Tuesday, April 10, 2018

மலேசியாவில் சாதி

மலேசியாவில் தமிழர் களம் என்ற ஒரு அமைப்பு தமிழகத்தைச் சார்ந்த திரு.அரிமாவளவன் என்பவரது வழிகாட்டுதலுடன் இயங்கத் தொடங்கியிருப்பதாகவும் இக்குழு ஒவ்வொரு தமிழரிடமும் சாதியைத் துருவித் துருவிக் கேட்டு சாதி அடையாளத்தை உரக்கச் சொல்ல வேண்டும் என முழங்கி வருவதாகவும், சாதியும், குலமும் தான் தமிழரின் அடையாளம் எனவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதை நேற்று நண்பர்கள் வழி அறிந்தேன். முன்னரே இந்த விசயம் தொடர்பாக நான் ஒரு கண்டனப் பதிவினை வெளியிட்டிருந்தேன்.
நேற்று கிள்ளானில் நடந்த இலக்கிய நிகழ்விலும் இக்குழுவைச் சேர்ந்த ஒருவர் மிகக் கோவத்துடன் சாதியைத் தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என காரசாரமாக கருத்து தெரிவித்தார். அவரிடம் ஏன் எனத் தொடர்ந்து கேள்வி கேட்டால் பதிலளிக்க எந்த அறிவுப்பூர்வமான பதிலும் அவரிடம் இல்லை.
இங்கு மலேசியாவில் ஏற்கனவே சாதிப் பைத்தியம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்து இப்போது தமிழர்கள் மத்தியில் ஒரு பிளவு இலைமறைக்காயாய் வளர்ந்து வருகிறது. இந்தப் பிளவை வளர்க்கும் நடவடிக்கைகளைத் தமிழகத்திலிருந்து இயங்கும் “தமிழ் அடையாளம்” கொண்ட அமைப்புக்கள் மலேசியாவில் கடைவிரிக்க வேண்டாம். இந்தியாவைச் சாதிச் சிந்தனை சிதைத்ததும் சிதைத்து வருவதும் போதும். அதனைத் தமிழர் வாழும் ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டாம்!

No comments: