Thursday, January 18, 2018

ஆண்டாள் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது.

ஆண்டாள் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது.
ஆண்டாளுக்காக, தமிழகமெங்கும் வைணவர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களில் இறங்கியுள்ளனர். பல இடங்களில், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று ஆயிரக்கணக்கான வைணவர்களை காண முடிகிறது.
இந்த போராட்டங்கள் அனைத்தையும் நாம் முழு மனதோடு வரவேற்க வேண்டும். இன்று வீதியில் இறங்கி ஆண்டாளின் மானம் காக்க போராட்டம் நடத்தும் இந்த வைணவ பார்ப்பனர்கள், இது நாள் வரை, மக்களை பாதிக்கும் எந்தவொரு விஷயத்துக்காகவும், குரல் கொடுத்ததில்லை, போராடியதில்லை, வீதிக்கு வந்ததில்லை. போக்குவரத்து தொழிலாளர்களோ, அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ, பட்டாசுத் தொழிலாளர்களோ, யார் போராடினாலும், அந்த செய்தியை தினமலரில் படித்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள்.
அப்படிப்பட்டவர்கள், ஆண்டாளின் மானம் காக்கவாவது வீதிக்கு வருவது உள்ளபடியே மகிழ்ச்சி. நிற்க. வைரமுத்து சொன்ன ஒரு வார்த்தையால் ஆண்டாளின் மானம் போய் விட்டது என்று இன்று உரத்து குரல் எழுப்புவோர், வீட்டிலும், கோவிலிலும் மந்திரங்களை உச்சரிப்பதைத் தவிர்த்து ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறார்களா என்றால் இல்லை. குறைந்தபட்சம், திருப்பாவையை, உரையோடு மலிவுப் பிரதியாக அச்சடித்து மக்களிடம், ஆண்டாளின் பெருமையை பரப்ப முயற்சி எடுத்துள்ளார்களா என்றால் இல்லை. (உரையோடு வெளியிட்டால், காவல்துறையினர், அதை சரோஜாதேவி என்று கருதி பறிமுதல் செய்யவும் வாய்ப்பு உள்ளது).
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 34 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அவற்றில் வெறும் 200 கோவில்கள் மட்டுமே, ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறக் கூடியவை. இந்த 200 கோவில்களின் வருமானத்தை வைத்துக் கொண்டு, தேங்காய் மூடி டிப்பார்ட்மென்ட் என்று அழைக்கப்படும், இந்து சமய அறநிலையத் துறை, 34 ஆயிரம் கோவில்களையும் பராமரித்து வருகிறது. கடுமையான நிதிப் பற்றாக்குறையால் பல கோவில்கள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளன.
தமிழகம் முழுக்க உள்ள இந்து கோவில்களுக்கான நிலங்கள் பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ளவை. இவற்றில் 45 சதவிகித இடங்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. 25 சதவிகித இடங்கள், போலிப் பத்திரங்கள் மூலம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. வீராவேசமாக கிளர்ந்தெழுந்து, ஒன்னரை நாள் உண்ணாவிரதம் இருந்த ஜீயர், இதற்காக ஒரு துரும்பை கிள்ளிப் போட்டிருக்கிறாரா ? செய்ய மாட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த பண்டாரங்கள் ஒரு நாளும் இதற்காக எதையும் செய்ய மாட்டார்கள். அவர்களின் ஒரே நோக்கம், ஆண்டாள் எங்கள் கடவுள். அவளைப் பற்றிப் பேச நீங்கள் யாரடா என்ற அவர்களின் காப்பிரைட் உரிமையை நிலைநாட்டுவது மட்டுமே. இத்தனை ஆண்டுகளாக எங்களை பார்ப்பனர் என்று பழித்தீர்கள் அல்லவா ? இது எங்கள் நேரம். உங்களை பழி வாங்குகிறோம் என்ற ஆங்காரம் மட்டுமே.
பிரளயமே நடந்தாலும், வீதிக்கு வராத இந்த வைணவர்கள் ஆண்டாளின் மானங்காக்க வீதிக்கு வருவதை, மக்கள் புன்னகையோடு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் போராட்டம் தொடரட்டும். இவர்கள் யாருக்கானவர்கள், இவர்களின் நோக்கம் யாருக்கானது என்பது மக்களின் முன் அம்பலப்படட்டும்.

No comments: