Sunday, May 27, 2018

"ஸ்டெர்லைட் பிரச்சனையில் தலையிட்டால் டெல்லிக்காரன் ஆட்சியைக் கலைத்து விடுவான்"

"ஸ்டெர்லைட் பிரச்சனையில் தலையிட்டால் டெல்லிக்காரன் ஆட்சியைக் கலைத்து விடுவான்"இது
       என்.கே.கே.பெரியசாமி அவர்கள்  திமுக அமைச்சரவையில் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது சொன்னது.
           ஸ்டெர்லைட் ஒப்பந்தம் போட்டதிலிருந்து அதற்கு எதிரான போராட்டத்தை புரட்சிகர இளைஞர் முன்னணி தொடர்ந்து நடத்தி வந்தது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநடு  உட்பட பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.
         1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது.என்.கே.கே.பெரியசாமி அவர்கள் சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பு வகித்தார்.கரும்பு விவசாயிகள் சங்கத்தை வலுப்படுத்தி பல போராட்டங்களை நடத்தியபோது அதில் சென்னிமலைப் பகுதி முன்னிலை வகித்தது.அதனால் எனக்கும் என்.கே.கே.அவர்களுக்கும் நல்ல உறவு இருந்தது.
            தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவில் அங்கம் வகித்த தோழர்கள் சுற்றுச் சூழல் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய என்னிடம் கோரினர் அமைப்பின் வழிகாட்டலின் பேரில் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி அவர்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இன்று சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரசன் அந்தக் குழுவில் இருந்தார்.
              கவுந்தப்பாடி அருகிலுள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்தோம்.சந்தித்தவுடன் அவர் சொன்னது"விஸ்கோஸை என்னால் நிறுத்த முடியும் .அவன் சூட்கேஸ் கொண்டு வந்தான் துரத்தி விட்டேன் அந்த ஆலையை மூட ஏற்பாடு செய்து வருகிறேன்.என்ன பொன்னையன் இந்த வம்பை என்னிடம் கொண்டு வரிங்க, நீங்க எங்கே இவங்களோடு சேர்ந்திங்க
ஸ்டெர்லைட்ட தொட்ட டெல்லிக்கார ஆட்சியிலே கையை வைச்சுருவான்"
         என வெளிப்படையாகப் பேசினார்.
    பின்னர் விஸ்கோஸ் ஆலையை மூட மிக அதிக விபரங்களைத் திரட்டி அமைச்சரவையில் வைத்து மூடுவதற்கான முடிவை எடுக்க வைத்தார் என்.கே.கே.பெரியசாமி.
       விஸ்கோஸ் ஆலை மூடும் முடிவு எடுக்கப்பட்டதும் சுற்றுச் சூழல் இலாக்கா என்.கே.கே.பெரியசாமி அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.
         இந்த நிகழ்வை நான் கவனப் படுத்துவதன் நோக்கம் இன்று எடப்பாடி துப்பாக்கிச் சூட்டை நானே தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்பது முழுவதும் பொய்யாக இருக்காது.
          மத்திய உள்துறை முடிவெடுத்துவிட்டு இவர்களிடம் தெரிவித்திருப்பார்கள்.இன்னொரு உதாரணம் நீட் தேர்வு எழுத எத்தனை மாணவர்கள் வெளி மாநிலம் செல்ல உள்ளனர் என்பதை இறுதிவரை சி.பி.எஸ்.சி மாநில அரசுக்கு தெரிவிக்கவே இல்லை.
            வேதந்தா ரிசோர்ஸ் என்பது  சர்வதேச பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப்பட்ட கம்பெனி.பாஜக வே வேதந்தாவின் சட்டைப்பையில் தான்.
         கிளர்ந்தெழுந்த தூத்துக்குடி மக்களை இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்து
தமிழகத்தில் சூறையாடலைதடையின்றி நடத்தலாம் என கார்பரேட் நிறுவனங்கள் முடிவு செய்துவிட்டன.
           அன்று என்.கே.கே.பெரியசாமி அவர்கள் சொன்னதை இன்று  நிகழ்வாக பார்க்க முடிகிறது.

பங்குச் சந்தைதான் அரசியலைத் தீர்மானிக்கும் ஆகப்பெரும் சக்தி என லெனின் சொன்னது எவ்வளவு பொருத்தமானது.

No comments: