Wednesday, April 19, 2017

கார்ப்பரேட் சதி எனும் மாயை.

சமகால தமிழ்ச் சூழலில் கார்ப்பரேட் சதி என்ற பதம் கீழ்க்கண்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
அ) தனக்கு புரியவில்லையென்றால்,
ஆ) தனக்கு கிடைக்காது என்ற பொறாமையால்,
இ) சிலர் சொன்னால் அது சரியாக இருக்கும் என்ற அடிமை சிந்தனையால்,
ஈ) தனக்கிருக்கும் குற்றவுணர்ச்சியை மறைத்துக்கொண்டு சமூக அக்கறையாளனாக காட்டிக்கொள்ள,
உ) மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆயாசத்தினால்,
ஊ) நிதர்சனத்தை சந்திக்கும்போது ஏற்படும் வேதனையினால்
எ) அரிதாக நிகழும் உண்மையான சதித் திட்ட காரணங்களால்...
இவற்றைத்தவிர ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும்.
சாதாரணமாக நடைபெறும் வர்த்தகம் எப்படி நடைபெறுகிறது, அதற்கு சட்டபூர்வமாக என்னென்ன தேவை, அதன் நல்லது கெட்டது என்னென்ன என்பது குறித்த எந்த அறிவும் கிடைக்கப்பெறாத ஏட்டுக்கல்வியின் வெளிப்பாடுதான் பெரும்பாலும் கார்ப்பரேட் சதி என்ற பதத்தை பயன்படுத்தக் காரணமாக அமைகிறது.
முதலில் ஒரு வணிகத்தில் ஈடுபடுவதற்கு - எந்த தொழிலாக இருந்ததாலும் - சட்டபூர்வமாக எந்த மாதிரியான அமைப்பு தேவைப்படுகிறது என்று பார்ப்போம்.
1) Sole proprietor firm தனி உரிமையாளர் அமைப்பு
2) Partnership firm கூட்டாளிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்பு
3) Private Limited Company வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்.
இவற்றைத்தவிர டிரஸ்ட்டு, ஒருநபர் கம்பெனி போன்றவற்றை இப்போது தவிர்த்துவிடலாம்.
ஒரு TIN எண் வணிகவரித்துறையில் வாங்கும்போதே Proprietor firm பதிவாகி விடுகிறது. பார்ட்னர்ஷிப் என்றால் ஒரு deed எழுதி பதிவுசெய்யவேண்டி வரும். Pvt Ltd Company என்றால் இயக்குனர்கள் இணைந்து Articles of Association, Memorandum of Association போன்றவற்றை தயார்செய்து, மேலும் பல ஆவணங்களுடன் கம்பெனி பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டு Incorporate செய்யப்படுகிறது. உரிமையாளர் அல்லது நிறுவனம் ஈடுபடும் தொழில் சார்ந்த உரிமங்கள் வாங்கவேண்டிய கடமைகள் தனி.
இதில் உரிமையாளர், பார்ட்னர் வகை தொழில்களில் நிறுவன அமைப்புக்கென்று தனி உரிமை கிடையாது. அதனால் உரிமையாளர் அல்லது கூட்டாளிகளின் பான் எண் நேரடியாக பயன்படுத்தப்படுவதோடு, வாங்கப்படும் உடைமைகள், சொத்துக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் நேரடி உரிமையாளராகிறார். உரிமையாளர் இறந்தால் அந்த அமைப்பு முடிவுக்கு வந்துவிடுவதோடு, சொத்துக்கள்/உடைமைகள் அவரது வாரிசுகளிடம் சென்றுவிடும்.
பங்குகளால் வரையறுக்கப்பட்ட கம்பெனி என்பது சட்டத்தால் ஆரம்பிக்கப்பட்ட, உயிரில்லாத ஆனால் ஒரு குடிமகனுக்குரிய அத்தனை உரிமைகளையும் உடைய அமைப்பு. கம்பெனி தனக்கென்று சொத்துக்களை வாங்க விற்க முடியும், ஒரு குடிமகனுக்கு சட்டத்துக்கு முன்னால் என்னென்ன உரிமைகள் உண்டோ, அத்தனையும் கம்பெனிக்கும் உண்டு.
இயக்குனர்கள் கம்பெனியை நடத்துவதற்காக ஓர் ஊதியத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள் அல்லது கம்பெனி கொடுக்கிறது என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இயக்குனர் ஒருவர் அல்லது அனைவரும் இறந்தாலும் கம்பெனி இறக்காது. அதனால் கம்பெனி தன்னுடைய பணத்தைக் காரணமில்லாமல் யாருக்கும் கொடுக்காது. அப்படி கொடுத்தால் அதற்கு முறையான ஆவணங்கள் தேவை. இயக்குனராக இருந்து கம்பெனிக்கு கடன் கொடுத்தால் அதை கம்பெனி திரும்பத் தரும்; ஆனால் கம்பெனி பணத்தை இயக்குனரே தேவையில்லாமல் எடுத்தால் சட்டைக்காலரைப் பிடித்து திரும்ப வாங்கிக்கொள்ளும். ஆனால் உரிமையாளர் அமைப்பில் பணத்தை போடலாம் எடுக்கலாம், இரத்த சொந்தங்களுள் அடிக்கடி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
உரிமையாளர் கடன் வாங்கி கட்டவில்லையென்றால் அவரது ஏனைய சொத்துக்களை இணைத்து கடனை வசூலிக்க வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் கம்பெனிக்கு கடன் கொடுத்தால் கம்பெனியின் சொத்துக்களைத் தாண்டி இயக்குனர்களது தனிப்பட்ட சொத்துக்களை வங்கிகளால் எடுக்க இயலாது (பித்தலாட்டம் ஏதும் இல்லாமல் உண்மையாகவே தொழில் நொடித்திருந்தால்).
எந்த மாதிரியான வர்த்தக அமைப்பாக பதிவு செய்யப்பட்டாலும் அதன் பின்னால் இருக்கும் உழைப்பு ஒன்றுதான். உரிமையாளர் என்றால் கடும் உழைப்பாளி என்றோ பிரேவேட் லிமிடெட் இயக்குனர் என்றால் ஏமாற்றுப்பேர்வழி என்றோ எதுவும் இல்லவே இல்லை.
மக்கள் தங்களது தேவைக்குத்தான் பொருட்களை வாங்குகிறார்கள், நிறுவனம் வளர்வதற்காக அல்ல. அதற்கேற்ற பொருள் தயாரிக்காத நிறுவனம் காணாமல் போகும் என்பதற்கு நோக்கியா அண்மைக்கால உதாரணம்.
இதில் கார்ப்பரேட் சதி என்றெல்லாம் எதுவுமில்லை. தனிநபர் உரிமையாளர் செய்வதை கம்பெனிகளும் செய்தால்தானே வியாபாரத்தில் தாக்குப்பிடிக்க முடியும்? நம் வீட்டுக்கு அருகிலுள்ள பலசரக்கு கடைகளில் பார்த்திருக்கக் கூடும். ஐந்தாறு வாடிக்கையாளர் இருந்தால் ஒவ்வொருவராக விற்பனையை முடித்து அனுப்பாமல், என்ன வேண்டும் என்று கேட்டு அனைவருக்கும் ஒவ்வொரு பொருளை எடுத்துவந்து முன்னால் வைத்துவிட்டு, பின்னர் ஒவ்வொருவராக கவனிப்பார்கள். வாடிக்கையாளர்கள் தனக்குரிய importance அந்த இடத்தில் கிடைத்துவிட்டதாக உணர்ந்து, சிறிதுநேரம் காத்திருப்பதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
அந்தநேரத்தில் கடையிலுள்ள சரக்குகளை நோட்டம் விட்டு தனது லிஸ்ட்டில் இல்லாத ஒன்றிரண்டு பொருட்களை வாங்குவதுண்டு. இது ஒரு சாதாரண வியாபார சூட்சுமம். ஒவ்வொரு தொழிலிலும் அதற்கேற்ப உண்டு. இதே வேலையை ரிலையன்ஸ் போன்ற சூப்பர்மார்க்கெட்கள் செய்தால், பில் போடுமிடத்தில் சில பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தால் அது கார்ப்பரேட் சதி! என்று சமூக ஊடகங்களில் உளறி வைக்கப்படுகிறது.
அப்புறம், விவசாயத்துக்கு துளியும் தொடர்பில்லாத தொழில்களில் இருப்போரும் தங்களது சமூக அக்கறையைக் காட்டிக்கொள்ள அடிக்கடி இழுக்கும் ஒன்று மான்சாண்டோ கம்பெனியின் சதி.
விவசாயிகள் பேஸ்புக்கில் சொல்லப்படுவது மாதிரி அப்பாவி பழம் அல்லர். தங்களுக்கு என்ன தேவை என்பதை நன்றாகவே அறிவார்கள். எப்போது அப்பிராணி வேஷம் போடவேண்டும் என்பதையும் நன்கு அறிவார்கள். கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்ட வாய்களில் ஏதாவது ஒன்று, அவர்களை நம்பி ஆண்டு முழுவதும் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கு ஏதாவது அரசாங்கம் செய்யவேண்டும் என்று சொல்லி கேட்டதுண்டா?
விவசாயிகளிடம் வெற்றிகரமாக விற்க இரண்டு விசயங்கள் தேவை. ஒன்று செலவையும், உடலுழைப்பையும் தாறுமாறாக குறைக்கும் மேஜிக் மாதிரியான தொழில்நுட்பம். இரண்டு, ஆட்களின் தேவையை கணிசமாக குறைக்கும்படியான தொழில்நுட்பம். இதில் மான்சான்டோ Bt பருத்தியை சந்தைப்படுத்தி பல இலட்சம் டன் பூச்சிக்கொல்லிகள் மண்ணில் கொட்டப்படுவதைத் தடுத்ததோடு விவசாயிகளின் செலவை பலமடங்கு குறைத்தது. இரண்டாவது, ரவுண்டப் (கிளைஃபோசேட்) களைக்கொல்லி; கூலி ஆட்களின் தேவையைத் தாறுமாறாக குறைத்ததோடு கோரை, அருகம்புல் போன்ற தொல்லை தரும் களைகளுக்கு தீர்வு தந்தது. அறுவடை இயந்திரங்களும் இதே வகைதான்.
இதனால் சில சமூக பிரச்சினைகளும் ஏற்பட்டன. காலங்காலமாக பண்ணையார்களிடம் கூலி வேலை செய்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வேலையிழந்து நகரங்களுக்கு வேறு தொழில் நோக்கி சென்றனர். அங்கு கட்டட வேலை போன்றவற்றில் அதிக வருமானம் கண்டு, உபரி பணம் மூலமாக வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி பிள்ளைகளைப் படிக்கவைக்கவும் ஆரம்பித்தனர். இவ்வாறாக கொஞ்சம் கொஞ்சமாக விவசாயக் கூலிவேலைகள் கடைநிலைச் சாதியினரால் புறக்கணி்க்கப்படன.
பண்ணையார்கள் ஆட்களை வைத்து வேலை செய்வதைவிட இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மூலம் அதிக இலாபமீட்ட முடியும் என்றதும் அதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டனர். மற்றபடி விவசாயிகளை மூளைச்சலவை செய்து கம்பெனிகள் இடுபொருட்களை அவர்களது தலையில் கட்டிவிட்டனர் என்பது ஒரு வகையான மேட்டிமைத்தன விஷம பிரச்சாரம்.
ஒருகட்டத்தில் ஊர், உலகம் மாறுகிறது என்பதை உணர்ந்தவர்கள் அமைதியாக தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றதை ஒதுக்கிவிட்டனர். ஆனால் அந்த பழைய ஜாதி மேட்டிமைத்தனத்தை விட இயலாதவர்கள், அன்று கூப்பிட்டதும் ஓடோடி வந்து காடு கழனியில் வேலை செய்துவிட்டு கொடுத்ததை வாங்கிக்கொண்டு இருந்தவர்கள் இன்று மதிப்பதில்லை என்ற அங்கலாய்ப்பில் அதற்கான காரணத்தைத் தேடி அதை பழையபடி நிறுவ முயல்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதற்குமாக மான்சான்டோவில் ஒரு பதினைந்து பேர் மாதம் 30000 - 90000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்வார்கள். இவர்களும் பிள்ளைகுட்டிகளைப் பார்த்தநேரம் போக, வாட்சப், பேஸ்புக் பார்த்தது போக எவ்வளவு பெரிய சதியை செய்துவிடமுடியும்?! இவர்களைத் தாண்டி அமெரிக்க அலுவலகத்தில் உட்கார்ந்து ஒரு பட்டனைத் தட்டி தமிழக விவசாயிகளை அடிமைப்படுத்துவது எல்லாம் பேரரசு படத்தில் மட்டுமே சாத்தியம். ஆனானப்பட்ட அமெரிக்க அரசாங்கம் ஒரு ஐபோனை உடைத்து தகவல்களை எடுக்க முடியாமல் ஆப்பிளிடம் கெஞ்சியது. இந்த இலட்சணத்தில் எல்லாவற்றிலும் CIA சதி என்றால் எப்படி நம்புவது!
மற்றபடி கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என்றால் முகத்தில் கறுப்புத்துணி கட்டி, கோட் சூட் போட்டு, தொப்பியணிந்து இரவுநேரத்தில் மட்டுமே நடமாடி சதிகளை செயல்படுத்துவார்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. ஜான் பெர்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட மாதிரி, No Escape படத்தில் வருவது மாதிரி கார்ப்பரேட் சதிகாரர்கள் சாதாரண உடையில் வந்து நமக்கு பக்கத்தில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டே நம் ஒவ்வொரு அசைவுகளையும் நோட்டம் விட்டு பின்னர் திட்டமிடுவார்கள் என்பதெல்லாம் ஒருவகையான மனப்பிறழ்வின் அறிகுறி மட்டுமே.
எல்லா கார்ப்பரேட் கம்பெனிகளும் பலரது கடும் உழைப்பில்தான் இயங்குகிறது. ஏதாவது ஓரிரண்டு நிறுவனங்கள் கள்ளத்தனமாக பயனடைந்தன என்பதற்காக மொத்தமாக சேற்றை வாரி இறைப்பது, சேர் கண்டுபிடித்தது தமிழனை அடிமைப்படுத்தவே, வெஸ்டர்ன் டாய்லட் கண்டுபிடித்தது தமிழனை நோயாளியாக்கவே, ஜட்டி கண்டுபிடித்தது ஆண்மைக்குறைவை உண்டாக்கி மருந்து விற்கவே என்றெல்லாம் பேசுபவர்கள் மனநல மருத்துவரைப் பார்ப்பதே நல்லது. அவர்கள் தேவையில்லாத மருந்துகளை விற்க முயல்வார்கள் என்றால் வேப்பிலை அடித்து அரைஞாண்கயிற்றில் தாயத்து கட்டிக்கொள்வது நன்மை பயக்கும்.

No comments: