Saturday, May 19, 2018

தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமைப் பறிப்பு மசோதாவைக் கொண்டு வந்த சட்டத்துறை அமைச்சர் தமிழர் கந்தையா வைத்தியநாதன்

ஈழ நினைவுப் பதிவில் திமுக குறித்து எதுவும் குறிப்பிடவில்லையே தோழர்...?//
1948ல் இலங்கை சுதந்திரம் பெற்றதும் நடந்த பொதுத்தேர்தலில் எஸ்டி சேனநாயக்காவின் ஐக்கிய தேசியக் கட்சி(UNP) வெற்றி பெற்று, அமைந்த முதல் அமைச்சரவையில் 13 பேர் கேபினட் அமைச்சர்கள்.அதில் ஏழு பேர் தமிழர்கள்.
அன்று, சட்டத்துறை அமைச்சர் தமிழர் கந்தையா வைத்தியநாதன், புலம் பெயர்ந்த தமிழர்களான தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமைப் பறிப்பு மசோதாவைக் கொண்டு வந்தார்.
அது வெற்றிகரமாக நிறைவேறியது.
அதை இந்திய வம்சாவளி பூர்வ தமிழர்கள் கண்டு கொள்ளவில்லை.
ஏன்.?
1930 களில் இந்தியாவிலிருந்து தோட்டத்தொழிலாளர்களாகக் கூலி வேலைக்குக் குடிபெயர்ந்தோர் ஏறத்தாழ ஏழரை லட்சம் தமிழர்கள் இருந்தனர்.
இவர்களை, இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் மிகவும் கேவலமாகப் பார்த்தனர்.
காரணம் அவர்களில் அதிகமும் தலித் மக்கள்.மேலும் பிழைப்புக்காக வந்த கூலிகள் என்கிற பார்வையும் அவர்கள் மேலிருந்தது.
அதுவே,குடியுரிமைப் பறிப்புக்கு இலங்கைத் தமிழர்களை அமைதி காக்க வைத்தது.
அப்போதே தமிழர்கள் பிளவுபட்டு விட்டனர்.
இந்த சிங்கள வெற்றி பிறகு யுஎன்பி யிலிருந்து பிரிந்து இலங்கை சுதந்திரா கட்சி துவக்கிய பண்டாரா நாயக்காவால் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனும் துவேஷ முழக்கத்தை வைக்க உதவியது.
பிறகு தான் ஒட்டுமொத்த தமிழர்களும் சற்று விழித்துக் கொண்டனர்.
இயக்கங்கள் பல துவங்கப் பட்டன.
அவற்றை இங்கு ஆதரித்த எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒரு விஷயத்தை நன்கு விளங்கி வைத்திருந்தனர்.
அது, இலங்கை எனும் நாட்டிற்குள் தனி தமிழ் நாட்டை வாங்கித் தரும் வலிமை தமக்குக் கிடையாது என்பதுதான்.
இந்தியா போன்ற இத்தனை பெரிய தேசத்தில், பல மொழிகள் பேசுவோர் தமக்கான அதிகாரப் பகிர்வுகளுடன் ஒரு ஒன்றியத்தில் இணைந்து,வாழ்ந்து வருகின்றனர்.இதில் அரசியல் ரீதியாகப் போராடவே பழகியவர்கள் தமிழக அரசியல் தலைவர்கள்.
இலங்கை ஒரு சிறிய தீவு.அதில் பிரதான இரண்டு மொழி பேசும் மக்கள்.அதில் அரசியல் செய்து சறுக்கிய தமிழர்கள்.
பிறகு தனி நாடு வேண்டும் என ஆயுதப் போராட்டத்திற்கு நகர்கின்றனர்.
அவர்களுக்கு ராணுவ உதவி செய்யும் அதிகாரம் தமிழகத்துக்கு இல்லை.
மேலும், இலங்கைத் தமிழ் அரசியலை வழி நடத்துமளவுக்கு செல்வாக்கு தமிழகத்தில் எவருக்கும் கிடையாது.இருந்தாலும் அவர்கள் ஏற்கப் போவதுமில்லை.
இதுதான் இன்று வரை நிலைமை.!
திமுகவைப் பொறுத்தவரை,
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தமிழினத்தலைவர் எனும் பிம்பத்தை நன்கு உருவாக்கிக் கொண்ட கலைஞருக்கு, அதுவே எதிராகவும் ஆகிப் போனது.
2009 என்பது திமுக வுக்கு ஒரு வாய்ப்பு அல்லது சோதனை.
அதில் மத்திய அமைச்சரவைப் பதவிகளைக் கைப்பற்றுவதா அல்லது காங்கிரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு, ஆட்சியை இழப்பதா என முடிவெடுக்க வேண்டியிருந்தது.
இரண்டில் எதைச் செய்தாலும் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்காது என்கிற உண்மை தனியே இருக்க, தமிழினத் தலைமை எனும் இமேஜ் மட்டுமே திமுகவின் பிரச்சினை.
ஈழத்திற்காக ஆட்சி போயிருந்தால் திமுக இமேஜ் மேலும் உயர்ந்திருக்கும்.
இலை மலர்ந்தால் ஈழம் மலருமெனும் சீமான் உளறல்களும், மீண்டும் அதிமுக ஆட்சியும் வராமல் போயிருக்கலாம்.
திமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாம்.
ஆனால் இவை யாவும் நிகழ்தகவுகளே.
எனவே இது குறித்து கவலையோ அக்கறையோ பட வேண்டியது திமுகவினர்தானே தவிர
ஈழ அக்கறை கொண்டவர்களல்ல.
மறுபுறம், திராவிடத் தெலுங்குப் பாசமே தமிழின அழிப்புக்குத் துணை போகச் செய்தது என்று பேசும் தமிழ்த் தேசியர்கள் ஆபத்தானவர்களாக இருக்கின்றனர்.
2009 காலகட்டத்தில் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியோ பாமகவோ ஈழத்திற்காக எந்தப் பெரிய போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
ஆனால், எம்பியாக இருந்து ஈழத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் துயரங்களை வெளிச்சமிட்டதுடன், தொடர்ந்து ஈழ ஆதரவு போராட்டங்களை நடத்திய விசிக தலைவரையே ஜாதித் தமிழ்த் தேசியம் குறிவைத்தது.
கலைஞரை எதிர்த்து விட்டு ஜெயலலிதாவைத்தான் ஆதரித்தனர்.
இன்று வரை திமுக எதிர்ப்புப் பேசிய தமிழ்த் தேசியம் தனது ஜாதி ஆதிக்க மனநோயையும், பார்ப்பன அடிமைத்தனத்தையும் இழக்கவில்லை.
எனில் விமர்சிக்கப் பட வேண்டியது திமுக அல்ல.
தமிழ்த் தேசியமோ, தமிழின ஒற்றுமையோ பேசுவதற்குக் கொஞ்சமும் அருகதையற்ற இந்த ஊர்த்தெருத் தமிழ்த்தேசியமே.
காரணம், தீர்வு அல்லது மாற்றம் என்பது மக்களிடமே ஏற்பட வேண்டும்.
அதைக் கண்டுகொள்ளாமல், ஈழத்தை வெறும் அரசியல் வணிகமாக்கி
இன/மொழி/ஜாதி அடிப்படை வாதத்தை உயர்த்திப் பிடிப்போரே எதிர்க்கப் பட வேண்டியோராய் உள்ளனர்.

No comments: