Wednesday, January 03, 2018

பெரியார் அரசியல்

பெரியார் சொல்கிறார், "எனக்கும் என் கொள்கைக்கும் யார் நெருக்கமாக , யார் ஒத்து வருகிறார்களோ அவர்களை ஆதரிப்பேன். அவர்களை வைத்து என் கொள்கைகளை ஆனவரை நிறைவேற்றிக் கொள்ளப் பார்ப்பேன். ஒத்துவரவில்லை அந்த ஆட்சியை அகற்ற தெருவில் இறங்கி போராடுவேன்." இதுதான் பெரியார் அரசியல். ஜனநாயகத்தை, அதன் எல்லைகளை எவ்வளவு அழகாகப் புரிந்து வைத்திருக்கிறார். பெரியாரின் அத்தனை ஆண்டுகால அரசியலையும் பார்த்தீர்கள் என்றால் அவர் எந்த காலகட்டத்திலுமே ஓட்டரசியல் கட்சிகளை, "எல்லாமே ஒன்னுதான். யாரையுமே நம்பாதே. நான் மட்டும்தான் நல்லவன்," என 'நடுநிலை' வகிக்கிறேன் என்கிற பெயரில் சொன்னதில்லை. ஏனெனில் அதனால் மக்களுக்கு யாதொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதை அறிந்திருந்ததால், ஓட்டுக்கட்சிகளின் எல்லைகள் புரிந்தாலும் எப்போதுமே ஏதாவது ஒரு பக்கம் தன் ஆதரவை தந்தபடியேதான் இருந்திருக்கிறார். நேரம் வரும்போது குத்தியபடியேதான் இருந்திருக்கிறார்.
ஆனால் இன்று பெரியாரியர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் பலரும் மக்களுக்கு எது நல்லது, மக்களுக்கு எது பரவாயில்லை என ஆராய்ந்து சார்புநிலை எடுக்காமல், தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்.
என்னிடம் பலர் கேட்பார்கள். நீங்கள் திமுக சார்பாக எழுதாமல் நடுநிலையாக எழுதினால் இன்னும் நல்ல பேர் கிடைக்குமே. உங்கள் அரசியலை நிலைப்பாட்டைத் தாண்டி உங்கள் எழுத்தின்மேல் பலருக்கு மரியாதையுள்ளது என்று. நானும் ஒரு பதிவில்/ஒரு கட்டுரையில் அதிமுக/திமுகவை மாறிமாறி திட்டலாம்தான். "நான் நடுநிலை, நான் நடுநிலை," எனக் காட்டிக்கொள்ளலாம்தான். "அசோக் நடுநிலையா எழுதுவாருப்பா," என்கிற பெயர் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றால் ஜனநாயகத்தில் நடுநிலையை வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது. இங்கே ஒரு பக்க சார்பு எடுக்காமல் நடுநிலையாக இருப்பதைப் போன்ற அயோக்கியத்தனம், மக்கள் விரோதம் வேறொன்றும் இல்லை.
ஆனால் எவ்வளவு சொன்னாலும் so called பெரியாரியர்கள், அம்பேத்கரியர்கள் காதிலேயே வாங்குவதில்லை. "அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்," என கூவிவிட்டு சென்றுவிடுவார்கள். ஏனெனில் இங்கே மக்களுக்கு நல்லது நினைப்பதைவிட நல்லவனாய் காட்டிக்கொள்ளுதல் முக்கியமாகிவிட்டது.

No comments: