Tuesday, April 10, 2018

காவிரி ஆற்றின் குறுக்கே ஏன் மேலும் அணைகள் கட்டவில்லை

காவிரி ஆற்றின் குறுக்கே ஏன் மேலும் அணைகள் கட்டவில்லை? - காவிரி டெல்டா பாசன விவசாயி ஒருவரின் பதில்.

எங்கே கட்டுவது உங்க தலையிலா? முப்பாட்டன் ராஜராஜ சோழனும், பாட்டன் ராஜேந்திரனும், சின்ன பாட்டன் பல்லவனும், ஒன்று விட்ட பாட்டன் பாண்டியனும், அவ்வளவு பெரிய பெரிய கோவில்கள் எழுப்பினார்களே அவர்களுக்கு அறிவில்லையா, அணைகள் கட்ட? 

இவர்களுக்கு முன்பே இருந்த கரிகாலன் கல்லணை கட்டியுள்ளான், பிறகு ஏன் இவர்கள் கட்டவில்லை? கல்லணையின் பயன்பாடு என்ன?? அதில் கையளவு தண்ணீர் தேக்க முடியாது! அது ஏன்? ஏனெனில் மணல் பகுதி நீரை உறிஞ்சும்!

கல்லணையின் பயன்பாடு, ஆற்று நீரை மடைமாற்றுதல் மட்டுமே! அவ்வளவு அற்புதமாக சிற்பங்கள் செய்து நுணுக்கமாக கோவில் கட்டிய உன் பாட்டன்களுக்கு அணை கட்ட தெரியாதா?

கட்ட முடியும்! ஆனால் நீரை உறிஞ்சும் பகுதியில் கட்டி என்ன பயன்? அணையின் பயன் தண்ணீர் தேக்கி தேவையான போது விடுதல்!

சரி, அணை கட்டியாகிவிட்டது என்றே சொல்லலாம்! தண்ணீர் எங்கிருந்து வரும்? மழைநீர் தேக்கமா? அறிவு குஞ்சுகளா! அதுவும் பூமிக்குள் தான் போகும்.

ஏரி வெட்டலாமே? அட வெண்ணெய்! வீராணம் ஏரி வெட்டியவனுக்கு, டெல்டாவில் ஏரி வெட்ட தெரியாதா? பயனளிக்காது. அதான் தண்ணீர் பூமிக்குள் தான் போகும்.

அடேய்களா, நீங்க சொல்லுறமாதிரி, நினைத்த இடத்தில் ஓர் அணையை கட்டிவிடமுடியாது.

ஆற்றுநீர், மலைகளிலிருந்து இறங்கும் இடத்திலோ, நீர்பிடிப்பு இடங்கள் என்று இயற்கையாக நிலவமைப்பு இருக்கும் இடத்திலோதான் அணைகள் கட்டமுடியும்

_*பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால், மலைதொடர்களுக்கு இடையே இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும்.*_

தமிழகத்தில் மேட்டூரை தாண்டினால், காவிரி பாயும் பகுதிகளில் அப்படியான பெரிய நிலபரப்பு கிடையாது. சமவெளி பகுதிகளில் அணைகளை கட்டமுடியாது. தமிழகத்தில் சமவெளிதான் அதிகம்.. வற்றாத ஆறுகளும் கிடையாது.. மழையளவும் சராசரிதான்.

கர்நாடகா எப்படி ஹேமாவதி, கபினி என சில காவிரி துணையாறுகளில் அணைகளை கட்டியதோ, அதே போல, தமிழகத்தில் உள்ள காவிரி துணையாறுகளான பவானியிலும், நொய்யலிலும், அமராவதியிலும் அணை கட்டியுள்ளது தமிழகம்.

1. அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் மழை அதிகம் அதை சேமிக்க வேண்டும்!

_விளக்கம் :- அதிகம் என்பது தவறு, தமிழகத்தில் மழை குறைவு! கடலோர மாவட்டங்களில் மழையும் புயலும் கூடுதல், சரி மழை நீரை எங்கே சேமிப்பது... எப்படி பாசனத்திற்கு விடுவது? கீழிருந்து மேலாகவா? தண்ணீர் போகுமா?_

2. காவிரியில் 1000 கால்வாய்கள் உள்ளது, அதையெல்லாம் கான்கிரீட் செய்தால் இரண்டு நாளில் கடைமடை போகும்!

_விளக்கம் :- எதுக்கு?? போய் கடலில் கலக்கவா? மீண்டும் மீண்டும் தண்ணீர் வேண்டுமே பாசனத்திற்கு அது எங்கிருந்து வரும்?.. எப்படி வரும்? கான்கிரீட் போட்டால் பிரச்சனை முடியும் என்றால், சில ஊழல் அரசியல்வாதிகள் பணத்துக்காகவது செய்துருப்பார்களே! ஏன் செய்யவில்லை?_

_காரணம் கான்கிரீட்டில் இல்லை! தொடர்ந்து தண்ணீர் வரத்து வேண்டும், அது எங்கிருந்து வரும்? எப்படி வரும்?.. கடைமடை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கான்கிரீட் போடப்பட்டது, பயன் ஒன்றும் இல்லை! தண்ணீர் வந்தால் தானே பாசனம் செய்ய முடியும்!_

_வயல்களில் வண்டல் மண், தண்ணீர் பூமிக்குள் இறங்குவது குறைவு! ஆறுகளில் சரளை மண், தண்ணீர் இறங்கும், நிலத்தடி. நீர் மட்டம் உயரும், கட்டுமானத்திற்கு தேவையான மணலும் கிடைக்கும்! ஆற்றில் தண்ணீர் ஓடவேண்டும்._

3. பிளாஸ்டிக் குழாய்கள் பதித்து, சொட்டு நீர் பாசனம் செய்யவேண்டும்.

_விளக்கம் :- இது என்ன பண்ணை விவசாயமா? நினைத்ததும் குழாய் மாட்டி சொட்டு நீர் தெளிக்க? காவிரி பாசன பரப்பளவு ஏறத்தாழ. 270000 ஏக்கர், தண்ணீர் இல்லாமலும், ரியல் எஸ்டேட், நகரமயமாக்கல் இவைகளால் குறைந்து இருக்கும், 2 இலட்சம் ஏக்கருக்கு மேல் குழாய் மாட்டி பாசனம் செய்ய முடியுமா?_

_சொட்டு நீர் பாசனத்தில் நெல் விளையுமா? பயிரை மாற்றலாமே! ஓ மாற்றலாமே! மண்ணும் காலநிலையும் மாறினால், பயிரையும் மாற்றலாம்!_

4. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பாசனத் திட்டங்களுக்கு செலவிட்டது குறைவு!?

_விளக்கம் :- பாதி உண்மை! மீதி தவறு! பாசனத்திற்கு கூடுதல் செலவிட்டதாக கூறும் மாநிலத்தில் விவசாய சாவுகளை விட தமிழகத்தில் குறைவு! எப்படி? செலவிட்டது ஏட்டில் உள்ளது, ஆனால் உண்மையில் இல்லை!_

கடைசியாக என்னதான் சொல்லுற?

காவிரியில் தண்ணீர் வந்தே ஆகவேண்டும்! மாற்றுப் பயிர், பாசன முறை பிறகு பேசலாம், ஆம் காவிரியில் தண்ணீர் வந்தே ஆகவேண்டும், காவிரி நீர் டெல்டாவில் மட்டும் அல்ல, சென்னை வரை குடிநீர் கொடுப்பது, வடமாவட்டங்களில் விவசாய குடிநீர் கொடுப்பது, தமிழகத்தின் நிலத்தடி நீரை சீராக வைத்திருப்பது எல்லாமே அந்த காவிரி ஆறு தான்.

வட மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களில் கடல் உள்புகுந்து நிலத்தடி நீர் உவர்ப்பாகி விட்டது, கடற்கரையில் இருந்து 65 கிலோ மீட்டர் வரை வந்துவிட்டது, இதை தடுக்க காவிரி பாய்ந்து கடலில் கலக்கவேண்டும்...ஆம் கடலில் கண்டிப்பாக கலக்கவேண்டும், ஒவ்வொரு நதியின் நீதியும் இயற்கையும் அதுதான், நீரை சேமித்தால் மட்டும் போதாது அது கடலிலும் கலக்க வேண்டும் அதுதான் சுற்றுச்சூழலை காக்கும், கடல்சார் உயிரினங்கள் முகத்துவாரத்தில் பல்கிப் பெருகும்.

சரி, காவிரியில் தண்ணீர் வந்தால் நமது பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? கண்டிப்பாக தீராது! அதன் பிறகுதான் கூடுதல் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.

முதலில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து! காவிரியில் தண்ணீர் வரட்டும், பிறகு பேசலாம் நதிநீர் மேலாண்மை குறித்து!!!

ஏழை கடைமடை விவசாயி

No comments: