Tuesday, January 15, 2019

நமக்கு கிடைத்த வள்ளுவராண்டின் வரலாறு

ஹிச்டாரிக்கல் பிகராக (வரலாற்று சித்திரம்) அதாவது ரத்தமும் சதையுமாக நிஜமாக வாழ்ந்த மனிதர் என ஒரு பிரபலம் அறியப்பட அவரது இருப்பிற்கான பிஸிகல் எவிடென்ஸ் கிடைக்கவேண்டும். உதா: அவரது சவபெட்டி, எலும்புகூடு முதலானவை
பல சமயங்களில் அத்தகைய எவிடென்ஸ் கிடைப்பது கிடையாது (உதா: ராஜராஜ சோழன்). அத்தகைய சமயங்களில்
அவரை பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் எழுதபட்ட நூல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், பாடல்கள் மூலம் அவரைபற்றி அறியலாம். அவர் ஹிஸ்டாரிகல் பிகர் என்ற முடிவுக்கு வரலாம்.அவர் வாழ்ந்த காலத்து வரலாற்று ஆசிரியர்கள் அவரைபற்றிய குறிப்பு எழுதி இருப்பார்கள். உதா: அலெக்சாந்தர் காலத்து வரலார்று ஆசிரியர் காலிஸ்தனிஸ் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எழுதியுள்லார். அலெக்சாந்தர் படையெடுத்து சென்ற நாடுகள் முழுக்க அவரது வரலாறு பதிவாகியுள்ளது.
வள்ளுவரை பொறுத்தவரை:
மேலே சொன்ன எந்த ஆதாரஙக்ளும் நம்மிடம் கிடையாது. நம்மிடம் இருப்பவை மிக பிற்காலத்தில் எழுதப்பட்ட வள்ளுவமாலை, வள்ளுவர் கோயில், சிலை, அவர் பற்றி நிலவும் தொன்மகதைகள் ஆகியவையே
வள்ளுவர் ஆணா,பெண்ணா, அரசரா, துறவியா, அவர் வயது என்ன, என்ன தொழில் செய்தார், எங்கே பிறந்தார் என எத்தகவலும் நம்மிடம் கிடையாது. நம்மிடம் இருப்பது அவரது திருக்குறள் எனும் நூல் மட்டுமே. அதில் அவர் தன்னை பற்றிய எக்குறிப்பையும், தன் பெயர் வள்ளூவன் என்பதையும் கூட கொடுக்கவில்லை.
திருவள்ளுவரின் உண்மையான பெயர் என்ன? வள்ளுவர் என்பது அவரது பெற்றோர் அவருக்கு வைத்த பெயரா? பட்ட பெயரா? ஜாதி பெயரா?
தெரியாது...அவர் பல்வேறு உரை ஆசிரியர்களால் பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார், நாயனார், தேவர், மாதானுபாங்கி, பெருநாவலர் இப்படி பல பெயர்களில் அழைக்கபடுகிறார். இதில் எப்படியோ திருவள்ளுவர் எனும் பெயர் பரவி நம்மிடையே தங்கிவிட்டது. முதல்முதலாக அச்சொல் எந்த நூலில் காணப்படுகிறது, அந்நூலின் ஆசிரியர் யார் என்ற ஆய்வை செய்யவேண்டும். அதுபோல் திருக்குறள் உரை ஆசிரியர்கள் கால ஆய்வையும் செய்யவேண்டும்.
இவற்றுக்கான பிஸிகல் எவிடென்ஸ் எதுவும் நம்மிடம் இல்லை. திருக்குறள் எனும் நூல், அந்த நூல் வேறு எந்த எந்த நூல்களில் கோட் செய்ய்படுகிறது, அவற்றின் காலம் என்ன என்பதை வைத்து தோராயமாக குறள் எழுதபட்ட நூற்ராண்டை கணிக்க முடியும். அத்தகைய ஆய்வுகள் நிகழ்ந்து உள்ளன. ஆனால் வள்ளுவர்/தேவர்/நாயனார்/நான்முகன் எனும் அந்த நூலின் ஆசிரியர் பற்றி வேறு எதுவும் நமக்கு தெரியாது. நம்மிடம் இருப்பவை அவர் குறித்த தொன்மங்கள் மட்டுமே.
ஆக தொன்மங்கள், நூல் இவற்றை வைத்து மட்டுமே வள்ளுவர் நிஜமாக வாழ்ந்த மனிதர்/ இங்கே வாழ்ந்தார் என எதையும் கண்டறிய முடியாது.
ஆனால் திருக்குறள் என்ற நூல் ஒன்று இருக்கிறது. அதை எழுதியவர் யாரோ இருக்கவெண்டும் அல்லவா என கேட்கலாம்.
ஆமாம். திருக்குறள் என்ற நூல் உள்ளது. அதை எழுதியவர் வள்ளுவர் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மிடயே உள்ள தகவல். இதற்குமேல் எதுவும் தெரியாது. யாரோ எழுதி இருக்காமல் அந்த நூல் உருவாகி இருக்காது. அது இருவரா, ஒருவரா, பலர் சேர்ந்து எழுதினார்களா, காலவெள்ளத்தில் தொகுக்கபட்ட பழமொழிகளின் தொகுப்பா..எப்படி வேண்டுமனாலும் இருக்கலாம். ஆனால் நூலின் நடை, ஒழுங்கு ஆகியவற்றை வைத்து ஆராய்கையில் அதை பலர் சேர்ந்து எழுதினார்கள் என சொல்ல இடமில்லை.
இதுதான் நமக்கு வள்ளுவர் பற்றி தெரிந்தது. வரலார்றில் நாம் மிக வீக். பல சங்கபாடல்களை எழுதியவர் பெயர் கூட தெரியாமல் பாடலின் முதல்வரியை அவருக்கு பெயராக சூட்டி விடுகிறோம்.
அதே சமயம் தமிழக அரசு திருவள்ளுவர் பிறந்தநாள் ஜனவரி 15 31 பி.சி என அறிவித்துள்ளது,
இந்த நாளில் வள்ளுவர் பிறந்தார் என நமக்கு எப்படி தெரியும்?
1935ம் ஆண்டுவாக்கில் சென்னையில் "திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர்" என்ற அமைப்பு ஒன்று உருவாகிறது. அந்த அமைப்பின் தலைவர் மறைமலை அடிகளார். அவரும் இன்னபிற தமிழ அறிஞர்களான சுப்பையாபிள்ளை, கண்ணுசாமி பிள்ளை முதலானோர் திருவள்ளுவர் நாள் ஒன்று கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கின்றனர். அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் அன்றைய சென்னை ராஜதானி அமைச்சர்களான முத்தையா முதலியார், தெய்வநாயகம் பிள்ளை முன்நிலையில் "வள்ளுவர் பிறந்தது கிமு 30" "வள்ளுவர் நாள் என்பது மே 18" என மறைமலை அடிகள் அறிவிக்கிறார். அதற்கு எந்த ஆதாரமும் அவர் கொடுக்கவில்லை. யாரும் கேட்கவும் இல்லை, காரணம் வள்ளுவர் நாள் என்ற நாள் ஒன்றை தேர்ந்தெடுத்து அன்று தமிழ்நாடெங்கும் வள்ளுவர் தின கொண்டாட்டங்களை செய்யவேண்டும், உணவிடவேண்டும் என்பதே அதன் நோக்கம். அதன்பின் ஒட்டுமொத்த திருவள்ளுவர் திருநாள் கழகமும் மயிலை வள்ளுவர் கோயிலுக்கு சென்று வழிபடுகிறது. அக்கோயிலில் வைகாசி அனுஷ நட்சத்திரதன்று வள்ளுவர் தினம் கொண்டாடபடுகிறது. அதன் அடிபப்டையில் மே 18 எனும் நாள் தேர்ந்தெடுக்கபட்டிருக்கலாம்.
அதன்பின் 1963ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு (எப்ரல் 14) அன்று திருவள்ளுவர் விழா ஒன்றில் அறிஞர் அண்னாவும், பக்தவத்சலனாரும் கலந்துகொள்கிறார்கள். அகூட்டத்தில் வள்ளுவர் தினமாக ஜூனில் இருந்து ஜூலைக்குள் ஏதோ ஒரு நாள் அறிவிக்கபடவேண்டும் என வேண்டுகோள் விடபட்டு அன்றைய தமிழக அரசும் ஜூன் 2 நாளை வள்ளுவர் தினமாக அறிவிக்கிறது. அதை தேர்ந்தெடுக்க ஸ்பெஷல் காரணம் எதுவும் இல்லை.
அதன்பின் 1971ல் கலைஞர் முதல்வர் ஆனபின் வள்ளுவர் பிறந்தது தை 1 என சொல்லி, வள்ளுவர் பிறந்தநாளை ஜனவரி 15, கிமு 31 ஆக அறிவித்து வள்ளுவர் ஆண்டை உருவாக்குகிறார். அதற்கு சொல்லபட்ட காரணம் தமிழருக்கு தனி ஆண்டு முறை வேண்டும் என்பது. பொங்கல் சமயத்தில் துவக்குவது பிராக்டிகலாக இருக்கும் என்பதாலும் மாற்றி இருக்கலாம். மறைமலை அடிகள் தலைமையில் 1921ல் நடந்த அறிஞர் குழு ஒன்று தை 1 தான் வள்ளுவர் பிறந்தார் என அறிவித்ததாக கலைஞர் கூறினார்.
ஆக வள்ளுவரை அடைப்படையாக வைத்து நமக்கு கிடைத்த வள்ளுவராண்டின் வரலாறு இதுவே

No comments: