Wednesday, January 10, 2018

ஆதிக்க வர்க்க திமிர்க்கு தேவதாஸி முறை பெண்களை பலி கொடுத்தது.

கிராமத்து வீட்ல மாக்கான் ,பக்கிரின்னு ரெண்டு பேர் மாடுகளை பார்த்து கொள்ளும் வேலைக்கு வருவாங்க. நான் சொல்வது 99/2000 அந்த வருடங்கள நடந்தவை.. இருவருக்கும் 15 வயதுகுள் தான் இருக்கும்..
காலைல வந்து மாடுகளை குளத்தில் குளிப்பாட்டி தீவனம் வைத்து புல் அறுத்து போட்டு கொட்டகைல மாத்தி கட்டனும். எங்க வீட்ல சாப்ட்டு அங்கிருந்தே ஸ்கூல் போகனும்...சாயந்திரம் வந்து மாட்டுக்கு தீவனம் வத்து வைக்கோல் போட்டு வேற கொட்டகைல மாத்தி கட்டிட்டு..எங்க வீட்லயே டி வி பாப்பாங்க..நைட் சாப்ட்டு வீட்டுக்கு போவாங்க .

மாக்கான் நல்லா சாப்டுவான்.தட்ல சாதம் போட்டா பத்தாது..சில்வர் பேஸின்ல தான் சாதம் போடனும்.. ஒரே முறைல சாதம் போட்றனும்..அம்மா தான் சாதம் போடுவாங்க. பேஸன வச்சுட்டு இந்தாரு.( அம்மாவ அப்டி தான் கூப்டுவான் ) உன் புருஷனுக்கு சோறு போடற மாதிரி போடாத குழம்புக்கு ஒரு முறை ,ரசத்துக்கு ஒரு முறைன்னு ..மொத்தமா கொட்டு அப்டின்னு சொல்வான்..

நான் அம்மாகிட்ட மரியாதையா பேசு மாக்கான்னு சொன்னா...எனக்கு தெரியும் .உன் வேலை பாரு...நீ என்னங்கம்மான்னு கேப்ப . ஆனா எதயாவது எடுத்து குடுன்னு கேட்டா போம்மா உனக்கு வேலை இல்லன்னு போவ. நான் அது எத தேடுதுன்னு கண்ண வச்சே கண்டுபுடிச்சு கேக்றதுக்கு முன்ன எடுத்து தருவேன் .உன்ன விட எனக்கு மரியாதை தெரியும் மூடிகிட்டு போன்னு திட்டுவான்.
சாப்பாட்ட சுவர் பக்கம் திரும்பி உட்கார்ந்து மறச்சு தான் சாப்டுவான். எங்க கண் பட்றுமாம்.நான் தான டா சோறு போடறேன் எனக்கு தெரியாதான்னு அம்மா கேட்டா உன்னால இவ்லோ சோறு திங்க முடியாது. உனக்கு வேலை குறவு வயிறு கொல்லாது ..ஆனா நான் 100 கிலோ மூட்டை ஈசா தூக்குவேன்..எனக்கு இவ்லோ சோறு வேணும்...உன்னால முடிலன்னு உன் வயறு பொறாமை படும்..அதான் மறைச்சு சாப்டறேன் .போய்ட்டே இரு .வேடிக்கை பாக்காதன்னு அம்மாவ தொறத்திடுவான்..

சாயந்திரம் டியூஷனுக்கு அப்பா கூப்டா வர மாட்டான்..அம்மா டியுஷன் போலன்னா சோத்த கொறச்சுடுவேன்னு மிரட்டினா கடனேன்னு வந்து உட்காருவான்..
. ஏன் இது இப்ப ? மாக்கானோட அப்பாவும் என் சித்தப்பாவும் அச்சு அசல் ஒரே மாதிரி இருப்பாங்க..என் தாத்தா தன் மைனர் வேலைக்கு தந்த பலி மாக்கானோட பாட்டி..அவங்க எங்க வீட்ல பண்ணை கூலியா வேலை பார்த்தவங்க.
தேவதாசி முறை என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அதிகம் தஞ்சாவூர், திருவாரூர், நாகைபட்டினம் , ஆச்சாள் புரம் ,பெரம்பூர் பகுதிகளில் தேவதாசி குடும்பத்தினர் அதிகம் வசித்தனர்.
ஏன் தஞ்சை மாவட்டத்தில் அதிகம் என்ற விவாதத்தின் போது .தஞ்சை மாவட்டம் முப்போகம் விளையும் பகுதி.நல்ல விளைச்சல் ,நல்ல காசு, நல்ல உணவு , விவசாய வேலை வருடத்தில் மூன்று மாதம் தான் வேலை இருக்கும் .நிறைய காசும் ஓய்வும்.தின்னு புட்டு சும்மா இருக்க முடியாம எல்லா மைனரும் திமிர் எடுத்து அலைஞ்சது . அவர்கள் பொழுது போக்க சங்கீதம் ,நடனம் , தஞ்சை மாவட்டத்தில் வளர்க்க பட்டது..ஏற்கனவே பக்தி அதிகம் அப்றம் கேட்கவா வேணும் .ஊருக்கு ஒரு பொண்டாட்டி. அதும் பத்தாததுக்கு வீட்ல வேலை செய்பவர்கள்..என்று அப்பா சொல்ல கேட்டது.
என் அப்பாவோட தாத்தாவுக்கு அப்பா பெரம்பூர்ல ஒரு கீப். அவங்களுக்கு அல்வா பிடிக்கும்னு அந்த பாட்டி கோதுமை அல்வா கிண்டி டப்பால போட்டு. கார் பின் சீட்ல வச்சுடுமாம்..அவங்க எடுத்துப்பாங்களாம்..(கொழுப்புன்னா கொஞ்ச நஞ்ச கொழுப்பில்ல..எல்லாத்தையும் சோறே போடாம சித்திரை மாசம் வெய்யில்ல காவிரி ஆத்து மண்ல காய போடனும்.).
ஆதிக்க வர்க்க திமிர்க்கு தேவதாஸி முறை பெண்களை பலி கொடுத்தது. நீதி கட்சி ஆட்சியில் தேவதாஸி முறை ஒழிக்கபட்டதும். சட்டமன்ற் விவாதத்தில் முத்துலெட்சுமி அம்மா தந்த பதிலும் நாம் அறிந்தது தான்...
எவனாவது தேவதாசி முறை தெய்வ வழிபாடு என்று சொன்னால் அது அயோக்கியத்தனதின் முதல் வரி. வேணும்னா ஆண்கள் தேவதாஸன்களா இருந்துக்கங்கடான்னு நடு மண்டைல கொட்டனும்..

No comments: