டக்கழகங்கள், இத்தனை நகரக்கழகங்கள் இருப்பதால், கலைஞர் தலைவர் அல்ல, கலைஞர் தலைவராக இருப்பதால் இத்தனை வட்டக்கழகங்களும், நகர கழகங்களும் இருந்தன., இருக்கின்றன.கலைஞர் என்ற பிம்பம் இதைக் காப்பாற்றி வந்தது. 234-க்கு 184-ம் கலைஞரால் வாங்க முடியும்; 234-க்கு 1-ம் வாங்கியவர்தான் அவர். 1971-லும் தலைவர்; 1991-லும் தலைவர் தான் என்றால்,முதலமைச்சர் அல்ல அவரது அளவுகோல். அவரது எதிரிகள், இன்னும் பலமாகத் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், என்ன பொருள்? அதுதான் கலைஞர் என்ற பிம்பம். சிலருக்கு அவரை பார்த்தாலே வயிறு எரிந்தது. அதுதான் கலைஞர் என்ற பிம்பம்.
 
கலைஞர் ஒரு சகாப்தம்...
அவர் புகழ் ஓங்குக...

Monday, June 28, 2021

எழுத்தாளர் அனுராதா ரமணன் பிறந்த நாள் இன்று.

 ஜூன் 29, (1947)

எழுத்தாளர் அனுராதா ரமணன் பிறந்த நாள் இன்று.




பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.
இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன.

தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன. இவருடைய பல கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெற்றி பெற்றிருக்கின்றன.

சுபமங்களா, வளையோசை போன்ற பத்திரிகை களுக்கு ஆசிரியராக இருந்த அனுபவமும் இவருக்கு உண்டு. எழுத்துக்கான பல விருதுகளும் இவரைத் தேடிவந்தன. அன்புடன் அந்தரங்கம் என்னும் பத்தியின் மூலம் பலருக்குப் பிரச்சனைகளை எதிர்கொள்ள ஆலோசனை தந்தார்.

2004 ல் காஞ்சிமடத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி தன்னிடம் முறைதவறி நடந்ததாகக் குற்றம் சாட்டியது அனுராதாவுக்குப் பல எதிரிகளையும் நண்பர்களையும் உருவாக்கியது.

பெண்களில் பலர் இவரைத் தங்களுக்கு உற்றவராகப் பார்த்தார்கள்; பலர் இவரைத் துரோகியாகவும் பார்க்க முற்பட்டனர்.
எதனாலும் பாதிக்கப்படாமல் அனுராதா தொடர்ந்து கதை எழுதிக்கொண்டும் தங்களுள் ஒருத்தியாக மற்றவர் கருதும்படி நகைச்சுவையுடனும் நயத்துடனும் நட்புடனும் கட்டுரைகள் எழுதிக்கொண்டும் தான் இருந்தார்
இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்
மே 16, 2010  ல் சென்னையில் தனது 62 வது வயதில் காலமானார்

Sunday, June 27, 2021

தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த பெண் போராளி மூவலூர் ராமாமிர்தம் அம்மா

 ஜூன் 27, தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த பெண்  போராளி மூவலூர் ராமாமிர்தம் அம்மா அவர்களின்  நினைவு தினம் இன்று.


பெண்களுக்கெதிரான சமயச் சடங்குகளில் மிகக் கொடூரமானது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை பொட்டுக்கட்டி தேவதாசியாக்கும் கருவியாக்கியதுதான்.

குறிப்பிட்ட சமூகப் பெண்களை கோவிலில் நடனமாடவும், அவர்களை திருமணம் செய்து கொள்ளவிடாமல் பொட்டுக் கட்டும் வழக்கம் கடந்த நூற்றாண்டின் முதல் பகுதி வரை நீடித்தது. இந்த சமூகத்தில் பிறந்த ஆண்கள் நாயனம், மேளம் வாசிப்பதிலும், நட்டுவனார்களாகவும் வாழ்க்கையை நடத்தினர்.

இக்கொடுமையைக் கண்ட மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் கிருஷ்ணசாமி என்பவர் எதிர்த்தார். இதனால் கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்றவற்றால் ஊரைவிட்டே சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். அவருக்கும் சின்னம்மாள் என்பவருக்கும் 1883 ம் ஆண்டு ராமாமிர்தம் பிறந்தார்.

தன் குழந்தையை ஆச்சிக் கண்ணு என்ற தேவதாசியிடம் 10 ரூபாய்க்கும், ஒரு பழைய புடவைக்கும் விற்றுவிட்டார் சின்னம்மாள். காரணம். குடும்பத்தின் வறுமை. ஆச்சிக் கண்ணுவிடம் 7 வயது முதல் வளர்ந்தார் ராமாமிர்தம். பின்னாளில் தன் இனிஷியலாக ஆ என்று இவர் போட்டுக் கொண்டது இந்த ஆச்சிக் கண்ணுவின் பெயரைத்தான்.

தன் 17 வயதில் பொட்டுக்கட்டும் சடங்கை வெறுத்துக் கடும் எதிர்ப்பு தெரிவித்த ராமாமிர்தம், பின் உள்ளூர் தேவதாசிகள் எதிர்ப்பால் அது நடைபெறவில்லை.

65 வயது பணக்கார மிராசுதாரைத் திருமணம் செய்ய வற்புறுத்தி மீண்டும் தனக்கு வந்த சோதனையை எதிர்த்து, நடனம் சொல்லித் தந்த காங்கிரஸ் பற்றாளர் சுயம்புப் பிள்ளையை ஒரு கோவிலில் நெய் விளக்கின் முன் சத்தியம் பெற்றுத் திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் தேவதாசி முறை ஒழிய காங்கிரசில் ஈடுபட்டு தீவிரப் பிரசாரம் செய்தனர்.

ராஜாஜியின் கடும் எதிர்ப்பையும் மீறி ராமாமிர்தம் நடத்திய மாநாட்டில் காந்தியார் கலந்து கொண்டார்.

1925 ம் ஆண்டு நடத்திய மயிலாடுதுறை மாநாட்டில் திரு.வி.க., பெரியார் போன்றோர் கலந்து கொண்டனர்.

பெண்ணுலகு போற்ற வந்த கற்பகம் என்று ராமாமிர்தத்தை திரு.வி.க. பாராட்டினார்.

ராமாமிர்தம், தேவதாசி முறை ஒழிக்கப்பட திட்டம் வகுக்க வேண்டும் என்று காந்தியாருக்கு பல நீண்ட கடிதங்கள் எழுதினார். எதற்கும் காந்தியிடம் இருந்து பதில் வரவில்லை.

1925 ம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கிய போது, அவருடன் சுயமரியாதை இயக்கத்தில் பங்கு பெற்ற முதல் பெண்மணி ராமாமிர்தம் அம்மையார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்பட பல போராட்டங்கள் என அனைத்துமே அம்மையார் இல்லாமல் நடந்ததில்லை.

சுயசரிதை போன்று இவர் 1936 ல் எழுதிய நாவல்தான் தாசிகளின் மோசவலை (அ) மதி பெற்ற மைனர், இதில் தேவதாசி முறைக் கொடுமை பற்றியும், அது ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கப்பட்டிருந்தது. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். பல கட்டுரைகள், கதைகளை எழுதி திராவிடர் இயக்கப் பிரச்சாரத்தை யாருக்கும் பயப்படாமல் செய்தார்.

1932 ம் ஆண்டு தஞ்சையில் நடந்த பிரசார நாடகத்தில் சிலர் புகுந்து கலவரம் செய்ததுடன் அவரின் நீண்ட தலைமுடியை அறுத்து எறிந்தனர். அதன் பின் கிராப்புத் தலையுடனே இறுதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு மசோதாவை அறிமுகம் செய்த போது, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி  கடும் எதிர்ப்புத் தெரிவிக்க முத்துலெட்சுமி ரெட்டி தேவையென்றால் அவரினத்துப் பெண்கள் ஆடட்டும். எங்கள் இனப் பெண்கள் இனி ஆடமாட்டார்கள் என்றபோது, சட்டசபையே அதிர்ந்தது. முத்துலட்சுமி ரெட்டியின் இந்த அறைகூவலுக்குப் பின்னால் இருந்தவர்கள் தந்தை பெரியாரும், ராமாமிர்தம் அம்மையாரும்தான்.

மூதாட்டி ராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமிரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை முற்றிலும்  ஒழிக்கப்பட்டது.

மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார் ஜூன் 27, 1962 ம் ஆண்டு காலமானார். அம்மையாரைச் சிறப்புச் செய்யும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் ஒன்றை 1989 ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.