Saturday, May 19, 2018

பிரபாகரன் எனும் பாசிஸ்ட் பற்றிய உண்மையை உரக்கச் சொல்வோம்

மே 18: கருணாநிதியைத் தூற்றுவதும் பிரபாகரனைப் பற்றி மௌனிப்பதும்.
மே 18 2009-இல் முடிவுக்கு வந்த இலங்கை உள் நாட்டுப் போர் பற்றி இன்று வரும் பெரும்பாலான பதிவுகள் கருணாநிதி துரோகம் இழைத்தார் என்றும் உலக நாடுகள் கை விட்டன என்றும் புலம்புகின்றன. இலங்கைத் தமிழர்களின் அந்த அவல முடிவுக்கு முழு முதற் காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
ஒரு பாசிஸ்ட் இயக்கத்தை நடத்தி ஓர் உரிமைப் போரை கோர முடிவை நோக்கி நகர்த்திய கயமை பிரபாகரனையே சாரும். இதைப் பற்றி மழுப்பலாக மௌனம் காத்துவிட்டு ஏனையோரை நோக்கி விரல் நீட்டுவது அயோக்கியத்தனம்.
போரின் முடிவில் அமெரிக்க வால் ஸ்றீட் ஜர்னல் ஒரு செய்திக் கட்டுரையில் 2004 முதல் 2009 வரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தப் பகுதிகள் எப்படி படிப்படியாக குறைந்துக் கொண்டு வந்து கடைசியில் கடற்கரை மணலில் புதைந்தது என்பதை காட்டியது. அடைய நினைத்த நிலப்பகுதியின் பெரும்பான்மையை அடைந்த பின்னும் தீவிரவாதத்தை கைவிட முடியாத பாசிஸ்ட் இயக்கம் என்ன முடிவை அடையுமோ அதையே புலிகளின் இயக்கம் அடைந்தது. அதில் துயரம் மக்கள் பகடைக் காயானது.
9/11 நிகழ்வுக்கு பின் தீவிரவாதம் குறித்த மக்கள் பார்வையும் உலக நாடுகளின் பார்வையும் மாறியது. 'One man's terrorist is another man's freedom fighter' என்பது கைவிடப்பட்டு உலக நாடுகள் தீவிரவாதம் எதன் பொருட்டு நடந்தாலும் அது தீவிரவாதமே எனும் நிலைக்கு வந்து தீவிரவாதத்தை அரசுகள் ஒடுக்கும் முயற்சிக்கு இடையூறாக, மனித உரிமைகள் காற்றில் பறந்தாலும், இருக்கக் கூடாதென்ற நிலை வந்தது. இதுப் புரியாத பாசிஸ்ட் பிரபாகரன் போரை ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் தனி அரசாங்கமே நடத்தினார் பிரபாகரன் ஆனால் அது அரசாங்கமே அல்ல, காட்டு தர்பார். பாசிஸ்ட் கொலைக்கார கொடுங்கோல் ஆட்சி. இன்று பிரபாகரனின் மகனுக்காக உருகும் எத்தனைப் பேர் குழந்தைப் போராளிகளை உருவாக்கி அவர்களை மரணத்துக்கு அனுப்பிய பிரபாகரனை கண்டிக்கத் தயார்?
பத்மனாபாவுக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் ஜெயகாந்தன் புலிகளை மிக மிக கடுமையாக சாடி அவர்களுக்கு கொலைச் செய்வதை தவிர வேறொன்றும் தெரியாது என்றார்.
போரின் கடைசிக் கட்டத்தில் தன் மக்களையே மனிதக் கேடயங்களாக பயன் படுத்தி கடைசித் தருணத்தில் தப்பிச் செல்ல முயன்ற தம் மக்களையே சுட்டுக் கொல்ல ஆணையிட்ட கொலைவெறி பிடித்த பாசிஸ்ட் பிரபாகரன் இலங்கைத் தமிழர்களை பீடித்த நோய்.
இலங்கை அரசு, ஜெயவர்த்தனே, பிரேமதாஸா, ராஜபக்‌ஷே ஆகியோரெல்லாம் யோக்கியர்கள் அல்ல. மனித உரிமை மீறல்களை அவர்கள் எல்லோரும் செய்தார்கள். குறிப்பாக 2009 போரின் போது ராஜனக்‌ஷே மனித உயிர்களுக்கு சற்றும் மதிப்பே இல்லாமல் பிரபாகரனை வீழ்த்துகிறேன் என்றப் பெயரில் மனித உரிமை மீறல்களையும் போர் நியம மீறல்களையும் சகஜமாக நடத்தினார். தீவிரவாதத்தை ஒடுக்க முனையும் அரசு தீவிரவாதியாகி அதை நியாயப்படுத்த முடியாது. அரசுகளுக்கு உயரிய கடமை இருக்கிறது. புலிகள் மருத்துவமனைகளுக்கு அருகே ராக்கெட் லாஞ்சர்கள் வைக்கிறார்கள் என்றுச் சொல்லி மருத்துவமனை மீது குண்டுப் பொழிந்தது அரக்கத்தனம். பிரபாகரனை கொல்வதற்காக செஞ்சோலை மீது தாக்குதல் நடத்தியது அரக்கத்தனம்.
சரி அப்படியென்றால் ஏன் பிரபாகரனை குற்றம் சொல்ல வேண்டும்? விடுதலை இயக்கங்கள், பிரிவினை இயக்கங்களின் தோற்றுவாயே ஆட்சியாளர்களின் மாறாந்தாய் மனப்பான்மையும் ஆட்சியாளர்களின் அறம் மீறிய கொடுங்கோன்மையுமே. அவ்வியக்கங்களின் தலைமைய தான் உரிமைக் கோரும் மக்கள் அவ்வியக்கங்களின் போக்குக்கும், முடிவுக்கும் முதன்மை பொறுப்பாளியாக்க முடியும். தன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் திசை மாறி வன்முறை பாதையில் அடியெடுத்து வைக்கிறது என்பதை பார்த்து போராட்டம் உச்சத்தில் இருந்தப் போதும் அதை வாபஸ் பெற்றத் தலைவனை உலகம் இன்றும் மகாத்மா என்றுக் கொண்டாடுகிறது. ( உடனே நான் இலங்கையில் காந்தியப் போராட்டம் நடைப்பெற்றிருக்க வேண்டும் என்றுச் சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது).
அமிர்தலிங்கம், பத்மநாபா, ராஜீவ் காந்தி என்று ஒவ்வொரு கொலையையும் பிரபாகரன் நிகழ்த்திய போது அவரது பாசிஸ்ட் தன்மையை மறைத்தோ புரிந்துக் கொள்ளத் தவறியோ அவரை போராளியாக கொண்டாடிய எல்லோரும் ஒரு வகையில் மே 18-2009-க்கு காரணமே. இன்றாவது பிரபாகரன் எனும் பாசிஸ்ட் பற்றிய உண்மையை உரக்கச் சொல்வோம்.

No comments: