Tuesday, January 16, 2018

தமிழரின் புத்தாண்டு தை ஒன்றே

தமிழர் புத்தாண்டு சித்திரையிலா பங்குனியிலா என்ற விவாதம் எந்நாளும் உண்டு, அதில் தமிழரின் வரலாற்றையும் அதன் தொன்மையினையும் புரட்டினால் தை மாதமே தமிழர் புத்தாண்டு
தை என்ற சொல்லுக்கு நாற்று அல்லது தொடக்கம் , முளை என்றுதான் பொருள், இன்றும் தமிழின் மருவிய மொழியான‌ மலையாளத்தில் அந்த வார்த்தை உண்டு
தமிழர் அன்றே வானியல் அறிவு கொண்டிருந்தனர், 12 ராசிகளும் நட்சத்திரங்களும் தெரிந்திருந்தன. தமிழர் காலண்டர் சந்திர அடிப்படையிலானது சீனர்களை போன்றது
மாதம் என்பதே தமிழ்பெயர் அல்ல, திங்கள் என்றுதான் அழைத்தார்கள், சந்திரனின் பவுர்ணமி டூ பவுர்ணமி கணக்கு
இப்படி மாதத்தை பிரித்த தமிழகம், ஏழு நாட்களுக்கும் ஏழு கிரகங்களின் பெயரைத்தான் சூட்டியும் இருந்தது, ஒரு நாளை கூட காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என சிறுபொழுதாக பிரித்தார்கள், ஒவ்வொரு பொழுதும் 4 மணி நேரம், மொத்தம் 24 மணி நேரம். தமிழர் நாழிகை என்றார்கள்
வருடத்தை பெரும்பொழுது என பிரித்தார்கள் இளவேனில் முதல் 6 பாகமாக பிரித்தார்கள். சக ஆண்டு , கொல்லம் ஆண்டு என தமிழருக்கு ஆண்டு கணக்கும் இருந்தது, அவை எல்லாம் தமிழர் கணக்குகள், ஆனால் சில குறைகளும் அதில் இருந்தன.
சந்திர நாட்காட்டியின் படி ஆசிய இனங்கள் கொண்டாடிகொண்டிருந்த தை வருடபிறப்பையே தமிழகமும் கொண்டாடியது
மகர ராசியில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் சூரியனை வணங்கி அவர்கள் வருடத்தை தொடங்கினார்கள் என்கின்றது தமிழர் இலக்கியம், வருடா வருடம் ஐயப்பன் ஜோதி என ஒன்றை வணங்குகின்றார்கள் அல்லவா? அதன் ஆரம்பம் இதுவே
தை பூசம் தமிழ்கடவுள் முருகனுக்கானது என தை மாதம் வருட தொடக்கத்தில் வைத்து கொண்டாடிய விஷயமும் கவனிக்கதக்கது
இப்படி ஏக சான்றுகள் கிடக்கின்றன,தமிழ் இலக்கியம் முதல் பாடல் வரை நிரம்ப கிடகின்றது .
ஏன் போகி என்பதே போக்கி, போக்குதல், போகும் பண்டிகை என்ற பெயரில்தான் வரும். ஒரு வருடம் முடிந்து போகின்றது என கொண்டாடபடுவதுதான் போகி.
பின் எங்கே குழப்பம் வந்தது என்றால் ஆரிய வருகைக்கு பின்
ஆரியர்களின் நாட்காட்டி சூரிய அடிப்படையிலானது, சூரியன் மேஷத்தில் நுழையும் சித்திரை மாதம் அவர்களின் தொடக்கம், இன்னும் மாதம் ஒருமுறை எந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி வருமோ அந்த நட்சத்திரத்தை அவர்கள் மாதத்தின் பெயராக்கினார்கள்
அதற்கு முன்பு தமிழரிடை நட்சத்திர கணக்கே மாதம் ஆனது, கவனியுங்கள் உங்களுக்கே புரியும். சித்திரை பவுர்ணமி சித்திரை நட்சத்திரம், வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், புரட்டாசி பூரட்டாதி , தை பூசம் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் பங்குனி உத்திரம், மாசி மகம் என பலவற்றை காணலாம்
60 வருட ஜாதக சுழற்சியும் தமிழரிடை இருந்தன, அந்த தமிழகத்தில் ஜாதக அறிவும் இருந்தது
ஆரியர் வந்து எல்லாம் மாற்றினர், விசாக மாதம் வைகாசி ஆனது பூரட்டாதி புரட்டாசி ஆனது, அவிட்டம் ஆவணி ஆனது
அப்படியே விஷ்ணுவிற்கும் நாரதருக்கும் 60 குழந்தை பிறந்தது என்ற கட்டுகதையும் வந்தது, பின் தமிழ் புத்தாண்டும் சித்திரைக்கு மாறியது
காலண்டர் எப்படி வந்தது?, இந்த காலண்டர் முறைகளில் சில விஷயங்கள் உண்டு
அதாவது பருவநிலைகளை கணிக்கத்தான் காலண்டர்கள் உருவாயின, எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது விதைக்கலாம், எப்பொழுது அறுக்கலாம் என சொல்ல அக்கால மக்களுக்கு ஒரு அட்டவணை தேவை இருந்தது
எல்லா இனங்களும் அப்படி வகுத்தன, சில இனங்கள் நிலாவினை வைத்து நாட்களை கண்க்கிட்டு மாதம் என்றன, சில இனங்கள் சூரியனை வைத்து பிரித்தன‌ மாதங்கள் வருடங்களாயின, நட்சத்திர கூட்டத்தால் வருடங்கள் அடையாளமிடபட்டன,
இந்த காலண்டர்களால் அவர்கள் விவசாயம் செழித்தது, ஆற்று வெள்ளகாலங்கள் கணக்கிடபட்டன, பல நன்மைகள் விளைந்தன‌
ஆசிய இனங்கள் நமது தைமாதம் முதல் தேதி என சொல்லியிருந்தன, சீன, தமிழ் என இப்பகுதி காலண்டர் அப்படித்தான் இருந்தது, இன்றும் சீன புத்தாண்டு ஜனவரி மாத கட்சியில்தான் வரும்
இது ஆசிய பக்கம்,
ஆனால் ஐரோப்பா பக்கம் வித்தியாசமாக இருந்தது, சூரிய காலண்டரை பின்பற்றுபவர்கள், எகிப்தியர்களுக்கு இந்த ஏப்ரல் சமீபம் புத்தாண்டு இருந்திருக்கின்றது, அப்படி ஒரு கொண்டாட்டத்தில் எகிப்தியர் இருந்தபொழுதுதான் யூதர்கள் தப்பியிருக்கின்றார்கள், அது பாஸ்கா ஆயிற்று, யூதர் அதனை இஸ்ரேலில் விமரிசையாக இன்றும் கொண்டாடுவர், அப்படி ஒரு பாஸ்கா விழாவில் யேசு கொல்லபட்டார்
ஆக பெரிய வெள்ளி இக்காலகட்டத்தில் வரும் உண்மை அதுவே
இப்படி ஒரு பக்கம் தை மாதமும் இன்னொரு பக்கம் சித்திரை வாக்கிலும் கொண்டாடிகொண்டிருந்தார்கள், இதில் ஆரியர்கள் கொண்டாடியது தென் கிழக்கு ஐரோப்பிய‌ வழக்கம்..
அவர்கள் இந்தியாவில் வந்து எல்லாம் ஆக்கிரமித்தபின் எல்லாம் மாற்றினார்கள், இங்கும் ஏப்ரல் வாக்கில் புத்தாண்டு என பாடம் எடுத்தார்கள், அப்படி தென்னிந்தியாவில் சித்திரை மாதம் புத்தாண்டு என புகுத்திவிட்டார்கள், அது மலையாள,கேரள, கன்னட, தெலுங்கு, சிங்கள இனங்களிலும் பரவிற்று
சுருக்கமாக சொன்னால் இந்துமதம் இருந்த இடங்கள் எல்லாம் பரவிற்று கிழக்காசியாவில் சில முன்னாள் இந்துமத நாடுகளை கூட அது பாதித்தது
ஆரிய‌ ஆதிக்கம் இருக்கும் இடமெல்லாம் இப்படித்தான் மாறிற்று. வங்காளத்தில் கூட மாறிற்று,
ஆரிய‌ ஆதிக்கம் இருக்கும் இடமெல்லாம் இப்படித்தான் மாறிற்று. வங்காளத்தில் கூட மாறிற்று, ஆரியன் வைத்ததே வருடம்...
கோவில்களில் அவர்கள் ஆதிக்கம், நாள் குறிப்பதில் அவர்கள் ஆதிக்கம் என அவர்கள் கொடிகட்டி பறக்க எல்லாம் நிலைத்தது
இந்திய இனங்களின் புத்தாண்டு ஏப்ரலுக்கு மாற, அவர்கள் புகாத சீனா அதன் போக்கில் தை மாதம் ஒட்டியே கொண்டாடியது, இன்னும் கொண்டாடுகின்றது
ரோம் அரசாங்கம் எழும்பிய பின் பல விஷயங்களை கொடுத்தார்கள், மைதானம், சாலை, பார்லிமெண்ட் என பல விஷயங்களுக்கு அவர்கள் முன்னோடி, ஜூலியஸ் சீசர் ஐரோப்பிய அரசனாகி ஜூலியன் காலண்டர் கொடுத்தான்,
காலன்டே எனும் லத்தீன் வார்த்தைதான் காலண்டர் ஆயிற்று
அது கிரேக்கர்களின் கடவுளான ஜானுஸ் என்பவரை குறிக்கும் ஜனுவரி எனும் மாதம் முதல் மாதமானது, பின் வந்த போப் கிரகோரியின் கிரகோரியன் காலண்டரிலும் அம்முறை தொடர்ந்தது
கிரகோரி மாதங்களின் நாட்களை மாற்றி அமைத்தார், போப் உலக அரசர் என்பதால் உலகெல்லாம் கிரகோரியன் காலண்டர் பொதுமறை ஆயிற்று
ஆக வருடபிறப்பு என்பது தமிழர்களுக்கு உள்ளது போல தைமாதமே உலகெல்லாம் கொண்டாடபட்டிருக்கின்றது, சீனர்களும் அந்த காலகட்டமே தொடங்குகின்றார்கள்
இன்னும் பார்க்க போனால்
அதாவது மிக பழமையான காலங்களில் எது அறுவடை காலமோ, அதுதான் புத்தாண்டு காலமாக இருந்திருக்கின்றது, அதிலிருந்துதான் தொடங்கியிருக்கின்றார்கள்
இன்று கலாச்சார தொன்மைமிக்க‌ பஞ்சாபியர் பைசாகி எனும் அறுவடை திருவிழா கொண்டாடுவதே அதன் சான்று..
பண்டைய கலாச்சாரம் எல்லாம் அப்படித்தான் இருந்திருக்கின்றன, பெரும் உதாரணம் இந்த ஈஸ்டர் பண்டிகை கூட ஒருவித அரேபிய விழா, இயேஸ்டர் எனும் தேவதையின் நாளை கொண்டாடும் வசந்த விழா, இரவும் பகலும் சமமான நாளில் வரும் விழா
பின்னாளில் கிறிஸ்து உயிர்த்த பண்டிகை என மருவிவிட்டது, உண்மையில் ஈஸ்டர் எனும் பெயர் பைபிளில் இல்லவே இல்லை, ஆனாலும் ஈஸ்டர் கொண்டாடுவான் அல்லவா? அவன் தான் கிறிஸ்தவன், எதை சொன்னாலும் நம்பிகொள்வது.
அப்படி ஏதோ ஒரு சமூகம் கொண்டாடி கொண்டிருந்த ஈஸ்டர் எனும் விழாவில், ஏய்ய்ய் இது கிறிஸ்து உயிர்த்தநாள் என திணித்து அது உலகெல்லாம் ஈஸ்டர் ஆயிற்று, எல்லாம் கிறிஸ்தவ மாயம்..
சீன புத்தாண்டு ஜனவரி மாதமே வரும், தமிழ்புத்தாண்டும் தமிழரின் அறுவடையான தைமாதமே புத்தாண்டு
யூதர்களுக்கும் அவர்களின் சாயலான இஸ்லாமியருக்கும் இப்போதுள்ள செப்டம்பர் அல்லது அக்டோபரில் வரும், உலகெல்லாம் இப்படி ஆளுக்கொரு புத்தாண்டு கலாச்சார அடிப்படையில் இருந்திருக்கின்றது,
பின்னாளில் போப் தொன்மையானது ஜனவரிமாதமே என வல்லுனர்கள் மூலம் அறிந்தார், அவர்கள் காலண்டர் சூரிய அடிப்படையிலானது அதனால் ஜனவரி 1ம் மாதம் புத்தாண்டு ஆனது
தமிழர் காலண்டர் சீனர்களை போல சந்திர அடிப்படையிலானது அதனால் தைமாதம் புத்தாண்டு வரும்
ஆக தமிழ்புத்தாண்டு மிக தொன்மையாக தைமாதம்தான் வரும், இது காலம் காலமாக இருந்த விஷயம், கலைஞர் தொடங்கியது அல்ல..
தை மாதம் தான் தமிழ்புத்தாண்டு என்பது 1800களிலே தமிழரிஞர்கள் சிந்தித்த ஒன்று, அப்படி ஒரு ஆய்வு இருந்துகொண்டே இருந்தது
பின்பு வந்த மறைமலை அடிகள் போன்றவர்கள் அதில் தீவிரமாக இருந்தனர், அதாவது தைமாதம் தமிழருக்கு புத்தாண்டாக இருந்தது, பின்பு வந்த ஆரிய கலப்பில் அது சித்திரைக்கு மாற்றபட்டது என சொன்னார்
அவரோடு அந்த கூட்டத்திற்கு வந்த 500 தமிழ் அறிஞர்களும் சொன்னார்கள், அவர்கள் இன்றைய அதிமுக அமைச்சர்கள் போன்றவர்கள் அல்ல, மாறாக தமிழக வரலாற்று அறிஞர்கள்
தமிழரின் சக குடிகளான கேரளம், தெலுங்கு, சிங்களம் என எல்லோருக்கும் சித்திரை மாதம் ஆரியர்களால் தொடக்கமாயிற்று மற்றபடி தமிழருக்கு தை மாதமே வருட தொடக்கம் என சொல்லி, இனி திருவள்ளுவர் ஆண்டு என ஒரு முறை கொண்டுவருவோம் என்ற முடிவிற்கு வந்தார்கள்
தமிழ் கலாச்சாரம் போற்றும் யாழ்பாணத்தார் என்ன செய்தார்கள்?
வெள்ளையன் ஜனவரி 1 புத்தாண்டு எனும்பொழுது தை 1ம் அதுவே என தலைகீழாக மாற்றிவிட்டார்கள், ஏன் அப்படி என்றால்? அவர்களின் வெள்ளையன் விசுவாசம் அப்படி இருந்திருக்கின்றது
அவர்கள் காலண்டர் படி தை மாதம் 1ம் தேதி புத்தாண்டு வெள்ளையனோடு கொண்டாடபடும்
அதனை அறியா இந்த தமிழக பதர்கள்தான் மே 17 என்பதை பங்குனி 17 என்றும், நவம்பர் 27 என்பதை கார்த்திகை 27 என்றும் தமிழகத்தில் கொடிபிடிக்கின்றன‌
பங்குனி 17 என மே 17ஐ சொல்ல முடியுமா? என்றால் முடியாது, ஆனால் இந்த திடீர் தமிழர்களுக்கு என்ன? எல்லாம் செய்வார்கள்.
ஆக உலகின் தொன்ம குடிகள் என்று புத்தாண்டு கொண்டாடுகின்றன, மாயன், சீன, புத்தாண்டினை போல தமிழ் புத்தாண்டும் தைமாதம் தான் வரும்
கிரகோரி காலத்திற்கு பின் ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடிய ஐரோப்பியர்களை கிண்டல் செய்துதான் முட்டாள் தினம் என்றார்கள்
அப்படி நாமும் முட்டாள்கள் அல்ல என்பதைத்தான் கலைஞர் தை முதல் தேதி தமிழர் புத்தாண்டு என்றார்
அது உண்மையும் கூட, காலண்டர்கள் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது
இப்படி வல்லுனர்கள் சொன்னதைத்தான் பின் கலைஞரும் தமிழ் புத்தாண்டு தைமாதம் என்றார், அறிவிக்கவும் செய்தார்
இன்னும் ஆழமாக சொல்லி இருக்கலாம், ஆனால் அதற்கு நட்சத்திர கணக்கு, வானவியல் கணக்கு மகர ராசி, சூரிய நகர்வு உட்பட பல விஷயங்களை சொல்ல வேண்டும்
அப்படி சொன்னால் தமிழரிடை ஜாதக அறிவு இருந்ததை ஒப்புகொண்டதாகிவிடும், அது திராவிட பகுத்தறிவுக்கு முரணானது என்பதால் அந்த அடிப்படை ஆதாரங்களை அவர்கள் தவிர்த்தார்கள் பகுத்தறிவு சிங்கங்கள்
அதனால் மென்று விழுங்கி, மறைமலை அடிகள் சொனதின் ஆதாரங்களை மறைத்து மேலோட்டமாக தமிழர் புத்தாண்டு தை என சொல்லிவிட்டார் கலைஞர். எப்படி ஆயினும் அது வரவேற்க தக்கதே
ஆனால் தமிழக சாபக்கேடான அதிமுகவின் ஜெயலலிதாவிற்கு அது உறுத்திற்று, அக்கட்சியின் நிறுவணரான ராமசந்திரனுக்கோ, ஜெயலலிதாவிற்கோ சுய அறிவு என்பதோ, இனபற்று என்பதோ கொஞ்சமும் கிடையாது
அதிலும் ஜெயா சுத்த மோசம், நடராஜனும் சசிகலாவுமே தெய்வங்கள் என நம்பியவருக்கு, பிராமணர்களின் தூண்டுதல் விடுமா?
இல்லை மறுபடியும் சித்திரை 1 தமிழ்புத்தாண்டு என்றார், மேஷ ராசி முதலாவது அதில் சூரியன் நுழையும் சித்திரை வருட பிறப்பு என ஆரியவாதம் பேசினார், சர்ச்சைகள் வெடித்தன.
அது கட்சியின் குற்றம், கருவின் குற்றம் அவர் என்ன செய்தாலும் எதிர்த்தே செய்யவேண்டும் எனும் குதர்க்கம்
கலைஞர் சொன்னார், தமிழன் வைகரை முதல் நடுசாமம் வரை தமிழில் வகுத்தவன், இளவேனில் முதல் பின்பனி வரை காலம் பிரித்தவன். அவனுக்கு தை முதல் மாசி வரை வருடம் இருந்தது, இந்த 60 ஆண்டுகால முறை ஆரியர்கள் புகுத்தியது, தமிழன் ஒரு வருடம் முடிந்தால் அடுத்தவருடம் தொடர்வான், இந்த 60 ஆரிய பெயர்களின் வருடமெல்லாம் அவனுக்கு இல்லை என சொல்லிபார்த்தார்
எப்படி கேட்பார் ஜெயா?. அறிவில் சிறந்த பரிவாரங்களோடு ஆடினார்
கலைஞர் தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் சொன்னார், "தை மாதம் தமிழ்புத்தாண்டு என்றால் தைதை என குதிக்கின்றார் அம்மையார்"
கலைஞரும் ஓய்ந்தாயிற்று
ஆனால் உண்மைகள் ஓய்வதில்லை, தைமாதமே தமிழர் புத்தாண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, ஆரிய கலப்பற்ற தொன்மை இனங்கள் அப்பொழுதுதான் புத்தாண்டு கொண்டாடுகின்றன‌
தன்னை தமிழன் என உணர்பவன் தைமாதம் கொண்டாடட்டும், இன்னும் உணராத அப்பாவிகள் உண்மை விளங்கும் வரை சித்திரை 1 தமிழ்புத்தாண்டு என சொல்லிகொண்டே இருக்கட்டும்
எம்மை பொறுத்தவரை தமிழரின் புத்தாண்டு தை ஒன்றே, அவ்வகையில் முதலில் தமிழ்புத்தாண்டுவாழ்த்துக்கள், அதன் பின்பே பொங்கல் வாழ்த்துக்களை நாளை தெரிவிக்கலாம்

No comments: