Tuesday, February 05, 2019

கிராமக் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தற்குறிகளின் ஹம்பக்

இந்தியர்கள் கிராமத்துப் பெருமை பேசும்போதெல்லாம் அல்லது கலாச்சாரப் பெருமை பேசும்போதெல்லாம் முட்டாள்தனமான ஒரு பெருமிதம் ஊறுகிற காலம் இருந்தது. ஆனால், நம்முடைய கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டிய அளவிற்கு சனாதன அமைப்பிற்குள் அழுகி மட்கிப் போயிருக்கிறது.
கிராமக் கலாச்சாரம் பண்பாடு போன்ற வறட்டுக் கூச்சல்கள், இரண்டொரு நாட்கள் விடுமுறைக்கு வருகிற இணைய தலைமுறைக்கு வேண்டுமானால் நிலைத்தகவல் விருப்பங்களுக்குப் பயன்படலாம். மற்றபடி நமது இந்தியக் கிராமக் கட்டமைப்பு உடைந்து பன்னாட்டு வணிகச் சூழலின் ஆக்டோபஸ் பிடிக்குள் சிக்குவது ஒரு வகையில் சனாதன இருக்கத்தை தளர்த்தும். ஆனால் அங்கு உருவாகும் வர்க்கச் சிக்கலை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கலாம்.
கிராம அமைப்பும் நில உடமைச் சமூகமும் இலவசமாகக் கிடைக்கிற சாதிப் பெருமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்க விரும்பாது. அறிவாலும், உழைப்பாலும் தகுதிகளை உயர்த்திக் கொள்ளாத தற்குறிகளுக்குக் கிடைத்த அற்புதப் பரிசு பிறவியில் கிடைக்கிற உயர் சாதிக் குறியீடு.
கிராமங்கள் அழிந்து முற்றிலும் நீர்த்துப் போகிற போது சாதிக்கான வெளி சவாலுக்கு ஆளாகும், பக்கவாட்டில் பட்டியல் இனங்கள், நாடார் சமூகத்தைப் போலவோ தேவேந்திரர்களைப் போலவோ சமூகப் பொருளாதாரத் தளங்களை உடைத்து வெளியேறி தங்கள் அடையாளங்களை மறுதலித்து அடுத்த தளங்களை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
கிராமக் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தற்குறிகளின் ஹம்பக்.

No comments: