Friday, June 21, 2019

இங்கே வரலாறே எது உண்மை எது உண்மை இல்லை என்று தெரியாத ஒரு நிலை

இங்கே வரலாறே எது உண்மை எது உண்மை இல்லை என்று தெரியாத ஒரு நிலை இருக்கையில் இந்த வரலாற்று இடைச்செருகல்கள் என்று ஒரு விஷயம் இருக்கிறது.
அதாவது பல காலமாக உண்மையான வரலாறு என்று நம்பப்பட்டு வரும் கற்பனைக்கு அப்பாற்பட்ட , நிதர்சனங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.
குறிப்பாக இதை எடுத்துக் கொள்வோமே.
சில ஆண்டுகளுக்கு முன்பாக இதுதான் திருவள்ளுவரின் மனைவி வாசுகி புகைப்படம் என்று ஒரு புகைப்படம் இங்கு முகநூலில் உலாவியது .அப்பொழுது நாமெல்லாம் அதை மிகவும் கிண்டல் செய்து திருவள்ளுவர் காலத்தில் கேமரா வந்தது எப்படி என்றுஅந்த புகைப்படத்தை பதிவிட்டவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்தோம்.
ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் யாரை எல்லாம் முட்டாள் என்று இழிவு செய்தோமோ அவர்களைவிட நாமே பெரிய முட்டாளாக தான் இருந்திருக்கிறோம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் திருவள்ளுவரின் மனைவி வாசுகி தண்ணீர் பிடிக்கும் பொழுது திருவள்ளுவர் அழைத்தார் என்றால் அவர் அவருடைய அந்த தண்ணீர் பிடிக்கும் வாலி அதாவது பக்கெட் அப்படியே அந்தரத்தில் தொங்கும் against the gravity... அதாவது புவி ஈர்ப்பு விசையை மீறி அந்த பக்கெட் அந்தரத்தில் அப்படியே தொங்கிக்கொண்டிருக்கும் இதை எந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் சொன்னாரா என்று பார்த்தால் இல்லை . பின்பு இது நடக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் நம் முன்னோர்கள் என்ன திருவள்ளுவர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்களா அப்படியே இருந்தாலும் இதெல்லாம் சாத்தியமா ஆனால் என்றைக்காவது அறிவுபூர்வமாக அறிவியல் ரீதியாக இது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று நாம் கேள்வி எழுப்பி இருக்கிறோமா? குறிப்பாக பள்ளிக்கூடத்தில் இது நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாட புத்தகத்தில் இல்லை என்றாலும் நம் தமிழ் ஆசிரியர் திருவள்ளுவரைப் பற்றி பேசும் போது இது போன்ற சில விஷயங்களை அடித்துவிடுவார். இன்னொரு முக்கியமான விஷயம் இதை தாண்டி பல தமிழ் அறிஞர்கள் மேடைகளில் பேசும் பொழுதும் பட்டிமன்றங்களில் பேசும் பொழுதும் இதை உண்மையாக நடந்த ஒரு விஷயம் போல் திருவள்ளுவரின் மனைவி அவரின் கர்ப்பு , அவர்களின் தாம்பத்தியத்திற்கு சான்றாக இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்கள். நாம் எப்படி இதையெல்லாம் நம்பினோம் ?தமிழ் சமூகம் அறிவு சார்ந்த ஒரு சமூகமாக இருக்கிறது தமிழ் என்பது வெறும் மொழியாக மட்டும் இல்லாமல் பகுத்தறிவையும் அதனோடு தொடர்பு படுத்திக்கொண்டு இருக்கும்போது எப்படி இந்த கேள்விகளை நாம் கேட்காமல் போனோம்?
இன்னும் சொல்லப்போனால் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நான் சொல்ல வேண்டும் திருவள்ளுவர் என்றால் யாரென்று நமக்குத் தெரியாது .திருவள்ளுவர் அவர் பெயர் கூட கிடையாது .அப்படி இருக்கையில் வாசுகி தான் திருவள்ளுவரின் மனைவி பெயர் என்று சொன்னது யார் ? திருவள்ளுவர் என்று பின்னாளில் நாம் அழைத்த மனிதனின் மனைவி பெயர் வாசுகி என்று எந்த கல் வெட்டில் இருக்கிறது? எந்த ஓலைச் சுவடியில் இருக்கிறது?
"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி" என்பார்கள் என்னை பொறுத்தவரை மொழியும் வளரவேண்டும் மொழியோடு சேர்ந்து பகுத்தறிவும் வளரவேண்டும். பகுத்தறிவு வளர வேண்டுமென்றால் நாம் பழைய கற்பிதங்களை கேள்விகள் கேட்கவேண்டும் ,பழைய முறைகளை நாம் சவாலுக்கு உட்படுத்த வேண்டும்.
இது மட்டுமல்ல தமிழர் வரலாற்றில் இதுபோன்ற பல செருகல்கள் இருக்கின்றன.
குறிப்பாக அவ்வையார் எப்படி ஒரே பாட்டில் குமரியாக இருந்து கிழவியாக மாறினார்? பாரி எப்படி முல்லைக்கு தேர் கொடுத்தான்? இன்னொரு மன்னன் எப்படி மயிலுக்கு போர்வை பொத்தினான்? போன்ற பலவிதமான இடைச் செருகல்களை நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது இது எல்லாம் ஒரு விதமான urban legends. உண்மை வரலாறு கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் எப்படி lord of the rings இல்லை கேம் ஆப் த்ரோன்ஸ் உண்மை வரலாறு என்று அடித்து போட்டாலும் நாம் நம்ப மாட்டோமோ அதேபோல் இதுபோன்ற தமிழ் வரலாற்றில் இருக்கும் சில தேவையற்ற பொய்களையும் நாம் கேள்வி கேட்டே ஆக வேண்டும்.
பகுத்தறிவோடு கேள்வி கேட்கும் சமூகமே முன்னேறும். லாஜிக்கல் கேள்வி கேட்பதே அறிவின் சான்று.

No comments: