Tuesday, September 24, 2019

தரமான கல்வி எது?

தரமான கல்வி எது?

இங்கு ஒரு தவறானப் பொது உளவியல் உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நிறையத் தேர்வு எழுதினால், நிறைய மதிப்பெண் எடுக்கலாம், தரமானக் கல்வி உருவாகும் என்கின்றனர். தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், எப்படி தரமானக் கல்வி உருவாகுமென்று யாரேனும் நிரூபிக்கத் தயாரா?

அரசுப்பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளை நடத்துகின்றனர். அதில் தரம் இல்லையெனக் கூறிக்கொண்டு, மாதாந்திர தேர்வு நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அனுப்பத் தொடங்கினர். இப்பொழுது, வாராந்திர தேர்வு நடத்துகின்ற பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர்.

இன்னும் சில ஆண்டுகளில் தினமும் தேர்வு நடத்துகின்ற பள்ளிகளுக்கு குழந்தைகள் அனுப்பப்படுவர். உண்மையில் தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், கற்றல் அதிகரிக்குமா?

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது, காலாண்டுத் தேர்வு வருவதற்கு முன் ஒரு வாரத்திற்கு முன்பாக தேர்வுக்கான தேதியை அட்டவணையாக வெளியிடுவர். அந்த அட்டவணை வெளியான நாள் முதல் மனதில் ஒருவிதமான பயம் தொற்றிக் கொள்ளும். தேர்வில் சரியாக மதிப்பெண் எடுக்காவிட்டால், வகுப்பில் ஆசிரியர் அடிப்பார், வீட்டில் பெற்றோர் அடிப்பார்கள், பக்கத்து வீட்டில் மாமா கிண்டல் செய்வார் என்று பல்வேறு அழுத்தம் உருவாகும். அதனை தவிர்ப்பதற்காக படிக்கத் தொடங்குவோம்.

தேர்வு முடிந்தால் ஒருவாரம் விடுமுறை அதில் நன்றாக விளையாடலாம், இப்பொழுது கவனமாக படிக்கலாம் என்ற ஒருவித விட்டுக்கொடுத்தலுக்கு மனம் தயாராக இருக்கும். படிக்கின்ற நாள்களில் ஒழுங்காகப் படிக்க வேண்டும். விளையாடுகின்ற நாள்களில் ஓடியாடி விளையாடலாம் என்ற புரிதல் பால்ய வயதிலேயே வந்துவிடும்.

தேர்வு, தேர்வுக்குத் தாயராக சரியான நாள்கள், தேர்வுக்கு பிறகு மன ஓய்வுக்கான விடுமுறை என்று எல்லாமும் சரிவிகிதமாக பிரிக்கப்பட்டு, பள்ளி வாழ்க்கை நகர்ந்தது. அதனால், உண்மையில் வலிமையான மனதிடத்தோடு நாங்கள் உருவானோம்.

இன்றைய நிலைமை வேறு. ஒரு வாரம் பாடம் நடத்துகின்றனர். அடுத்த வாரம் தேர்வு வைக்கின்றனர். அதற்கு அடுத்த வாரம், இவன் புத்திசாலி, இவன் முட்டாள் என்று தரம் பிரித்துவிடுகின்றனர். நாம் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று அந்த மாணவன் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அடுத்த வாரத்திற்கான தேர்வு வந்துவிடுகிறது. மறுபடியும் அவன் முட்டாளாக்கப்படுகிறான்.

கற்பித்தலும்- கற்றலும், புரியாதப் பகுதியை மீண்டும் கற்பித்தலும்- அதன் மூலம் மீண்டும் தெளிவாக கற்றலும்தான் கல்வி. ஆனால், வாரம் ஒருமுறை தேர்வு நடத்தினால், கற்பித்தல் எப்பொழுது நடக்கும், அதன் விளைவான கற்றல் எப்பொழுது நடக்கும்?

இன்றைய காலத்தில், நீங்கள் எந்தப் பள்ளிக்கூடம் தலைச்சிறந்த பள்ளிக்கூடம் என்று நினைக்கிறீர்களோ, அங்கு கற்பித்தலே நடப்பது இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். கற்பித்தலிலும், கற்றலிலும், இரண்டு பக்கமும் வார்த்தைகள் பரிமாற்றம் நடக்க வேண்டும். எந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்தியவற்றில் இருந்து மாணவன் கேள்வியை எழுப்புகிறான்? குறிப்பாக ஆக்கபூர்வமான கேள்வியை எழுப்புகிறான்?

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வீட்டில் இருந்தே தேர்வு எழுதுகின்ற காலம் வந்துவிட்டது. காரணம், தேர்வு முக்கியமில்லை, தேர்வில் இருந்து கற்பதும், புதியவற்றை கண்டுபிடிப்பதும்தான் கல்வியின் நோக்கம் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்து இருக்கின்றனர். ஆனால் இங்கு நடப்பது என்ன? குழந்தைகளை செக்கு மாடுகளாக மாற்றும் மாபெரும் பணியைத்தான் வகுப்பறைகளில் நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றனர்.

வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையில் எழுதப்படுபவை வெறும் வரிகளாக, படங்களாக மட்டுமே மாணவர்களின் மூளைக்குள் திணிக்கப்படுகின்றன. அதனைத்தான் 'பாடம் நடத்துவது' என்று நம்புகின்றனர் ஆசிரியர்கள். அதனையும் கடந்து, புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியும், இயல்பான உலகில் நடைபெறும் ஓர் உண்மை சம்பவத்தின் குறியீடு என்பதை யாருமே உணர்வதில்லை. அந்த குறியீடுகளின் வழியாக மெய் உலகைத் தேடி நகர்கின்ற அறிவு, இக்கால குழந்தைகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதுதான் பெருங்கொடுமை.

எடுத்துக்காட்டாக ஒருக் கேள்வியைக் கேட்கிறேன். எல்லோரும் எலக்ட்ரான் என்ற வார்த்தையைப் படிக்கின்றனர். ஆனால், எலக்ட்ரான் எப்படி இருக்கும், அதன் உருவம் என்ன? அதன் பிம்பம் என்ன? போன்ற எந்த கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை. ஆனால், எலக்ட்ரான் அணுவைச் சுற்றி வருகிறது என்று மட்டும் எல்லோரும் நம்புகின்றனர். ஏன் இந்த தேடல்களை நம் தேர்வுகள் உருவாக்கவில்லை?

பாடப்புத்தகங்களுக்குள் விடை தேடுவது அறிவல்ல. பாடப்புத்தகங்கள் சொல்லாதவற்றையும் தேடுவதுதான் உண்மையான அறிவு. தொடர்ந்து தேர்வு எழுதுபவன் மெய்நிகர் உலகிற்கு செல்வதே இல்லை. அதன் அருகில் கூட அவன் இல்லை. அவன் உலகம் எல்லாம், அவன் கையில் இருக்கும் புத்தகம் மட்டுமே. புத்தகத்தைக் கடந்து அவனிடம் கேள்வியும் இல்லை, பதிலும் இல்லை, தேடலும் இல்லை.

தரமானக் கல்வி என்பது ஒருபோதும் செக்குமாடுகளை உருவாக்காது..
தேடல் கொண்டச் சமூகத்தை உருவாக்கும் வலிமை, எந்தக் கல்வி முறைக்கு இருக்கிறதோ, அதுவே தரமான கல்வி...

தரமானக் கல்வியும், அதன் விளைவாக உருவான அறிவார்ந்த மாணவனும்தான், வலிமையான நாட்டை வடிவமைக்க உதவியாக இருக்க முடியும்...

அந்த 'தரம்' கட்டாயம் நீங்கள் நினைக்கும் தேர்வுகளால் தீர்மானிக்கப்படாது..
கற்றலும்- கற்பித்தலும் எங்கு இருக்கோ, அங்குதான் தரம் இருக்கும்..

-பேராசிரியர் ஆ.அருளினியன்

No comments: