Friday, June 22, 2018

சொல் நானும் ஒரு இந்து என்று

பிராமணனைப்போல்
நீயும்
இந்துதானே..
அவன்
உனக்கு எப்போது வாடகைக்கு வீடு கொடுக்கிறானோ
அப்போது சொல்,
நானும் ஒரு இந்து என்று,
உன் வீட்டுக்குவந்து நீ சமைத்த உணவை
எப்போது
உளப்பூர்வமாக உண்ணுகிறானோ
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று,
உன் உரிமைக்காக
உன் போராட்டத்தில் எப்போது அவன் கைகோர்க்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
கோவிலின் கருவறைக்குள்,
நீயும் அவனும் எப்போது
ஒன்றாக நின்று
அர்ச்சனை செய்கிறாயோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
அவனை
தமிழில் மந்திரம் சொல்லவைக்க
தெம்பும் திரானியும்
உனக்கு எப்போது வருகிறதோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.
நீ பூசாரியாக இருக்கும் கோவிலுக்கு,
அவன் எப்போது குடும்பத்தோடு வந்து
நீ கொடுக்கும் திருநீரை
அவனின் நெற்றியில்
பூசிக்கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
எப்போது அவனும்
உன்னோடு சேர்ந்து
சிலைகளை உடைக்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
அவன் எந்த மாநிலத்துக்குப்போனாலும்..
இந்து பிராமணன்தான்.
நீ
எந்தமாநிலத்துக்குப்போனாலும் தமிழன்தான்.
உன்னை தமிழனாகமட்டும் பார்க்காமல்,
பிறமாநிலத்தவனும்
பிராமணனைப்பார்ப்பதுபோல்..
உன்னையும்
இந்துவாக பார்த்தால்
நடத்தினால்..
அப்போது சொல் நானும் ஒரு இந்து என்று.
மாநில கோர்ட்டுகளிலேயே மல்லுக்கட்டுகிறாயே
உன்னாலும் சுப்ரீம் கோர்ட்
நீதிபதியாக முடியும்
என்றால்..
உன்னை வரவிடுவார்களென்றால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
உன்னால் உன் மகனால்..
இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய முடிந்தால்..
உன்னையெல்லாம் நுழைய
விட்டால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
உன்னால்..
அவர்களால்
நியமிக்கப்படும்
ஜனாதிபதியாகத்தான்முடியும்.
ஆனால்,
ஒரு
ஜனாதிபதியையே நியமிக்கும்,
பிரதமராக
உன்னால் வர
முடியும் என்றால்..
அப்போது சொல் நானும்
ஒரு இந்து என்று.
இரண்டுபேரும்
இந்துக்கள்தானே..
உன்வீட்டுக்கல்யாணத்தை,
அவன் நடத்திவைப்பதைப்போல..
சாஸ்த்திர சம்பிரதாயங்களை
நீயும் கற்றபின்...
அவன் வீட்டு கல்யாணத்தை நீ..
நடத்திவைக்க
அவன் அனுமதித்தால்..
அப்போது
சொல்
நானும் ஒரு இந்து என்று.
இயல் இசை நாடக சபையில்,
உன்னையும் மனிதனாக மதித்து,
உன்னையும் தலைவனாக ஏற்றுக்கொண்டால்.
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
மத்திய அரசு வங்கிகளில்..
தமிழ்நாட்டில்
விண்ணப்பங்களை
தமிழிலேயே அச்சடித்தால்..
அப்போது சொல்
நானும் இந்து என்று.
காவிரி நீரை எப்போது
சமமாக தருகிறானோ..
நதிநீர் பங்கீட்டுப்போராட்டத்தில்..
உன்னோடு பிராமணனும் எப்போது
கலந்து கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
விவசாயிகளின் போராட்டத்தில் எப்போது அவன் கலந்துகொள்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
நீட் தேர்வுக்கு எதிரான
போராட்டத்தில் எப்போது
அவனும் கலந்து கொள்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
நீதான்
நான்தமிழன்
நான்தமிழன் என்கிறாய்.
அவன் எப்போதாவது சொல்கிறானா.
அவனும்
தன்னை தமிழன் என்று
எப்போது ஒப்புக்கொள்கிறானோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.
நாரதகான சபையில்
முறையாக சங்கீதம் கற்றும்
உன்னை பாட
அனுமதித்தால்..
அவர்கள் பார்வையாளராக
அமர்ந்தால் அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
உன்னால்..
சங்கரமடத்தில் சங்கராச்சாரியாரோடு
சரிக்குசமமாக
சம்மணமிட்டு
அமரமுடிந்தால்..
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று.
இந்து அறநிலைய கோவில்களில்
காசுவாங்காமல்..
உன்னை கருவறைக்குள் விட்டால்,
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
அடித்தட்டு மக்களின்
வரிப்பணத்தில்
மருத்துவம் படித்துவிட்டு,
ஊசி போட..
அமெரிக்காவுக்கு ஓடுபவனை,
தடுத்துநிருத்தியபின்
சொல்
நானும் ஒரு இந்து என்று.
ஒவ்வொரு அலுவலகத்திலும்
அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து,
மற்றவர்களை மட்டம்
தட்டுகிறார்களே..
அதை அவர்கள் நிறுத்தியபின் சொல்
நானும் ஒரு இந்து என்று.
பயணங்களில்..
நீ கீழ்தட்டுவர்க்கம்
என்று தெரிந்தவுடன்
பதரியடித்தபடி எழுந்து வேரு இடம் தேடுகிறானே
அந்த பதட்டத்தை அவன் குறைத்துக்கொள்ளும்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
நீ
முருகனை கும்பிடு
முத்துமாரியம்மனை
கும்பிடு
அதுவல்லபிரச்சினை.
இந்து என்று சொல்லிச்சொல்லி.
உன்னை வீதியில்
இறக்கிவிட்டு
அவன்மட்டும் வீட்டுக்குள் இருந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறானே.
அதுதான் வேதனையை
தூண்டுகிறது.

No comments: