Thursday, June 07, 2018

திரையில் நடிக்கத்தெரியாத சுமாரான நடிகர் சிவகுமார்

நடிகர் ஆனந்த்பாபு என்று ஒருத்தர் இருந்தார். நன்றாக டான்ஸ் ஆடுவார் என்று எல்லோரும் நம்பினார்கள். அவரும் நம்பினார். என்ன ப்ரச்னை என்றால் அவர் ஆடும் பாடல் முடிவடைந்த அடுத்த நிமிடம் உலகம் அழிந்துவிடும் என்றும் நம்பினார். அதனால் ஒரு ஐந்து நிமிட சினிமா பாடலுக்குள் பரதநாட்டியம், குச்சிபுடி, சல்சா, ஸ்விங், வால்ட்ஸ், பெல்லி டான்ஸ் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்து வெறி கொண்டு ஆடுவார். கொஞ்ச நாளிலேயே சலிப்பாகி ஆனந்த பாபு டான்ஸ் என்றால் தியேட்டரில் எல்லாரும் தம்மடிக்க போய்விட்டார்கள்.
+++
சாம்பார் என்ற பட்டப்பெயரை மயிரிழையில் ஜெமினி வாங்கிக்கொண்டதால் தனக்கென்று பட்டப்பெயர் கிடைக்காமல் தப்பித்தவர் திரையில் நடிக்கத்தெரியாத சுமாரான நடிகரான சிவகுமார். அவருக்கு திடீரென ஒருநாள் தனது மனப்பாட திறமையை இந்த சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்ற ஞானம் வந்தது. உடனே கொங்கு பகுதியில் எவனோ தனக்கு வேண்டிய கல்வித்தந்தையை பிராண்டி அவர்கள் கல்லூரியில் எல்லா மாணவர்களையும் 3 நாட்கள் விடுமுறை தருகிறேன் என்று ஆசை காட்டி வலுக்கட்டாயமாக உட்கார வைத்து ராமாயணம், மகாபாரதம் ஒப்பிக்கிறேன் பேர்வழி என்று மணிக்கணக்காய் இம்சையை கூட்ட, மரண பீதி என்றால் என்னவென்று கண்டார்கள் மாணவர்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு சிவகுமார் என்ற பெயரை எதேச்சையாக கேட்டாலே வாந்தி பேதி தலைசுற்றல் போன்ற பத்து வித ப்ராப்ளம்ஸ்னால மாணவர்கள் அவதிப்பட்டதும்தான் எதற்கு லீவு என்பதே அவர்களுக்கு புரிந்தது.
+++
இன்று சிவகுமார் கொடுத்த ஒரு அஞ்சலி செய்தியை பார்த்தேன். அதைக் கூட லோக்கலாக நாலு வார்த்தையில் சொல்ல முடியாமல் சாக்ரடீஸ், கிரேக்கம், அய்ரோப்பா, ஆசியா எல்லாம் சுற்றி வரும் அளவு அவருக்கு நிலைமை முத்திப்போய்விட்டது.
+++
நடிகர் சிவகுமாரும் அரசியல்வாதி வைகோ போலவே கண்டதையும் படித்து பண்டிதராகியிருக்கிறார். தன்னை இந்த சமூகம் பண்டிதர் என்று சீக்கிரமே நம்ப வேண்டுமே என்ற பதைபதைப்பு எந்நேரமும் எரிமலையாக் கனன்று கொன்று இருக்கிறது. தனக்கு முன் மைக் நீட்டப்பட்டாலோ, கருத்து சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டாலோ உடனே வைகோ போலவே அதௌன கீர்த்தனாம்பரத்திலே என்று ஆரம்பித்துவிடுகிறார்.
+++
அவர்கள் அப்படித்தான். மக்கள்தான் தம் அடிக்கப் பழக வேண்டும். அப்படியே அவர்கள் முன் மைக்கை நீட்டுபவர்களையும்.

No comments: