Monday, June 18, 2018

வாட்சப் செய்திகளை நம்பாதீர்கள்

இந்தப் பதிவு எழுத வேண்டும் என நினைத்து நேரமின்மையால் இன்று எழுதுகிறேன்.
கடந்த வாரத்தில் மூன்று சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் என்னிடம் வந்தனர்.
மூன்று பேரும் கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் மருத்துவம் செய்து வருகின்றனர். ஆனால் , சில மாதங்களாக ஆளையே காணவில்லை.
இவர்களின் கதையைப் பார்ப்போம்.
முதலாமவர் ஒரு ஆறுமாத இடைவெளிக்குப் பின் என்னிடம் வந்தார். வரும் போதே சோர்வாக , முடியாமல் வந்தார். என்ன சார் ஆளையே காணோம்? வெளியூர் போயிட்டீங்களா என்றேன். இல்லை டாக்டர், இங்கே தான் இருக்கேன் என்றார். ஒரு ஆய்வக சோதனை தாளை காட்டி னார். சர்க்கரை அளவு கள் ஏகப்பட்டது ஏறி இருந்தது. நானூறை தாண்டி இருந்தன.
என்ன கடந்த ஆறுமாதமாகவே இப்படி சர்க்கரை ஏறிப்போய் உள்ளது? நீங்கள் தொடர் சிகிச்சை க்கு வரவில்லை , என்ன காரணம் எனக் கேட்டேன்.
அவர் சொன்னார் , டாக்டர் திட்டக் கூடாது என்று பீடிகை போட்டார்.
சரி சரி சொல்லுங்க என்றேன்.
நான் ஆறு மாதங்களுக்கு மேல் இந்த மாத்திரை எல்லாம் சாப்பிடல. இதற்குப் பதிலாக நாட்டு மருந்து சாப்பிடுகிறேன் என்றார்.
எதுக்கு?
சர்க்கரை நோய்க்கு.

சரி ஐந்து மாதம் முன்பே சர்க்கரை ஏறிடுச்சி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அதிகமாக உள்ளதே , நீங்கள் இது குறித்து பய ப்படவில்லையா? முன்பெல்லாம் 200 மி.கி தாண்டினாலே பரபரப்பாகி என்னை வழிப் பண்ணிடுவீங்களே என்றேன்.
அது வந்து டாக்டர், அடுத்தடுத்த மாதங்களில் குறையும் னு நினைச்சேன் , குறையவே மாட்டேங்குது என கவலைப் பட்டார்.
இரண்டாமவர் வந்தார். அவர் ஓராண்டு க்குப் பிறகு வருகிறார். சர்க்கரை அளவு 600 மி.கி க்கு மேல்.
காரணம் : எந்தவொரு சிகிச்சை யும் எடுத்துக் கொள்ள வில்லை. வந்த்தன் நோக்கம் பிறப்பு உறுப்பில் புண் வெடிப்பு. ஏன் சர்க்கரை நோய் மருத்துவத்தை நிறுத்தினீர்கள் எனக் கேட்டால் , சர்க்கரை நோய்னு ஒன்று இல்லவே இல்லை என்றார். அதனால் மாத்திரை எடுக்கல என்றார். நான் ஆடிப்போய்ட்டேன். ( நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் மாடுலேசனில் படிக்கவும்)
மூன்றாம் நபர் நெஞ்சு வலியோடு வந்தார். இவர் இரண்டு ஆண்டுகள் கழித்து வருகிறார். Sugar , BP, cholesterol எல்லாம் அதிக அளவு இருந்தது. இசிஜி யில் anterior wall ischemia வேறு. அவர் மனைவி தான் அக்கறையோடு அனைத்து வகையான கேள்விகளையும் கேட்டார். ஏன்மா தொடர் சிகிச்சை க்கு வரவில்லை. எதுவுமே கட்டுப் பாட்டில் இல்லையே. இவ்வளவு சிரம்ப் படுகிறாரே. மாத்திரை மருந்து எல்லாம் சாப்பிடராறா இல்லையா என்றேன். அந்தம்மா மாத்திரை சாப்பிடல சார். மருந்து மட்டும் சாப்பிடறார் என்றார்.
என்ன மருந்து என்றேன்.
அந்தம்மா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைய வேண்டாம். நான் இப்போதெல்லாம் அப்படியே ஷாக் ஆவதில்லை.
சீரகத் தண்ணி குடுக்குறேன் டாக்டர் என்றார். அப்பவும் அடைப்பு நீங்கவில்லைன்னு சொல்றீங்க டாக்டர். அப்ப நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு கொடுத்தது எல்லாம் வேஸ்டா? என்றார். மிகுந்த நம்பிக்கை யோடு சீரகத் தண்ணி கொடுத்த அவருக்கு பெருத்த ஏமாற்றம். நல்லா பார்த்து சொல்லுங்க டாக்டர் என்றார் நாலைந்து முறை.
சீரகத் தண்ணி கரோனரி ப்ளாக்க கரைத்து விடுமாம்.
வாழ்க நம்பிக்கை.என்றேன்.
இந்த மூவரிடமும் ஏன் இப்படி திடீரென ட்ரீட்மெண்ட் ட மாற்றினீர்கள் ? எனக்கேட்டேன்.
மூன்று பேரும் ஒரே பதிலைத் தான் சொன்னார்கள்.
வாட்சப்புல படிச்சோம் சார். அதனால் மாத்திரைகளை ஊசிகளை நிறுத்தி விட்டோம் . வாட்சப்பில் போட்டிருந்த மாதிரி சீரகத் தண்ணி, வெந்தயம், வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர் என பலவற்றை எடுத்து முயற்சி செய்து பார்த்துள்ளனர்.
வாட்சப் செய்திகளின் வீச்சை, அது ஏற்படுத்தும் தாக்கத்தை எண்ணி அரண்டு போனேன். இதைப்போல அன்றாடம் ஓரிருவர் வருகின்றனர்.
இவர்களுக்கு , கவுன்சலிங் தந்து வாட்சப் செய்திகளை நம்பாதீர்கள்.என்றேன்.
ஏதாவது சந்தேகம் எழுந்தால் மருத்துவரை ஆலோசித்து செயல்படுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன்.
சமூக வலை தளத்தில் வரும் உடல்நலம் தொடர்பான செய்திகள் ப்ளூ வேல் விளையாட்டுக்கு ஒப்பானவை என்பது நமக்குத் தெரிகிறது. மக்களுக்குத் தெரிவது எப்போது?

No comments: