Thursday, May 17, 2018

திமுக அரசு கலைக்கப்பட்ட நாட்கள்

எந்த சந்தேகமும் இல்லாமல், அரசே ஒப்புக்கொண்ட அசாதாரண காலம் அது, ஜூன் 25 1975ல் இந்த தேசத்தின் ஒட்டுமொத்த ஜனநாயக மான்புகளையும் தூக்கி வீசும்படியான நெருக்கடிநிலை பிரகடன அறிவிப்பை வெளியிட்டார் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, எதிர்கட்சிகள் தொடங்கி கருத்துரிமை போராளிகள் வரை இந்திய ஜனநாயகத்தின்பால் நம்பிக்கை கொண்ட அத்தனை பேரும் பேரதிர்ச்சிக்கு உள்ளானார்கள், அந்த அதிர்ச்சியின் சூட்டை மொத்த இந்தியாவும் உணர்வதற்குள், நெருக்கடிநிலை எதிர்ப்பு சக்திகளின் பதட்டம் குறைவதற்குள், அடுத்த நாளான 26 ஜூன் 1975ம் தேதி அதிகாலை தென்னகத்தின் பிராந்திய கட்சி ஒன்றின் செயற்குழு கூடி.. இது சர்வாதிகாரம் என்று சொல்லி கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியது, நிறைவேற்றிய கட்சி திமுக, அந்த செயற்குழுவின் தலைவர் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர்
.
இந்தியாவின் அத்தனை மாநிலங்களும் எமர்ஜென்சியின் பாதிப்புகளால் திண்டாடியபோது தமிழகம் வழக்கமாக இயங்கிக்கொண்டிருந்தது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் தலைவர்களும் தமிழகத்தில் தஞ்சம்புகுந்து கொண்டிருந்த காலம் அது, இந்தியாவின் ஜனநாயக தீவு என்று சொல்லும் அளவிற்கு எமர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் சங்கநாதம் முழங்கிக்கொண்டிருந்தார்.. ஆனால் அத்தனையும் அதிக காலம் நீடிக்கவில்லை ஆறே மாதத்தில் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது பின்னர் இந்தியாவின் மைய நீரோட்டத்தில் தமிழகமும் கலந்துவிட்டது.. அதற்கு பிறகான காலகட்டங்களில் பத்திரிக்கைகள் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன, கலைஞருக்கும் திராவிட முன்னோடிகளுக்கும் சாதகமான செய்திகள் வெட்டி வீசப்பட்டன, அவர்களுக்கு எதிரான அவதூறுகள் தாராளமாக அனுமதிக்கப்பட்டன.. கைதுகள், தடைகள், கொடுமைகள் என்று சகலவிதவான பலப்பிரயோகங்களுக்கு பிறகும் அந்த கட்சியை சிதைக்க முடியவில்லை ஆனால் இவ்வளவு பெரிய எதிர்நீச்சல் போட்டதன் விளைவாய் அமைப்பு ரீதியாக பலத்த அடிவாங்கியிருந்தது அந்த கட்சி, அந்த பலவீனம் எமர்ஜென்சிக்கு பிறகான தேர்தலில் வெளிப்பட்டது.. பிறகு அரசியல் வானில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அப்படி இப்படி என்று பதினான்கு ஆண்டுகள் ஓடியபிறகு தான் அந்த கட்சியால் மீண்டும் ஆட்சிக்கே வர முடிந்தது
.
பெரும் இடைவெளிக்கு பிறகு, தமிழக அரசும் அது சார்ந்த துறைகளும், தமிழ்நாட்டின் கட்டமைப்பும் மிக மோசமாக சிதைந்து போயிருந்த காலகாட்டத்தில் 1989ல் திமுக அரசு தமிழகத்தில் அமைந்தது, பெண்களுக்கு சொத்துரிமை உட்பட எண்ணற்ற வரலாற்று சாதனைகள் படைக்கப்பட்டன.. மத்தியிலே சமூக நீதி காவலர் வி.பி.எஸ் அவர்களின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தது, மத்தியிலும் மாநிலத்திலும் நல்ல சூழல் நிலவிய அந்த காலகட்டத்தில் ஈழ விடுதலை போர் புதிய உச்சத்தை எட்டியிருந்தது.. 1987ல் நடந்த கரும்புலிகள் தாக்குதலை தொடர்ந்து ராஜூவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் போடப்பட்டு, இந்திய அமைதிகாப்பு படை அங்கே அனுப்பப்பட்ட மூன்றாவது மாதத்தில் தொடங்கிய ஐ.பி.கே.எப் vs விடுதலை புலிகள் யுத்தம் பதினைந்து மாதங்களை நெருங்கிக்கொண்டிருந்தது.. ஏற்கனவே வைகோவின் பயணத்தை வைத்து அந்த கட்சி மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன, இந்த நிலையில் ராஜூவ் காலத்திலிருந்தே இலங்கை பிரதமர் பிரேமதாசா வற்புறுத்தியபடியும், கலைஞர் உள்ளிட்ட தமிழக தலைவர்களின் கோரிக்கையை ஏற்றும் வி.பி.எஸ் தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு, அமைதி காப்பு படையை திருப்பி அழைத்துக்கொண்டது, இந்தியா திரும்பி வந்து தமிழகத்தில் இறங்கிய படையை மரபை மீறி வரவேற்க செல்ல மாட்டேன், எதையும் சந்திப்பேன் என்று அறிவித்தார் அன்றைய முதல்வர் கலைஞர், இதையே அவருக்கு எதிரான ஆயுதமாக்க நினைத்து அறிக்கை வெளியிட்டு ஆட்சியை கலைக்க கோரினார் அம்மையார் ஜெயலலிதா.. ஆனால் கலைஞர் இன்னும் தீவிரமாக முடிவெடுத்தார், இந்திய அமைதிகாப்பு படை வெளியேறிவிட்டதால் எங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கூறி ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப் உள்ளிட்ட பிற போராளி இயக்கங்கள் தமிழகத்தில் தஞ்சம் கேட்டனர், மத்திய அரசு ஒத்துக்கொண்டபோதும் கலைஞர் மறுத்துவிட்டார் விளைவாக அவர்கள் எல்லோரும் ஒரிசாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர் ஆனால் இதையும் கலைஞருக்கு எதிரான அரசியலுக்கு பயன்படுத்தி எதிர்கட்சிகள் அறிக்கை வெளியிட்டன
.
கொஞ்சம் கொஞ்சமாக பதட்டம் அதிகரித்துக்கொண்டிருந்த நேரத்தில் பேரிடியாய் நடந்து முடிந்தது அந்த நிகழ்வு, 20.06.1990 ம் ஆண்டு பத்மநாபா உள்ளிட்ட பதினைந்து பேர் சுட்டுக்கொல்லப்பட, அவை புலிகளால் நிகழ்ந்ததென செய்திகள் பறந்தன, சட்ட ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அத்தனை கட்சிகளும் ஊடகங்களும் ஓரணியில் நின்று உரக்க கத்தின
.
அன்று திமுக கூட்டணியில் இருந்த சி.பி.எம், எதிர்தரப்பில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் தொடங்கி அத்தனை பெரிய சிறிய கட்சிகளும் அரசை கண்டித்தன, சில பதவி விலக கோரின இன்னும் சில ஆட்சியை கலைக்க ஒன்றிய அரசுக்கு நேரடியாக கோரிக்கை வைத்தன, கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று சிதம்பரம் அறிக்கை வெளியிட்டார், இந்திய ஐக்கிய பொதுவுடமை கட்சியின் தா.பாண்டியன் தமிழக அரசு மீது மத்திய அரசு நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியை கலைக்கக்கோரின, கடமை தவறிய தமிழக அரசு என்று தினமணி தனது தலையங்கத்தில் புலிகளை ஆதரிப்பதால் வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கு கெட்டுப்போக அனுமதித்தார் என்று கடும் வார்த்தைகளில் விமர்சித்து குற்றம்சாட்டியிருந்தது
.
ஆட்சியை எப்படியேனும் பத்பநாபா கொலையை முன்வைத்து கலைக்க வேண்டும் என்று அம்மையாரும் எதிர்கட்சிகளும் வியூகம் அமைத்து செயல்பட்டன, 27.06.1990 அன்று சென்னை வந்த குடியரசு தலைவர் வெங்கட்ராமனிடம் சுதந்திர தியாகிகள் பெயரில் கொடுக்கப்பட்ட ஒரு மனுவும், நாவலர் மற்றும் வாழப்பாடியார் தலைமையில் பேரணியாய் வந்த எதிர்கட்சிகள் கொடுத்த ஒரு மனுவும் என்று இரண்டு மனுக்கள் தமிழக அரசை கலைக்க வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் அளிக்கப்பட்டது, 1990ல் ஜூலையில் புலிகளை கலைஞரே வளர்க்கிறார், ஈழம் அமைந்தால் அதை வைத்து தமிழகத்தையும் பிரித்துவிட திட்டம் தீட்டுகிறார் என்கிற ரீதியில் கடுமையான விமர்சனத்தை ராஜூவ்காந்தி முன்வைத்தார்
.
ரதயாத்திரையை லாலு தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து பாஜ ஆதரவை விலக்கிக்கொண்டதால் வி.பி.எஸ் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு சந்திரசேகர் தலைமையிலான அரசு பதிவியேற்றது, ஆர்.வெங்கட்ராமன் குடியரசு தலைவராகவும் சுப்ரமணியன்சுவாமி சட்ட அமைச்சராகவும் இருந்து அன்றைய ஆளுநர் சுர்ஜித்சிங் பர்ணாலாவின் கையெழுத்தே (சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிக்கை அளிக்க மறுத்தார் ) இல்லாமல் ஆட்சியை கலைத்தனர், இந்திய வரலாற்றில் ஆளுநர் ஒப்புதல் இன்றி கலைக்கப்பட்ட முதல் அரசு திமுக அரசு தான் ஆனால் ஈழத்தை ஆதரித்து நின்ற யாரும் பத்மநாபா கொலையை தொடர்ந்து கலைக்கப்பட்ட அரசுக்கு ஆதரவாக பேசியதாக தெரியவில்லை, பின்னர் குடியரசு தலைவர் ஆட்சியில் நடந்த ராஜூவ் படுகொலை, 91ல் அம்மையாரின் ஆட்சி என்று தமிழக அரசியலின் ஒட்டுமொத்த போக்கையே மாற்றிய நிகழ்வாக மாறிவிட்டது அந்த நாள்
.
புலிகள் ஆதரவால் திமுக அரசு கலைக்கப்பட்ட நாள் ஜனவரி-30 

எமர்ஜென்சியை எதிர்த்ததன் விளைவாய் திமுக அரசு கலைக்கப்பட்ட நாள் ஜனவரி 31

No comments: