Tuesday, May 29, 2018

பா.ரஞ்சித் படங்களில் முக்கிய குறியீடுகள்

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட அரசியலை தொடர்ந்து தனது படங்களின் வாயிலாக பேசி வரும் இயக்குநர் பா.ரஞ்சித் , காலா படத்திலும் சில முக்கிய குறியீடுகளை காட்சிப்படுத்தியுள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் காலா படத்தின் 2 -வது டிரைலரில் தண்டகாரண்யா நகர் என்ற சொல்லின் பின் உள்ள குறியீட்டை பார்ப்போம்.தண்டகாரண்யா: 1967-ல் மேற்கு வங்கம், நக்ஸல்பாரியில் நடந்த விவசாயக் கிளர்ச்சிக்குப் பின் ஆந்திரம் அவர்களுடைய பரிசோதனைக் கூடம் ஆனது. ஆந்திரத்தில், ஸ்ரீகாகுளத்திலும் பார்வதிபுரத்திலும் நிலச்சுவான்தாரர்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சியை நடத்தினார்கள். பெரிய முன்தயாரிப்புகளோ, படை பலமோ இல்லாத இந்த இரு கிளர்ச்சிகளும் காவல் துறையால் ஒடுக்கப்பட்டன.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு குழுக்கள் சின்னச் சின்ன தகர்ப்பு முயற்சிகளில் (கிளர்ச்சி/துப்பாக்கிச்சூடு/ஆட்சியாளர் கடத்தல்கள்) ஈடுபட்டுக்கொண்டிருந்தன.இவற்றில் பல குழுக்களுக்கும் மானசீக நாயகனாக சாரு மஜும்தார் இருந்தார். அப்படியும் இப்படியுமாக இருந்த இந்தக் குழுக்கள், மிகப்பெரிய நெருக்கடியை இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலைப் பிரகடனத்தின்போது எதிர்கொண்டன. சாத்விக ஜனநாயக சக்திகளே ஒடுக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் இவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஏராளமான ‘மர்மச் சாவுகள்’ நடந்தன. நிறைய பேர் காணாமல் போனார்கள்.இவை தவிர, கைது நடவடிக்கைகள் நடந்தன. இந்திரா காந்தி தேர்தலில் தோல்வி அடைந்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அரசியல் கைதிகள் பெரும் அளவில் விடுவிக்கப்பட்டார்கள். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் வெளியே வந்தார்கள். அப்படி மிஞ்சிய மாவோயிஸ்ட்டுகள் பலர் மீண்டும் பல்வேறு குழுக்களை உருவாக்கினார்கள். மீண்டும் ஆங்காங்கே கலகங்கள் தொடங்கின. கூடவே ஒடுக்குமுறையும் தொடர்ந்தது. ஆந்திரத்தில் அப்படி உருவாகி, கிளர்ச்சி நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டு, காவல் துறையின் நெருக்கடியால் அங்கிருந்து ஒரு குழு மாறிய இடம்தான் தண்டகாரண்யா.நிலம் குறித்த அரசியலை காலா படத்தில் பேசும் ரஞ்சித் தண்டகாரண்யாவின் அரசியலை இப்படத்தினூடாக பேசப்போகிறாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. தண்டகாரண்யா என்ற சொல்லுக்கு மற்றுமொரு புராண பின்புலமும் இருக்கிறது. காட்டுக்குள் ராமர் வனவாசம் அனுபவித்த 14 ஆண்டுகளில் இந்த பகுதியில்தான் இருந்தார் என்றும், ராவணன் சீதையை தூக்கிச் சென்றது இந்த பகுதியில் இருந்துதான் என்றும் ராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த புராண பின்புலத்தில் தொடர்கிறது இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த குறியீடு வில்லன் நானா படேகரிடம் காலா என்பவன் யார் என்று குழந்தை கேட்க அவர் ராவண் என்று ராவணனின் பெயரைக் குறிப்பிடுகிறார். இதற்கு அடுத்தபடியாக இந்த உடம்புதான் நமக்கு இருக்குற ஒரே ஆயுதம் என ரஜினிகாந்த் பேசும் காட்சியின் தூரத்தில், புத்த விகாரை ஒன்று சுவற்றில் வரையப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் அவர்களின் வாழ்விடத்தில் பரவியிருந்த பௌத்த சமய கருத்தியலையும் குறியீடாக இயக்குநர் முன்வைத்துள்ளதாகப் பேசப்படுகிறது.

No comments: