Saturday, March 09, 2019

திராவிடநாடு கோரிக்கை வரலாறு

திராவிடநாடு கோரிக்கை வரலாறு :
1940-ஆம் ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற கோரிக்கையை வைக்கிறார். பின் 1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி நீதிக்கட்சி திராவிடர் கழகமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற மாநாட்டில் அண்ணாவை வைத்து தந்தை பெரியார் அவர்கள் அறிவிக்கிறார். அதே மாநாட்டில் "திராவிட நாடு திராவிடருக்கே" என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றுகிறார்.
பின் 1953-ஆம் ஆண்டு தெலுங்கு மாவட்டங்களை, சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து நவம்பர் முதல் நாளில் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. 1956 நவம்பர் முதல் நாளில், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் கோரிக்கையை “தமிழ்நாடு தமிழருக்கே” என திருத்தி அமைத்துக் கொண்டார் பெரியார். தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி, 1960 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபடம் எரிப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தார். தந்தை பெரியார் அவர்கள் 1955-ஆம் ஆண்டு மொழிவழி மாநிலத்தை வரவேற்றார் ஏன் என்றால் அது தம் விடுதலை இலக்கை அடைய உதவும் என்றார். தந்தை பெரியார் அவர்கள் அரசியல் விடுதலைக்காக "தமிழ்நாடு தமிழருக்கே" என்றும் சமூக விடுதலைக்காக "திராவிட நாடு திராவிடருக்கே" என்று அறிவித்தார். அக்கோரிக்கையை தனது இறுதி நாள் வரை உறுதியாக மக்களிடையே பரப்பியும் வந்தார்.
1938- 1949- ஆம் ஆண்டு வரை தந்தை பெரியாருடன், அண்ணா இருந்த போதும் பின்னர் 1949-ஆம் ஆண்டு திமுக என்ற தனிக்கட்சி உருவாக்கி தேர்தல் கட்சியாக வளர்த்தெடுத்த காலத்திலும், 1963- ஆம் ஆண்டு 'திராவிட நாடு' கோரிக்கையை கை விடும் வரை அண்ணா உயர்த்திப் பிடித்தார். பெரியாருடன் ஏற்ப்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து 1949-ஆம் ஆண்டில் பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்குகிறார். திமுக தொடங்கியது முதல் “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு“ என்று மேடைகள் தோறும் பேசி வந்தார். முதலில் சமூக இயக்கமாக செயல்பட்டுவந்த திமுக 1956-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில மாநாட்டில் தேர்தலில் ஈடுபடுவது என முடிவெடுத்தது. 1957-ல் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டது. அதன் பிறகு 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப் போருக்குப் பிறகு ,பிரிவினை கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பின் திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடும் போது கூட “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு திராவிட ஒன்றியம். கூட்டரசு அமைப்பு முறையை வலிவுடையது ஆக்கும் வகையில் இந்திய அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டு வருதல். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று அண்ணா அறிவிக்கிறார்” மேலும், திராவிடநாடு கொள்கையை தனது உயிர் பிரியும் வரை அண்ணா கைவிடவில்லை.
எனவே, திராவிடநாடு கோரிக்கை தற்போது எழுவதற்கும் தமிழகமே முன்னோடியாக உள்ளது என்றும் கூறலாம். தற்போதாவது பெரியாரால் முன்வைக்கப்பட்டு அண்ணாவால் இறுதி வரை கடைபிடித்த திராவிடநாடு கோரிக்கை இந்த முறை வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments: