Saturday, March 09, 2019

இராமனை வைத்து பிழைப்போர் களவானிப் பசங்களே!

#இராமனை வைத்து பிழைப்போர் களவானிப் பசங்களே!............
- பெருந்தலைவர் கு.காமராஜ்
மேனாள் தமிழ்நாடு முதலைச்சர்
“நீங்க பல தெய்வ வழிபாட்டை வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?’’ என்று முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டபோது,
அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல், “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்-சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற போல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுளுங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டுதான் இருப்பாரா?
அரேபியாவிலே இருக்கிறவன், ‘அல்லா’ ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கினான். ஜெருசலத்தில் இருக்கிறவன் ‘கர்த்தர்’ன்னான். அதிலேயும் சிலபேரு ‘மேரியக் கும்பிடாதே’ ன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு எட்டு உட்பிரிவுகளை உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான் முனியன், வீரன்னு கும்பிட்டான்.
எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே என் பேரு இதுதான்னு சொன்னான்? அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுளை உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். சுருக்கமாக சொல்லனும்னா காங்கிரஸ் _ கம்யூனிஸ்ட் _ தி.மு.க. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேர்ந்துக்குறான்.
மதம் மனிதனுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களப் போக்குமா? இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா, நான் பெரிசான்னு மோதிக்கிட்டு ரத்தம் சிந்துதே! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!’’ இப்படியெல்லாம் நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.
“நீங்க சொல்றதப் பாத்தா, ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?’’ என்ற வினாத் தொடுத்தபோது,
தலைவர் குலுங்கச் குலுங்கச் சிரித்தார். “டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?’’
“ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதா பாத்திரம்னேன். அதை எல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டான்னேன்! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் கட்அவுட் வைக்கிறா னில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிப்புட்டான். அந்தப் புத்தகங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள் எடுத்துக்-கனும், ஆசாமிய விட்டுப்புடனும், காலப்-போக்குல என்னாச்சுன்னா, லட்சக் கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டாங்கன்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்-சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறான்னுங்க களவாணிப் பசங்க.
புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சிதான் நம்ம சனங்களை அடிமையா ஆக்கி வச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான், விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளைச் செஞ்சி சனங்களையும், பாமரசனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.
நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல. பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம். அது நம்ம கலாசாரத்-தோட ஒட்டுன விழான்னேன்’’ என்று விளக்கினார்.
“மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே?’’ என்ற கேள்விக்கு,
தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில் வைர ஒட்டியானம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கான்; திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக் கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு  பயமுறுத்தியே வைக்குதே தவிர தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்’’ என்றார்.
“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா? இதிலேயிருந்து எப்போ விலகுனீங்க?’’ என்றதற்கு,
“சின்னப் பையனா இருந்தப்போ விருது-நகரிலே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரேபூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுக்கிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு? எல்லாம் முடி வெட்டுரவன் தொழில் யுக்தின்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவ-ரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பானுங்க. ஆனா ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?’’ என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
“அப்படியானா மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?’’ என்று கேட்டதற்கு,
“அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறது தான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை, இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா, அது நம்ம வாழ்த்தும்னேன்!’’
காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்துகிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து “ஏன் பள்ளிக்கூடம் போகலியா?’’ என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்து விடுகிறது.
நன்றி: ‘அருட்தந்தையின் அன்புக்குரல்’
(மாத இதழ்)

No comments: