Thursday, July 26, 2018

அறிவியல் மற்றும் மருத்துவம் என்பது குறி சொல்வது போன்றது அல்ல.

//கண் பார்வை சரியாக தெரியவில்லை என்றால் கண்ணாடி அணியக்கூடாது. ஏன் அணியக்கூடாது என்றால் அது இயற்கைக்கு எதிரானது , ஏனெனில் மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது கண்ணாடியுடன் பிறப்பதில்லை//
இரண்டாண்டுகளுக்கு முன்பு செந்தமிழன் மணியரசன் என்பவரின் இந்த பேச்சுக்காக அவரிடம் பேஸ்புக்கிலும் அதில் ப்ளாக் ஆனதைத் தொடர்ந்து நீயா நானா நிகழ்ச்சியிலும் மல்லுக்கட்டியது நினைவுக்கு வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சியில் அவர் தன்னால் கண்ணாடி போடாமல் பார்வையை கொண்டுவருகிற சிகிச்சை முறையை இந்த உலகத்துக்கு குறைந்தபட்சம் தமிழ்நாட்டு மக்களுக்காவது தெரியப்படுத்தவேண்டும் என்று கேட்டபோது கடைசிவரை அவர் அந்த சிகிச்சை முறையை சொல்லவேயில்லை. ஏன் இன்றுவரையிலும் அவர் சொல்லவில்லை !
கடைசியாக கோபிநாத் “கத்தியைக் கொண்டு பழத்தையும் நறுக்க லாம் ஆளையும் கொலை செய்யலாம்” என்ற மொண்ணையான பட்டிமன்ற பேச்சு போல “செந்தமிழன் ! உங்களைப்போன்ற இயற்கையோடு வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரிவரும். எல்லாருக்கும் அல்ல “ என பேசி எங்கள் இருவருக்கும் பொதுவாக பேசி சமாதானம் செய்து முடிப்பது போல முடித்தார்.
அறிவியல் மற்றும் மருத்துவம் என்பது குறி சொல்வது போன்றது அல்ல. என் கிட்ட வந்தா தான் நடக்கும் , மற்றவர்களால் அதை பண்ணமுடியாது என புருடா விடுவதல்ல மருத்துவம்.
இந்தியாவில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் இங்கிலாந்திலும் அதே 24 மணி நேரம் தான். இங்க ஒருத்தன் வாயையும் மூக்கையும் பொத்துனா செத்துடுவான் என்றால் ஆஸ்திரேலியாவில் இருக்கறவனை அப்படி பண்ணாலும் செத்துடுவான். இதுதான் அறிவியல்.
அறிவியல் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதல்ல. அது ஆய்வுகளோடும் தரவுகளோடும் உலகம் முழுவதும் நிரூபிக்கப்படவேண்டும்.
வெள்ளிக்கிழமை சாயங்காலம் வீட்டுல வெளக்கு ஏத்தலன்னா வீட்டுக்கு ஆகாது என்பது ஒரு சிலரின் நம்பிக்கை. அது மூட நம்பிக்கையோ ஏதோ ஒரு நம்பிக்கை. ஆனால் அறிவியல் என்பது தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் ஒரு வீட்டுல வெள்ளிக் கிழமை விளக்கு ஏத்தலன்னா வீட்டுக்கு ஆபத்து என்றால் அமெரிக்காவில் கலிபோர்னியா வில் இருக்கிற ஒரு வீட்டுலயும் வெளக்கு ஏத்தலன்னா லும் ஆபத்து ஏற்படவேண்டும். அப்ப தான் அது அறிவியல்.
துரதிர்ஷ்டவசமாக சிலர் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்ட அறிவியல் மருத்துவத்தை ஏதோ பன்னாட்டு சதி போல நினைத்துக்கொண்டு / அப்படி பொய்ப்பரப்புரையில் மயங்கி , “ மருந்தே இல்லாமல் நோயை குணமாக்குகிறேன் , ஊசி ஆஸ்பத்திரி இல்லாமலேயே பிரசவம் பண்ணலாம் , எருமை சாணியை இளநீரோடு சேர்த்து குடித்தா டாக்டர் கிட்டயே போகவேணாம் “ என்றெல்லாம் பசப்புகிற மோசடிப்பேர்வழிகளை நம்பி திசை மாறுவது வருந்தத்தக்கது.

No comments: