Monday, July 02, 2018

இந்து மதத்தை யார் முதலில் விட்டொழிக்க வேண்டும்

இந்து மதத்தை யார் முதலில் விட்டொழிக்க வேண்டும் என்று கேட்டால், பெண்கள் தான் முதலில் இந்த கருமத்தை விட்டொழிக்க வேண்டும் எனக் கூறுவேன். ஏனெனில், இந்து மத நூல்கள், "பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை" என்று கூறுவதில் தொடங்கி, பெண்களின் மீது எந்த அளவிற்கு அநீதிகளையும், அநியாயங்களையும் கட்டவிழ்க்க முடியுமோ அந்த எல்லை வரை சென்று கற்பனைக்கும் எட்டா கொடுமைகளை பெண் சமூகத்திற்கு இந்து மதம் இழைத்துள்ளது.
இந்துமத வர்ண தர்மத்தின் படி, கடைசி படி நிலையில் உள்ள சூத்திரர்களை விட கீழ் நிலைக்கு தள்ளி, பெண்களை வர்ண மாற்றவர்களாக காட்டி அனைத்து வருணங்களில் உள்ள ஆண்களுக்கும் அடிமைகளாகவே சித்தரிக்கிறது. புரட்சி சமுதாய சிற்பிகளான தந்தை பெரியார் தென்னாட்டிலும், டாக்டேர் அம்பேத்கார் வடநாட்டிலும் மனுதர்மத்தை எரித்ததில் வியப்பேதுமில்லை.
இப்படிப்பட்ட கேவலமான அடிப்படைவாத இந்துத்துவ சித்தாந்தங்களில் முழுவதும் ஊறி போய் இருக்கும் அரசு (BJP, RSS) ஆளுகையில் தன் மக்களுக்கு என்ன செய்யும் என்பதற்கு இதோ மற்றுமொரு சாட்சி.


நமது இந்தி(து)ய திருநாடு, பெண்கள் பெண்களாக இருப்பதற்கே (வாழ்வது அடுத்தது) மிகவும் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதித்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான்காவது இடத்தில் இருந்தது என்பது கூடுதல் தகவல்.
இந்து மதமும், கோவில்களும், அதனை பின்பற்றுபவர்களுக்கும் சிறிதும் மனிதம் இல்லை என்பது, சமீபத்தில் கோவிலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சித்திரவதை செய்து ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்ட ஆசிஃபா ஒரு சான்று. சில சமயங்களில் இந்த இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு அனைவரும் சாட்சிகளாகவே செத்து மடிவார்களோ என்ற பயமும் அச்சுறுத்த தவறியதில்லை. இந்துத்துவ BJP அனைத்து அடிப்படை சக்திகளுக்கும் முழு அதிகாரம் கொடுத்து கொம்பு சீவி விட்டுக் கொண்டிருக்கும் அந்த பயங்கர வாதிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.


No comments: