Monday, July 23, 2018

கருப்பு ஜூலை 01

சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ஏன் அதற்கு முன்பே சிலோன் என அழைக்கபட்ட பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அவ்வளவு சுமூக உறவு என சொல்லமுடியாது.
ஒரு கட்டத்தில் சிலோனின் தலமையகத்தை சென்னைக்கு பிரிட்டிசார் மாற்றிய பொழுதே, "ஐயகோ இது இந்திய இணைப்பின் முன்னோட்டம்" என வரிந்துகட்டி பிரித்து சென்றவர்கள் இலங்கையர், உபயம் அனாரிகா தர்மபாலா எனும் அவர்களின் புத்தனின் தூதுவன் + யாழ்பாணதமிழர்கள்.
நேருகாலத்தில் 5 லட்சம் இந்தியா வம்சாவழி தமிழரை திரும்ப அனுப்பியதிலிருந்து இலங்கை இந்தியா உரசல் தொடங்கியது, அதாவது இந்திய தரப்பில் முணுமுணுப்பு,இலங்கை தரப்பில் மாபெரும் வெற்றி. யாழ்பாணர் தரப்பில் ஒரு திருப்தி.
படிப்பறிவில்லை,நாகரீகமில்லை பஞ்சம் பிழைக்கவந்த பரதேசி வம்சம் விட்டால் மக்கள்தொகை கூடி வோட்டுவங்கிக்கு வந்து நமக்கு சரிக்கு சரியாக அமர்ந்தால் எப்படி? சீ சீ விரட்டியாயிற்று. நாகரீகம் முக்கியம், கல்வி முக்கியம் தமிழரவாது? தொப்புள்கொடியாவது? வெட்டிவிட்டாயிற்று.
நேரு அப்போது இந்தியபிரதமர், ஆசிய ஓற்றுமை, பஞ்சசீலம் என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்தார். சீனா பின்மண்டையில் அடிக்கும்வரை அவருக்கு உரைக்கவில்லை, அடிபட்டதும் அப்படியே கோமா நிலை.
அதன்பின் இந்திய தலையீடு இலங்கையில் இல்லை, ஆனால் வாய்ப்பு கம்யூனிஸ்டுகள் வடிவில் வந்தது.
உலகெல்லாம் கம்யூனிசதாக்கம், இலங்கையிலும் வந்தது. கட்சியின் பெயர் சிங்களத்தில் ஜனதா விக்தி பிரமுணா சுருக்கமாக ஜேவிபி , தமிழில் மக்கள் விடுதலை கட்சி. கட்சி 1971ல் திடீர் புரட்சி செய்து கொழும்பை முடக்கியது. பெயருக்கு ஒரு ராணுவம் இருந்த இலங்கை கையை பிசைந்து நின்றது, உலகநாடுகளுக்கு உதவிகரம் கேட்டது.
இந்தியபடைகள் அனுப்பபட்டன, முதல் முறையாக இந்தியராணுவம் இலங்கைக்குள் கால்பதித்து, கிளர்ச்சியை அடக்கி மறுபடியும் பண்டாரநாயகாவினை ஆட்சியாளராக்கிவிட்டு திரும்பியது, எந்த இலங்கையரும் அப்போது அதனை ஆக்கிரமிப்புபடை அல்லது கற்பழிப்புபடை என சொல்லவே இல்லை.
கலவரம் ஓய்ந்ததும் வாழ்த்தி அனுப்பினர் இந்தியபடைகளை.இந்தியா நேரடியாக இலங்கையில் தலையிட்ட முதல் நடவடிக்கை இதுதான், ஆனாலும் அந்த கிளர்ச்சி அடக்குவதில் பாகிஸ்தானும் படைகளை அனுப்பியிருந்ததால் லங்கா பாகிஸ்தான் உறவும் வலுத்தது.
சிங்களம் பாகிஸ்தானுடனேதான் உறவாடியாது. இந்தியா கச்சதீவை கொடுத்து வேறுமாதிரி உறவினை வளர்க்க நினைத்த காலமிது.
அதன் பின் இலங்கையில் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சிங்களருக்கு சலுகைகள் அள்ளிகொடுக்கபட ( அதேதான் நமது ஊரில் தாழ்த்தபட்ட மாணவனுக்கும் பிராமண மாணவனுக்கும் இட ஒதுக்கீடு உண்டல்லவா? அப்படித்தான் புரியவில்லை என்றால் மருத்துவகல்லூரி அட்மிசனை சென்றுபார்க்கவும்) தமிழ் மாணவர்கள் போராட கிளம்பினர்.
அதுவரை சாத்வீகமாக நடந்த எதிர்ப்புகள் அதன்பின் வன்முறையாக மாறின, அதனை ஈழதமிழ் அரசியல்வாதிகளும் பயன்படுத்திகொள்ள அதுபெருநெருப்பாக வளர்ந்தது.
போராளிகுழுக்கள் தோன்றின, 30க்கும் மேற்பட்ட குழுக்கள் தொடக்கத்தில் இருந்தது. போராளிகள் என்றால் பகலில் ஒழுங்காக வேலைக்கு சென்றுவிட்டு வார இறுதியிலோ அல்லது நள்ளிரவிலோ போராடமுடியாது. அவர்களுக்கு பணம் வேண்டும், ஆயுதம் வாங்க, பதுக்க,உண்ண, உறங்க,அறிக்கை விட, பேப்பர்வாங்க என ஏராளமான‌ பணம்வேண்டும்.
அதற்காக அரசுவங்கிகளை குறிவைத்தார்கள். அக்கால வசதியான பகுதி யாழ்பாண பகுதி, வங்கிகள் எல்லாம் கொள்ளைஅடிக்கபட்டன, அரசு கருவூலம் கொள்ளையடிக்கபட்டது இன்னும் ஏராளம்.
அடகுகடைகளும் தப்பவில்லை. இதில் பெரியகொடுமை என்னவென்றால் திருடர்களும் தாதாக்களும் திடீர்போராளிகளாகி கொள்ளையடித்துவிட்டு, அப்பணத்தில் பென்ஸ்காரில் போய்கொண்டிருந்தார்கள்.
அன்று வெள்ளையர் விட்டுசென்ற ஆட்சிமுறைபடி சிங்களர்பகுதியில் தமிழ் போலிசாரும், தமிழ்பகுதியில் சிங்களபோலிசாரும் அதிகம். வங்கிகொள்ளை என்றால் போலீஸ்தானே காவலுக்கு வரும். போராளிகளின் அடுத்தகுறி காவல்நிலையம் மீது திரும்பிற்று, சிங்கள போலிசார் பலியாக ஆரம்பித்தனர்.
இது சிங்களர் அதிகம்வாழும் பகுதிகளில் ஆத்திரத்தை கிளப்பிற்று, கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் கூடிற்று. ஆனால் போராளிகளோ காவல்துறையினர கிட்டதட்ட முடக்கும் நிலைக்கு வந்தாயிற்று. போலீஸ் என்றால் எத்தனை திருடர்களுக்கு, கடத்தல்காரர்,சாராயவியாபாரிகளுக்கு கசக்கும், அவர்களும் போலீசாரை தீர்த்துகட்டிவிட்டு நாங்கள் போராளி என சொல்லிகொண்டனர்.
போலீஸ் முடியாவிட்டால் ராணுவம்தான் வரும், வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராணுவம் மேல் தாக்குதல் நடந்தது. ஒன்றும் உருப்படியில்லை. கண்ணிவெடி ராணுவத்திற்கு வைத்தால் செம்மறிஆட்டு கூட்டம் சிதறும், என்னசெய்ய உப்புகண்டம் போடவேண்டியதுதான்.
இந்நிலையில் புலிகள் அமைப்பு பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டது, பெரும் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை கொலைவழக்கில் தப்பிசென்ற செல்லகிளி பம்பாயிலிருந்து யாழ்பாணம் திரும்பியிருந்தார், அவர்தான் தாக்குதலுக்கு தலமை பொறுப்பு.
கொழும்பில் அமைச்சர்கள்,சிங்கள ரவுடிகள் எல்லாம் ஒரு கூட்டம்போட்டு முடிவெடுத்தனர். அதாவது இனி வடக்கில் சிங்கள் மீது தாக்குதல் நடந்தால் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் பெரும் தாக்குதலை நடத்தவேண்டும், அது தமிழரின் வாழ்வில் மறக்கமுடியாத அடியாக அமையவேண்டும். ஆனால் முந்தகூடாது ஆனால் வாய்ப்பு வரும்பொழுது விடவும்கூடாது.
அப்படி அடிக்காவிட்டால் சிங்கள மக்களின் அபிமானத்தை இழந்துவிடுவோம், பெரும்பான்மை இனம் சிறுபான்மையினரிடம் அடிவாங்கினால் அது தற்கொலைக்கு சமம் அல்லவா? என்றெல்லாம் வெறியேற்றிகொண்டார்கள்.
இருபக்கமும் அடிப்பதில் தீர்மானமானமானர்கள், புலிகளுக்கோ ஏராளமான ராணுவத்தினரை கொன்று கவனத்தை திருப்பும் நோக்கம். சிங்களருக்கோ கொழும்புவாழ் தமிழரை மொத்தமாக கொல்லும் பயங்கரதிட்டம், காரணம் போலீஸ் பிணங்களாக சிங்களபகுதிக்கு வந்துகொண்டிருந்தன.
போராளிகுழுக்களில் ஒன்றான டெலோ அமைப்போ வெலிக்கடை சிறையில் இருந்த குட்டிமணி குழுவை எப்படி தப்பவைப்பது என திட்டமிட்டு மேப் வரைந்துகொண்டிருந்தது.
தமிழகத்திலோ ஈழ அரசியல் அப்போது அறவே இல்லை, கச்சதீவு பிரச்சினை இல்லை. எம்.ஜி.ஆர் முதல்வர், கலைஞர் எதிர்கட்சி. காங்கிரஸ் இந்திரா புண்ணியத்தில் உயிரோடு இருந்தது. கலைஞரும் எம்ஜிஆரும் அறிக்கையில் மோதுவார்கள், மக்கள் பார்த்துகொண்டு எம்ஜிஆருக்கு வோட்டளிப்பார்கள், கருணாநிதி கடுப்பில் "தமிழன் சோற்றுபாணை", "பிண்டம்" என முரசொலியில் தீட்டிகொண்டிருப்பார்.
மொத்த இந்தியகவனமும் பஞ்சாபில் இருந்தது, பிந்திரன்வாலே குழு அப்படி அட்டகாசம் செய்துகொண்டிருந்தது.
இந்திராகாந்திக்கோ இலங்கைமேல் திரிகோணமலை விவகாரம் தொடர்பாக கடுப்பு இருந்தது, வாய்ப்பு கிடைத்தால் ஆட்டம் ஆட தயாராக இருந்தார்.
புலிகள் தாக்குதலுக்கு நாள்குறித்தனர் ஜூலை 23 என முடிவெடுத்தனர் (தயாராக பாறைகளை உடைக்கும் வெடிமருந்தை சிங்கள சிமெண்ட் ஆலையிலிருந்து கடத்தினர்). தலமை செல்லகிளி
கிட்டு,மாத்தையா,விக்டர்,பிரபாகரன் என ஆரம்பகால புலிகளின் டீம் களத்தில் இறங்கியது. ராணுவதாக்குதலில் நேரடியாக
பிரபாகரன் பங்கெடுத்த ஒரே தாக்குதல் இதுமட்டுமே. அதன் பின்பு எல்லாம் பங்கர்
பின்னாளில் திட்டம் மட்டும் அவருடையது, யாராவது தளபதிகள் திறமையாக தாக்குவார்கள்.
யாழ்பாணம் திருநெல்வேலி சந்திப்பில் டெலிபோன் டிபார்ட்மெண்ட் வெட்டிவைத்த குழியில் கன்னிவெடி வைத்து காத்திருந்தார்கள். இரவில் இரு ராணுவ வாகனங்கள் ரோந்துவந்தன, எல்லா புலிகளும் பொசிஷனில் தயாராக இருந்தார்கள், கையில் இருந்த விசையை ( நமது ஊரில் கிணறுதோண்ட வெடி வைப்பார்கள் அல்லவா? அதே கருவி) செல்லகிளி இயக்க முதல்வாகனம் தப்பி இரண்டாம் வாகனம் சிக்கியது.
குறிவைத்தது முதல்வாகனத்திற்கு, சிக்கியதோ இரண்டாம் வாகனம், ராணுவத்தார் சுதாரிப்பதற்குள் புலிகள் தாக்கினர், 13 பேர் பலி இருவர் ஓடிவிட்டனர்.
(ஆச்சரியமாக ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தா நிலையிலும் செல்லகிளி குண்டுபாய்ந்து இறந்திருந்தார். எப்படி சாத்தியமானது என இன்றுவரை தெரியவில்லை. பெரும் மர்மம் அவர் சாவு, ஆனால் பிரபாகரன் தனது ஒரு உரையில் கூட தைரியம் மிக்க இவரைபற்றியோ அவரது மர்ம மரணம் பற்றியோ சொல்லாதது கூடுதல் மர்மம்.
இவரது சடலமும் மிக அவசரமாக எரியூட்டபட்டது, மாவீரர் கல்லறை எல்லாம் இவருக்கு இல்லை, ஏன் என்று கேட்டால் கேட்டவர் "இனதுரோகி" ஆகிவிடுவார்.)
வாய்பினை எதிர்பார்த்திருந்த சிங்கள குழு நெட்டிமுறித்து கிளம்பினர், சும்மா அல்ல 13 பேர் உடலும் ரத்தம் வடிய வடிய மேலும் சிதைக்கபட்டு மக்களின் பார்வைக்கு வைத்தனர், இன்னும் சிங்கள் உடல்கள் வருவதாக பிரச்சாரமும் நடந்தது, ஜெயவர்த்தனே சிக்னல் கொடுத்துவிட்டு அமைதியானர், சிங்கள வெறிகூட்டம் கிளம்பிற்று
உலகின் அனைத்து தெய்வங்களும் கண்களை மூடிகொள்ள, அந்த பயங்கரம் தொடங்கியது, யூதர்களுக்கு நாசிகள் செய்ததற்கும், பிரிவினை காலத்தில் இந்திய எல்லையில் நடந்த ரத்தகளறிக்கும் கொஞ்சமும் குறையில்லா கொடுமை அங்கு தொடங்கிற்று.
இலங்கை தமிழருக்கு கருப்பு நாட்கள் அவை. அந்த கருப்பு ஜூலை நெருப்பாய் எரிய ஆரம்பித்தது.

No comments: