Wednesday, June 20, 2018

ராபர்ட் வில்லியம் ஆஷை துப்பாக்கியால் கொலை செய்த பார்ப்பனர் வாஞ்சிநாதன் எழுதிய கடிதம்

ஆங்கில சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸநாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள், ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்திலும் தேசச் சத்ருவாகிய ஆங்கிலேயனை துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் (மாட்டுக்கறி) தின்னக்கூடிய ஒரு மிலோச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (george ) எங்கள் தேசத்தில் காலை வாய்த்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் ஹிந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
மேலே இருக்கும் கடிதம், திரு. ராபர்ட் வில்லியம் ஆஷை துப்பாக்கியால் கொலை செய்த பார்ப்பனர் வாஞ்சிநாதன் எழுதியது.
இந்த கடிதத்தில் எங்காவது பிரிட்டிஷாரால் இங்கே சாமானிய மக்கள் படும் அவதிகள் குறித்து எழுதப்பட்டிருக்கிறதா? பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை குறித்து எழுதப்பட்டிருக்கிறதா? மாறாக எது high light செய்யப்பட்டிருக்கிறது பாருங்கள். வெள்ளையர்களிடம் பார்ப்பனர்கள் உயர்த்த பதவிகளை அனுபவித்து கொண்டிருந்தது ஒருபுறமென்றால், வெள்ளையர்களிடம் முரண்பட்டதிற்கான காரணமும் வெள்ளையர்கள் பார்ப்பனர்களின் பாசிச ஸநாதன சித்தாந்தத்திற்கு எதிராக இருந்ததே. அதிலும் மாட்டிறைச்சியை பற்றிய கருத்தை பாருங்கள்.
கொலைகாரன் வாஞ்சிநாதன் திரு. ஆஷை கொலை செய்வதற்கான அளவு வன்மமிருந்தது இந்த நாட்டின் பார் கொண்ட பற்றினால் அல்ல, பார்ப்பனிய கோட்பாடுகளில் இருந்த தீவிரமான வெறி. பார்பனீயவாதிகள் நம்மை மீண்டும் மீண்டும் தேச விரோதிகள் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், இந்த உண்மையை நாம் எந்நாளும் மறக்க கூடாது.
சுரண்டல், ஆதிக்கம், அடிமைத்தனம் என்று பிரிட்டிஷார்களை எதிர்ப்பதற்கு காரணமில்லாமல் இல்லை, ஆனாலும் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் நடந்த பல மாற்றங்கள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம். கையளவு அவர்களிடம் மனசாட்சி இருந்தது, ஆனால் வெள்ளையனுக்கே சாதியை சொல்லிக்கொடுத்து "லார்ட், அவன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன்" என்று சாதிவெறி பாடமெடுத்தவன் இந்திய சாதி ஹிந்துக்கள்.
இந்திய நிலவுடமை முதலாளிகளுக்கும், பார்பனீயவாதிகளுக்கும் பிரிட்டிஸ்காரன் குடைச்சலாக இருந்ததெல்லாம் அவன் அதிகாரத்தை வைத்து கொண்டிருந்தது தான். ஒரு முதலாளி ஸ்தானத்தில் இருந்து மொத்த இந்தியாவையே அடிமையாக பார்த்தான் பிரிட்டிஷ், ஆனால் நம்மூர் சாதி ஹிந்துக்கள் அடுக்கடுக்காக அடிமை தனத்தை உருவாக்கி வைத்திருந்தனர். சொந்த மக்களை பிறப்பால் ஒடுக்கினர், கல்வி பொருளாதாரம் அந்தஸ்து என்று எந்த உயரத்தை அடைந்தாலும் அவர்களை அதே நிலையில் வைத்து ஒடுக்கும் நிகழ்கால சாதி அரசியலே இத்தனை நுணுக்கத்தோடு உயிர்ப்போடு இருக்கிறதென்றால், வரலாற்றில் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்தும் பார்த்திட முடியாது.
திரு.ஆஷ் நம்மோட சமத்துவ நண்பனில்லை, அவனொரு முதலாளி, ஆனால் அவனிடம் இருந்த கொஞ்சம் நஞ்ச நேர்மை கூட வாஞ்சிநாதன்களிடம் இங்கே இருந்ததில்லை என்பதே உண்மை.
ஆஷ் கொல்லப்பட்ட நாள்.

No comments: