Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (64)

மிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் இருந்து வந்தது.

1918 மார்ச் 18 ஆம் நாள், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற புலவர்கள் கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழகம் தமிழ்மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்பே, தமிழ்மொழியைச் செம்மொழியாக மைய அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மறைமலை அடிகள், அப்பாதுரையார், தேவநேயப் பாவணர் முதலிய தமிழறிஞர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்திக் கட்டுரைகள் எழுதினர். பல்வேறு தமிழ் அமைப்புகள் தீர்மானங்களை நிறைவேற்றி மைய அரசுக்கு அனுப்பின. ஆனால், கலைஞர் வலியுறுத்தத் தொடங்கிய பின்பே இக்கோரிக்கைக்கு வலு சேர்ந்தது.

1996இல் முதலமைச்சர் கலைஞர் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தை மைய அரசு மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மைய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. அந்நிறுவனம் அறிஞர்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர், தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கலாம் என்று மைய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

1999 சனவரி 16 ஆம் நாள், சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர், “தமிழ் செம்மொழியா? இல்லையா? என்ற விவாதம் இனிமேலும் தேவையில்லை. தமிழ் செம்மொழிதான்! மைய அரசு அதை உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, 2003 ஏப்ரல் 22ஆம் நாள், கலைஞர் பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதினார்.

 2004 மே 27 ஆம் நாள், பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்த அளவுப் பொதுச்செயல் திட்டத்தை வெளியிட்டார். கலைஞர் வலியுறுத்தியதற்கிணங்கத் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்ற கோரிக்கை அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன்படி, 2004 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மைய அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணையை மைய அரசு 2004 அக்டோபர் 12 ஆம் நாள் வெளியிட்டது.

No comments: