Friday, May 20, 2016

கிளம்புங்க...கிளம்புங்க...காத்து வரட்டும்!

மானத் தமிழன், வீரத் தமிழன் விலை போய் விட்டதால் தோற்றேன் என்கிறார் சீமான். ஆட்கள் கிடைத்தார்கள் என்பதற்காக எல்லா தொகுதியிலும் நின்றது, முதலமைச்சர் ஆகி விட்டதாகவே கனவு கண்டு, பிரச்சாரத்தில் அலப்பரை செய்து, தான் ஒருவன் மட்டும் தான் தமிழன் என்று நினைத்து மற்ற கட்சி தலைவர்களை நகையாடியது, எல்லாம் தான் காரணம். இவர் மட்டுமாவது வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது 2-3 தொகுதிகளிலாவது டெபொசிட் வாங்கி இருந்தாலோ சொல்லலாம்.

தலைவன் ஆவதற்குரிய முதல் தகுதி பொறுமை, அது இவரிடத்தில் இல்லை.

அவன் புத்திசாலி தமிழன். யாரை எங்கே வைப்பது என்று அவனுக்கு நன்கு தெரியும். உங்களை வெளியே தூக்கி போட்டான். ஸ்டாலினை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறான். அம்மாவுக்கு எதிராக ஒரு பலமான எதிர்கட்சியை கொடுத்து அவரை செக்கில் வைத்திருக்கிறான். இன்னும் என்ன வேண்டும்?

"தி.மு.கவும் அ.தி.மு.கவும் பணத்தைக் கொட்டி வேலை பார்த்தார்கள்," என்கிறார். இந்தத் தேர்தலில் அவர்களின் வெற்றிக்கு அதுவல்ல முக்கிய காரணம். அவர்களின் தேர்தல் பரப்புரைகளில் எதிரிகளின் பெயரை வெகு அரிதாகவே உச்சரித்தார்கள். மக்களுக்காக என்ன செய்தோம், செய்துகொண்டிருக்கிறோம், செய்யப்போகிறோம் என்பதைப் பற்றி மட்டுமே அதிகம் பேசினார்கள். அ.தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதிகள் பெறும்பாலும் பெண்கள் நலம் சார்ந்து இருந்ததே அவர்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. மற்ற கட்சிகள் அவர்களின்மீது கூறிய குற்றச்சாட்டுகளை புத்திசாலித்தனமாக (பெரும்பாலும் பதில் சொல்லாமல்) அதனை எதிர்கொண்டதும் ஒரு காரணம்.

சீமானின் செயல்பாடுகளும் பேச்சுக்களும் தேர்தலை மையப்படுத்தி மட்டுமே உள்ளது. அது பெரிய பிரச்சனை! நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து 6 வருடங்களுக்கு மேலிருக்கும். இது வரை மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, இயற்கை வளக் கொள்ளை, மின்வெட்டு போன்ற பொதுப் பிரச்சனைகளில் இந்தக் கட்சி எவ்வளவு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது?

இப்படியே ஸ்ரீலங்கா போய் அங்க தேர்தலில் நின்னா கொஞ்சம் வாக்கு கிடைக்கும். பக்கத்துல இருக்கிற தமிழன் படும் பாடு பற்றி எந்த கவலையும் இல்லை. இந்தியாவில் வேறு மாநிலத்தில் துன்பப்படும் தமிழர்களுக்கு குரல் கொடுக்க துப்பு இல்லை. இதில் தொப்புகொடியே, என் இனமேனு வசனம் பேசிகிட்டு, இங்க இருக்கிறவனையே  மானம்கெட்ட பய, வக்கு இல்லாத பயனு பேசிகிட்டு திரியறது. அப்புறம் உங்களுக்கு வோட்டு மட்டும் இங்க இருகிறவன் போடணும் எதிர் பார்த்தா இப்படித்தான்.

மற்ற கட்சிகள் தான் திராவிடம் பேசி சாதியம் பேசி மக்களை பிளவு செய்கின்றன என்று குற்றம்சாட்டுகிறார் சீமான். சரி, நாம் தமிழர் கட்சி சாதி கடந்து தமிழரை ஒன்றிணைக்கும் கட்சி என்றால் உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை குறித்து நிலைப்பாடு என்ன? அதில் சம்மந்தப்பட்ட இருவரும் தமிழ்ச் சாதியினர் தானே?

தமிழர் ஆளக் கூடாதென்று யார் சொன்னது? தமிழரை ஆள விடக்கூடாதென்று எவர் ஒன்று கூடி சதித்திட்டம் தீட்டியது? எதை வைத்து ஒருவரை தமிழர் தமிழரல்லாதவர் என்று இனம் காண்கின்றார்? சாதியை வைத்துத் தான் என்றால், பிறகு சாதிக் கட்சிக்கும் இவர் கட்சிக்கும் என்ன வித்தியாசம்? சாதியின் அடிப்படையில் மக்களை இனம் பிரித்த பிறகு அவர்களுக்கிடையே உள்ள சாதீய ஏற்றத் தாழ்வுகளை மட்டும் எவ்வாறு களைவது? நேற்று வரை சாதி தெரியாமல் சகஜமாய் பழகி வந்த இளைஞர்கள் கூட தன்னுடன் இருப்பவன் என்ன இனம் என்று தெரிந்து கொள்ள அவனின் சாதியை ஆராய தொடங்கி உள்ளார்கள். இது சமூக நல்லிணக்கத்திற்கு நல்லதில்லை. அருந்ததியினரை வந்தேறி தெலுங்கர் என்று கூறிக் கொண்டு , சேரிகளுக்குள் எப்படி கட்சியை வளர்க்க முடியும்? சீமான் மேடையிலேயே தெலுங்கர் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை என்கிறார். இது போன்ற செயல்பாடுகள் ஒருபோதும் கட்சியை பலப்படுத்தாது. பொத்தாம் பொதுவாய் இங்கு வாழும் சாமனிய மக்களின் ஒரு பகுதியினரை வந்தேறி என்று வார்த்தைக்கு வார்த்தை பட்டம் சூட்டிக் கொச்சைப்படுத்தாமல் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடிக்கிய ஒரு முழுமையான பொதுக் கட்சியாக சீர் தூக்கட்டும் பார்க்கலாம்.

தமிழக அமைதியை குலைக்கும் அவரின் தேசவிரோத, இனவெறி, தீவிரவாத, பிரிவினை, வன்முறை அரசியலை தமிழக மக்கள் முற்றிலும் புறக்கணித்து இருக்கிறார்கள். தமிழக மக்கள் ஊழல் அரசியல்வாதிகளை கூட மன்னிப்பார்கள் ஆனால் தேசதுரோக அரசியல்வாதிகளை என்றுமே மன்னிக்க மாட்டார்கள், அதற்க்கு அவரது கட்சியின் படுதோல்வியும் வைகோவின் தோல்வியுமே சாட்சி. இவரின் ஹிட்லர் பாணி இனவெறி அரசியலுக்கு தமிழகத்தில் என்றுமே இடம் கிடையாது.

இதென்ன சினிமாவா? அல்லது தன் கட்சி என்ன ஆம் ஆத்மி பார்ட்டி மாதிரி கொள்கை உள்ள கட்சியா? ஏதோ கட்சி ஆரம்பித்து 234 தொகுதிலேயும் ஆட்களை நிறுத்திவிட்டால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைத்தாரோ? அப்படி பார்த்தால் ரஜினி கமல் மாதிரி செல்வந்தர்கள் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 பேரை நிற்க வைக்க கூடிய சக்தி இருந்தும் ஏன் அவர்கள் எல்லாம் அடக்கமாக இருக்கிறார்கள்? ஆண்டவன் ஆட்டுக்கு ஏன அளந்து வைத்திருக்கிறான் என்று இப்போவாவது புரிகிறதா? தமிழனாம், கட்சியாம், புடலங்காய்!!

கிறுக்கு தனமாக புலி, பிரபாகரன் , வீரப்பனை போற்றினால் இது தான் நடக்கும். நல்ல தமிழர்கள் இவர் கண்களுக்கு தென்படவில்லையா? பிரபாகரனையும் அவர் படத்தையும் போட்டு காண்பித்தால் தமிழன் என்ன உடனே பின்னாடி வந்துவிடுவானா?

தமிழ் நாட்டு வாக்களர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. இந்த நாட்டில் இன்று நாம் டெலிபோன், மொபைல், சாட்டிலைட், கம்ப்யூட்டர் துறைகளில் முன்னோக்கி செல்ல காரணமான தலைவரை கொன்றவரை ரோல் மாடலாகக்  கொண்டு பிரிவினை வாதத்தையும், தீவிரவாதத்தையும், சபை நாகரீகம் தெரியாமல் ஒரு மூத்த கட்சி தலைவரை "லூசு" என்று சொன்ன, குறுகிய காலத்திலேயே 234 தொகுதிக்கும் (வேட்பாளர்கள் கிடைப்பது இருக்கட்டும். தேர்தல் செலவுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைத்தது?) வேட்பாளர்களை நிறுத்திய ஒரு கட்சியை புறகணித்திருகிறார்கள். மிக்க மகிழ்ச்சி. திரு. சீமான் அவர்களே நீங்கள் மட்டும் விலை போகவில்லைய?

நீங்கள் மட்டும் மானம் கேட்ட மனிதர் இல்லையா? உங்களுக்கு எப்படி தேர்தலில் செலவு செய்ய பணம் கிடைத்து? உங்கள் சம்பாத்தியம் என்று சொல்லாதீர்கள். நீங்கள் திரைப்படம் டைரக்ட் செய்து நெடுங்காலம் ஆகிவிட்டது. நீங்கள் ஒன்றும் பெரிய ஹீரோ நடிகர் அல்ல. "நன்றி - சீமான்" என்று டைட்டிலில் வரும் அளவுக்குதான் இருக்கிறீர்கள். எங்கிருந்து வந்தது இந்த பணம்? சாக்கடையில் விழுந்து விட்டு மற்றவர்களையும் இந்தியர்களையும், தமிழர்களையும் இந்திய குடியுரிமை பெற்ற நீங்கள் குறை சொல்லி பேசக்கூடாது.

2021ம் ஆண்டு நமக்கான ஆண்டாக இருக்கும் என்று இவரும் இவரது வெளிநாடு வாழ் facebook தொண்டர்களும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்டியல் குலுக்கி தமிழனிடம் கையேந்தி நின்றோம் என்கிறார். ஏற்கனவே இப்படி உண்டியல் குலுக்கிக் குலுக்கி காம்ரேடுகள் இன்று கையுடைந்து போய் நிற்கிறார்கள். இவருக்கு மட்டும் இப்படி கூட்டம் நடத்தப் பணம் வருகிறது? சொந்தப் பணமா? அல்லது எவனோ கொடுத்த கள்ளப்பணமா?

எப்போது பார்த்தாலும் கூடவே 50 பாடிகார்டுகள். பிரதமருக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு கிடையாது. இதற்கெல்லாம் யார் காசு கொடுத்தது? இப்படி தினமும் 50 பாடி கார்டுகளுக்கு தீனி போட, இவர்  உண்டியல் குலுக்கினால், அதில் காசு போடுபவன் உண்மையில், கேவலமான, முதுகெலும்பில்லாத, சொரணை இல்லாதத் தமிழனாய் இருப்பான்.

இப்போது தமிழன் மிக ஜாக்கிரதையாகத்தான் ஓட்டு போட்டிருக்கிறான். உப்புமா கட்சி நடத்துபவர்களை ஒட்டு மொத்தமாக ஓரம் கட்டி இருக்கிறான். ஒவ்வொரு தேர்தலின் போதும், ஒவ்வொரு கட்சியை வைத்துக்கொண்டு எலும்புத் துண்டை எதிர் நோக்கி காத்திருக்கும் நாய்களைப் போல, காசுக்காக பெரிய கட்சிகளுடன பேரம் பேசுவதுதான் இந்த உப்புமா கட்சிகளின் வேலை. இந்த தேர்தலில் அது தவிடு பொடியாகி விட்டது.. அந்த வகையில், ஜெயாவை வெறுக்கும் நான் கூட வரை பாராட்டுகிறேன்.

சும்மா வீரம், சோரம் என்று அவர் குடும்பத்தையும் சில பல அடிவருடிகளையும் வேண்டுமென்றால் ஏமாற்றி பிழைக்கலாம். இதற்கெல்லாம் தமிழ் மக்கள் கவலைப்பட மாட்டார்கள். திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் ஊழலும் அடிதடியும் இருந்தாலும் கூட மக்கள் கொஞ்சம் நிம்மதியாக வாழ்கிறார்கள். இவரை மாதிரியும் அல்லது சாதி வெறி பிடித்த ராமதாஸ் கட்சி மாதிரி ஆட்களை கொண்டு வந்து ஆட்சியில் வைத்தால் என்ன ஆகும்? யோசித்து பாருங்கள். தெருவெல்லாம் ரத்த ஆறும் பிணமும் தான் இருக்கும். தமிழர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள். வேண்டுமென்றால் ஈராக் அல்லது சிரியா சென்று அங்கே ஆட்சியை பிடியுங்கள். அப்புறம் உங்களோட வீரத்தை மெச்சுகிறோம். கிளம்புங்க...கிளம்புங்க...காத்து வரட்டும்!!

No comments: