Wednesday, June 14, 2017

நம்மாழ்வார் பேத்தல்கள்

நம்மாழ்வார் பற்றி உங்களது நிலைப்பாடு என்ன என்று ஒருத்தர் கேட்கிறார். எனக்கு அவரது இயற்கை விவசாய முறைகளைப்பற்றி எந்த விமர்சனமும் கிடையாது. ஏனென்றால் அதுகுறித்து எந்த அறிவும் எனக்குக் கிடையாது.
விவசாயம் தவிர்த்து அவருடைய பேச்சுகள் பல சுத்த பேத்தல்களே. மாட்டு மூத்திரத்தை குடிச்சா கண்ணாடி போட வேண்டாம், கேன்சர் உள்ளிட்ட எல்லா நோயும் குணமாகிவிடும் என்கிறார். நான் மருத்துவ அறிவியல் மாணவன் . என்னால் இதுபோன்ற முட்டாள்தன கருத்துகளை எப்படி ஏற்றுக்கொள்ளவியலும்?
ஹீலர் பாஸ்ரகர் னு யாரோ ஒரு ஆளாம். அவர் சொல்றாராம் : நாற்காலியில கால நீட்டி உட்காருவதால் உடலின் சக்தி கால் வழியாக தரையில் வீணாக போய்விடுகிறதாம். அதனால் சப்பணமிட்டு உட்காரவேண்டுமாம். நான் அதனால் தான் அப்படி உட்காருகிறேன் என்று கூறுகிறார் நம்மாழ்வார். கொஞ்சமாவது பகுத்தறியும் திறனும் புத்தியும் உள்ள ஒருவன் இதைக்கண்டு நகைக்கமாட்டானா?
சில மாதங்கள் முன்பு வாட்சப் வதந்தி பற்றி ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். அதில் ஐஐடி பத்தமடையில் கண்டுபிடித்ததாக சொல்லி ஒரு பெண்மணி மாட்டு மூத்திரத்தின் பெருமைகளையும் அதன் சர்வரோக நிவாரணத்தன்மை பற்றியும் அளந்து விட்டார். அந்த லேடி பேசியதைக்கண்டு கோபிநாத் உள்பட அனைவரும் சிரித்தனர். நம்மாழ்வார் பேசாததை எதுவும் அந்த லேடி பேசிவிடவில்லை..!

இயற்கை விவசாயத்தின் காதலர்கள்

இயற்கை விவசாயம் என்ற நம்மாழ்வாரின் பரீட்சார்த்த முறையில் எனக்கு மரியாதைகள் உண்டு. அவருடைய இதர மூடநம்பிக்கைகளின் விரோதி நான் என்பது தனிக்கதை.
அதை அப்புறம் பார்த்துக்கலாம்.
நான் இதுவரை பார்த்தவரையில் இந்த இயற்கை விவசாயத்தின் காதலர்கள் யாரென்று பார்த்தால் பெரும்பாலும் அவர்கள் Corporate company களில் உயர் தர அடிமைகளாக அதிக கூலிக்கு அடிமை வேலை பார்த்தவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
அடிமை வேலை ஒரு கட்டத்தில் அவர்களை கிறுக்கு பிடிக்க வைக்க இதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியாது என்று வரும் பட்சத்தில் அதினின்று தங்களை விடுவித்துக் கொண்டு இதுவரை சம்பாதித்த பெரும் தொகையை பாதுகாப்பாக வங்கிகள் மற்றும் வருமானம் வரும் நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு அதில் ஒரு பகுதி பணத்தில் பல ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கிப் போட்டு வைக்கப்போரில் கிடக்குற நாயைப் போல் அந்த நிலங்களை இயற்கை விவசாயம் என்ற பெயரில் தங்களுடைய பொழுது போக்கு கேளிக்கைகளுக்காக பயன்படுத்துபவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
அவர்களுடைய பொழுதுபோக்கு கேளிக்கைகளிலும் ஒரு வியாபார நலன் இருக்கும். அவர்களுக்கு ஒரு ஏக்கரில் ஆயிரம் கோழிகளை வளர்ப்பதை விட இயற்கை விவசாயம் என்ற பெயரில் ஆயிரம் ஏக்கரில் ஒரு கோழியை வளர்க்கிற புத்திசாலித்தனம் தான் அது.
அவர்களுடைய குறி பசியில் வாடும் லட்சக்கணக்கானவர்களாக இருக்க மாட்டார்கள். கோடிகளில் புரளும் செல்வச் சீமான்களாகத் தான் இருப்பார்கள். ஒரு ஏக்கரில் ஆயிரம் கோழிகளை வளர்த்து அவற்றின் முட்டைகளை நான்கு ரூபாய் என்று விலை வைத்து விற்பதை விட. ஆயிரம் ஏக்கரில் வளர்க்கப்படும் ஒற்றைக் கோழியின் முட்டையை பல்லாயிரக் கோடிக ளை வைத்திருக்கும் சீமான்களிடம் லட்ச ரூபாய்க்கு விற்று நோகாமல் நோன்பு குடிக்கும் வித்தை தெரிந்தவர்கள்

நம்மாழ்வார் என்னும் டுபாக்கூர் !

நான் தொடர்ந்து நம்மாழ்வாரை விமர்சிக்கிறேன் என்று பல பேர் பொங்குகிறார்கள் !
எனக்கு ஒரே ஐடியாதான், மக்களை மூடராக்கும் யாராக இருந்தாலும் சரி, ஏதுவாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய புனித பிம்பங்கள் இருந்தாலும் சரி அதை அடித்து நொறுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன் !
நம்மாழ்வார் பற்றி பல கேள்விகள் எழுப்பி உள்ளேன் அதற்கு பதிலளிக்காமல் கொய்யா முய்யோ என்று கத்தினால் சட்டை செய்யாமலே கடந்து செல்வேன் .
நம்மாழ்வாரை பற்றி சொல்ல நெறைய இருக்கிறது , அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்து மேய்யப்படும் ...இந்த பதிவில் அவர் ஏன் ஒரு டுபாக்கூர் மற்றும் மக்களை எப்படி முட்டாளாக்குகிறார் என்று எளிமையாக விளக்க முற்படுகிறேன்.
இந்த காணொளியை பாருங்கள்
https://www.youtube.com/watch?v=MindIXXcF4M&t=85s
.... இதில் நம்மாழ்வார் கூறுவது ...
நீங்கள் சாணி, புளுக்கை, மூத்திரத்தில் தயிரை கலந்து தினமும் காலை மாலை இப்படி ஒரு அம்பது சுத்து அப்படி ஒரு அம்பது சுத்தும்போது அண்டை வெளியில் இருக்கும் காஸ்மிக் கதிர்கள் அதில் செல்லும் இப்படி இருபத்தியொரு நாட்கள் கலக்கணீங்கன்னா நீங்க ஒரு டாக்டர் , உங்க கைல மருந்து.
பஞ்சகாவியா குடித்தீர்கள் என்றால் மூக்கு கண்ணாடி போட தேவை இல்லை.
பஞ்ச கவ்யம் பயிர்ல இருந்து பூனை,நாய்,மனிதன் என எல்லா வகையான ஜீவராசிகளின் நோய்களையும் குணப்படுத்தும், சளியிலிருந்து எய்ட்ஸ் வரை அணைத்தையும் சரிசெய்கின்றது கான்செர் உட்பட.
இதை காலையில் 30ml பல் விலக்கிவிட்டு குடிக்கவும் என்று தொடர்ந்து உளறுவார் !
ஒரேய சிம்பிள் கேள்வி ... அதான் சளியில் இருந்து எய்ட்ஸ் வரை குணப்படுத்த முடியுமே ! அனைத்து கிருமிகளையும் கொல்லுமே அப்பறோம் எதுக்கு பல்லு விலக்கிவிட்டு அந்த கருமத்தை குடிக்கணும் ? அப்படியே குடிக்கலாமே !
இந்த மாறி கோமாளித்தனமாக பேசுபவர்களிடம் ஒரே கேள்விதான் ..அதான் அந்த காலத்தில் பஞ்சகாவ்யம், சாணி தெளித்து கோலம் போட்டு கொண்டு கிருமிகளை அண்டவிடாமல் இருந்தீர்களே அப்பறோம் ஏன் கொத்து கொத்தாக கிராமம் கிராமமாக காலரா பிலேக் சின்னம்மை போன்ற நோய்களில் செத்தீர்கள் ?
இந்த காலத்தில் பல நோய்கள் இருந்தாலும் ஒரு கிராமமே ஒரு நோயினால் குறிப்பாக காலரா போன்ற நோயினால் அழிந்ததாக வரலாறோ ஏன் ஒரு செய்தி துணுக்கு கூட யாராலும் சமர்ப்பிக்க முடியாது. ஆனால் அந்த காலத்தில் ஒரு கிராமமே ஒரு நோயினால் அழிவது சகஜம் இதற்கு நம் இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்களே சான்று ! ராஜா கதைகளில் கூட அவ்வாறு குறிப்பிட்டுஇருக்கும்.
இந்த மாறி உளறுவாய்கள் உளறிவைத்து விட்டு சென்று விடுவார்கள் அப்பாவி மக்களே இதனால் சாவார்கள்.
அப்பறோம் இந்த திமுககார்கள் என்னமோ நம்மாழ்வார் திமுக என்று பீத்திக்கொள்கிறார்கள், மக்களை மூடர்களாக்கும் ஒருவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதில் என்ன பெருமை என்று எனக்கு தெரியவில்லை...
எந்த வித அடிப்படை ஆதாரம் இல்லாமல் கேன்சரை குணமாக்கும் எய்ட்ஸை குணமாக்கும் என்று சொல்லி மக்களை ஏமாற்றினால் அவர்களை மனிதமற்ற சமூக விரோதிகள் என்றே அழைக்க முடியும்.
என்ன நம்மாழ்வார் இங்கு பிறந்துததுனால் பஞ்சகவ்வியம் விற்றார் ...இதுவே பிரேசிலில் பிறந்து இருந்தால் அமேசான் காடுகளில் மட்டுமே கிடைக்கும் எர்வாமேட்டின் விற்றுக்கொண்டிருப்பார் !
மூத்திரம் குடிக்காமல் மூளையை பயன்படுத்தவும், மனித மூளை என்பது 3 பில்லியன் வருட பரினாம வளர்ச்சியின் உச்சி ! அதில் தயவுகூர்ந்து மூத்திரம் சாணி ஆட்டு புழுக்கையெல்லாம் தயிர்ல மிக்ஸ் பண்ணி அடிக்காதீங்க !
திரும்பவும் சொல்கிறேன்...
புனித பிம்பங்கள் அடித்து நொறுக்கப்படும் !

டுபாக்கூர் நம்மாழ்வார்

டுபாக்கூர் நம்மாழ்வாரின் மக்களை மூடர்களாக்கி அவர்களின் உடல்களை கெடுக்கும் முயற்சி !
இந்த காணொளியை பாருங்கள் ..
https://www.youtube.com/watch?v=oqjA4HUr_Uc&feature=youtu.be ...
இதில் நம்மாழ்வார் வழக்கம் போல் மக்களை மூடர்கள் ஆக்க உளறி கொட்டுகிறார் ..இதற்கு இவர் வழிகாட்டியாக எடுத்துகாட்டுவது பிராட் நம்பர் 1 ஹீலர் பாஸ்கர், இல்லுமினாட்டி பைத்தியத்தின் தந்தை.
அதாவது இந்த "சமூக விஞ்ஞானி" நம்மாழ்வார் (சிரிக்க வேண்டாம்) நாற்காலியில் கூட காலை மடித்துதான் உக்காருவாராம் ... ஏன் என்றால் காலை கீழ போட்டு உக்கார்ந்தால் சக்தி வீணாக கீழே செல்கிறது ...கால் மடித்து உக்கார்ந்து கொண்டால் அந்த சக்தியை U டர்ன் போட்டு மத்த உறுப்புகளுக்கு திருப்பி விடலாம் என்று உளறுகிறார் (அடடே என்ன ஒரு அறிவு !) அதையும் அப்பாவி மக்கள் உக்கார்ந்து கேட்டு கொண்டு இருக்கிறார்கள் ...இல்ல தெரியாம தான் கேக்கறேன் இடுப்பு கீழ கால் மட்டும்தான் தொங்குதா ?
இதுல தாகம் எடுத்தால் மட்டும் தண்ணி குடி என்று இன்னொரு உளறல், தாகம் எடுத்தாலும் எடுக்காட்டியும் உடம்பில் வாட்டர் லெவல் மைண்டைன்செய்வது மிக முக்கியம் , இல்லாட்டி பல பிரச்னைகள் வரும் ..
இதை கொஞ்சம் விரிவாக விளக்குகிறேன் ..
மனித உடம்பில் 60% நீர்தான் இருக்கிறது. இந்த நீர் யூரின்,வேர்வை, கழிவு,அழுகை மற்றும் மூச்சு விடும்போது நம் உடம்பில் இருந்து தினமும் இப்படி சென்று விடும். இதை உடனடியாக நாம் உடம்பிற்கு திரும்ப கொடுக்க வேண்டும். அதாவது நம் மனித மூளையானது நம் உடம்பை மின் உந்துவிசை (Electric Impulse) மூலியமாக மின்பகுளிகளை (electrolytes) வழியாக நம் செல்களில் இருக்கும் உப்பை பயன்படுத்தி கட்டுப்படுத்தும்.
இப்போது நம் உடம்பில் நீர் குறையும்போது மின்பகுளின்(electrolytes) சமன் நிலை தடுமாற்றம் அடையும். இதனால் நம்மால் சிந்திக்க,பார்க்க, நகர கடினம் ஏற்படும் . ஓர் கட்டத்தில் உயிரே போய்விடும்.
உடம்பில் நீர்நிலை சமன் இல்லாமல் செல்லும்போது நமது மூளை ரத்தத்தில் அதிக உப்பு தன்மையை உணரும், உடனடியாக நம் மூளை இருக்கும் நீயூரோன்கள் மிக மிக வேகமாக செயல் பட ஆரம்பிக்கும், அதுதான் திர்ஸ்ட ரெஸ்பாண்ஸ் என்று சொல்ல கூடிய தாகம். உடனடியாக நாம் தண்ணீர் அருந்தும்போது நம் உடலில் இருக்கும் ரத்த நிலை சமன் அடைய சிறிது நேரம் ஆகும். ஒரு வேலை அதிக தண்ணீர் குடித்து விடாமல் தடுக்க மனித மூளையில் subfornical organ என்று இடம் உண்டு. இது உடனடியாக நம் ஓரல் ஸ்டிமுலேஷன் என்று சொல்ல கூடிய வாயில் உள்ள உணர்வுக்கு பதிலளிக்கும். அதில் இருக்கும் நியூரான்கள் நம் உடம்பில் இருக்கும் (Fluid level) ரத்த சமன் நிலையையும், நம் வாயில் எவ்வளவு உணவு மற்றும் நீர் உள்ளது என்பதை வைத்து எதிர்கால நீர்நிலையை கணித்துவிடும். அது போதுமான அளவு என்று வந்தவுடன் நியூரோன்கள் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும், இப்படிதான் நம் தாகமும் தணிகிறது. இந்த நியூரான்கள் ஈரபதத்திற்கு மட்டும் செயல் படாமல் வெப்ப நிலைக்கும் செயல்படும். இதனால்தான் ஐஸ் வாட்டர் குடித்தால் தாகம் உடனடியாக தணிக்கிறது, மற்றும் தண்ணீரே இல்லை என்றால் கூட நீங்கள் குளிர்ந்த காற்றை உள்வாங்கினால் கூட அதற்கு நீயூரோன்கள் ரெஸ்பான்ஸ் செய்யும்.
இந்த நிலைகளுக்கு எல்லாம் எடுத்து செல்லாமல், தாகம் இல்லை என்றாலும் கொஞ்சம் நீரை நீங்கள் பருகி கொள்ள வேண்டும், அது உங்களின் உடலில் இருக்கும் நீர் சமன் நிலையை சரியாக வைத்து கொள்ளும். உங்கள் செயல்,பார்வை,வேகம் மற்றும் அனைத்தும் சரியாக சீராக இருக்கும்.
இதை விட்டுட்டு தாகம் வந்தால்தான் தண்ணீர் குடிப்பேன் என்று சொன்னால் சாவு மணி அடித்தால்தான் சுதாரிப்பேன் என்று சொல்வதற்கு சமம்.
நீங்கள் காலை எழுந்தவுடன் பல சமயங்களில் உங்களுக்கு தாகம் எல்லாம் இருக்காது ஆனால் கொஞ்சம் தூக்கமாக சோம்பலாக இருக்கும் ..ஆனால் தண்ணீர் குடித்தவுடன் எனர்ஜி வந்து விடும் ..இதுதான் காரணம்...
எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் இந்த டுபாக்கூர் நம்மாழ்வார் உளறல்களை நம்பி உடலை கெடுக்காமல், ஒழுங்கா தண்ணிய குடி போ !
பி.கு : இந்தமாறி பல உளறல்களை கொட்டி மக்களை மூடர்காளாக்கி அவர்களின் உடல் நலத்திற்கும் ஆபத்து வர முற்பட்டு இருக்கிறார் ...ஒவ்வொரு விடியோவாக பிரித்து மேய்யப்படும் ..மக்களின் நலனிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு புனித பிம்பமாக இருந்தாலும் அடித்து நொறுக்கபடும் !

அய்யா நம்மாழ்வார் என்கிற புனிதப்பசு!

இன்று தமிழகத்தின் எந்த ஒரு சிறுநகரத்திற்கு போனாலும் அங்கே நம்மால் இயற்கை (Organic) அங்காடி என்கிற பெயரில் ஏதாவது ஒன்றை பார்க்கலாம்.
சென்னை போன்ற பெருநகரங்களில், தெருவுக்கு தெரு அக்குபஞ்சர் தெரபி, ஹெர்பல் கிளினிக் போன்ற பெயர்களில் ஆயிரக்கணக்கான போலி மருத்துவர்கள் கடை விரித்து வைத்திருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னால் தடுப்பூசிக்கு எதிரான பரப்புரை தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி, தமிழக அரசின் இலவச தடுப்பூசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றமுடியாத அளவிற்கு முடக்கியது!
சில நாட்களுக்கு முன்னால், ப்ளாஸ்டிக் அரிசி என்கிற புரளி பெரிய அளவில் பீதியை கிளப்பி மக்கள் சோறு திங்கவே அஞ்சும் அளவிற்கு கொண்டு சென்றது!
இந்த ஆண்டின் துவக்கத்தில், ஜல்லிக்கட்டு என்கிற பிற்போக்குதனமான காட்டுமிராண்டித்தனமான ஒரு விசயத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி போராடி தங்கள் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சதவிகித தன்னெழுச்சியைக் கூட நீட் தேர்வு போன்ற முக்கியமான பிரச்சனைக்காக நம்மால் ஏற்படுத்தமுடியவில்லை!
இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கை வாழ்வியல் என்கிற பெயரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான போலி அறிவியல் செய்திகள் நம் மக்களிடம் சுழன்றடித்துக்கொண்டிருக்கின்றன. அனைத்துவிதமான ஊடகங்களும் இதற்கு துணை போகின்றன.
அய்யா நம்மாழ்வார்தான் இதற்கு ஆரம்பபுள்ளி என்றோ, அவர்மட்டும்தான் இதற்கெல்லாம் காரணம் என்றோ நாம் சொல்லவில்லை. ஆனால், நம்மாழ்வார் என்கிற ஊதி பெரிதாக்கப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட ஒரு பிம்பம், பல விதமான போலி அறிவியல் செயல்பாடுகளுக்கும் ஒரு முகமூடியாகவும், கவசமாகவும் இருந்துவருகிறார் என்பதே நம் குற்றச்சாட்டு!
நம்மாழ்வார் என்கிற தனிநபர் மீது நமக்கு எந்த தனிப்பட்ட விரோதமோ வெறுப்போ கிடையாது. அந்த முதியவர், தான் சரியென நம்பிய ஒரு விசயத்திற்காக தன் வாழ்க்கையை அர்பணித்து வாழ்ந்து மறைந்துப்போயிருக்கிறார். ஆனால், அவர் சரியென நம்பிய விசயங்களில் பெரும்பான்மையானவை மக்கள் விரோத மூடத்தனமான கருத்துகள் என்பதை நாம் அம்பலப்படுத்தியாக வேண்டும்.
அவர் பேசிய அனைத்து பேச்சுகளிலுமே, மாடெல்லாம் கசாப்பு கடைக்கு போகிறது, மாடெல்லாம் கசாப்பு கடைக்கு போகிறது என்று புலம்பியிருக்கிறார். மாட்டு சாணி, மூத்திரம், ஆட்டுப் புளுக்கை ஆகியவற்றுடன் பால், தயிர், நெய் போன்றவற்றை கலந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் என்கிற ஒன்றை தின்றால் சகல வியாதிகளும் குணமாகும் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார். ஹீலர் பாஸ்கர் போன்ற மூழுநேர ஏமாற்றுப் பேர்வழிகளையும், ஜக்கி வாசுதேவ் போன்ற மோசடி பேர்வழிகளையும் ஆதரித்து அவர்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.
மொத்தத்தில் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் காரணமான பல அறிவியல் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து நிராகரித்தும் எதிர்த்தும் வந்திருக்கிறார். பிற்போக்குத்தனமான, மூடத்தனமான, சாதிய - நிலபிரபுத்துவ சமூக அமைப்பை பாதுகாக்கின்ற விசயங்களை இயற்கை என்கிற பெயரில் ஆதரித்து பரப்புவதை தன் வாழ்நாள் கடமையாக கொண்டு வாழ்ந்து முடித்திருக்கிறார்.
நம்மாழ்வார் விதைத்தது முழுக்க முழுக்க மூடநம்பிக்கைகளை மட்டும்தான்!!
இப்படிப்பட்டவரை ஈவு - இரக்கமில்லாமல் விமர்சிப்பதும், அவருடைய மூடத்தனத்தை அம்பலப்படுத்துவதும், மனித சமூக வளர்ச்சியில் அக்கறைக் கொண்ட ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும். குறிப்பாக பெரியாரிய இயக்கங்களும், பெரியாரியவாதிகளும் இதில் கூடுதல் கவனத்துடனும், அக்கறையுடனும், வேகத்துடனும் செயலாற்றவேண்டும்.
பகுத்தறிவு சிந்தனையும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும்தான் பெரியார் நமக்கு காட்டிய வழி!