Thursday, May 17, 2018

நான்கே கேள்வி பதில்களில் தமிழ்த்தேசியம் - கட்டுரை

கிளி ஒரு தமிழ் தேசியவாதி எனபதால் தான் கிளியை அதிகம் பிடிக்கிறது. ஈழத் தொப்புள் கொடி என்பது அறுபடாமல் இருந்தால் தாய்க்கும் நல்லதல்ல, சேய்க்கும் நல்லதல. குழந்தை தாயைவிட அறிவாலும் ஆற்றலாலும் வளர்ந்தால் தான் தாய்க்கும் பெருமை, சேயும் செழித்து வளரும். இன்னும் புடிப்பால் பாப்பா ரேஞ்சிலேயே சேயை டீல் செய்து அரசியல் செய்யும் ஆட்களை ஒதுக்கித் தள்ளவேண்டியது இரு நாட்டு தமிழர்களின் கடமை. போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தால், தமிழ்நாடு, ஈழம், சிங்கப்பூர் என தமிழ்பாடும் நாடுகளின் வலிமையான கூட்டமைப்பு பின்னாட்களில் கிட்டும். ஐக்கிய அரபு நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம் எனப்படும் UK போன்று வலிமையானதொரு கூட்டமைப்பாக தமிழ் பேசும் தேசங்கள் ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும். அப்படி நிகழ வைப்பது தான் உண்மையான தமிழ் தேசியத்தின் பார்வையாக இருக்கவேண்டும்.

நான்கே கேள்வி பதில்களில் தமிழ்த்தேசியம் - கட்டுரை
கேள்வி 1 :- ஈழ தமிழர் மேல் இவ்வளவு காட்டம் ஏன் ?..அவர்களும் தமிழர் தானே ? பின் ஏன் திராவிட திம்மிகள் வரிந்துகட்டிக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள் ?
பதில் :- ஒரு முக்கியமான பாகுபாட்டை சுற்றிவளைக்காமல் உங்களுக்கு விளக்குகிறேன். ஈழத் தமிழர் ஆதரவுக்கும் , விடுதலைப் புலிகள் ஆதரவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஈழத் தமிழரின் ஒரு சில நலனுக்காக புலிகளின் ஒருசில செயல்பாட்டை ஆதரிக்கலாம். ஆனால் " சில " விஷயங்களுக்காக விடுதலைப் புலிகளின் கோட்பாட்டை எல்லாம் முழுவதும் ஏற்பது என்பது சரியல்ல.சபாரத்தினம், பத்மநாபா எல்லாம் ஏலியன் தமிழர்களா என்ன ? துரோகி முத்திரை குத்தப்பட்டு அவர்கள் எல்லாம் காவு வாங்கப்பட்டது எல்லாம் ஒட்டுமொத்த ஈழத்தமிழரின் விருப்பமா சொல்லுங்கள் ?.
புலிகளின் இந்தமாதிரியான செயல்களை எல்லாம் நியாயப் படுத்துவது என்பது ஈழத்தமிழர் என்றாலே அமைதியை விரும்பாதவர்கள், எதிர்க்கும் ஆட்களைக் காவு வாங்கும் ஆட்கள் என்ற தப்பான அபிப்பிராயத்தை விளைவிக்கும் அல்லவா ? இப்பொழுது ஈழத்தமிழரை களங்கப்படுத்துவது புலிகள் ஆதரவாளர்கள் தான் என்பது ஒரு கோணத்தில் சரிதானே ?
உதாரணமாக திமுக வை யோ, அதிமுகவையோ எதிர்க்கும் யாரோ ஒருவரை நீங்கள் தமிழக மக்களின் ஒட்டுமொத்த விரோதி என்ற முத்திரை குத்த இயலுமா ? அதேபோல் தான் புலிகள் விவகாரத்திலும். ஆகவே புலிகளின் நிலைப்பாடுகளின் மேல்தான் விமர்சனமே தவிர ஈழத் தமிழர் மேல் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
வடிவேலு காமெடி ஒன்றில் " நான் சொல்லலீங்க..அய்யாசாமி தான் சொல்லச் சொன்னார் " என்று அவரை மாட்டிவிட்டு செல்லும் கதாபாத்திரம் போல் , விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை விமர்சிக்கும்போது அதை லாவகமாக "ஈழ தமிழர் எதிர்ப்பு " என்று திரிப்புவாதம் பேசும் ஆட்களை முதலில் கண்டுகொள்ளுங்கள்.
கேள்வி 2:- இங்கே நடக்கும் விவகாரங்களுக்கு அங்கே இருப்பவர்கள் குரல் கொடுத்தார்களா ? பின் நாம் ஏன் அவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் ?
பதில் : ஈழத்தமிழர்கள் நம்மை எப்படி நினைக்கிறார்கள் என்பது வேறு விஷயம். தமிழக தமிழர்கள் இன்றளவும் ஈழத்து மக்களை சகோதரர்களகத் தான் பார்க்கிறார்கள். பார்ப்பார்கள். தமிழக அரசியல் சூழல்களையே புரட்டிப் போடும் முடிவுகளை ஈழத்தமிழர்களுக்காக தாங்கிக்கொண்டது தமிழ்நாடு.அதுமட்டுமல்லாமல் ஒரு பிரதமரைக் கொன்றதன் மூலம் அயல்தேசங்களில் நான் தமிழன் என்று சொன்னால் " தீவிரவாதி " என்ற சொல்லை கீழ்மையாக நினைக்காமல், அதில் உள்ள நியாயத்தையும் புரிந்துகொண்டு, ஒரு இனம் சிங்களர்களால் வஞ்சிக்கப்படுவதை தெளிவாக எடுத்துரைத்து, புலிகளின் செயல்களால் மொத்த ஈழத்தமிழர் படும் அல்லலையும் தவறாக சித்தரிக்கக்கூடாது என்று பேசும் தமிழக தமிழர்கள் அநேகம். சந்தேகம் இருந்தால் விசாரித்துப் பாருங்கள்.
மேலும் ஒரு பெரும் துயருக்குப்பின் ஜப்பானியர்கள் காட்டிய எழுச்சிக்கு ஒப்பானதொரு தொழில், வர்த்தக, அறிவியல் நல்வாழ்வியல் எழுச்சியை காட்டவேண்டிய அவசியத்தில் ஈழ மக்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அடித்துப் பிடித்து தங்களை மீண்டும் கட்டமைக்க வேண்டும். தனியாக வான்படை இருக்கிறது, நீர்மூழ்கி கப்பல் இருக்கிறது , கொழும்பு மீது வான்தாக்குதல் நடத்தும் வன்மை இருக்கிறது என்பது பெருமையல்ல. எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தைவிட எங்களிடம் பெரிய டிஜிடல் நூலகம் இருக்கிறது. திருட்டுவிசிடி கள் செய்வதை விட நாங்கள் அறிவியல் புரட்சி செய்கிறோம், சிங்கப்பூர் என்ற தேசம் தமிழர்களின் தனி உழைப்பால் முன்னேறியதைப் போல் முன்னேறி காட்டவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அந்த வேளையில் அவர்கள் அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி அதிகம் சிந்திப்பது தான் சரி.
தமிழக பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கக்கூடிய தீரம் தமிழர்களுக்கே இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அதனால் தான் அவர்கள் பெரியதாக கண்டுகொள்வது இல்லை. பீ தமிழன், வேசித் தமிழன் என ஒருசில சங்காத் தமிழர்கள் தமிழக தமிழர்களை தூஷணம் செய்தாலும் கூட அது புறந்தள்ளப்பட வேண்டியது இதனால் தான். சிங்கப்பூர் எப்படி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வளமான தேசமாக எழுந்து நின்றதோ அதே போல் ஈழமும் எழுந்து நிற்க வேண்டும். எனவே தமிழ்நாட்டில் இருக்கும் சில்லரைப் பிரச்சனைகளுக்கு எல்லாம் அவர்கள் குரல் கொடுத்தார்களா என்று கேட்பது தவறு ?.
அவர்கள் மேலேழும்பட்டும் பின்பு அவர்கள் செம்மரக் கொலைகளுக்கு குரல் கொடுத்தார்களா , ஐ ஐ டி போராட்டங்களுக்கு குரல் கொடுத்தார்களா என்று விமர்சிக்கலாம். அதுவரையில் அவர்கள் செய்வது சரியே.
கேள்வி 3 :- அரக்கரே .. இப்படியும் பேசுகிறீர், அப்படியும் பேசுகிறீரே...பின் யாரை தான் நோவது ?
பதில் அரசியல் லாபங்களுக்காக மட்டுமே ஈழ மக்களை வியாபாரப் பொருளாக்கும் ஆட்களை தான் நோக வேண்டும். ஈழ மக்கள் நமது பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாதது தவறில்லை என்று சொன்னேனே தவிர, இங்கேயே தமிழக தமிழனாகப் பிறந்து தமிழகப் பிரச்சனைகளை மறந்த ஆட்களை எல்லாம் உத்தமர்கள் என்று சொல்லவில்லை.
உதாரணம் ஓர் அண்டார்டிக் தமிழர், தமிழக மக்களுக்கான பெரியார்- அம்பேத்கர் - ஐ ஐ டி போராட்டத்தில் ஈழ தமிழர்கள் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நியாயங்கள் தான் கேட்கப்பட்டன. உண்மையில் இங்குள்ள தமிழர்கள் மேல் அக்கறை இருந்தால், இந்த மண்ணில் தமிழனாக பிறந்திருக்கிற ஆளாக இருந்தால் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்திருக்க வேண்டும். இதை " ஆரியர்-திராவிடர் " பிரச்சனை.. நாம் வேடிக்கை பார்ப்போம் என்று சொல்லியிருக்கக் கூடாது. தங்கள் மக்களுக்காக எப்படி ஈழத் தமிழ்கள் வரிந்து கட்டிக்கொண்டு பேசுகிறார்களோ அதில் இருக்கும் வேகத்தில் கால்வாசியாவது நமக்கும் வேண்டாமா ? ஆனால் அதையும் "தமிழருக்கு சம்பந்தம் இல்லாத போராட்டம் " என்று சித்தரித்து, பிரபாகரனை ஆதரிப்பது மட்டுமே தமிழனின் தலையாய கடமை என்று சொல்வதுபோல் பேசுவது அபத்தம். தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு தமிழனின் பிரச்சனை எலாம் பிரச்சனை அல்ல, நாடு என்றால் அது ஈழம் மட்டுமே, தலைவன் என்றால் அது பிரபாகரன் மட்டுமே என்று இங்குள்ள நியாயங்களை எல்லாம் மறந்துவிட்டு அரசியலுக்காக ஈழம் பேசும் ஆட்கள் தான் ஆபத்தானவர்கள். அவர்களை தான் நீங்கள் நோக வேண்டும்.
இத்தகைய ஆட்கள் தான் ஈழ மக்களை எல்லாம் வியாபாரப் பொருளாக்கி அவர்களை அசிங்கப்படுத்துவது. இத்தகைய ஆட்கள் தான் தமிழக தமிழர்களை எல்லாம் தங்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் உணர்ச்சி அரசியல் மட்டுமே பேச வைத்து அறிவுப் புரட்சியை மழுங்கடிப்பது. இவர்களை எல்லாம் கண்டுகொண்டால் இரு நாட்டு தமிழர்களுக்கும் நலம். ஆம்...இரு நாடு என்று தெரிந்தே தான் கூறினேன்.
அப்பொழுது " நீங்கள் வேறு நாங்கள் வேறு " என்று இரு நாட்டு தமிழர்களும் பிரிந்து நிற்க வேண்டுமா ?
ஒரு விஷயம் சொல்கிறேன். இப்பொழுது உள்ள உலக வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றால் அது 50 வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அதைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
புதிய நாடுகள் உருவாவது என்பது வெகு சாதாரண விஷயம். ஆனால் ஒரு புதிய நாடு உருவாக அங்கே தேவை அறிவுப் புரட்சி. ஆயுதப் புரட்சியால் நாடுகளை புதியதாக உருவாக்கினால் அதை ஒடுக்க "பெரியண்ணன் "கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். ஆணித்தரமாக, மெல்ல மெல்ல பிரிந்து சென்று தனி அதிகாரம் , தன்னிறைவு பெறுவது எப்படி என்று ஸ்காட்லான்ட் ஆட்களுக்கு தெரிந்திருக்கிறது. அவர்கள் மெல்ல மெல்ல அதி நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அப்படி முன்னெடுத்து செல்ல அவர்களுக்கு பின்புலமாய் இருப்பது அறிவு எனும் ஆயுதம். கல்வி எனும் ஆயுதம்.அதை முழுமையாக வியாப்பிக்க இருதேச தமிழர்களும் கல்வி ரீதியிலாக முன்னேற முன்னேற வேண்டும்.
அப்படி இரு நாடுகளும் முன்னேறிவிட்டால் அசையாத ஆசிய சக்தியாக தமிழக தேசங்கள் திகழும். ஆசிய நாடுகளுக்கு சவால்விடும் வகையில் நாம் முன்னேறலாம். ஒருவேளை வாய்ப்பு இருந்தால் கிழக்கு மற்றும் மேற்கு செர்மனி பெர்லின் சுவர் உடைந்து இணைந்ததுபோல் இரு நாடுகளும் இணையலாம்.
வட கொரியா, தென் கொரியா தனி தேசங்களாக இருந்தாலும் மொழி ஒன்றே...இன்று அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் கொரிய பொருட்கள் இல்லாத சந்தையே இல்லை. பிரிந்து இருந்தாலும் முன்னேறி காட்டிய தேசங்கள் அவை. தமிழக தயாரிப்புகள், அறிவு ஜீவிகள் எல்லாம் உலக வியாப்பித்து கொரியர்களை விட சுலபம். பிளவு பட்டு அவர்கள் நிற்பதுபோல் நாம் நிற்பது இல்லை. நமது வளர்ச்சி எனது அசுர வளர்ச்சி அல்ல. அரக்க வளர்ச்சியாக இருக்கும். ..
உலக அரசியலில் எதுவும் நடக்கும். ஆனால் அதுவரை தீரமிக்க ஒரு இனமாக பரிணமிக்க அணைத்து தமிழர்களும் படிக்க வேண்டும். தூதரகத்தை தாக்குவோம், சிங்களப் பெண்ணை கற்பழிப்போம், குண்டு வீசுவோம், மெழுகு வர்த்தி தூக்கினால் தான் தமிழன், வடுக வந்தேறி , விடுதலைப் புலிகளை ஆதரித்தால் தான் தமிழன் என்ற வெற்றுக் கூச்சல்களை புறந்தள்ள வேண்டும். அரசியல் லாபங்களுக்காக மட்டும் துரோகியே என்று கைதூக்கும் ஆட்களை எல்லாம் தான் கண்டு ஒதுக்க வேண்டும்.
அரக்கரே இறுதிக் கேள்வி :- அடிக்கடி இரு நாடுகள் நாடுகள் என்று பேசுகிறீர்களே....அப்பொழுது நீங்கள் தமிழ் தேசியவாதியா ?
பதில் ஒவ்வொரு திராவிடக்கருத்தாளரின் முகத்திரையை கிழித்தீர்கள் என்றால் அங்கு தமிழ்த்தேசியம் இருக்கும். அதுதான் நிஜமான தமிழ்த்தேசியம். அதன் படி நானும் ஒரு தமிழ்த்தேசியவாதிதான்.

No comments: