Monday, July 02, 2018

விவசாயம் - 2

கேள்வி: கிழவி இரண்டு நாட்களுக்கு முன் விவசாயத்தில் சாதி இருப்பதாகவும், விவசாயம் சாதிய அமைப்பை நம்பி இருப்பதாகவும் பதிவிட்டீர்கள். உங்களுக்கு ஏன் விவசாயத்தின் மீது இவ்வளவு வெறுப்புணர்வு? விவசாயத்தில் சாதி பாகுபாடு இருப்பதை ஏற்கிறேன். ஆனால், விவசாயத்தில் மட்டும் தான் சாதி உள்ளதா? அனைத்து தொழில்களிலும் சாதி உள்ளதே, அதைப்பற்றி ஏதும் வாயைத் திறக்காமல் விவசாயத்தை மட்டும் சாடுவது ஏன்? விவசாயம் எவ்வளவு இன்றியமையாத ஒன்று?
மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே என சமூகத்தால் வரையறுக்கப்பட்ட, மக்களின் உயிர்களை காவு வாங்கும், மலம் அள்ளுதல் போன்ற தொழில்களைத் தவிர, சாதிய பாகுபாடின்றி அனைவராலும் அவரவர் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்க இயலும் எந்த தொழிலின் மீதும் எனக்கு வெறுப்புணர்வு இல்லை. இங்கு தான் கொஞ்சம் பார்வையை ஆழமாக்க வேண்டும். தொழிலைத் தேர்ந்தெடுத்த பிறகு வேலை செய்யும் இடத்தில் சாதி அடக்குமுறை இருப்பதற்கும், தொழிலைத் தேர்ந்தெடுப்பதே இந்த சாதி மட்டும் தான் என வரையறை இருப்பதற்கு வேறுபாடு உண்டு. உடனே அப்போ அங்கு சாதி அடக்குமுறைகள் இருக்கலாமா என கிளம்பி வராதீர்கள். சாதிய அடக்குமுறை எங்கு இருந்தாலும் அதை எதிர்ப்பவள் நான்.
இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள் என அம்பேத்கர் கூறியுள்ளார். இந்துக்கள் இருக்கும் இடமெங்கும் சாதிய வேறுபாடு இருக்கும். அது பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும், வெளிநாடாகட்டும், வேலை செய்யும் இடமாகட்டும். ஒரு இந்துவாக உங்களை நினைத்துக்கொண்டு நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களை அறியாமல் சாதிய எண்ணங்கள் உங்கள் ஆழ்மனதில் வேரூன்றி இருக்கும். மக்கள் இந்து மதத்தையும், மதகருத்துகளையும் விட்டொழித்தாலொழிய சாதிய பாகுபாட்டைக் களைய இயலாது.
எல்லா தொழில்களிலும் சாதி பாகுபாடு இருக்கும்போது விவசாயத்தை மட்டும் சாடுவது ஏன் எனக்கெட்டால், விவசாயத்தில் மட்டும் தான் சாதி பாகுபாடு என்பதை, அது வாழ்வியல் முறை அப்படித்தான் இருக்கவேண்டும், என்பது போல ஒடுக்கப்பட்டவர்களின் மனதில், இவர்கள் தான் நாட்டுக்கே சோறு போடுகிறார்கள் என்று உணர்ச்சியூட்டி பதியவைக்கப்படுகிறது. அவர்கள் எதிர்த்து கேள்வி கேட்கவோ, நினைத்தால் வேறு வேலைக்கு செல்லவோ விவசாயிகளுக்கு அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. விவசாய கூலிகள் பலர் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வேலைக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதும், சித்ரவதைப்படுவதும் அவர்களது அன்றாட வாழ்க்கையாகி போயிருப்பது இதற்கு சான்று. மேலும், விவசாயம் செய்பவர்களே பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
விவசாயத்தை உணர்ச்சிகளை நீக்கி ஒரு தொழிலாக மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதுதான் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும். இல்லையேல், விவசாயம் என் உயிர்மூச்சு என்போர் அதே விவசாயத்திற்கு பலி ஆகவும் நேரிடும். இதைப்பற்றி மேலும் விவரத்திற்கு Please google, "Impacts of Climate Change on Agriculture", "Economic Survey 2018". தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்தை மேம்படுத்தாமல், இயற்கை, மரபு என சென்றால் என்ன ஆகும் என்பதற்கு இவை சான்று. மேலும் விரிவாக பிறகு பார்ப்போம்.
விவசாயத்தில் இருக்கும் அளவிற்கோ அல்லது அதிகமாகவோ சாதிய தலையீடு இருக்கும் தொழில்களை பட்டியலிடவும். அறிந்துக் கொள்ள மிக ஆவல். ஒரு ஆசிரியரை விட, ஒரு மருத்துவரை விட, ஒரு பொறியிலாளரை விட, ஒரு எழுத்தாளரை விட, ஒரு அரசு அதிகாரியை விட, (பல எடுத்துக்காட்டுகள்) விவசாய கூலி தொழிலில் சாதி வேறுபாடு குறைவு தான், எல்லாருக்கும் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் என்றால் ஆதாரத்தோடு கூறுங்கள், அடுத்த கணமே நான் உங்களுடன்.
Don't allow your faith to substitute emotion for evidence.

No comments: