Saturday, May 12, 2018

அமேரிக்க வாழ்தமிழர்களும் ஆர்கேநகர் வாக்கார்களும்

அமேரிக்க வாழ்தமிழர்களும் ஆர்கேநகர் வாக்கார்களும்
சசிகலா ஏற்படுத்திய அதிமுக அரசு கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம், வழிகாட்டல் என எல்லாமுமாக இருந்து நடத்திய ”மெரினா புரட்சிக்காக” (?!?!) குடும்பம் குடும்பமாக வார இறுதியில் picnic/போராட்டம் நடத்தி facebookஇல் பொங்கோ பொங்கென்று பொங்கிய அமேரிக்க வாழ் தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் பெண்பத்திரிக்கையாளர்கள் அனைவரும் படுத்து தான் சம்பாதிக்கிறார்கள் என்று எழுதிய பதிவர் அதே அமேரிக்காவில் தங்கள் மத்தியில் வாழ்ந்தும் அவருக்கு எதிராக முகநூல் கண்டனம் தெரிவிப்பதைக்கூட கவனமாய் தவிர்க்கிறார்கள். ஆனால் அந்த ஆபாச பதிவை பகிர்ந்த எஸ் வி சேகரை எதிர்த்து நீதிமன்றம்வரை சென்று வழக்கு நடத்திக்கொண்டிருக்கும் ஏழை இளம் தமிழ் பத்திரிக்கையாளர்கள் பலருக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். குறிப்பாக இந்த செயல்களால் அவர்களின் இப்போதைய வேலை மட்டுமல்ல எதிர்கால வேலைகளும் மோசமாக பாதிக்கும். இருந்தும் செய்கிறார்கள். வெளிநாடு வாழ் தமிழர்களின் அறச்சீற்றத்தின் ஆழ அகலத்துக்கு இது ஒரு உதாரணம்.
அதைவிட கொடுமை தமிழ்நாட்டின் ஏழை எளியமாணவர்களின் எதிர்கால மருத்துவக்கனவை இல்லாமல் செய்து, அனிதாக்களின் அகாலமரணத்துக்கு காரணமான முழுமுதல் குற்றவாளி, அதிமுக தலைவி ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக எதிர்த்த நீட்டை ஒப்புக்கொண்டுவந்த தமிழ்நாட்டின் முதலாவது அமைச்சர், எர்ணாகுளம் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது என்று வாய்க்கொழுப்போடு எகத்தாளம் பேசியவர், மத்திய ஆர்எஸ்எஸ் பாஜகவின் எடுபிடியும் ஏவலாளுமான அரசியல் வியாபாரி, கட்சிமாறி தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கூப்பிட்டு சிறப்பு செய்வதும் இதே அமேரிக்க பேரறிஞர் கும்பல் தான். கும்பல் என்கிற வார்த்தையை அதன் பொருள் புரிந்தே இங்கே பயன்படுத்துகிறேன்.
சில எதிர்ப்புக்குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்தாலும் மெரினா பொய்புரட்சியை காரணம் காட்டி குடும்பரீதியாக வார இறுதி சுற்றுலா எதிர்ப்பு காட்டிய அளவோடு ஒப்பிட இப்போதைய எதிர்ப்பு ஒன்றுமே இல்லை. அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. இந்த கேவலத்தை அரங்கேற்றும் அமேரிக்க வாழ் தமிழர்களின் அமைப்பை எதிர்த்து லேசாக முணுமுணுப்பவர்களுக்கு எதிராக புதுவித வியாக்கியானம் ஒன்றை இவர்கள் முன்வைக்கிறார்கள். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வருவதை நாங்களும் விரும்பவில்லை. ஆனால் அதற்காக அவரை அழைத்து சிறப்பு செய்யும் அமேரிக்கவாழ் தமிழ் அமைப்புகளை எதிர்க்கக்கூடாது என்கிறார்கள். எப்பேர்கொத்த வாதம்?!?!? இதெல்லாம் சராசரி மனிதர் புரிந்துகொள்ள முடியாத தனித்துவமான அரசியல் சந்தர்ப்பவாதங்களிலேயே ஆனப்பெரிய சந்தர்ப்பவாதம்.
இது தான் அமெரிக்க வாழ் தமிழர்களின் அரசியல், அறச்சீற்றத்தின் லெட்செணம். இவர்களுக்கும் 20 ரூபாய் நோட்டுக்கு டிடிவி தினகரனுக்கு ஓட்டுபோட்ட ஆர் கே நகர் வாக்காளர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. குறைந்தது ஆர் கே நகர் வாக்காளர்கள் ஏழ்மை என்றொரு சாக்கு சொல்லிக்கொள்ள முடியும். மாஃபா பாண்டியராஜனையெல்லாம் கூப்பிட்டு தம் மேடையேற்றி அங்கீகரித்து பாராட்டி மகிழும் அமேரிக்கவாழ் தமிழர்களுக்கும் தமிழறிஞர் கும்பலுக்கும் அப்படியான எந்த சாக்குபோக்கும் இல்லை. அன்றன்றைய அரசுகளை அண்டிப்பிழைப்பது என்கிற சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவங்கள் இவர்கள். நாளை ரஜினியையும் கமலையும் மட்டுமல்ல ஆர் கே நகர் 20 ரூபாய் நோட்டு புகழ் டி டி வி தினகரனைக்கூட கூப்பிட்டு சிறப்பு செய்வார்கள். அதற்கும் ஒரு வியாக்கியானம் சொல்வார்கள். அறிஞர்களல்லவா?

No comments: