Sunday, June 03, 2018

கட்சிகள் இலவசங்கள் மூலம் சமூகத்தை சீரழித்துவிட்டன.

கட்சிகள் இலவசங்கள் மூலம் சமூகத்தை சீரழித்துவிட்டன.

இலவசமாக பொருட்களை பெறுவது பிச்சையெடுப்பதற்கு சமம்.

இதுபோன்ற வசனங்கள் நீண்டகாலமாக பல்வேறு இடங்களில் பல்வேறு ஆட்களால் சொல்லப்பட்டு வருகிறது.

உண்மையில் இலவசங்கள் தவறா…?

தவறே இல்லை. அவை சமூகநீதியையும், சமூக சமத்துவத்தையும் நிலைநாட்டும் மற்றுமொரு வழிமுறையே.

ஏழை பணக்காரன் வேறுபாடின்றி இன்று எல்லோர் வீடுகளிலும் "TV, Mixi, Grinder, fan, Cycle, Gas stove என எல்லாம் உள்ளது. இவை பெரும்பான்மை மக்களுக்கு அரசாங்கத்தால் இலவசமாக தரப்பட்டவைகளே.

ஒரு பத்து, பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கி பயணித்துப்பாருங்கள், மேற்கண்ட பொருட்கள் யார் வீட்டில் இருந்தது என்றும் அவர்கள் இதுபோன்ற பொருட்கள் இல்லாதவர்களை எப்படி பார்த்தார்கள் என்று.

பொருட்கள் வெறும் அஃறினை பண்டங்கள் அல்ல, அவை சமூக உயர்நிலையை காட்டும் குறியீடுகள்.

இன்றும் கூட Motor bike, Car போன்றவைகளை வைத்திருப்பது சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களின் அடையாளமாக கொள்ளப்படுகிறது.

ஒரு மனிதன் மற்ற மனிதனிடமிருந்து தன்னை உயர்வானவனாக காட்டிக்கொள்ள இந்த பொருட்கள் காரணமாக இருப்பதால், இவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்வதன் மூலம் போலியான சமூக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யலாம்.

இது உங்களுக்கு ஏற்றுக்கொள்ள இயலாத காரணமாக தோன்றலாம்.

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால் TV பார்க்க பக்கத்து வீட்டிற்கு சென்று அவர்களால் வெளியே விரட்டப்பட்டு கதவடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட குழந்தைகளை கேட்டுப்பாருங்கள், இதன் சமூக நீதி விளங்கும்.

தங்களுக்கு மட்டுமே கிடைத்து, தங்களின் சமூக நிலையை மற்றவர்களை விட உயர்வாக காட்டிய பொருட்கள் இன்று அனைவருக்கும் கிடைத்து அனைவரையும் தங்களுக்கு சமமாக மாற்றிவிட்டதை ஏற்றுக்கொள்ள இயலாத கூட்டம் தான் இலவசங்கள் தவறு என்றும், இலவசங்களால் சமூகம் சீரழிந்துவிட்டது என்றும் பதறுகிறது.

TV Fan மட்டுமல்ல, அரசால் முடிந்தால் Car Bike போன்றவைகளை கூட இலவசமாக தரலாம். Car, Bike போன்றவைகளை வைத்துக்கொண்டு "பந்தா" செய்யும் ஆட்களின் ஆணவம் அடங்கட்டுமே.

இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை கூறும் தகுதி அவைகளை விலை கொடுத்த வாங்க இயலாத சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு மட்டுமே உள்ளது.

புளி ஏப்பம் விடுபவர்களுக்கு பசி ஏப்பத்தின் வலி புரியாது

No comments: