Friday, May 11, 2018

மே மாதம் வந்தாலே

மே மாதம் வந்தாலே திமுக காரர்கள் பதற ஆரம்பித்து விடுவர். அவர்களின் துரோகத்தை நினைத்து பயப்படுகின்றனர். அதற்காக அவதூறுகளை பரப்புகின்றனர் என்று ஒரு எல்லாம் தெரிந்த ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு சுற்றுகிறது. நாங்கள் எதற்கு பதறறமடைய வேண்டும். நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஈழத்திற்காகவும் ஈழத்தமிழர்களுக்காகவும் போராடியவர் கலைஞர். கடைசி கட்ட போர் நிலவரங்கள் எல்லார் கையையும் மீறிய நிலை. அப்போதும் மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று இருந்தவர். எல்லார் முயற்சியையும் பாழாக்கி போரை நடத்தி ஒன்றரை லட்சம் மக்கள் சாவிற்கு காரணமாக இருந்தவர்கள் யாரென்பது உலகிற்கு தெரியும்.
விசயம் தெரிந்தவர்களுக்கு உண்மை தெரியும். சுபவீ அவர்கள் ஒரு புத்தகம் வெளியிட்டு பல காணொளிகளை வெளியிட்டு திமுக தரப்பு நியாயங்களை எடுத்து வைத்துள்ளார். இன்று ஈழப்போரில் ஈடுபட்டவர்கள் முன்னாள் விடுதலைப்புலிகள் கூட உண்மையை பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால் ஆஃபாயில்கள் மட்டும்தான் இன்றும் உண்மை தெரியாமல் திமுக வெறுப்பு என்பதை மட்டும் லட்சியமாக கொண்டு சுற்றி கொண்டிருக்கின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தி இந்துவிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கும் செய்தி இன்னும் சந்தேகம் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல விளக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதை படித்து பார்க்கவும்.
கேள்வி: விடுதலைப்புலிகள் குறித்து அந்த இயக்கத்தில் இருந்தவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ராஜீவ் கொலையான சம்பவத்தில், நூலிழையில் உயிர் பிழைத்தவர் நீங்கள். விடுதலைப்புலிகள் என்ன செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
பதில்: ஒன்றை அழுத்தமாகச் சொல்லிவிடுகிறேன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தவறு பற்றி முழு உண்மை தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் மொத்தமே மூன்று பேர்தான். கலைஞர், முரசொலி மாறன், நான். இதுபற்றி கலைஞரே எழுதிய கட்டுரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் முரசொலியில் வந்துள்ளது. பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தன்னையும், முரசொலி மாறனையும் கடைசிக் கட்டத்தில் அழைத்துப் பேசியதாகவும், அப்போது, “விடுதலைப்புலிகள் என்ன கோரிக்கை வைத்திருக்கிறார்களோ அதைப் பெற்றுத்தருவதற்காக சகல அதிகாரத்தையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன். இந்தியா முழு வாக்குறுதி தருகிறது” என்று ராஜீவ் சொன்னதாகவும் கலைஞர் எழுதியிருக்கிறார். அது உண்மைதான். ஏனென்றால், இதே விஷயத்தை ராஜீவ் என்னிடமும் சொல்லியிருக்கிறார். இந்த விவரங்கள் எங்கள் கூட்டணியில் உள்ள ஒரு தலைவருக்கும் தெரிந்திருக்கலாம். முரசொலி மாறன் இப்போது இல்லை. நான் கேட்டவன் மட்டுமே. கலைஞர்தான் கலந்துகொண்டவர். “கலைஞரிடம் ராஜீவ் சொன்னார். அதை விடுதலைப்புலிகளிடம் சொல்லச் சொன்னார். கலைஞர் சொன்னாரா? அதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா? ஏற்றுக்கொண்ட பிறகுதான் ராஜீவைத் திட்டமிட்டுக் கொன்றார்களா?” என்ற சந்தேகம் நீடிக்கிறது. இதைப் போக்க வேண்டிய பொறுப்பு கலைஞருக்கு உண்டு. அவர் சொன்னால்தான் 25 ஆண்டுகாலக் குழப்பத்தில் தெளிவு ஏற்படும். ஆனால், அவர் சொல்லத் தயங்குகிறார். இலங்கை மக்கள் மீது தமிழக மக்களுக்கும், உலக மக்களுக்கும் இருக்கிற கொஞ்ச நஞ்ச அனுதாபமும் இத்தகைய செய்திகளை நாம் வெளியிடுவதால் பாழ்பட்டுவிடுமோ என்று அவர் அஞ்சுகிறார். “பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதைப் பற்றித்தான் இப்போது யோசிக்க வேண்டும்”என்று ரொம்பவே உருக்கமாக என்னிடம் சொன்னார். ஆனாலும், அவர் உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

No comments: