Monday, January 22, 2018

ஆண்டாளைப் பற்றிய சரித்திர க் குறிப்புகள்

ஆண்டாளைப் பற்றிய சரித்திர க் குறிப்புகள் மிகச்சிலவே. குரு பரம்பரை அவர், கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் எடுத்து 'கோதை' எனப் பெயரிட்டு வளர்த்தார்.
அவர் பிறந்தது கி.பி. 885 நவம்பர் 25 அல்லது 886 டிசம்பர் 24.( 'வெள்ளை யெழுந்து வியாழம் உறங்கிற்று' ) என்கிற வான சாஸ்திரக் குறிப்பிலிருந்து திரு.மு.ராகவையங்கார் அவர்கள் ஆராய்ச்சி செய்து இந்தத் தேதிகளாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.
அவருடைய தந்தை தாய் யாரென்று தெரியவில்லை. அந்தக் காலங்களின் தெய்வீகம் எதும் கலக்காமல் இதை ஆராய்ந்தால் துளசித்தோட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட குழந்தை என்பது தெரிகிறது. பெரும்புலவரான பெரியாழ்வாரிடம் நிச்சயம் அவர் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் பயின்றிருக்க வேண்டும். பயின்று அதில் தந்தையின் பக்தி ரசம் மிகுந்த பாடல்களில் திளைத்து கண்ணனின் மேல் ஆசை வந்திருக்க வேண்டும். கடவுளுக்காக தன்னை அர்ப்பணித்த பெண்கள் சரித்திரத்தில் பலர் உள்ளனர்.
மீராபாய்,அக்கமகாதேவி,காரைக்கால் அம்மையார் போன்ற பல உதாரணங்கள் உண்டு. ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிகொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்ற திருப்பாவை. பாவை என்பது ஒரு நோன்பு. இங்கே அந்த நோன்புக்கடவுளை அடைவதற்கு உடலை வருத்தி அதிகாலை எழுந்து பலவித விரதங்கள் அனுசரித்து ஒருவிதமான தவம்போல ஒரு மாதம் இருப்பது.
திருப்பாவை நோன்பு,"மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் தீக்குறளை சென்றோதோம்"
என்று கட்டுப்பாடாக இருக்கும் நோன்பு. அதற்காக தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.
"ஆழியுள் புக்கு முகுந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியம் தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர
மழைபோல் வாழ உலகினில் பெய்திடாய்"
என்பதில் மழையின் மின்னல் இடி முழக்கங்களை திருமாலின் ஆயுத முழக்கங்களுக்கு ஒப்பிடும் கவிதை நயத்துடன் விஞ்ஞானப்படி மழை பெய்வதன் காரணம். சமுத்திர நீர் மேலே சென்று உயர்ந்து மேகங்களாக மாறி மீண்டும் பெய்யும் உண்மை, அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் தெரிந்திருந்தது விந்தையே.
காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று. அதை எழுதிய இளம் பெண் நூற்றாண்டுகள் கடந்தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறாள்.
-சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
சுஜாதா
கோகுலம் கதிர்,ஜனவரி 1998

No comments: