Wednesday, September 04, 2019

80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு

80 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது.

அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் பி. ராமராய நிங்கர் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பார்ப்பனரல்லதோர் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர்.

மாநாட்டுக்கு அவரை அழைத்தப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

 முதலவருக்கு சமஸ்கிருதம் தெரியாதே என்ற எண்ணத்தில், பனகல் அரசரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக சமஸ்கிருத சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

 எல்லோரும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள். அமைதியாக அமர்ந்திருக்கிறார் பனகல் அரசர்.

‘நிறைவாக இப்போது முதல்வர் பேசுவார் என்று அறிவிக்கப்படுகிறது’ பனகல் அரசர் தனது பேச்சை ஆரம்பிக்கிறார். தமிழில் அல்ல… தெளிவான சமஸ்கிருதத்தில்.

அதுவரை பேசியவர்களைவிடச் சிறப்பாக, அவர்களுக்கு பதில் சொல்வது போல், இலக்கியத் தரம் வாய்ந்த சொற்பொழிவை சமஸ்கிருதத்தில் ஆற்றி முடிக்கிறார். முதல்வர் சமஸ்கிருதத்தில் எம்.ஏ., படித்தவர் என்ற தகவல் அவர்களுக்கு தெரியாததால் , அவமானப்படுத்த நினைத்தவர்கள், அவமானப்பட்டு போகிறார்கள்.

அந்த மாநாடு முடிந்த சில நாட்களுக்குள் ஓர் உத்தரவை பிறப்பிக்கிறார் முதல்வர். அதுவரை மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் பாடமாக இருந்த சமஸ்கிருதத்தை நீக்கும் உத்தரவு அது.

‘ஆங்கிலத்தில் படிக்கப்போகும் மருத்துவக் கல்விக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்ற கேள்வி முதல்வருக்கும் எழுந்திருக்கிறது.

‘சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் அதாவது பார்ப்பனர்கள் மட்டும்தான் மருத்துவக் கல்வி படிக்கவேண்டும். மற்றவர்கள் படிக்கக்கூடாது ’ என்ற ‘பரந்த’ உணர்வே அதற்கு காரணம் என்பதை உணர்ந்தார் முதல்வர்.

அதனால் சமஸ்கிருதத்தை நுழைவுத் தேர்வில் இருந்து நீக்குகிறார்.

முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு வருகிறது.
மருத்துவத் துறையில் தகுதி, திறமை போய்விடும் என்கிற கூப்பாடு எழுகிறது.
அதை புறம் தள்ளுகிறார் முதல்வர்.

அதன் பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்த்துவர்கள் என்று நிறையபேர் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள்.

இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்களை கொண்ட ஊர் என்ற பெயரை பெற்றிருக்கிறது சென்னை.

வெளிநாட்டினர் கூட இங்கு வந்து இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு போகும் நிலைமை உருவாகியிருக்கிறது.

80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு – செரியன், சாலமன் விக்டர் போன்ற உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது என்றால் அது அதிகபட்சமான வார்த்தையாகாது

No comments: