Sunday, November 20, 2022

காசியும் பெரியாரும்

 பெரியாருக்கு வயது 25. ஒரு சமயம் அப்பா மீது வந்த கோபத்தில் காசிக்குப் போய் சாமியாராக முடிவு செய்தார். பெரியார் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டார். பலவாறு பாடுபட்டு கசியை அடைந்த பெரியாருக்கு சோறு கிடைக்கவில்லை. பல நாள் பட்டினி. அவர் கையில் காசு கிடையாது. பசியைத் தாங்க முடியவில்லை. ஒரு சாப்பாடு சத்திரத்திற்குள் நுழைய முயன்றார். சத்திரத்தில் பார்ப்பன ஜாதியினருக்குத்தான் இலவசமாக சாப்பாடு கிடைக்கும். இவர் பார்ப்பனர் அல்ல என்பதைக் கண்ட காவலாளி பெரியாரை வெளியே  தள்ளினான். அப்போது எச்சிலைகளை வெளியே கொண்டுவந்து எறிந்தனர். பெரியார் பார்த்தார்.

பசிக்கொடுமை, எச்சிலை அருகில் ஓடினார். சட்டமாக அமர்ந்தார். எச்சிலையிலிருந்து சோற்றை வழித்து சாப்பிட்டார். இடுப்பில் ஒன்றரைப் பவுன் மோதிரமிருக்க பெரியார் இச்செயலைச் செய்தார்.

பிறகு காசியில் பெரியார் வேலை தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. தாடி, மீசையை எடுத்தார். மொட்டையடித்துக் கொண்டு சாமியாரானார்.

காசியில் பெரியாருக்கு ஒரு மடத்தில் வேலை கிடைத்தது. பெரியாருடைய வேலை பூசைக்காக வில்வ இலை பறிக்க வேண்டும். விளக்குப் போட வேண்டும். இந்தக் காரியங்களை அதிகாலையில் குளித்து உடம்பில் திருநீறு அணிந்து செய்ய வேண்டும். பெரியாருக்கு அதிகாலையில் எழுந்து குளிப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் குளிக்காமல் திருநீறு பூசிக்கொண்டு பூசைக்கு வந்தார். இப்படிப் பலநாள் செய்தார். ஒரு நாள் உண்மை தெரிந்தது. வேலையிலிருந்து விரட்டப்பட்டார்.

பெரியார் மறுபடியும் பிச்சை எடுத்தார். சாமியார் வாழ்க்கையை வெறுத்தார். சாமியார்களிடம் இருந்த ஒழுக்கக் குறைவு பெரியாருக்குப் பிடிக்கவில்லை.
 தன்னிடம் இருந்த மோதிரத்தை விற்றார். பணத்துடன் காசியை விட்டுப் புறப்பட்டார்.

காசி நகரம், ஆத்திகர் ராமசாமியை நாத்தீகராக மாற்றி அனுப்பி வைத்தது!

No comments: