Wednesday, September 04, 2019

கல்வி சேவைக்கு பரிசு..மனித மலம்வீச்சு..!

இந்திய வரலாறு மறந்த முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த ஜனவரி 3-ம் நாளே ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட வேண்டும்.

 கல்வியின் இருண்ட  காலம்…!

இந்தியாவின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், அதுவும் கல்வி தொடர்பான தகவல்களைப்  படித்தால்  கொஞசம் அச்சமாகவும் வேதனையைத் தருவதாகவும்  உள்ளது. 1800 களில் பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி கொடுக்கப்பட்டது. அப்போது ஆண்ட பிரிட்டிஷ்காரர்களும், உயர்தட்டு மக்களுக்கே கல்வி கொடுக்க திட்டமிட்டனர். இந்த காலகட்டத்தில் இந்திய பெண்களின், சமூகத்தை உய்விக்கப் பிறந்தவர்கள்தான் ஜோதிராவ் கோவிந்த புலே மற்றும் காண்டோஜி சாவித்திரி பாய் புலே என்ற தம்பதியர் இருவரும்.

சாவித்ரிபாய் புலே  யார் ?

இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் போராளி என்றுதான் கூறவேண்டும். ஏனெனில்,முறையாக ஆசிரியர் தினம் என்று சாவித்திரிபாய் பிறந்த தினத்தைத்தான் கொண்டாட வேண்டும். ஆனால், சமூக சீர் திருத்தவாதியான சாவித்திரிபாய் பற்றி எந்த பாட புத்தகத்திலும் இல்லை. இது ஒரு வரலாற்றுப் பிழையே.  சாவித்திரிபாய் புலே ,  1831, ஜனவரி மாதம் 3ம் நாள், மகாராஷ்ட்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில், நைகோன் (Naigon ) என்ற கிராமத்தில் பணக்கார விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை, கான்டோஜி நைவஸ்  பட்டேல், அன்னை: லட்சுமி பாய். தந்தை கிராமத்து தலைவராக இருந்தவர்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். ..!

இந்திய வரலாற்றில் பெண்கல்விக்காக  முதல் பள்ளி அமைத்தவர், சாதியத்தை தீயிட்டுக் கொளுத்திய, பெண்ணுரிமைக்காக  குரல் கொடுத்த சமூகப் போராளியும் கூட. அரசியல் கவிதை எழுதிய  புரடசிப்  பெண்ணும் ஆவார்.. மராட்டிய மண்ணின் முதல் பெண் கவிஞரும் இவரே. 19ம் நூற்றான்டின் அனைத்து சமூகத்தடைகளையும் உடைத்து தூக்கி எறிந்தவர். டெல்லி, பல்கலைக்கழக நிறுவனத்தின், உலகளாவிய ஆய்வுகள் பற்றி ( Global Studies at University Institute in New Delhi,India.) ஆராய்ந்து பணிபுரியும் .பேரா. டாம் உல்ப் (Tom Ulf) என்பவர் , ஆயிகோஸ் என்ற உலக பத்திரிகையில் ( published in ‘Oikos Worldviews Journal’ (2008), சாவித்திரிபாய் பற்றி உயர்வாக குறிப்பிட்டுள்ளார். அவர் செக்கோஸ்லோவாகியா நாட்டின் ஜான் கொமேனியஸ் (Jan Comenius (1592-1670), என்பவர் ஐரோப்பாவின், நவீன  கல்வியின் தந்தை என்றும்,. சாவித்திரிபாய் இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இருவரையும் உலக அளவில் கல்விக்காக ஒப்பிட்டு எழுதி இருக்கிறார் என்றால், சாவித்திரி என்ற பெண்மை கல்விக்கு அளித்துள்ள சாதனையை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

சமூக சீர்திருத்த வாதி..!

சாவித்திரியின் பெற்றோர் அக்கால வழக்கப்படி,. அவருக்கு 9  வயதாகும்போது,1840ல்.குழந்தை திருமணம் செய்து வைத்தனர். அந்த ஊருக்கு அருகில் உள்ள 13 வயது நிரம்பிய ஜோதிராவ் புலே என்னும் பாலகனுக்கு சாவித்திரியை   மணம் முடித்தனர். சாவித்திரிபாய் புலேவுக்கு ஜோதிராவ் புலே  4 ஆண்டுகள் கல்வி சொல்லிக் கொடுத்தார். சாவித்திரிபாய்  கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்,கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கும்  மறுக்கப்பட்ட கல்வியை, ஜோதிராவ் மற்றும் சாவித்திரி இருவரும்  பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் கல்வி  தருவோம் என்று கூறினர், 1847 ல் முதல் பள்ளியை தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக  துவங்கினார்கள். பின்னர் 1848,ல், இந்திய வரலாற்றிலேயே, முதன் முறையாக,  முதல் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை, புனேயிலுள்ள பீடே வாடு என்ற  இடத்தில், 9 பெண் குழந்தைகளுடன், தொடங்கினர்.  அதில் சாவித்திரிபாய்தான் பள்ளியில் பொறுப்பு ஏற்று, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக ஆனார்.  பின் 1849ல், ஒரு பள்ளியை ஜோதிராவ் மற்றும் சாவித்திரிபாய் துவங்கினார்கள். அதுவே பெரியவர்களுக்கான  பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், என அனைத்து சாதியினருக்கும் என உருவாக்கப்பட்ட  முதல் பள்ளி, இந்தியாவிலேயே இதுதான்.

கல்வி சேவைக்கு பரிசு..மனித மலம்வீச்சு..!

சாவித்த்ரி பாய் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, விதவைகளுக்கு கல்வி போதித்ததால், இந்து சனாதனவாதிகளுக்கு கோபம் வந்தது. சாவித்திரி பாய் பள்ளி செல்லும்போது, இந்த ரவுடிக் கும்பல் அவர்மேல், கற்கள், சாணம், மனித ,மலம் எல்லாவற்றையும் வீசி எறிந்தது கலாட்டா செய்தனர்.  சாவித்திரிபாய்  வீட்டுக்கு வந்து கணவர் ஜோதிராவ் புலேவிடம் , மனித மலம் வீசியது பற்றி சொன்ன போது , ஜோதிராவ் ” கல்வி ஒன்றுதான் மனிதர்களின் வாழ்க்கையைப்  பு ரட்டிப்போடும்  வல்லமை படைத்தது.: கல்வி மட்டுமே சமூக மாற்றத்தை செய்ய முடியும். ஆனால், இந்த சமூகத்தில், நாம் இருவரும் இவர்களை எதிர்க்க முடியாது. எனவே நீ பள்ளி செல்லும்போது பையில் வேறொரு  புடவை எடுத்து சென்று, அங்கு குளித்து உடை மாற்றிக் கொள்”  என்றார். இதுதான் பெண்கல்வியை முனைப்பாக கொண்டு சென்ற முதல் பெண் ஆசிரியருக்கு, இந்தியாவில் பரம்பரியத்தைக் காப்பாற்றும் கும்பலால்  கிடைத்த பரிசு என்றே நாம் கொள்ள வேண்டும்.

அந்த கால பிரிட்டிஷ் அரசின் பாராட்டு

சாவித்திரி பாய் புலே, ஜோதிராவ் புலே இருவரும் மகாராஷ்டிரத்தில் 9 இடங்களில் அனைத்து சாதியினருக்கும்,  விதவைகளுக்கும், தவறான உற்வின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் என எல்லோருக்கும் கல்வி கொடுக்க  பள்ளியை   துவங்கினர். இதில் 150 பெண்களும், 100 ஆண்களும் படித்தனர். இந்த பள்ளிகள் அரசு  பள்ளியைவிட சிறப்பாக செயல்பட்டன. இதனால்,    1852, நவம்பர் 14ல், பிரிட்டிஷ் அரசால் இவர்கள் இருவரும் சிறந்த ஆசிரியர்கள்  என்ற பாராட்டும்பரிசும்  பெற்றனர்.

சமூக நீதி போராளி..

தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்று அன்று சமூகம் ஒதுக்கிய  மக்கள் தீண்டத்தகாதவர் என கூறப்பட்டவர்கள் இவர்களுக்கு பொதுக் கிணற்றிலிருந்து நீர் தர ஊர் மக்களும்  மறுத்தனர்.அப்படி  தண்ணீர் கொடுக்க மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தார்  சாவித்திரிபாய் புலே. . பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை இந்தியாவில் அப்போது மோசமாக பின்பற்றப்பட்டது. ; அந்த மழிக்கும் பணியை செய்யும் நாவிதர் மக்களை வைத்தே,சாவித்திரிபாய் இனி விதவைப் பெண்களுக்கு, மழிக்கும் பணியை  நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் போராட்டம்  நடத்தினார்.   விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்.

மராட்டிய முதல் பெண் கவிஞர்& பெண்ணிய  காப்பாளர் 

சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன1854களில்.  அவரது கவிதைத் தொகுப்பான “காவிய மலர்கள்” பிரிட்டிஷ் அரசின் அங்கீகாரத்துடன் வெளியானது. 1852ல்  இவர் தொடங்கி வைத்த ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.1853ம் ஜனவரி 28ம் நாள், குழந்தையிலேயே விதவையானவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற மருத்துவ மனை அமைத்தார்.

மக்கள் பணியில். .இறுதி வாழ்க்கை..

1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான  பல்வேறு  ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த  இவரின் மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிகாவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.

உயிர் காக்க  உயிர் துறந்த தியாகி..

சாவித்திரி பாய் தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து, தனது  அறுபத்தி ஆறு வயதில், மனித  நேயம் காக்க மனித உயிர்கள்  காக்கப்போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு,1897, மார்ச் 10 ம் நாள்  மரணமடைந்தார்  சாவித்திரி பாய் புலே. அந்த சிறுவன் பிழைத்துக்கொண்டான்.  பிளேக் நோய் பரவியபோது ஓடோடி மக்களுக்கு உதவி செய்தார். கடைசியாக ஒருவரை தூக்கிக் கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு, மருத்துவ மனை வாசலிலேயே மயங்கி விழுந்துவிட்டார். சாவித்திரி பாய் மருத்துவமனையில் சேர்த்தவர் பிழைத்துவிட்டார். அவர் யார் தெரியுமா ? பெண் கல்விக்காக பள்ளிக்கூடம் துவக்கியோர்களை எதிர்த்து கலவரம் செய்த கங்காராம். கங்காராம் பிழைத்த பின்னர், தான் சாவித்திரி பாயால் காப்பாற்றபட்டது தெரிந்து, அவரிடம் நன்றி சொல்ல ஓடினார். அங்கே வெள்ளைத்  துணியால் போர்த்தப் பட்டிருந்த   சாவித்திரி பாயின் உடலைத் துணியை விலக்கிக்  காட்டினார்கள். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு உயிர் துறந்த சாவித்திரி பாயின் உடலைப் பார்த்து, பெண்கல்விக்கு எதிரான கங்காராம் தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பினார்.  கதறினார்.

மத்திய அரசு, சாவித்திப்பாய்; புலேவுக்கு பெருமை செய்யும் விதமாக,1998,ம் ஆண்டு, அவரின் படம் போட்ட அஞ்சல் தலை வெளியிட்டது. மராட்டிய அரசு  ஜனவரி 3ம் நாளை பெண்கள் தினமாக  அனுசரிக்கிறது. அவரின் பெயரில் ஓர் பல்கலைக் கழகமும் இருக்கிறது.

வாழ்வே சேவையாகிப்போன சாவித்த்ரிபாய் புலே யின்

கவிதை கீழே :

போ கல்வி கல்
சொந்தக்காலில் நில், சோராமல் உழை-

ஞானத்தை,செல்வதைச் சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே, போ,

போய் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று, ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக..

No comments: