Friday, September 13, 2019

ஏன் இடதுசாரிகள் பாரதியாரை உயர்த்திப் பிடிக்கிறார்கள்

பாரதியை தூக்கிப் பிடிப்பது ஒரு மூளை மழுக்கச் செயல்பாடு தான்.
பா(bha) என்கிற வடமொழிச் சொல்லுக்கு அறிவு என்று பொருள்.
பரதன்,பாரத்,பாரதம்,பாரத் மாத்தா என்றெல்லாம் இச்சொல் வடிவெடுத்துள்ளது.
எனவே, அறிவுக்கடவுள் சரஸ்வதியை நினைவுறுத்தி 'பாரதி' என்கிற பெண் பெயர் சூட்டப்படலானது.
தமிழின் ஆகச் சிறந்த விடுதலைக் கவிஞனாகப் பார்க்கப்படும் பாரதியாரின் பெயரில் உள்ள சுப்ரமண்யம், பாரதி இரண்டுமே தமிழ்ச் சொற்கள் கிடையாது.
வேத மரபையும், ஆரியப் பெருமையையும், சமஸ்கிருதத்தையும் போற்றி வழிபட்ட பாரதியாரை இடதுசாரிகள் கட்டிப்பிடித்து உருளக் காரணமிருக்கிறது.
பாரதி ரஷ்யப் புரட்சியை ஆதரித்தானாம்.
நம் வசதிக்காக இடதுசாரிகளை இரண்டு ரகத்தினராகப் பகுப்போம்.
இதில் கட்சி,கலை,இலக்கியம்,
தொழிற்சங்கம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு மெல்ல, மெல்ல மக்களை அரசியல் படுத்தியபடி இருக்கும் இடதுசாரிகள் ஒரு ரகம்.
இவர்களில் பெரும்பகுதியினர் பாரதியை பூஜிப்போர்.
மக்களின் கோபத்தை அப்படியே ஆயுதமாக்கி, தமது பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து,கந்துவட்டி,நிலவுடைமை ஆதிக்கம் உள்ளிட்ட சுரண்டல்களை எதிர்த்துப் போராடுவோர் மற்றொரு ரகம்.
இவர்கள் தருமபுரி பாலன் மாதிரியான போராளிகளை முன்னிறுத்துபவர்கள்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு முனை பாரதி என்றால் அதன் எதிர்முனை தோழர் பாலன்.
பாலன் - பாரதி என்பது தனி மனிதர்கள் அல்லர்.இவை இரண்டும் கோட்பாடுகள் தான்.
எந்தத் திசை நோக்கி நகர வேண்டும் என்பதை இடதுசாரிகளே முடிவு செய்யட்டும்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதி கூவுவது, கூலி வாங்கிக் கொண்டு 'வருங்கால ஜனாதிபதி வாழ்க' என்று கூவுபவனின் குரல் தான்.
அசலான பாரதி இதோ பேசுகிறான்.
' நமது முன்னோர்களும்,அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது.அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாஷைகளை எல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால் இவையனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப் பெயரொன்று வேண்டுமல்லவா?அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.'
மனுவின் நால்வருணப்பகுப்பை விதந்தோதியவன் பாரதி.
'வேதமறிந்தவன் பார்ப்பான்
பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.'
வேதக் குப்பைகளை அறிந்து ஏமாற்றிப் பிழைக்கும் வித்தை காட்டுவதில் என்ன பெருமை வேண்டியிருக்கிறது.?
'நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
பண்டங்கள் விற்பவன் செட்டி- பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி......என்று விரிந்து,
நாலு வகுப்பும் இங்கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் செத்து வீழுந்திடும் மானிடச் சாதி' என்று
நால் வருணப்பகுப்பை நியாயப்படுத்தும் நவீன மனு தான் பாரதி.
தமிழகத்திற்கு பாரதி தரும் அடையாளம் என்ன.?
'வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு'
தமிழகத்தில் வேதம் எங்கே நிறைந்திருக்கிறது.அக்ரஹாரத்தில் மட்டும் தான் நிறைந்திருக்கிறது.
அக்ரஹாரம் தான் தமிழ்நாடு என்றால் அங்கு வேதம் நிறைந்திருப்பது உண்மைதான்.
இந்திய நாட்டிற்கு பாரதி தரும் முகவரி என்ன.?
'உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவோம் இஃதை எமக்கில்லை ஈடே.'
இந்தியாவில் உள்ள அக்ரஹாரங்களை மட்டுமே தமது நாடாகக் கற்பனை செய்தால் இது ஆரிய நாடாகத்தான் இருக்க முடியும்.
' வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பாளோ
பாரததேவி.'
அப்போ அம்பிகள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பாதம் பதித்து க்ரீன்கார்ட் வாங்கி செட்டிலாவது மட்டும் சரியா.?
வேத நூல்களை மதிக்காமல்/ஜாதி பாகுபாட்டை சீர்குலைத்த ஒரே காரணத்தினால் தான், பிரிட்டிஷ்காரன் மீது உயர் ஜாதிகளுக்கு ஆத்திரம் வந்தது.அதை நெறிப்படுத்துவதே பாரதிகளின்/திலகர்களின் பணியாக இருந்தது.
காவல்துறையிடம் சிக்கியதும் மன்னிப்புக் கடிதம் எழுதித் தப்புகிறான் பாரதி.
லைக்..சாவர்க்கர்.!
இப்படிப்பட்ட பாரதியையா இடதுசாரிகள் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.?
ஜார் மன்னருக்கு எதிராக வெடித்த ரஷ்யப் புரட்சி பற்றியும் எழுதியிருக்காரே பாரதி.
'மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி'
என்று பாடி, ஆதிபராசக்தியின் அருள் நிறைந்த பார்வை பட்டதால் தான் ரஷ்யப் புரட்சி நடந்தது என்று பாரதி குதூகலிப்பது இவர்களுக்குப் பிடித்திருக்கிறது.
அப்படியே இந்தியாவிலும் யுகப்புரட்சி நடக்க இங்குள்ள பராசக்தி,கண்காட்ட மாட்டாளோ என்று ஏக்கப் பார்வை பார்க்கும் இடதுசாரிகளே,பாரதியைக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.
ஜெயமே லயம்.

No comments: