Friday, August 24, 2018

சாதி அறிந்ததினம்

#சாதி_அறிந்ததினம்
5வது படித்துக்கொண்டிருந்த சமயத்தில், நானும், ஜெகதீஸும், பாலாவும், குமாரும் சென்று (எல்லாரும் 5வது வேறு வேறு பள்ளி) 10வது படிக்கும் அண்ணனின் வீட்டிற்கு சென்று விளையாட, அந்த அண்ணனோ நாங்கள் பிள்ளைமார், நீங்கள் என்ன என்று வினவ, எங்களுக்கு என்ன கேட்கின்றார் என்றே புரியவில்லை.
அப்போது வெளியில் உட்கார்ந்து எனது அம்மா, பாலாவின் அம்மா மற்றும் குமாரின் அம்மா அனைவரும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர் (அப்போ எதப்பத்தி பேசியிருப்பாங்க? இப்போவாச்சும் சீரியல பத்தி பேசலாம், சரி அத விடுங்க). நேராக சென்றவுடன் நான்தான் முதலில் கேட்டேன், "அம்மா நாம என்ன மார்னு கேட்டேன்" அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
என்னடா கேட்கிறேன்னு சொல்ல, குமார் கேட்டான், இல்லம்மா அந்த அண்ணே ஏதோ மார்னு சொன்னாங்க, நீங்க என்னானு கேட்டாங்கம்மானு சொல்ல, என்னடா சொல்றீங்கன்னு குமார் அம்மா வினவ, உடனே பாலா தெளிவாகச் சொன்னான், அந்த அண்ணே பிள்ளைமாராம், எங்கள என்ன மார்னு கேட்டார்னு.
உடனே அனைத்து அம்மாக்களும் சிரித்து விட்டு, பதில் சொல்ல, அப்போதும் குழப்பம் ஏனெனில் என்னுடைய அம்மாவும், குமாரின் அம்மாவும் மாரில் முடியும்படி பதிலைக் கூற, பாலாவின் அம்மா மட்டும் வேறு ஏதோ பதில் கூறினார், மீண்டும் குழப்பம், பாலா கேட்டான், அம்மா இதுல என்ன மார்னே சொல்லலியேன்னு. பிறகுதான் அவன் அம்மா கூறினார், அது மார் இல்லடா தம்பி, அதன் பெயர் ஜாதி என்று. அப்போதுதான் கொஞ்சம் புரிந்தது.
பிறகு 6வது சேர்க்கையில் அப்ளிகேசனில் எழுதும்பொழுது எனது தந்தை என்னிடம் கூறி கூறித்தான் நிரப்பினார் அந்த விண்ணப்பத்தினை, அதிலும் கேட்டிறுந்தார்கள், அதில் அப்பா வேறு சாதிப்பெயர் போட, நான் குழப்பத்துடன் கேட்டேன் மார்லைல முடியும், நீங்க என்ன ளர் ல முடியுற மாதிரி எழுதுறீங்கன்னு, அப்போதுதான் சொன்னார், இரண்டும் ஒன்னுதாண்டானு, இப்படித்தான் சாதி தெரிய ஆரம்பித்தது.
பிறகு 7வது படிக்கும்பொழுது, இடைவேளை நேரத்தில், சாதியைப் பற்றி அறியவர எனது நெருங்கிய நண்பன் தன்னை '' சேர்வார்" எனக்கூற, இன்னொரு நெருங்கிய நண்பன் அருணாச்சலம் அரண்டு போய், (அந்த நண்பன் வேறுபக்கம் சென்றபிறகு) என்னிடம் ''டேய் செந்திலு சேர்வாரோடு சேரவேண்டாம்னு ஆத்திச்சூடில இருக்குடான்னு" பயமுறுத்த, வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் கேட்டால், விளக்கமளித்தார், இந்த சேர்வார்ன்றவங்க, முந்தி காலத்துல இராஜாவுக்கு தளபதியா இருந்தவங்கடா, நீ ஆத்திச்சூடில படிச்ச சேர்வார்ன்றது வேற, அது பொய் சொல்றவங்க, ஏமாத்துறவங்கள சொல்றது, ரெண்டும் வேற வேறடான்னு, அதே விளக்கத்தினை அருணாச்சலத்திற்கு அடுத்த நாள் நான் கூற, அதற்குமுன் அவன் வீட்டிலும் இரண்டு திட்டுகளோடு விளக்கம் கிடைக்கபெற்றதனை அறிந்துகொண்டேன்.
இப்படியே சென்றுகொண்டிருந்த எனக்கு சாதிய பிரிவினையால் ஏற்பட்ட இழப்பு என்றால் அது 10வது முடித்து டிப்ளமோவிற்கு விண்ணப்பம் கொடுக்க, என்னை விட கம்மியான மார்க் எடுத்த பையனிற்கு தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் கொடுத்திருந்தார்கள், ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை, என் தந்தையிடம் இதுல ஏதோ மிஸ்டேக் இருக்குப்பா, வாங்க போய் கேட்போம்னு சொன்னபொழுது, விளக்கமளித்தார், அவங்க எஸ் சி கேட்டகரிடா தம்பி, நீ பிசி கேட்டகரி அதுனால உனக்கு சீட் கிடையாதுன்னு.
பிறகு பாலிடெக்னிக் போக அங்கு ஒரே சாதிமயம்தான். சென்று சில வாரங்களில் அங்கிருந்தவர்களின் சாதி தெரியவந்தது. இருந்தாலும் பிரிவினையில்லை. பிறகு படித்து முடித்து வெளியில் வந்தால் அப்போதுதான் இந்த சாதிய விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.
பிறகுதான் உணர்ந்தேன் இந்த சாதியமே இந்துத்துவத்தின் முதல் எதிரி என்பதினை.

Monday, August 20, 2018

சென்னை மாநகராட்சி மழை வெள்ளங்கள்

# வெள்ளம்
பல மழை வெள்ளங்கள் சென்னையை தாக்கினாலும் 2015 தவிர மற்ற சமயங்களில் சென்னை மாநகராட்சி சிறப்பாகவே செயல்பட்டதென்று சொல்லலாம். ஆது எந்த திராவிட கட்சியாய் இருந்தாலும் சரி.
புயல் சின்னம் ஏற்பட்டவுடனே கொடியேற்றி மக்களை அலர்ட் செஞ்சு, மாநகராட்சி பள்ளிகளை தயார் படுத்தி, உணவு, மற்றும் தேவையான பொருட்களை சேமித்து, ப்ளீச்சிங் பவுடர், காலரா மாத்திரை, மருத்துவக்குழு என்று பக்காவாக அனைத்தும் தயார் நிலையில் வைத்திருப்பர். எந்த ஏரியாக்களில் தாக்கமிருக்கிறதோ முன் எச்சரிக்கை நடவடிக்கையாய் கரண்ட் கட் பண்ணிவிடுவார்கள்.
பிரதான சாலைகளில் மரம் விழுந்தால் மின்னல் வேகத்தில் அப்புறப்படுத்துவார்கள். லோக்கல் கவுன்சிலர்கள் ஒரு கூட்டத்துடன் சற்றிக்கொண்டே அதிகாரிகளுடன் தொடர்பிலிருப்பார்கள். ஜுலை ஆகஸ்ட் மாதமே சாக்கடை தண்ணீர் போகும் குழாய் அடைப்புகளை எடுத்து விடுவார்கள். இப்படி சுறுசுறுப்பாக பணிகள் பார்த்த சென்னை மாநகராட்சிக்கு சோதனையாய் வந்தது 2015 டிசம்பர் சென்னை மழை வெள்ளம் யாருமே அனுமானிக்க முடியாமல் போனது ஒரு துரதிர்ஷ்டமே. CNN BBC கூட இவ்வளவு பெரிய மழை பெய்யும் என்று சொல்லவில்லை. கடும் மழையால் செம்பரம்பாக்கம் ரொம்பி உத்தரவு சரிவராமல் கோட்டைவிட்டது தான் உயிர் உடமை சேதங்களுக்கு காரணமாய் அமைந்தது.
ஆனால் வெள்ளத்தின்போது சின்ன சின்ன சூப்பர் மார்க்கெட் அநியாய விலை வைத்து அடித்த கொள்ளை அய்யய்யோ. கேவலம். எரியறவீட்ல பிடிங்கின மாதிரி பிடிங்கினாங்க. நம்ம ஜனங்களும் அடுத்தவனும் வாழணும் என்று நினைக்காமல் ஷெல்ப்ல இருந்த அத்தனையும் பில்போட்டு பணத்திமிர்ல அனைத்தையும் அள்ளிக்கொண்டு போனது கசப்பான உண்மை. ஆனால் அதற்கு பிறகு உடனடி உதவி வந்தது, உணவு, பால், தண்ணீர் என்று லாரிகளில் வந்து வீடுவீடாக வழங்கினார்கள். கரண்ட் வரத்தான் தாமதமாகியது. ரேடியோவின் வீச்சும் உதவியும் அப்போதுதான் பலருக்கு தெரியவந்தது. பிறகு மாநில மத்திய போர்கால நடவடிக்கையில் சென்னை மீண்டது.
அனைவர் முகத்திலும் ஸ்மைல் "ஸ்டிக்கர்😁😂" அனைத்தும் சுபமே.
உங்க அனுபவம் என்னவோ.

ஜெயிச்ச பீலிங். பட் தோத்த மாதிரியும் இருக்கு.

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். பி.எஸ்.சி. கணிதம் எடுத்து அதில் 80 விழுக்காடு மதிப்பெண் மேல் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அப்போது குரூப் 4 போட்டி தேர்வில் கலந்து கொண்டு ஆர்.ஐ வேலைக்கு செலக்ட் ஆனேன். ஏனோ என் மனம் அரசாங்க வேலைக்கு செல்ல பணிக்கவில்லை. கணிதம் என் அறிவை வேற லெவெலுக்கு முழிக்க வைத்திருந்தது. வீட்டில் மிக்க வறுமை. வெத்தலை பாக்கு கடை வைத்திருந்தார் என்னுடைய அப்பா. அன்றாடம் செலவுகளுக்கே மிகவும் கஷ்டம். கெஞ்சி கூத்தாடி சாப்பிடாமல் இருந்து அஹிம்சை மூலியமாக அப்பாவை இருக்கிற கடையை விற்று ஈரோடு கல்லூரியில் எம்.சி.ஏ சேர்ந்தேன். மூன்று வருட படிப்பு. மிகவும் கஷ்டப்பட்டு இஷப்பட்டு படித்தேன். ஆங்கிலம் கொஞ்சம் தடுமாற்றம் தான். என்னுடைய அம்மாவின் மாமா மும்பையில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார்.அவரிடம் போன் செய்து வேலைக்கு உதவுமாறு கேட்டேன். அவரும் வர சொல்லி விட்டார். மிகவும் குஷியாக சென்றேன்.மும்பை பழக்கம் இல்லாததால் அவர் வீட்டிலேயே தங்க சொன்னார். சென்ற 10 நாட்களில் டாடா கம்பெனியில் வேலை கிடைத்து. கை நிறைய சம்பளம். நான் வேறு வீடு எடுத்து இருப்பதற்கு மறுப்பு சொன்னார். என் அப்பா அம்மாவை கூடி வர திட்டம் வைத்திருந்தேன். அவர்கள் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். மும்பையில் 10 மாதம் அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். கொஞ்ச நாள் போகட்டும் என்று காத்து இருந்தேன். 
என் அம்மாவின் மாமாவுக்கு மகள் வழி பேத்தி இருந்தாள். வார வாரம் நான் தங்கி இருந்த தாத்தா வீட்டிற்கு வருவாள்.பார்க்க நம்ம ஊரு நார்த் இந்தியா ஹீரோயின் மாதிரி இருப்பாள். நான் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தேன். இருந்தாலும் இளமை அழகு அவள் மேல் ஈர்ப்பு கொள்ள செய்தது. அவர்கள் வீட்டிலும் நாங்கள் பழகுவதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.என் அப்பா அம்மாவை கூட்டி வருவதை தற்காலிகமாக ஒத்தி வைத்து அவளுடன் ஆவலுடன் சுற்றினேன். திருநெல்வேலி பையனுக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு. அம்மாவிடம் அவளை திருமணம் செய்ய கேட்குமாறு கேட்டேன். எல்லோரும் சரி சொல்லி கல்யாண நாளும் குறிக்க பட்டது. அப்போதே கல்யாணத்துக்கு அப்புறம் தங்க மீண்டும் வீடு பார்த்தேன் - அப்பா அம்மாவை கூட்டி கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தேன். தாத்தா மற்றும் மாமா அத்தை - இப்போது என்ன அவசரம் கல்யாணம் முடியட்டும் என்றார்கள். 
கல்யாண நாள் நெருங்கியது. மும்பையில் அவர்கள் நம்ம ஊரில் மாப்பிள்ளைக்கு கொடுக்கும் மரியாதை துளி கூட கொடுப்பதில்லை. வேலைக்கு சேர முதல் நாள் அவர்கள் வீட்டில் எப்படி பணிவாக இருந்தேனோ அதே போல் தான் நடத்தினார்கள். கல்யாணம் பேசி முடித்த பிறகும் அவ்வாறு நடத்துவது எனக்கு வித்யாசமாக பட்டது. அவள் அப்பாவோடு இது சம்பந்தமாக பேசினேன். அவர் உன் தகுதிக்கு என் மகளை கொடுப்பதே பெரிய விஷயம் என்ற அர்த்தத்தில் பேசினார். 
எனக்கு தூக்கி வாரி போட்டது. அவளை மிகவும் பிடிக்கும். ஆனால் சுய மரியாதை அவசியம் என்று நினைத்தேன். கல்யாணம் முடியட்டும் அவள் என்னவள் ஆகி விட்டால் இவர்கள் யார் நமக்கு என்று எனக்கு நானே சமாதானம் செய்தேன். இருந்தாலும் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. கல்யாண வீட்டிலும் எதிரொலித்தது. நாங்கள் யாரும் மதிக்க பட வில்லை. கல்யாணம் முடித்து மீண்டும் மும்பை சென்றேன். சென்ற ஒரே வாரத்தில் வீடு பார்த்து நண்பனிடம் கடன் வாங்கி வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்தேன். மனைவியை வா போகலாம் என்று கூப்பிட்டேன்.அவள் எங்கு என்றாள். நம் வீட்டுக்கு என்றேன். இது தான் நம் வீடு. நாம் இங்கேயே இருக்கலாம் என்றாள். 
சண்டை ஆரம்பம் ஆனது.ஏற்கனவே கல்யாணத்தில் எங்கள் வீடு ஆட்களை உதாசீனப்படுத்தியது எல்லாம் சேர்ந்து அவளை நான் பார்த்த வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என்று கட்டாய படுத்தினேன். என் பெற்றோர்களும் என் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களை நான் கவனிப்பேனா மாட்டேனா என்று. ஏனெனினில் நான் சம்பளம் வாங்கியது முதல் அவளுக்கே எல்லா செலவுகளையும் செய்திருந்தேன். 
1 மாதம் பல்லை கடித்து வாழ்ந்தேன். மனம் புரட்டி போட - வாழுகிற வாழ்க்கை நரகமாய் தோண - போட்ட சட்டையுடன் தனியாக மீண்டும் திருநெல்வேலிக்கே வந்து விட்டேன். அப்பா அம்மாவுக்கு தெரிந்து விட்டது. கல்யாணத்திலேயே அவர்களுக்கு யூகிக்க முடிந்தது. பையன் தங்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்து வந்து விட்டான் என்று. வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் இருந்துருக்கலாம். ஆனால் உறவுகள் முக்கியம் என்று வந்து விட்டேன். நான் அவர்கள் தாத்தா வீட்டில் இப்போது கண்டிப்பாக சமாதானம் பேச வருவார்கள் என்று நினைத்தேன். 2 வருடம் ஓடியது. டிவோர்ஸ் நோட்டீஸ் தான் வந்தது. விழுந்து அடித்து ஓடினேன். அவளை பார்த்து சேர்ந்து வாழ வேண்டும் என்று கெஞ்சினேன். பிரிந்தது சேர தான் ஒழிய நிரந்தமாக அல்ல என்றேன். அவள் ஏளனமாக என்னை பார்த்து ஒதுங்கி போய் விட்டாள். 
ரிஜெக்ஷன் - மிக கொடுமை. அதோடு நான் ஒரு ஆணே இல்லை என்ற ரீதியில் பொய்கள் பரப்ப பட்டது. பரப்பியது அந்த பெண்ணின் அப்பா அம்மா. நெஞ்சம் வலித்தது. மீண்டும் 2 ஆண்டுகள் ஓடியது. நண்பர்கள் பெற்றோர் எல்லோரும் டிவோர்ஸ் செய்து விடு என்று வலியுறுத்த அவளுடைய ஏளன பார்வையும் ஏளன பேச்சுகளும் வெறியேற்ற டிவோர்ஸ் கையெழுத்து போட்டு விட்டேன். ஆணே இல்லை என்ற பேச்சு பரவலாக பேசப்பட அதை உடைப்பதற்காகவே மறு திருமணத்திற்கு சம்மதித்தேன். இப்போது எங்கள் ஊரு பெண்ணொருத்தியை திருமணம் செய்து 2 குழந்தைகளோடு வாழ்கிறேன். 
ரிஜெக்ஷன் - மிக கொடுமை. மன வேதனையில் செய்கிற சாப்ட்வேர் வேலையில் கவனம் செலுத்தினேன். இன்று எங்கள் உறவினர்களில் விரல்ஐ விட்டு என்னும் பணக்காரர்களில் நானும் ஒருவன். போன வாரம் வைட் இன்னோவா டூரிங் ஸ்போர்ட் 28 லட்ச ருபாய் காரில் சொந்த ஊர் கோயில் விழாவுக்கு சென்றேன். முன்னாள் மாமாவும் அத்தயும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். எங்களை காரை குடும்பத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து சென்றார்கள். அவள் மகளுக்கு வரன் பார்த்தார்கள். ஒன்றும் அமைய வில்லை. ஜெயிச்ச பீலிங். பட் தோத்த மாதிரியும் இருக்கு.