Friday, January 12, 2018

ஒடிசி & தாமரை தின்னிகள் :: பெரியார் & தமிழக மக்கள்



Theodoor van Thulden என்ற டச்சு ஒவியர் 1632 ஆம் வருடம் வரைந்த ஒவியம்.
இதில் கிரேக்க காப்பியமான ஒடிசியில், ஒடிசி மன்னன் அவன் நண்பர்களை, கூட பயணம் செய்பவர்களை “தாமரை தின்னி” போதையாளர்களிடம் இருந்து மீட்டு வரும் காட்சியை ஒவியர் வரைந்திருக்கிறார்.
ட்ராய் நகரத்து போர் முடிந்ததும் ஒடிசி மன்னன் தன் சொந்த ஊருக்கு திரும்பும் போது நிறைய கடற்பயண சவால்களை சந்திக்கிறான்.
அதுதான் ஒடிசி கதை. அப்படி தன் சகாக்களோடு வரும் போது தாமரை தின்னிகள் இருக்கும் தீவுக்கு அவன் கப்பல் ஒதுங்குகிறது. தீவில் யார் என்று பார்த்து வர இருவரை முதலில் அனுப்புகிறான்.
அவர்கள் திரும்ப வில்லை.
அவர்களை பார்க்க இன்னும் சிலரை அனுப்புகிறான்.
அவர்களும் திரும்பவில்லை. என்ன இது போனவர்கள் போனவர்களாக இருக்கிறார்களே என்று ஒடிசி அவனே சென்று என்ன விஷயம் என்று பார்க்கப் போகிறான்.
அங்கே அவன் “தாமரை தின்னிகள்” (Lotus Eaters) மனிதர்களைப் பார்க்கிறான்.
அவர்கள் அந்த தீவில் இருக்கும் ஒரு தனித்துவமான நீர்தாவரத்தின் பூவை தின்று கொண்டு இருக்கிறார்கள். அது அவர்களுக்கு போதை ஊட்டுவதாய் இருக்கிறது.
அதை சாப்பிட்டவர்கள் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஊரில் உள்ள மனைவி குழந்தைகளை மறக்கிறார்கள். தாங்கள் இனி எங்கும் போக வேண்டாம் அந்த தாமரை தின்னி தீவிலேயே அப்பூக்களை பறித்து தின்று போதையிலேயே இருக்கலாம் என்று முடிவு செய்து மயங்கிக் கிடக்கிறார்கள்.
அவர்களிடம் ஒடிசி எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான்.
அந்த பூக்களின் போதை அவர்களை விடுவதாய் இல்லை. ஒடிசி சொல்வதை கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் ஒடிசி அவர்கள் மண்டையில் தட்டி உச்சி முடியை பிடித்து இழுத்து வந்து கப்பல் ஏற்றி அந்த போதையிலிருந்து, போதை சிந்தனையில் இருந்து காப்பாற்றுகிறான்.
கப்பலில் ஏறி போதை தெளிந்த பிறகுதான் அவர்களுக்கு ஒடிசி எவ்வளவு நன்மை செய்தான் என்று தெரிகிறது.
அந்த ஒடிசி மன்னன் நிலையில்தான் தமிழ்நாட்டில் பெரியாரும் இருந்தார்.
தமிழக மக்கள் மத மூடநம்பிக்கை என்னும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள். தமிழக மக்கள் சாதி என்னும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள்.
தமிழக ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செலுத்தும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள்.
தமிழக பெண்கள் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதை ரசிக்கும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள். இந்த சாதி மத ஆணாதிக்க போதைப் பூக்களை தின்று “அனைவரும் சமம்” என்ற குறிக்கோளை அடையத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது பெரியார் தன்னால் முடிந்த மட்டும் மக்களின் முடியை பிடித்து இழுத்து பகுத்தறிவு கப்பலில் ஏற்றி விட்டார். ஒடிசி கதையில் ஒடிசியின் தாமரை தின்னி மயக்க நண்பர்கள் எண்ணிக்கை அளவில் குறைந்தவர்கள். அதனால் அவன் ஒருவனால் இழுத்து கப்பலில் ஏற்ற முடிகிறது. ஆனால் பெரியார் விஷயத்தில் நாலு கோடி மக்கள் தாமரை தின்னிகளாக இருந்தார்கள்.
பெரியார் தன் 94 வயது வரை தன்னால் முடிந்த மட்டும் மக்களை கப்பலில் பகுத்தறிவு ஏற்றி விட்டார்.
ஆனால் முழுமையாய் அவரால் ஏற்றி விட முடியவில்லை. அது பெரியாருடைய தோல்வி இல்லை. பெரியாரால் அனைவரையும் பகுத்தறிவு கப்பலில் ஏற்ற முடியவில்லை என்பதைச் சொல்லி ரசிப்பது முட்டாள்தனம்.
பெரியாரின் பணியை நாம் ஒவ்வொருவரும் இங்கே செய்ய வேண்டும்.
நம் அருகில் இருக்கும் குடும்பதில் இருக்கும் தாமரை தின்னிகள்,
நண்பர்கள் வடிவத்தில் இருக்கும் தாமரை தின்னிகள்,
அருகில் பயணம் செய்யும் தாமரை தின்னிகள் என்று அனைவரையும் பகுத்தறிவு கப்பலில் ஏற்றி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி அவர்களை விழிப்படைய வைத்து பகுத்தறிவு கப்பலில் ஏற்றி விடும் போது போதையில் இருக்கும் அந்த தாமரை தின்னிகளே நம்மை கிண்டலும் செய்வார்கள்தான்.
“உங்க பெரியாரால ஒண்ணும் செய்ய முடியலையே. எல்லாத்தையும். நீ என்ன செய்துரப் போற “ என்பார்கள்தாம்.
அதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது.
பெரும்பான்மையானவராக இருப்பதாலே நாங்கள் சரியானவர்கள் என்று அவர்கள் சொல்வது தவறு என்ற தெளிவு பகுத்தறிவு பேசும் இளைஞனுக்கு இருக்க வேண்டும்.
அவர்கள் கிண்டல் மொழிக்காக எல்லாம் அவர்களை பகுத்தறிவு கப்பலில் ஏற்றாமல் இருக்க கூடாது.
ஏற்றி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பெரியார் இப்போது நம்மிடையே இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இவர்களை எப்படி பகுத்தறிவு கப்பலில் ஏற்ற வேண்டும் என்ற வழிமுறையை அவர் எழுத்தில் பேச்சில் சொல்லி வைத்திருக்கிறார்.
பெரியாரை இன்னும் இன்னும் ஆழமாக படிப்போம்.
அவர் சொன்ன வழியில் வாழ்க்கையில் குறைந்தது ஒரு தாமரை தின்னியையாவது போதையில் இருந்து மீட்டு பகுத்தறிவு கப்பலில் ஏற்றிவிடுவோம்.
பெரியாரை படிப்போம்.
சலிக்காமல் பேசிக் கொண்டே இருப்போம்.

No comments: