Tuesday, January 16, 2018

நம்பிக்கைகளை கேள்வி கேட்டதால்தான் பல மாற்றங்கள் உருவாகின

அது எங்கள் நம்பிக்கை... எங்களது நம்பிக்கையை கேள்வி கேட்கலாம்மா?? எங்களது நம்பிக்கையை அவமானப்படுத்தலாம்மா, புண்படுத்தலாம்மா?? யார் அந்த உரிமையை கொடுத்தது??
இப்படி எல்லாவற்றையும் இது எங்கள் நம்பிக்கை.. இதை கேள்வி கேட்க, விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை... என சொல்லிகொண்டிருந்தால், இந்த உலகில் எந்த வளர்ச்சியும், அறிவியல் கண்டுப்பிடிப்புகளும், முனேற்றமும் ஏற்பட்டிருக்காது.. கிணற்றில் போட்ட கல்லை போல ஒரே காலகட்டத்தில் முடங்கியிருக்கும்.. நம்பிக்கைகளை கேள்வி கேட்டதால்தான் பல மாற்றங்கள் உருவாகின.. உதாரணங்கள் சிலவற்றை பார்ப்போமா??
பெண்களை உடன்கட்டை ஏற்றி கொளுத்துவது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், உடன்கட்டை தடுப்பு சட்டம் வந்திருக்குமா??
பால்ய வயதில் திருமணம் ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், பால்ய விவாக தடுப்பு சட்டம் வந்திருக்குமா??
வர்ணாசிரம சாதி ஏற்றத்தாழ்வுகள் ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அனைவரும் சட்டதின் முன் சமம் என்னும் உரிமை கிடைத்திருக்குமா??
கணவன் இறந்தால், மனைவுக்கு மொட்டை அடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்க்காரவைப்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த சமூக தீமை ஒழிந்திருக்கும்மா??
பெண்களுக்கு பொட்டுகட்டி கோவில் தேவதாசியாக்குவது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா??
பார்பனர் அல்லாதவர்கள் படிக்கக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் படிக்க முடியும்மா??
சில பிரிவு பெண்கள் மேலாடை உடுத்தக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அனைத்து பெண்களுக்கும் மேலாடை அணிய உரிமையுண்டு என்ற சட்டம் வந்திருக்கும்மா??
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்க்கு என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், பெண் கல்வி சாத்தியப்படிருக்கும்மா??
திருமணம் முடிந்த பெண், முதல் நாள் பார்ப்பன நம்பூதிரியுடன் இரவு தங்கவேண்டும் ன்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த இழி பழக்கம் மறைந்திருக்கும்மா??
ஒரே மதம் என்று சொல்லிக்கொண்டு, ஒரு பிரிவின் மீது தீண்டாமை கடைபிடிப்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், தீண்டாமை தடை சட்டம் வந்திருக்குமா??
ஒரே மதம் என்று சொல்லிக்கொண்டு, எங்கள் கோவிலினுள் நுழையாதே என தடுப்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அனைத்து சாதிக்கும் ஆலய நுழைவு சாத்தியப்பட்டிருகும்மா??
பார்பனர்களே மேலானவர்கள், தகுதியானவர்கள் என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், பெரும்பான்மை இந்துக்களான BC/MBC/SC மக்களுக்கு இடஒதுக்கீட்டை அளிக்கும் சட்டம் வந்திருக்கும்மா?? வெறும் 3% சதம் இருந்த பார்பனர்கள், 90% சதவீத வேலை & படிப்புகளை ஆக்கிரமிப்பு செய்திருந்தது மாறியிருக்கும்மா??
பார்பனர்கள் கடல் தாண்டி போகக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், இன்றைய நிலையில் லட்சகணக்கான பார்பனர்கள் வெளிநாடுகளில் வசிக்க, வேலைசெய்ய முடியும்மா??
உலகம் தட்டையானது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், உலகம் உருண்டையானது என்பது நிருபிக்கப்பட்டிருக்கும்மா??
பூமியைத்தான் சூரியன், சந்திரன் போன்றவை சுற்றிவருகின்றன என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அறிவியல் வளர்ந்திருகும்மா??
ராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுகுவதால்தான் கிரகணங்கள் உருவாகின்றன எனபது புராண நம்பிக்கை என விட்டிருந்தால், வான்வெளி அறிவு வளர்ந்திருகும்மா??
பிராத்தனை செய்தால் குணமாகும் என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், மருத்துவ அறிவியல் வளர்ந்திருகும்மா??
தமிழ் நீச பாஷை, தமிழில் கடவுளை வழிபடக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், தமிழ் அர்ச்சனை என்னும் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும்மா??
எனவே, ஒருவரது அல்லது ஒரு பிரிவினது நம்பிக்கை என எதையும் விட்டுவிட முடியாது.. அறிவியல் அடிப்படையில் விளக்க முடியாத, ஏற்கமுடியாத ஒன்றை, உலகம் முழுதும், எல்லா காலகட்டத்திலும் கேள்வி கேட்ப்பார்கள்.. தமிழகத்தில், சித்தர்கள் துவங்கி, வள்ளலார், அய்யா வைகுண்டர், நாராயண குரு, தந்தை பெரியார் என என பலரும் பழம் பழக்கவழக்கங்களை, காலம் காலமான நம்பிக்கைகளை, சனாதான மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்டார்கள்..
தமிழ் மக்கள் நம்பிகையில் கேள்வி கேட்பதை ஏற்பார்கள்.. ஆனால், அந்த கேள்வியினால் அடுத்தவருக்கோ அல்லது தமக்கோ பலன் அளித்தால்... ஆகையால்தான் பெரியார் என்ற ஒருவர் உயிருடன் இறுதிவரை இருக்க முடிந்தது... அனைத்து நம்பிக்கையிலும் ஆதாரபூர்வமான கேள்விகளை அவர் எழுப்பினார்..
அது சரி, நம்பிக்கையை தானே அவமானபடுத்தினோம்.. ஆனால், ஹிந்து சனாதான மதம், இந்துகளையே சூத்திரன், பஞ்சமன் என அவமானபடுத்துகிறதே... அதேபோல இஸ்லாம் மதத்தில் அந்தகாலகட்டத்தில் எழுதிய வார்த்தைகளை அப்படியே நம்புவதால், நம்பிக்கைகளை கேள்வி கேட்பதை அனுமதிக்காததால், எதையும் சிந்திக்காமல் பயங்கரவாத செயல்களுக்கு அப்பாவிகளை மூளைசலவை செய்து சுலபமாக திசைதிருப்ப முடிகிறது... ஆனாலும், கட்டுபாடுகள் அதிகமுள்ள அரபு நாடுகளிலேயே, பெண்களுக்கு வாக்குரிமை, ஓட்டுனர் உரிமை என காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருவது சிறப்பு..

No comments: