Saturday, May 25, 2019

37 எம்பிக்கள் இருந்தும் வேஸ்ட். ஒன்றுமே செய்ய முடியாது என்கிறார்களே.

கேள்வி: 37 எம்பிக்கள் இருந்தும் வேஸ்ட்.  ஒன்றுமே செய்ய முடியாது என்கிறார்களே.

பதில்: இந்த 37 எம்பிக்கள் "காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்,"என பாடும் எம்பிக்கள் அல்ல.  இந்த 37 எம்பிக்கள் மோடிதான் எங்கள் டாடி என பல்லிளிக்கும் மானங்கெட்டவர்கள் அல்ல. சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்த 37 எம்பிக்களும் மானமுள்ள மனிதர்கள். உண்மையான எம்பிக்கள்! 

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுமையிலும் இருக்கும் முற்போக்காளர்கள், பாஜகவை எதிர்க்கும் நிஜமான அம்பேத்கரியர்கள், பெரியாரியர்கள், மார்சியவாதிகள், பெண்ணியவாதிகள், முற்போக்கு எழுத்தாளர்கள், சிறுபான்மையினர் என எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை ஒளி பாய்ச்சிக் கொண்டிருப்பது இந்த 37பேர் தான். முற்றிலும் தோற்று வீழ்ந்த பின், 'எல்லோரும் தோற்கவில்லை தெற்கில் ஒரே ஒருவன் ஜெயித்திருக்கிறான்,' எனத் தெரிந்தால் "நாளை நிச்சயம் காலம் மாறும்," என வீழ்ந்தோர் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வருமே அந்த நம்பிக்கைதான் இந்த 37 பேரும். முழுதாக அடிபட்டுக் கீழே விழுந்தபின்னும் தட்டுத்தடுமாறி எழுந்து வீழ்ந்தோர் அத்தனைபேரின் குரலாகவும் ஒலிப்பானே ஒரு வீரன் அந்த வீரன்தான் தமிழ்நாடு.  தமிழ்நாடு பாஜகவுக்கு தோல்வியைத் தரவில்லை. இந்தியாவுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது. இந்தியா முழுமையிலும் அழிய இருக்கிற இந்தியாவின் ஜனநாயகத்தன்மை, இந்தியாவின் மதச்சார்பின்மை ஆகியற்றைத் தேக்கி தன்னுள் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.  தாய் கங்காரு குட்டியைச் சுமப்பதைப் போல இந்தியாவில் அழிந்துவிட்ட  ஜனநாயகத்தைச் சுமந்துகொண்டு பாராளுமன்றம் போகப்போகிறவர்கள் இந்த 37 பேர்தான். 

இது வெற்றி மட்டும் அல்ல. இது ஒரு செய்தி. இந்தியா முழுமைக்கும் அல்ல உலகத்திற்கே தமிழினம் கொடுத்திருக்கும் செய்தி.  இந்தியா முழுதும் பாஜக தோற்றிருந்தால் தமிழ்நாடு இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாகப் போயிருக்கும்.  இன்று தமிழ்நாட்டை தனித்தன்மை மிக்க நாடாக உலகமே பார்க்கிறது.  அதற்குக் காரணம் இந்த வெற்றிதான்.  அடுத்த ஐந்தாண்டுகளில் பாஜக எனும் சர்வாதிகாரத்திற்கு எதிராக எழப்போகும் ஒரே ஒரே எதிர்ப்புக்குரல் திமுக கூட்டணியின் எம்பிக்களான இந்த 37 பேரின் கூட்டுக்குரல்தான்.

முற்றிலும் இருளாகிவிடும் என நினைத்தால் தமிழ்நாடு எனும் ஒரே ஒரு வெளிச்சத்தைத் தடுக்க முடியவில்லையே எனப் பதறும் இருளின் தூதுவர்கள் இந்த வெற்றியை "வேஸ்ட்" என்கிறார்கள்.  வயிறெரிகிறார்கள். பயப்படுகிறார்கள்.
நாம் அப்படிச் சொல்லலாமா?

நான் சொல்கிறேன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.  நாம் சோதனையான காலத்தில்தான் இருக்கிறோம்.  இருள் சூழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாம் மண்டியிடவில்லை. மரணித்துவிடவில்லை. உயிருடன் இருக்கிறோம். அதற்கு ஒரே சாட்சி இந்த 37 பேர்தான். 

-டான் அசோக்
மே25, 2019

No comments: