Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - காமராசரு நினைச்சிருந்தா இந்தக் குலக்கல்வித் திட்டத்தை தொடக்கத்துலேயே தடுத்திருக்கலாம்

"அய்யா நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்கக் கூடாது காமராசரு நினைச்சிருந்தா இந்தக் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த தொடக்கத்துலேயே தடுத்திருக்கலாம். ஆனால் அந்த எதிர்ப்பை வளரவிட்டு அதுலே தன் நினைப்பை நிறைவேற்றி கிட்டாருனு ஒரு கருத்துச் சொல்றாங்ளெ! நீங்கள்  என்ன சொல்கிறீர் என்றார் செங்குட்டுவன்.

தியாகியாரு,  எங்கத் தலைவருக்கு அப்படிப்பட்ட எண்ணம், அந்தத் திட்டம் வந்த தொடக்கத்துலே, இருக்கிறதுக்கு வாய்ப்பில்லே! ஆனால் பெரியாரும் அண்ணாவும் நாட்டிலே பேசிவந்த பார்ப்பான், சூத்திரன், வர்ணாசிரமம் இதெல்லாம் இந்த நூற்றாண்டுக்குப் பொருந்தாத நினைப்புனு நினைச்சுகிட்டு இருந்த எங்கலைப் போலவங்களுக்கே, அந்த நினைபை உண்டாக்கி வைச்சாரே ஆச்சாரியாரு!" என்றார் தியாகியார்.
எப்படி அய்யா சொல்றீங்க என்றார் ஆறுமுகம்.
"குலக்கல்வித் திட்டம்!  அது நீங்க கொடுத்த பேரு இல்லையா? புதுக்கல்வி திட்டம் வந்தப்போ எங்களிடத்துலே கல்வித்திட்டம் சரியா? தப்பா? இந்தக் கேள்விக் கூட முதல்லே வரலே! இந்தத் திட்டத்தைக் கொண்டு வரதுக்கு முன்னாலே இதைப்பத்தி கல்வி மந்திரி கிருஷ்ணாராவுக்கு கிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லலே! இது அடிப்படையிலே பெரிய மாறுதலை உண்டாக்குகிற இந்த ஏற்பாட்டை கட்சியிலே, சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்துலேயும் கேட்டுச் செய்யாமே, தானா செஞ்சாரு ஆச்சாரியாரு! அந்தக் கல்வித் திட்டத்தை விட அது எங்களைக் கொதிப்படைய வச்சது.
அவரை பார்த்துக் கேட்டபோது  சங்கரரும், ராமானுஜரும் தங்கள் கொள்கைகளை மற்றவங்களைக் கலந்து கொண்டா வெளியிட்டாங்கனு அவர் சொன்னது எங்களை எல்லாம் குமுற வச்சது!" என்றார் தியாகியார்.

"பின்னே தடுத்திருக்கலாமே , மாத்தியிருக்கலாமே!" என்றார் ஆறுமுகம்.

"ஆறுமுகம்! ஒடம்பிலே "குறுப்பு" வந்ததுன்னா மருந்து போட்டு அமுக்குறதும் உண்டு. சிலதைப் பத்துப் போட்டு கட்டியாக்கி பழுக்க வச்சு "முளைப்பையே" எடுத்திடறதும் உண்டு இல்லையா! எங்கத் தலைவரு, இந்த முளையை எடுக்கிறதுலே கண்ணும் கருத்துமா இருந்திருக்கிறாரு! அதனாலேதான் கட்சியிலே ஓட்டெடுப்பு வந்த பொழுது எல்லாம் அதை தடுத்துகிட்டே வந்தாரு. ஆந்திராவும் தனியாகப் பிரிஞ்சப்பின்னே கட்சிக்குள்ளே ஆட்சாரியாறை ஆதரிக்கிறவங்க, தாங்கரவங்க குறைஞ்சு போனதை நல்லா தெரிஞ்சிகிட்ட பின்னே தான், அவர் வெளிப்படையாக வெளியிட்டார், என்றார் தியாகியார்.

நூல்    ; பயணம் -2.
பக்கம் ; 1025 tp 1026.

No comments: