Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - காந்தியார் தென்னாட்டில் சுற்றுப்பயணம்

 1927 ஆம் ஆண்டு காந்தியார் தென்னாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார். கொங்கு மண்டலம் சென்ற அவருக்கு அங்கு இருக்கும் சந்திர சேகேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசிபெற வேண்டும் என விரும்புகிறார். பாலக்காட்டுக்கு அருகில் உள்ள கிராமத்தில் அருள்பாலிக்கிறார் சங்கராச்சாரியார்.

1927 அக்டோபர் 15 ம் நாள், காந்தியடிகளுக்கு சங்கராச்சாரியார் அருள்பாலித்த அந்த நிகழ்ச்சி பசுமாட்டுக் கொட்டாகையில் நடக்கிறது. பூர்வாசிரமத்தில் விழுப்புரம் சாமிநாத அய்யராக இருந்த சங்கராச்சாரியராக மாறிய அவரது வயது 34.
பாரிஸ்டார் காந்தியடிகளின் வயது 58.
மேல் சாதிக்காரரான அய்யர், கீழ்சாதிக்காரரான வைசியர் காந்தியைப் பார்த்தால் தீட்டாகிவிடுவார், தீட்டுக் கழிக்க குளிக்க வேண்டும், பசுமாட்டுக் கொட்டகையில் பார்த்தால் தீட்டுகிடையாது.
 மகாத்மாவையே பசு மாட்டுக் கொட்டாகை தவிர வேறு எங்கு பார்த்தாலும் தீட்டு என்று வெளிப்படையாக அறிவித்த பார்ப்பனீயம் - சாதாரண மக்களின் நிலை?

"ஊர் அமைப்புகள்" கரு உருவானது முதல் பிரசவித்து, கல்வி பயின்று, வேலைவாய்ப்பு கொடுத்து, சுடுகாட்டில் புதைப்பது வரை ஒவ்வொரு நிலையிலும் மனித சமுதாயத்தின் நலனைக் காப்பது இன்றைய அரசுகளின் கடாமையாக உள்ளது. முற்கால அரசர்களுக்கு அப்படி அல்ல. மூன்று  கடமைகள் மட்டுமே முக்கியமானவை.

திருடர்களிடமிருந்தும் - மிருகங்களிடமிருந்து - அந்நியப் படையெடுப்புகளில் இருந்ததும்  மக்களைக் காப்பதுதான் முக்கால மன்னர்களின் கடமையாக இருந்தது. அக்கால கட்டங்களில் ஊர் அமைப்புகள் எப்படி உருவாக்கப்பட்டன என்பதை கவனிக்க வேண்டும்.

ஊரைச் சுற்றிலும் காடுகள் , கழனிகள், ஆறுகள் எனவே ஊருக்கு வெளியே தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிடர்கள் வாழும் சேரிகள். மிருகங்கள், திருடர்கள், அந்நியப் படையெடுப்புகள் எதுவாயினும் முதலில் அவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். பாதுகாப்பு வேலிகளும் அவர்களே! அதற்கு உள்ளே குடியானவர்கள், சூத்திரர்கள் வாழும் தெருக்கள். அந்த ஆபத்துக்கள் சேரிகளை மீறி உள்ளே நுழைந்தால் சூத்திர மக்களால் தடுக்கப்படும். அதற்கும் உள்ளே ஊரின் நடுவே சதுர் வேதி மங்கலங்கள் எனப்படும் அக்ரகாரங்கள். இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஆபத்து வந்தால் பாதுகாப்பாக தஞ்சமடைய அக்ரகாரம் நடுவில் கோவில் கட்டப்பட்டிருக்கும். அந்தக் கோவிலும் சுவையான குடிநீர் உள்ள, மேடான இடமாகப் பார்த்துகட்டப்பட்டிருக்கும். 21 ம் நூற்றாண்டிலும் இவ்வளவு கொடுமை நிலவுகிறது என்றால் 2500 ஆண்டுகளாக இந்த பார்ப்பனீயம் என்ன பேயாட்டம் போட்டிருக்கும்.

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 3 to 6.

No comments: