Friday, January 04, 2019

பெண் கல்வியின் அன்னை - சாவித்ரிபாய் புலே

பெண் கல்வியின் அன்னை - சாவித்ரிபாய் புலே
--------------------------------------------------------------------------



பள்ளிக்குச் செல்லும் போது இரண்டு புடவைகளையும் எடுத்துச் சென்றாள் அந்தப் பெண். ஏனெனில் அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே வழி நெடுகிலும் சேற்றையும், சாணத்தையும், மண்ணையும் மாறி மாறி அவள் மீது வீசுவார்களாம் இந்து சனாதனவாதிகளும் ஆதிக்க மேல்சாதியினரும். அவற்றை அமைதியாக எதிர் கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும் புடவையை மாற்றிக் கொள்வாளாம் அந்தப் பெண். யாரிந்தப் பெண்? இவள் செய்த குற்றம்தான் என்ன?இந்திய தேசத்தின் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கும், சமூக கொடுமைகளுக்கும் எதிராகப் போராடிய முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே தான் அவர். இதுதான் பெண்கல்வியை முனைப்பாக கொண்டு சென்ற முதல் பெண் ஆசிரியருக்கு, இந்தியாவில் பரம்பரியத்தைக் காப்பாற்றும் சனாதன கும்பலால் கிடைத்த பரிசு என்றே நாம் கொள்ள வேண்டும். சாவித்திரிபாய் புலே என்கிற இந்தப் பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது.
சாவித்திரிபாய் புலே , 1831, ஜனவரி மாதம் 3ம் நாள், மகாராஷ்ட்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில், நைகோன் என்ற கிராமத்தில் பணக்கார விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
இந்திய வரலாற்றில் பெண்கல்விக்காக முதல் பள்ளி அமைத்தவர், சாதியத்தை தீயிட்டுக் கொளுத்திய, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த சமூகப் போராளியும் கூட. அரசியல் கவிதை எழுதிய புரடசிப் பெண்ணும் ஆவார்.. மராட்டிய மண்ணின் முதல் பெண் கவிஞரும் இவரே. 19ம் நூற்றான்டின் அனைத்து சமூகத்தடைகளையும் உடைத்து தூக்கி எறிந்தவர்.
இந்தியாவின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், அதுவும் கல்வி தொடர்பான தகவல்களைப் படித்தால் கொஞசம் அச்சமாகவும் வேதனையைத் தருவதாகவும் உள்ளது. 1800 களில் பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி கொடுக்கப்பட்டது. அப்போது ஆண்ட பிரிட்டிஷ்காரர்களும், உயர்தட்டு மக்களுக்கே கல்வி கொடுக்க திட்டமிட்டனர். இந்த காலகட்டத்தில் இந்திய பெண்களின், சமூகத்தை உய்விக்கப் பிறந்தவர்கள்தான் ஜோதிராவ் கோவிந்த புலே மற்றும் காண்டோஜி சாவித்திரி பாய் புலே என்ற தம்பதியர் இருவரும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்,கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கும் மறுக்கப்பட்ட கல்வியை, ஜோதிராவ் மற்றும் சாவித்திரி இருவரும் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் கல்வி தருவோம் என்று கூறினர், 1847 ல் முதல் பள்ளியை தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக துவங்கினார்கள். பின்னர் 1848,ல், இந்திய வரலாற்றிலேயே, முதன் முறையாக, முதல் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை, புனேயிலுள்ள பீடே வாடு என்ற இடத்தில், 9 பெண் குழந்தைகளுடன், தொடங்கினர். அதில் சாவித்திரிபாய்தான் பள்ளியில் பொறுப்பு ஏற்று, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக ஆனார். பின் 1849ல், ஒரு பள்ளியை ஜோதிராவ் மற்றும் சாவித்திரிபாய் துவங்கினார்கள். அதுவே பெரியவர்களுக்கான பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், என அனைத்து சாதியினருக்கும் என உருவாக்கப்பட்ட முதல் பள்ளி, இந்தியாவிலேயே இதுதான்.
சாவித்திரி பாய் புலே, ஜோதிராவ் புலே இருவரும் மகாராஷ்டிரத்தில் 9 இடங்களில் அனைத்து சாதியினருக்கும், விதவைகளுக்கும், தவறான உற்வின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் என எல்லோருக்கும் கல்வி கொடுக்க பள்ளியை துவங்கினர். இதில் 150 பெண்களும், 100 ஆண்களும் படித்தனர். இந்த பள்ளிகள் அரசு பள்ளியைவிட சிறப்பாக செயல்பட்டன. இதனால், 1852, நவம்பர் 14ல், பிரிட்டிஷ் அரசால் இவர்கள் இருவரும் சிறந்த ஆசிரியர்கள் என்ற பாராட்டும்பரிசும் பெற்றனர்.
இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் போராளி என்றுதான் கூறவேண்டும். ஏனெனில்,முறையாக ஆசிரியர் தினம் என்று சாவித்திரிபாய் பிறந்த தினத்தைத்தான் கொண்டாட வேண்டும். ஆனால், சமூக சீர் திருத்தவாதியான சாவித்திரிபாய் பற்றி எந்த பாட புத்தகத்திலும் இல்லை. இது ஒரு வரலாற்றுப் பிழையே.
தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் எனச் சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடியநடைமுறை அமலில் இருந்தது; அந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே
அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்கச் செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே குற்றமாகக் கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதிச் சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர். சாதாரணங்களைக் கொடுத்தவர்களையெல்லாம் அசாதாரணமாக கடந்தவர். பூக்கள் அல்ல பெண்கள். புயல்களாகவும் இருப்பார்கள் என புரட்சி செய்து காட்டிய பெண். தன்னம்பிக்கை மனிதியாக, சமுதாயத்தின் பிழை திருத்தும் போராளியாக, சமூக ஏற்றத் தாழ்வினை வேரறுக்கும் சக்தியாக வாழ்ந்து காட்டிய வீராங்கனை. ஆனால் இந்திய வரலாற்றில் இந்த உயர்ந்த மனிதி ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது.
சாவித்திரி பாய் தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து, தனது அறுபத்தி ஆறு வயதில், மனித நேயம் காக்க மனித உயிர்கள் காக்கப்போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு,1897, மார்ச் 10 ம் ள் மரணமடைந்தார் சாவித்திரி பாய் புலே. அந்த சிறுவன் பிழைத்துக்கொண்டான்.
சாவித்திரிபாய் புலே நம் அனைவருக்கும் சொல்லிச் சென்ற செய்தி இதுதான். உனக்குள்ளே எல்லா ஆற்றலும் அடங்கியுள்ளது. அந்த ஆற்றலை இந்த சமூகத்திற்கு நல்லது செய்யப் பயன்படுத்து. ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்பதும், சாதிப்பதற்கு பாலினம் ஒரு தடையில்லை என்பதும் தான்.
போ கல்வி கல்
சொந்தக்காலில் நில்,சோராமல் உழை
ஞானத்தை,செல்வத்தைச் சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே,போ,போய்க் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று,ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக
பிராமண நூல்களை வேகமாகத் தூக்கி எறிக !
இப்படியாகச் செல்கிறது அவரின் கவிதை வரிகள்.

No comments: